என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைக்கிடங்கு"

    • போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.
    • திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருக்கும் இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், 

    "திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி சின்ன காளிபாளையத்தில் உள்ள பகுதிகளில், நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறக்குறைய 700 முதல் 800 டன் அளவுள்ள குப்பைகளை கொட்டும் முயற்சியை அரசு செய்து வருகின்றது. திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு மாறாக, குப்பைகளைத் தரம்பிரிக்காமல் பொதுவெளியில் கொட்டியதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றால் ஏறக்குறைய 3.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும் திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியதாகும்.

    முதலிபாளையம், காளாம்பாளையம், சிறுபூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் ஆகிய பகுதியில் கைவிடப்பட்ட கல் குவாரியில் கொட்டிய குப்பையை அகற்றாமல்  தற்போது இடுவாயில் புதிய குப்பைக் கிடங்கு அமைத்து மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிரிக்கப்படாதக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது துளியும் பொறுப்பின்றி செயல்படும் ஆட்சிக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குப்பையைத் தொடக்கத்திலேயே பிரிக்காமல், அறிவியல் அடிப்படையில் அகற்றாமல் கிராமங்களைக் குப்பைத் தொட்டியாக மாற்றும் பணியைத் திமுக அரசு செய்து வருகிறது .

    அரசின் இந்த செயலால் திருப்பூர் மாநகராட்சியின் முதன்மைச் சாலைகளான அனுப்புர்பாளையம் சாலை, காந்தி நகர், வேலம்பாளையம், அங்கேரிபாளையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அனைத்தும் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு மிகவும் துர்நாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் திருப்பூர் நகரின் முதன்மைப் பகுதியான நொய்யல் ஆற்றங்கரையோரம் அனைத்துக் குப்பைகளையும் கொட்டி, அதனைத் தீயிட்டுக் கொளுத்திக் காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாட்டினை அரசே ஏற்படுத்தி வருகின்றது.

    இடுவாய் கிராமத்தில் குப்பைக் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் மற்றும் சுற்றியுள்ள 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இடுவாய் சின்ன காளிபாளையத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை காவல் துறை தனது அடக்குமுறையால் பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கைது செய்து அடைத்துவைத்து குப்பையை மக்களுக்கு தெரியாமல் கொட்டும் செயலை செய்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை காலையில் கைது செய்து பின்னர் இரவு நேரங்களில் விடுவித்து, பிறகு மீண்டும் கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.

    எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகளையும் பின்பற்றாமல், மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறியாமல் அவர்களின் உடல் நலன் மீது துளியும் அக்கறையின்றி செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சி உடனடியாகத் தனது தவறுகளை சரி செய்து கழிவு மேலாண்மை விதிகளை முழுவதுமாக செயல்படுத்திட வேண்டும். இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • குப்பையை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
    • தற்போது 3 லட்சம் டன் வரை அகழ்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை முழுவதும், கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

    எந்தவித விதிமுறை அறிவியல் முறையையும் பின்பற்றாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அங்கு குப்பை கொட்டி வந்ததால், குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.

    இனிவரும் காலங்களில் குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி காற்று மாசு, நிலத்தடி நீர் மாசுபடுதல் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சுமார் 66.52 லட்சம் டன் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மாநகராட்சி திட்டமிட்டு ரூ.648 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள அரசிடம் நிர்வாக அனுமதியும் பெற்று இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது குப்பையை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் கூறியதாவது:-

    கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 லட்சம் டன் வரை அகழ்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சில ஆரம்பகால நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அவை இம்மாத இறுதிக்குள் சரி செய்யப்பட்டுவிடும். அதன் பின்னர் மார்ச் 1-ந்தேதி முதல் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பைகளை கையாளும் திறனுடன் பணிகள் வேகமெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே குப்பைகள், கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
    கம்பம்:

    கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலை யானைகுழாய் அருகே நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கில் நள்ளிரவு நேரங்களில் மர்மநபர்கள் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிவிட்டு தீவைத்து எரித்து விடுகின்றனர்.

    இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதற்கிடையே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பதற்காக அங்கு பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குப்பைக்கிடங்கில் வெளிநபர்கள் நுழையாத வண்ணம் தடுக்க சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளதால் தற்போது குப்பைக்கிடங்கில் தீ வைப்பது குறைந்துள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக குப்பைக்கிடங்கு அருகில் சாலையோரத்தில் உள்ள தனியார் நிலங்களில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள், ஒர்க்‌ஷாப் கழிவுகள், ரெடிமேட் ஆடை கழிவுகள் ஆகியவற்றை கொட்டி தீவைத்து எரித்து விடுகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிப்பது மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கழிவுகளை கொட்டி தீ வைக்கும் மர்மநபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×