search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patients death"

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில்தான் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இறப்புக்கு ஆஸ்பத்திரி காரணம் அல்ல என்று ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறினார். #MaduraiGovernmenthospital
    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெய்த மழை காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

    அப்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    மின்தடை ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை. ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    பலியான ரவிச்சந்திரன் - மல்லிகா

    ஆனால் இதனை அரசு ஆஸ்பத்திரியில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஆஸ்பத்திரியில் ஜெனரேட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது. மின்தடை ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி தான் அவர்கள் இறந்துள்ளனர் என ஆஸ்பத்திரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறுகையில், நேற்று மழை பெய்தபோது ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது உண்மை தான். ஜெனரேட்டரும் உடனடியாக இயக்க முடியவில்லை. ஆனால் ஏற்கனவே வெண்டிலேட்டரில் 2 மணி நேர அளவுக்கு மின்சார ‘பேக் ஆப்’ இருந்தது.

    இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு எந்தவித தடையுமின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

    ஏற்கனவே இறந்த நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில்தான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி தான் இறந்துள்ளனர். எனினும் உறவினர்களின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார். #MaduraiGovernmenthospital

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் இயங்காததால் அவர்கள் இறந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. #MaduraiGovernmenthospital
    மதுரை:

    மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு விபத்து மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவசர சிகிச்சை பிரிவில் மதுரை அருகே உள்ள பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா (வயது 50), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (60), உடுமலைப்பேட்டை ஆறுமுகம், செல்லத்தாய் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு மல்லிகா, ரவிச்சந்திரன், பழனியம்மாள் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இன்று ஆறுமுகம், செல்லத்தாய் ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர்.

    மதுரையில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அரசு ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள் மீது விழுந்ததில் மின் தடை ஏற்பட்டது.

    2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மின் தடையால் அரசு ஆஸ்பத்திரியில் வெண்டிலேட்டர் இயங்கவில்லை எனவும், இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேரும் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வெண்டிலேட்டர் இயங்காததால் 5 பேர் இறந்தது குறித்த தகவல் அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் இன்று மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள், அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரியும் வலியுறுத்தினர்.

    இந்த சம்பவத்தில் இறந்த மல்லிகாவின் உறவினர் கணேசன் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு தான் மல்லிகாவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். நேற்று காலை கூட அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார்.
    மாலையில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு வைக்கப்பட்டிருந்த வெண்டிலேட்டர் இயங்கவில்லை. ஜெனரேட்டரையும் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் மல்லிகாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே இறந்து விட்டார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

    இதே போல் இறந்த ரவிச்சந்திரனின் உறவினர் மாரீஸ்வரன் கூறுகையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இங்கு வந்து சேர்த்தோம். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆபரேசன் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    நாளை ஆபரேசன் செய்ய இருந்த நிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று மின்தடை ஏற்பட்ட உடனேயே ரவிச்சந்திரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    அரசு மருத்துவமனையில் அவசர காலங்களில் ஜெனரேட்டரை இயக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  #MaduraiGovernmenthospital
    பலத்த மழையால் ஏற்பட்ட மின்தடை காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். #MaduraiGovernmenthospital
    மதுரை:

    மதுரையில் நேற்று மாலை கனமழை கொட்டியது. பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் வினியோகம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது.

    மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியிலும் மின்சாரம் தடைப்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனால் அதுவும் திடீர் பழுது அடைந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இதற்கிடையே தலைக்காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளும் மின்தடையால் செயல் இழந்தது.

    ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த சிகிச்சை பிரிவில் இருந்த மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா (வயது 55), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் (60) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

    இது குறித்து தெரியவந்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த அவர்களது உறவினர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.



    ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறுகையில், “3 பேரும் கவலைக்கிடமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். #MaduraiGovernmenthospital
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் இறந்ததற்கு பொறுப்பேற்று, மாநில சுகாதார துறை மந்திரி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. #Kanpur #GovernmentHospital
    கான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது.

    இங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விசாரணையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் முதியவர்கள் உயிரிழந்தனர் என அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

    இந்நிலையில், கான்பூர் மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் இறந்ததற்கு பொறுப்பேற்று, மாநில சுகாதார துறை மந்திரி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ஏற்கனவே கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் பலியாகி உள்ளனர். தற்போது கான்பூர் மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மாநில சுகாதார துறை மந்திரி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.  #Kanpur #GovernmentHospital
    ×