search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meteorological"

    வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #heavyrain #meteorological
    சென்னை: 

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் உள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தலைநகர் சென்னையில் கடந்த 21 மற்றும் 22-ந் தேதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.

    நேற்று காலையிலேயே சென்னையில் சூரியன் தலைக்காட்டத்தொடங்கியது. பிற்பகல் வரை பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் உள் பகுதிகளில் நேற்று (நேற்று முன்தினம்) நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. தற்போது குமரிக்கடல் முதல் தமிழகத்தின் உள் பகுதிகள் வரை வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

    நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும்.

    மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 24-ந் தேதி (இன்று) முதல் 26-ந் தேதி வரையிலான 3 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழையின் அளவு குறையும். கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை சென்னையில் 32 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் 57 செ.மீ. மழை இயல்பாக பெய்யவேண்டும். இது இயல்பை விடவும் 44 சதவீதம் குறைவு ஆகும்.

    இதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் 28 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால் 33 செ.மீ. மழை இயல்பாக பதிவாகவேண்டும். இது இயல்பை விடவும் 13 சதவீதம் குறைவு ஆகும். தற்போதைய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி புயல் எதுவும் உருவாக வாய்ப்பு இல்லை. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி செங்கல்பட்டில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுராந்தகத்தில் 14 செ.மீ. மழையும், மாமல்லபுரத்தில் 10 செ.மீ. மழையும், உத்திரமேரூர், வந்தவாசியில் தலா 9 செ.மீ. மழையும், மரக்காணம், பரங்கிப்பேட்டை, வானூர், செஞ்சி, திண்டிவனத்தில் தலா 8 செ.மீ. மழையும், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணியில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

    இதேபோல அவினாசி, போளூர், கடலூர், சோழவரம், செங்குன்றத்தில் தலா 6 செ.மீ. மழையும், நெய்வேலி, திருவண்ணாமலை, தாம்பரம், சீர்காழி, மணிமுத்தாறு, வேலூரில் தலா 5 செ.மீ. மழையும், தரங்கம்பாடி, அரியலூர், அரக்கோணத்தில் தலா 4 செ.மீ. மழையும், நன்னிலம், புழல், பொன்னேரி, உளுந்தூர்பேட்டை, காரைக்கால், கோத்தகிரி, செங்கம், ஆம்பூரில் தலா 3 செ.மீ. மழையும், கள்ளக்குறிச்சி, உத்தமபாளையம், ஊட்டியில் தலா 2 செ.மீ. மழையும், திருப்பத்தூர், பாபநாசம், அதிராம்பட்டினம், பீளமேடு, திருக்கோவிலூர், அம்பாசமுத்திரத்தில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. #heavyrain #meteorological
    தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆந்திரா முதல் தமிழகம் வரையிலான கடலோர பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருந்தாலும், இதனால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்காது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஜி.பஜார் மற்றும் தேவாலாவில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 2 செ.மீ., உதகமண்டலத்தில் 1 செ.மீ. மழையும் பெய்து இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது
    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தீவிரம் அடையவில்லை. மாறாக கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலும் மற்றும் திருப்புவனம், விருதுநகர் ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. இன்றைய (திங்கட்கிழமை) வானிலை நிலவரம் குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    ஆலங்குடி 12 செ.மீ., புதுக்கோட்டை 11 செ.மீ., திருப்புவனம், விருதுநகர் தலா 10 செ.மீ., கீரனூர், திருத்துறைப்பூண்டி தலா 8 செ.மீ., திருச்சி, திருமயம் தலா 7 செ.மீ., திருப்பத்தூர், திருச்சி விமானநிலையம் தலா 5 செ.மீ., மதுரை தெற்கு, கரம்பக்குடி, சிவகங்கை, அரிமளம், மதுக்கூர் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது. 
    வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை இந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது. அதில் இருந்து கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளாவில் நல்ல மழை பெய்து கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்கிறது.இந்த நிலையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஆணைக்காரன்சத்திரம் 11 செ.மீ., ஸ்ரீமுஷ்ணம் 8 செ.மீ., தஞ்சாவூர், மேட்டூரில் தலா 7 செ.மீ., வால்பாறை 6 செ.மீ., செங்கோட்டை, சின்னக்கல்லாறு, கே.எம்.கோவிலில் தலா 5 செ.மீ., தேவலா, திருமங்கலம், கொல்லிமலை, சிதம்பரம், நிலக்கோட்டையில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. #Meteorological #Rain
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கர்நாடகா, லட்சத்தீவு பகுதியில் தீவிரம் அடைந்து அநேக இடங்களில் பெய்து வருகிறது. அதேபோல், கேரளா, வட மற்றும் உள் கர்நாடகா பகுதிகளிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் குறைவான மழைப்பொழிவைத் தான் பெறும்.

    ஆனால் அந்த காலக்கட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும். அந்தவகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

    வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் காற்றுடன், இடி மின்னலும் இருக்கும். தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. தென் தமிழக கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வருகிற 20-ந்தேதி வரை (4 நாட்களுக்கு) ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி 9 செ.மீ., எண்ணூர், பள்ளிப்பட்டில் தலா 3 செ.மீ., வடசென்னை, தளி, விரிஞ்சிபுரத்தில் தலா 2 செ.மீ., சென்னை விமானநிலையம், ஆர்.கே.பேட்டை, திருத்துறைப்பூண்டி, மேல் ஆலத்தூர், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், வாலாஜா, தாம்பரம், ஒரத்தநாடு, கேளம்பாக்கம், காஞ்சீபுரத்தில் தலா ஒரு செ.மீ. மழை. 
    ×