search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "krishnan temple"

    • சுவாமிக்கும், கருட பகவானுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பின்னர் அலங்கார தீபாராதனையாகி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ருக்மினி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்

    இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5மணிக்கு திறக்கப்பட்டு 6 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதிஉலா வந்து கோயில் சேர்ந்தனர். தொடர்ந்து சுவாமிக்கும், கருட பகவானுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திருமஞ்சனத்தில் பஜனை பாடினர். பின்னர் அலங்கார தீபாராதனையாகி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கீழப்பாவூர் வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சாயரட்சை பூஜை நடைபெற்றது.
    • கருடாழ்வாருக்கு நீராஞ்சனம் ஏற்றி வழிபட்டால்,கடன் தொல்லை, திருமண தடை நீங்கும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் சாயரட்சை பூஜையும், மாலை 6 மணியளவில் கும்பஜெபம் (அனைத்து திரவியங்களாளும் அபிஷேகம்) அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கருடாழ்வாருக்கு நீராஞ்சனம் ஏற்றி வழிபட்டால்,கடன் தொல்லை, திருமண தடை நீங்கும், வேலைவாய்ப்பு மற்றும் சகல காரியங்களும் அனுகூலமாகும் என்பதால் நேற்று நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜையை தொடர்ந்து 10 மணி வரை சுவாமி சயன சேவை நடைபெற்றது.
    • 12-ந் தேதி ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 23-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை 21 நாட்கள் தினந்தோறும் அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை சுப்ரபாதம், கும்ப ஜபம், மா பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர்,தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனத்தால் அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சகஸ்ர நாம பாராயணம், ஆண்டாள் பாசுரம்,கோதா பிரபந்தம், சதுர்வேத பாராயணம் மற்றும் கீர்த்தனாவளி ஆகியன நடைபெற்று வருகிறது.

    வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜையை தொடர்ந்து 10 மணி வரை சுவாமி சயன சேவை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் கும்பாபிஷேகம், தீபாரதனை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு, சுவாமி வீதி உலா, வேத பாராயணம், பஜனை கோலாட்டம், கும்மி ஆகியன நடைபெறுகிறது. 12-ந் தேதி ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

    • காலை 7 மணி முதல் ஹோமம், 108 இளநீர், 108 லிட்டர் பால் அபிஷேகம், பரமபுருஷ ஆராதனை நடைபெற்றது.
    • விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    காலை 7 மணி முதல் பஞ்சஸூக்த ஹோமம், 108 இளநீர், 108 லிட்டர் பால் அபிஷேகம், பரமபுருஷ ஆராதனை வருசாபிஷேகத்திற்கான கும்பாபிஷேகம், விமானம், மூலவர் மற்றும் உத்ஸவ மூர்த்திகளுக்கு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கருடசேவை, நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.

    ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலை மையில் விழா குழுவினர் செய்தனர்.வருசாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ‘குழல்இனிது யாழ்இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்' என்பது வள்ளுவன் வாக்கு. அதாவது குழலின் இசையும், யாழின் இசையும் இனிது என்பவர்கள், அவர்தம் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவர்களே என்கிறார் திருவள்ளுவர். குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி, தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது.

    ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானத்தைக் குறிப்பதாகும். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி, புத்திக்கூர்மை, சாஸ்திர ஞானம் முதலியவற்றையும் இந்த ஐந்தாம் இடத்தின் மூலமாகவே அறிந்துவிட முடியும்.

    மனிதன் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர, புத்திரன் வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். நாம் முற்பிறப்பில் சேர்த்து வைத்த புண்ணியம் தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். தன் தகப்பனின் ஆத்மாவை ‘புத்’ எனும் நரகத்தில் இருந்து காப்பாற்றுபவன் என்பதால் ‘புத்திரன்’ என்கிறார்கள்.

    அபிராமி பட்டர் பதினாறு வகைப் பேறுகளை திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும்போது, ‘தவறாத சந்தானம் வேண்டும்’ என்று கேட்கிறார். அதாவது மற்றப் பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை; குழந்தைப் பாக்கியம் எனும் சந்தானப் பிராப்தி தவறாமல் கிடைக்க அருள்செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

    குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.

    இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இங்கு கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரின் திருஅவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கண்ணன் தவழ்ந்து வரும் அழகைக் காண, அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே ஆயர்பாடியின் யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெறும் பாக்கியம் பெற்றனர்.

    ஆயர்பாடியில் கண்ணன் சிறுகுழந்தை வடிவில் தவழும் அதே திருக்கோலத்தில் தொட்டமளூர் திருத்தலத்தில் தவழ்கிறான் கண்ணன். நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இந்தக் கோவிலைக் கட்டி உள்ளார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப் படுகின்றன. ராமானுஜர், ராகவேந்திரர், வியாசராஜரும் இங்கு வழிபட்டுள்ளனர்.

    கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் தரிசனத்தைக் காணலாம். இங்கு மூலவராக மூன்றடி உயரத்தில் சாளக்கிராமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட ராமஅப்ரமேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை ராமர் வழிபாடு செய்துள்ளாராம். அதனால் தான் ‘ராம அப்ர மேயர்’ என்று பெயர். ‘அப்ரமேயன்' என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்' என்று பொருள்.

    ஆலயத்தின் தென்மேற்கில் தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் அரவிந்தவல்லித் தாயார் அருள்பாலிக் கிறார். ஆலயத்தின் வடமேற்கில் உள்ள விஷ்ணு தீர்த்தத்குளத்தில் சுயம்புவாய் தோன்றியவர் இத்தல தாயார் என்கிறார்கள். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் அரவிந்தவல்லித் தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.

    அடுத்து பிரகார வலம் வருகையில் வடமேற்கில் கிழக்குப் பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணன் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து, திருப்பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் கருடபீடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் அருள்கிறார்.

    சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோவில் மூடப்பட்டிருந்தது. அதனால் அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா' என்னும் கீர்த்தனையைப் பாடினார். ஆச்சரியம்.. கோவில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத் திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் உள்ளாராம்.

    நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது.

    அமைவிடம் :

    பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது. 
    ×