search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pisana cultivation"

    • செங்கோட்டையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய குளமானது 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
    • தற்போது ஆள்பற்றாக்குறை மற்றும் எந்திர பற்றாக்குறையால் அறுவடையை தள்ளிபோட்டு வந்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய குளமானது 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த குளத்தின் முலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்து பாசன வசதி பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.

    இப்பகுதி விவசாயிகள் இந்த குளமானது கோடை காலங்களை தவிர மற்ற காலங்களில் வற்றாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

    குளம் நிரம்பிய காலங் களில் கரை வழியாக நடந்து செல்லும் போது காற்றின் வேகத்தால் கடல் அலை போல் காட்சியளிப்பதுதோடு மட்டுமல்லாது இரு சக்கரவாகன ஓட்டிகள் கரையை கடப்பதே பெரிய சவாலாக அமையும், இந்த குளத்தை நம்பி இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், கொடிகுறிச்சி, சித்திராபுரம், சிவராமபேட்டை உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு சரியான நேரத்தில் மேற்குக்தொடர்ச்சி மலையில் பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி அடிவார பகுதியான அடவிநயினார் அணை நீர்பிடிப்பு பகுதி அணையின் முழு கொள்ளளவு நிரம்பி மறுகால் வழியாக உபரி நீர் குளங்கள், ஏரிகள் வேகமாக நிரம்பியது.

    அதனைதொடர்ந்து நூற்றுகணக்கான ஏக்கர் நிலங்களில் பிசான சாகுபடிக்கான டிலெஸ் பொன்னி ரக நெல்லை பெரும்பாலோனோர் விதைகளை பாவி ஆயத்த வேலைகளை தொடங்கினர்.

    ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் அறுவடைக்கு ஆள்பற்றாக்குறையால் அரசு அறுப்பு எந்திரம் சாதாரண வாகனத்திற்கு குறைந்த அளவில் ரூ.1,000 அரசு நிர்ணயித்த தொகையால் விவசாயிகள் பயன் பெற்றனர்.

    இந்நிலையில் தற்போது அரசு வாகன வரத்து இல்லாததால் ஆள்பற்றாக்குறை மற்றும் எந்திர பற்றாக்குறையால் அறுவடையை தள்ளிபோட்டு வந்தனர்.

    இந்நிலையில் தற்போது ஏராளமான தனியார் எந்திரங்கள் இந்த பகுதியில் வந்துள்ளதால் அரசு விலையைகாட்டிலும் இரு மடங்கு அதிக கட்டணமாக கூடுதலாக சாதாரண வண்டிக்கு ரூ.2ஆயிரமும் செயின் வண்டிக்கு, ரூ.3ஆயிரம் என கொடுத்து வேறு வழியின்றி அதிக பணம் செலவழித்து அறுவடையை ெதாடங்கி தீவிரபடுத்தி வருகின்றனர்.

    இதனால் பெருமளவில் அச்சன்புதூர், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஏற்கனவே விளைந்த நெல்லுக்கு போதிய விலை இல்லாத நிலையில் வரும் கோடை மழைக்கு முன் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தால் தற்போது வண்டி வாடகை கூடுதல் சுமையாக உள்ளது . இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • நெல்லை மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு சாரல் மழை பெய்தது.
    • பாபநாசம் அணையில் 85 அடி நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நெல்லையில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு சாரல் மழை பெய்தது. பாளையில் 5 மில்லிமீட்டரும், நெல்லையில் 1.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தாமதம்

    மாவட்டத்தை பொறுத்த வரை ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 8 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதேபோல் சேரன்மகா தேவி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

    வழக்கமாக அக்டோபர் மாதத்தில் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கிவிடும். விவசாயிகளும் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை தொடங்கிவிடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.

    பிசான சாகுபடி

    மேலும் தீபாவளி சமய ங்களில் பெரும்பாலான குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும் என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 85 அடி நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அணையில் வழக்கமாக 60 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு விடும் என்பதால் தற்போது நடவு பணிகளை மேற்கொ ள்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிசான பருவத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் பயிரிட விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர்.
    • விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும் விவசாயிகள் கீழ்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிசான பருவத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் பயிரிட விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும் விவசாயிகள் கீழ்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை ரசீது பெற்று விதைகள் வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், விற்பனையாளர் கையொப்பம் முதலிய விபரங்கள் இருக்க வேண்டும்.

    விதைச் சிப்பத்தில் உள்ள விபர அட்டையில் குறிப்பிடப்பட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து பின் வாங்க வேண்டும். நெல் மற்றும் உளுந்து பயிர்களில் விதைச்சான்று மற்றும் அங்கச்சான்றுத் துறையின் சான்றட்டை பொருத்திய விதைகளை வாங்குவது சிறந்தது.

    விவசாயிகள் தங்களிடம் உள்ள சொந்த நெல் மற்றும் உளுந்து விதைகளை பயன்படுத்தும் முன்னர் மேற்படி விதைகளின் மாதிரிகளை நெல்லை விதை பரிசோதனை நிலையத்தில் மாதிரி ஒன்றுக்கு கட்டணம் ரூ.80 செலுத்தி முளைப்புத் திறன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி விதைகள் விதை விற்பனை நிலையங்களுக்கு தற்போது வரப்பெற்றுள்ளது. திருவேங்கடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் 14 விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பதிவுச் சான்று மற்றும் முளைப்புத் திறன் பரிசோதனை அறிக்கை பெறப்படாத 3355 கிலோ மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதை குவியல்கள் மதிப்பு ரூ.12,19,000 விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அனைத்து விதை குவியல்களிலும் விதை மாதிரி எடுக்கப்பட்டு, முளைப்புத் திறன் பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×