search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Volleyball League"

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் புரோ கைப்பந்து லீக் போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ் மும்பை அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProVolleyball
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த முதலாவது அரையிறுதிப்போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ்-யு மும்பா வாலி (மும்பை) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-12, 15-9, 16-14 என்ற நேர்செட்டில் மும்பை அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்ட கோழிக்கோடு அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.

    இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2-வது அரையிறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. கொச்சி அணி லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. அதற்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #ProVolleyball
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் புரோ கைப்பந்து லீக் போட்டியில் மும்பை அணி ஆமதாபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. #ProVolleyball
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 15-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்- யு மும்பா வாலி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 10-15, 15-12, 15-13, 15-12, 15-8 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லீக் ஆட்டம் முடிவில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.

    கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், யு மும்பா வாலி (மும்பை) அணிகள் தலா 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. செட் விகிதாச்சாரம் அடிப்படையில் சென்னை அணி 3-வது இடத்தையும், மும்பை அணி 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றாலும் செட் விகிதாச்சாரம் அடிப்படையில் 5-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆமதாபாத் டிபென்டர்ஸ் 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ்-யு மும்பா வாலி அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. #ProVolleyball
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற புரோ கைப்பந்து 2-வது கட்ட போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. #ProVolleyball
    சென்னை:

    6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது. 2-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, யு மும்பா வாலியை (மும்பை) எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தோடு களம் புகுந்த சென்னை அணி தடுமாறியது. முதல் 3 செட்டுகளையும் வரிசையாக கோட்டை விட்ட சென்னை அணி கடைசி இரு செட்டை மட்டும் வசப்படுத்தி ஆறுதல் அளித்தது. முடிவில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 14-15, 8-15, 10-15, 15-10, 15-10 என்ற செட் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.

    4-வது லீக்கில் ஆடிய சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அதே சமயம் 3 தோல்விகளுக்கு பிறகு மும்பை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, ஆமதாபாத் டிபென்டர்சை சந்திக்கிறது. இது தான் சென்னை அணிக்கு கடைசி லீக் ஆகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். தோற்றால் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை. #ProVolleyball
    கொச்சியில் நேற்றிரவு நடந்த புரோ கைப்பந்து போட்டி 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 15-10, 12-15, 15-13, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் மும்பா வாலியை வீழ்த்தியது. #ProVolleyballLeague
    கொச்சி:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும்.

    இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு அரங்கேறிய 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி, மும்பா வாலியை எதிர்கொண்டது. திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 15-10, 12-15, 15-13, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் மும்பா வாலியை வீழ்த்தியது. கோழிக்கோடு அணியில் அதிகபட்சமாக அஜித் லால் 16 புள்ளிகள் சேகரித்தார். கோழிக்கோடு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே தனது முதல் லீக்கில் சென்னை அணியை தோற்கடித்து இருந்தது.

    இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ்- ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ProVolleyballLeague

    ‘புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது’ என்று அந்த அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை தெரிவித்தார். #ProVolleyballLeague
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு வீரர்களுடன் 2 வெளிநாட்டினரும் இடம் பெறுவார்கள்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிப்ரவரி 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கிலும், பிப்ரவரி 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 லீக் ஆட்டம் மற்றும் அரையிறுதி, இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் அரங்கேறுகிறது. தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி 1, சோனி 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    ஒவ்வொரு ஆட்டமும் 5 செட்கள் கொண்டதாகும். முதலில் 15 புள்ளியை எட்டும் அணி செட்டை வெல்லும். 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் 3 வெற்றி புள்ளிகள் கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்காது. 3-2 மற்றும் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிட்டும்.

    புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கடந்த 12-ந் தேதி முதல் ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. போட்டி குறித்து சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    புரோ கைப்பந்து லீக் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. போகப்போக இந்த போட்டி மக்களை நிச்சயம் வெகுவாக கவரும். இந்த போட்டியின் மூலம் பல இளைஞர்கள் கைப்பந்து ஆட்டத்தில் ஈடுபட முற்படுவார்கள். இதுபோன்ற போட்டிகளில் பண பலன் கிடைப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கைப்பந்து ஆட்டத்தில் களம் இறக்க ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுவதன் மூலம் நமது வீரர்கள் நல்ல ஆட்ட அனுபவத்தை பெற முடியும். இதன் மூலம் இந்திய கைப்பந்து அணியின் தரம் உயரும். இது இந்திய அணி சர்வதேச போட்டிகளில் வெற்றி வாகை சூட வழிவகுக்கும். போட்டி முழுவதும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுவதால் வீரர்கள் பிரபலம் அடைவதுடன் அவர்களின் வாழ்க்கை ஸ்டைலும் மாறும்.

    போட்டியில் பல விதிமுறை மாற்றம் செய்து இருப்பதன் மூலம் இந்த லீக் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போல் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளும் சமபலம் வாய்ந்தவை தான். எனவே போட்டி தினத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ? அந்த அணி வெற்றி பெறும். சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் நவின் ராஜா ஜேக்கப், ஒலிம்பிக் போட்டியில் ஆடிய கனடாவை சேர்ந்த ரூடி, லாத்வியாவை சேர்ந்த ருஸ்லான் மற்றும் கபில்தேவ், அக்கின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். செர்வ், அட்டாக்கிங் உள்பட எல்லா துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே இந்த போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு ஷெல்டன் மோசஸ் கூறினார். #ProVolleyballLeague
    புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த நவீன், பிரபாகரனை சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. #ProVolleyballLeague
    புதுடெல்லி:

    இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சென்னை மற்றும் கொச்சியில் நடக்கிறது. இதில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்டன்ஸ் 11 வீரர்களை வாங்கி இருக்கிறது. வெளிநாட்டு வீரராக கனடாவின் ரூடி வெராப், நட்சத்திர வீரராக அகின் (இந்தியா) ஆகியோரை சென்னை அணி வாங்கி உள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த நவீன் ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி எடுத்து இருக்கிறது. பிரபாகரன் (ரூ. 5 லட்சத்துக்கு 20 ஆயிரம்), கேரளாவை சேர்ந்த விபின் ஜார்ஜ் (ரூ.4 லட்சத்துக்கு 80 ஆயிரம்), பிறைசூடன், அஸ்வின், பாக்யராஜ், ஷெல்டன் மோசஸ், கபில்தேவ், ஹரிகரன் ஆகியோரையும் சென்னை அணி தன்வசப்படுத்தி இருக்கிறது. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சிறந்த வீரர்களை வாங்கி இருப்பதாக அந்த அணியின் மானேஜர் ஜெ.நடராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #ProVolleyballLeague
    6 அணிகள் பங்கேற்கும் புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சி, சென்னையில் நடைபெறுகிறது. #ProVolleyball
    மும்பை:

    இந்திய கைப்பந்து சம்மேளனம் மற்றும் பேஸ்லைன் இந்தியா நிறுவனம் சார்பில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடக்கிறது.

    இந்த போட்டியில் ஆமதாபாத் டிபன்டர்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், யு மும்பா வாலி, ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. போட்டியில் பங்கேற்கும் அணிகள் உள்ளிட்ட விவரங்களை இந்திய கைப்பந்து சம்மேளனம் மும்பையில் நேற்று அறிவித்தது. போட்டி மற்றும் அணிகளின் லோகேவும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் வாசுதேவன், பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர், புரோ கைப்பந்து லீக் தலைமை செயல் அதிகாரி ஜோய் பட்டாச்சார்யா மற்றும் அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் பங்கேற்கும் 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 12 லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்திலும், அரைஇறுதி, இறுதிப்போட்டி உள்பட 6 ஆட்டங்கள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் அடுத்த மாதம் 13, 14-ந் தேதிகளில் நடக்கிறது.

    ஒவ்வொரு அணியிலும் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 12 பேர் இடம் பெறுவார்கள். இந்த போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 லட்சமும், அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ProVolleyball

    ×