search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "matha church"

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிலுவையில் உயிர்விட்ட ஏசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு 3-ம் நாள் உயிர்த்து எழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகையாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு பேராலய கலை அரங்கத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் “பாஸ்கா ஒளி“ ஏற்றப்பட்டது.

    கலையரங்க வளாகத்தின் மைய பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தியப்படி ஜெபம் செய்தனர். இரவு 11.45 மணியளவில் வாண வெடிகள் முழங்க, மின்னொளியில் பேராலய கலையரங்கின் மேல்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜெயராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று பேராலயத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு தேர்பவனியும், 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
    நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் அன்னை மரியின் புகழ்பரப்பும் புண்ணியதலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தாண்டு பிறப்பையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அப்போது பேராலய வளாகத்தில் வானவேடிக்கை நடத்தப் படும்.

    புத்தாண்டு பிறப்பையொட்டி நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பேராலயத்தை சுற்றியுள்ள செடிகளில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பேராலயம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்கிறார்கள்.
    கன்னியாகுமரியில் புகழ் பெற்ற புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 10 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் புகழ் பெற்ற புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் அமைந்து உள்ளது. இந்த ஆலயம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தின் கோபுர உச்சியில் பெரிய தங்க சிலுவையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்திற்கு குமரி மாவட்டம் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்வார்கள். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருவார்கள்.

    நேற்று இரவு இந்த ஆலயத்தில் திருப்பலி நடைபெற்ற பிறகு 8.30 மணி அளவில் ஆலயத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.

    இன்று அதிகாலையில் ஆலயத்தை திறப்பதற்காக ஊழியர் வந்தார். ஆலயத்தை திறந்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆலயத்தில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த ஒரு தங்க செயின், 4 தங்க வளையல்கள், ஒரு தங்க பிரேஸ்லெட் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு 10 பவுன் ஆகும்.

    இந்த தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த திரளான மக்கள் ஆலயத்தில் திரண்டதால் அங்கு பரபரப் பான சூழ்நிலை உருவானது. மேலும் இந்த துணிகர கொள்ளை பற்றி கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீஸ் டி.எஸ்.பி. முத்துப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த ஆலயத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த ஆலயத்தில் 5 கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டு உள்ளது.

    இதில் 3 கேமிராக்கள் துணியால் மூடப்பட்டு காட்சி அளித்தது. 2 கேமிராக்களில் மட்டும் கொள்ளை நடந்த காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.


    அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரவில் ஆலயத்தை பூட்டியபோது ஆலயத்திற்குள் ஒரு வாலிபர் பதுங்கிக்கொண்டதும், அவர் கண்ணாடியை உடைத்து நகைகளை கொள்ளையடிப்பதும் கேமிராவில் பதிவாகி இருந்தது. கொள்ளையனுக்கு சுமார் 30 வயது இருக்கும். பேண்ட், சர்ட் அணிந்து உள்ளார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் காலையில் ஆலயத்தை திறந்தபோது அந்த கொள்ளையன் யாருக்கும் தெரியாமல் தப்பிச் சென்று இருக்கலாம் என்பது தெரிய வந்தது.

    தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துணிகர நகை கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய பங்கு திருவிழா நேற்று தொடங்கியது. இன்று இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
    திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலய பங்கு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பங்கு தந்தை சார்லஸ் கொடியேற்றி வைத்தார். அப்போது வாணவேடிக்கை நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை மரிவளன், பிராட்டியூர் மான்போர்ட் மாநில தலைமையக அருட்தந்தை அலெக்சாண்டர் ஜோசப், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜேம்ஸ் விக்டர், சாந்தோம் ஆசிரம இல்ல தலைவர் அருள்ராஜ், குணமளிக்கும் மாதா ஆலய கமிட்டி செயலாளர் கரோலின் ராஜன், துணைத்தலைவர் ஜோசப், நிதிக்குழு செயலாளர் எழிலன் மற்றும் நிர்வாகிகள், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை உதவி பேராசிரியை சுபா தலைமையில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டமும், மாலை 6 மணிக்கு அன்னை மரியா பிறப்பு விழா திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. தேர்பவனியை கிராப்பட்டி புனித குழந்தை தெரசாள் ஆலய வட்டார முதல்வர் ஜோசப் லாரன்ஸ் தொடங்கி வைக்கிறார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர்பவனி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழ்கிறது. அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் ஆரோக்கியமாதாவை வழிபட்டு செல்வதால் வேளாங்கண்ணி, ஆன்மிக சுற்றுலா தலமாக திகழ்கிறது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது வேளாங்கண்ணி.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி பேராலயத்தில் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவையொட்டி பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவிலில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.

    சிறிய தேர்பவனியும் நடைபெற்று வருகிறது. இதை காண இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சிலுவை பாதை வழிபாடு, செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆரோக்கியமாதாவை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகவும் வேளாங் கண்ணிக்கு வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கியமாதாவின் பெரிய தேர் பவனி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணி அளவில் நடைபெறு கிறது. பெரிய தேர்பவனி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேளாங்கண்ணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாளை 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 
    வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) பெரிய தேர்பவனி நடக்கிறது. இதனையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்
    நாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி திகழ்கிறது.

    வேளாங்கண்ணி பேராலயத்தில், மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.

    தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெறும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விழா நாட்களில் தினந்தோறும் ஆலய கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்படும். அதன்படி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

    வேளாங்கண்ணிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்த பக்தர்கள் தென்னங்கன்றுகளை ஆலயத்துக்கு கொண்டு வந்தபோது எடுத்த படம்.

    நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய திருத்தேர்பவனி நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. இந்த தேர்பவனியை காண்பதற்காக சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா செரூபம் வைத்து அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்துகொண்டு பாதையாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    நாளை மறுநாள்(சனிக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 
    கீழ் ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    கீழ் ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் நடைபெறும் திருப்பலிக்கு ஆயர் இல்லம் அருட்பணியாளர் மார்சலின் டி போரஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்துநகர் பங்குதந்தை தாமஸ் அருளானந்தம் அருளுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி மற்றும் பங்கு மக்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    4-ம் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி, 8-ம் திருவிழாவன்று மாலையில் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலிக்கு தாழையான்கோணம் பங்கு தந்தை சூசை தலைமை தாங்குகிறார். மார்த்தால் பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர் பவனி நடக்கிறது.

    9-ம் திருவிழாவன்று காலை 6.30 மணி முதல் திருவிருந்து திருப்பலிக்கு கோட்டார் வட்டார முதல்வர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். புனித ஜெரோம் கல்லூரி ஆக்னஸ் அமலன் அருளுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு புனித வளனார் தேர்பவனியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர மாலை ஆராதனை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஜெபமாலைக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்குகிறார். புனித ஞானப்பிரகாசியார் இளம் குருமடம் ஜெரி வின்சென்ட் அருளுரையாற்றுகிறார். இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இதற்கு சின்னவிளை பங்குதந்தை ஆன்றனி கிளாரட் தலைமை தாங்குகிறார். ஆயர் இல்லம் அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் அருளுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு நிர்வாகிகள், பங்கு மக்கள், அருட் சகோதரிகள், பங்குதந்தை அந்தோணி பிச்சை செய்து வருகின்றனர். 
    கொடைக்கானலில் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தலத்தின் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    கொடைக்கானலில் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை திருத்தல பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக நேற்றுமுன்தினம் புதிய பீடத்தினை அர்ச்சிப்பு செய்த பின்னர் திருவிழா திருப்பலியினை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து திருஇருதய ஆலயத்தில் திருப்பலியும் மறையுரையும் திண்டுக்கல் மறை மாவட்ட உதவி பங்குத்தந்தை சைமன் சேசு அந்தோணி வழங்கினார். பின்னர் சாரல் மழையில் இரவில் அன்னையின் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தினை நேற்று அதிகாலை அடைந்தது. இதில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜா, உதவி பங்குத்தந்தைகள் சேவியர் அருள்ராயன், செல்வராஜ், முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இபுராகிம், எட்வர்ட், விழா கமிட்டி தலைவர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் இறுதி நாளான நேற்று காலை திருஇருதய ஆலயத்தில் செபாஸ்டீன் ஆங்கிசாமியும் திருப்பலி வழங்கினார். கருணை இல்ல இயக்குனர் தாமஸ் தேசிய கொடி ஏற்றி திருப்பலி வழங்கினார். புனித சலேத் அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தைகள் ஜஸ்டீன் திரவியம், அருள் அந்தோணி, சேவியர் ராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி வழங்கினர்.

    பின்னர் சப்பர பவனி திருஇருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூய சலேத் அன்னை ஆலயத்தினை அடைந்தது. அங்கு நற்கருணை ஆசியுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவில் கொடைக்கானல் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. 
    ×