என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் திருவிழா மோதல்"
- மர்ம நபர்களின் தாக்குதலில் பொன்னம்பலத்தின் வீடு போர்க்களம்போல் காட்சி அளித்தது.
- போலீசார் விசாரணை நடத்தி சிலரை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் சமயநல்லூர் தொகுதியில் 2001-2006ம் ஆண்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். கருவனூரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அங்குள்ள கருமாரியம்மன் கோவிலில் மரியாதை தருவது தொடர்பாக பொன்னம்பலத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
அது தொடர்பாக இருவரது குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டுக்குள் சில மர்ம நபர்கள் கும்பலாக புகுந்தனர். அவர்கள் பொன்னம்பலம் வீட்டில் நிறுத்தப்பட்டி ருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்தனர்.
ஒரு காரை தீ வைத்து எரித்தனர். மேலும் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கினர். அதனை வீட்டில் இருந்த பொன்னம் பலத்தின் குடும்பத்தினர் தடுத்தனர். அவர்களை தாக்கி விட்டு பொன்னம் பலத்தின் வீட்டை அந்த நபர்கள் சூறையாடிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
மர்ம நபர்களின் இந்த தாக்குதலில் பொன்னம்பலத்தின் வீடு போர்க்களம்போல் காட்சி அளித்தது. இந்த தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர்கள் தாக்கியதில் பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் 5 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொன்னம் பலம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் மரியாதை கொடுக்கும் விவகாரத்தில் எதிர்தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை தேடி வருகின்றனர்.
- முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
- கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே உள்ளது கருவனூர் கிராமம். இங்குள்ள பத்திரகாளி அம்மன், பாரைகருப்பு அய்யனார் கோவிலில் கடந்த வாரம் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த முதல் மரியாதையை பெறுவது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமாருக்கும், தி.மு.க.வை சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை ஊர் பொதுமக்கள் தடுத்து சமரசம் செய்து வைத்தனர்.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஒரு கும்பல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் வீட்டு மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. இதில் வீட்டின் ஜன்னல் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின.
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கும் அந்த கும்பல் தீ வைத்தது. இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர். அப்போது வேல்முருகன் தரப்புக்கும், பொன்னம்பலம் தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் (40) மற்றும் சுப்பையா (68), சூர்யா (23), விஜய் (27), வேல்விழி (35) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் வேல்முருகன் தரப்பை சேர்ந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பிலும் எம்.சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பழனிக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தி.மு.க.வை சேர்ந்த கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜ்மோகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பதி கொடுத்த புகாரின்பேரில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியில் நிலவிவரும் பதட்டத்தை தணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவில் விழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பான விவகாரத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதல் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






