search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol price rise"

    மத்திய அரசை கண்டித்து பெட்ரோல் நிலைய விற்பனையாளர்கள் இன்று ஒரு நாள் கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5800 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பெட்ரோல், டீசல் விலை தினமும் எண்ணை நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் நிர்வாக செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படுவதால் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொள்முதல் நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    தமிழகத்தில் ஒரு நாள் கொள்முதலை நிறுத்தியதால் மத்திய அரசுக்கு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-

    2017 முதல் டீலர்களுக்கான விற்பனை விளிம்பு தொகை கொடுக்கப்படவில்லை. விலை உயர்வால் நிர்வாக செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. கலால் வரி குறைத்து இருப்பது நல்லதுதான் அதனை வரவேற்கிறோம். கலால் வரி குறைப்பை முறையாக அமல்படுத்தாதால் ஒவ்வொரு டீலருக்கும் ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    சேமிப்பில் இருந்த பெட்ரோல், டீசல் இருப்பினால் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 21-ந் தேதி வரை தமிழகத்தில் ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதேபோல தீபாவளி பண்டிகையின் போது கலால் வரி குறைக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் முதலீடு குறைந்து தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    எண்ணை நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இன்று ஒரு நாள் கொள்முதல் செய்யாமல் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.450 கோடி மதிப்புள்ள பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்க கூடிய கலால் வரி ரூ.100 கோடி, மதிப்புகூட்டு வரி (வாட்) ரூ.100 கோடி இழப்பு ஏற்படும்.

    கொள்முதல் நிறுத்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விற்பனை பாதிக்காது. தங்கு தடையின்றி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அக்னி சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பரசுராமர் வரவேற்று பேசினார்.

    இதில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள அரசு பெட்ரோல், டீசலை ஏன் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவில்லை. இதில் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதில், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கணேசன், உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார், சட்ட பாதுகாப்பு தலைவர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரி, மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை மாவட்ட செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பயாஸ் அகமது வரவேற்றார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட இளைஞரணி சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் மாதேஸ்வரன், பசுமைதாயக மேற்கு மாவட்ட தலைவர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார், முருகன் சங்கீதா, உஷா, ரஞ்சிதா மேரி, ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் கட்சி, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். #tamilnews
    ×