search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapped try"

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காதல் ஜோடியை மிரட்டி வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றிய காதல் ஜோடியை மிரட்டி, பஸ் நிலையத்தில் சுற்றிய மற்றொரு வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக் தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

    பாளை அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது23). இவர் சென்னை பம்மல் பகுதியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது பம்மல் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும், விஜய்க்கும் காதல் அரும்பியது. சமீபத்தில் பிளஸ்-2 தேர்வுகள் அனைத்தும் முடிந்ததால், விஜய் அந்த மாணவியை திருமண ஆசை காட்டி, தனது சொந்த ஊரான அடைமிதிப்பான் குளத்திற்கு கடத்தி வந்தார்.

    இங்குள்ள விஜயின் பெற்றோரும், உறவினர்களும், மாணவிக்கு 17 வயதே ஆவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், உடனடியாக மாணவியை சென்னையில் உள்ள அவரது பெற்றோரிடம் சேர்த்து விடும்படியும் கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பினர்.

    இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் நேற்று முன்தினம் இரவு விஜயும், அவரது காதலியும் புதிய பஸ் நிலையத்தில் சுற்றி சுற்றி வந்தது தெரியவந்தது. அப்போது தான் பஸ் நிலையத்தில் நின்ற வாலிபர் போலீஸ் என்று கூறி அந்த மாணவியை கடத்தி செல்ல முயன்றுள்ளார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் மாணவியை கடத்தி செல்லவில்லை என்றும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைக்க நினைத்தேன் என்றும் கூறியதால் அவரை விடுவித்தனர்.

    இந்த நிலையில் மாணவியை காணவில்லை என்று அவரது தந்தை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனால் மாணவியையும், அவரை கடத்தி வந்த வாலிபர் விஜயையும், பம்மல் போலீசில் ஒப்படைக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 7-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற குடிபோதை வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகரின் மையப்பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் கூட்டமும் அதிகளவில் இருக்கும். இதனால் எப்போதும் பழைய பஸ் நிலையம் பரபரப்பாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவிகள் வீட்டுக்கு செல்வதற்காக பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு வாலிபர் பயங்கர தோற்றத்துடன் குடிபோதையில் அங்கும், இங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் மாணவிகள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம், நான் தான் உன் தந்தை, என் கூட வா, வீட்டுக்கு போகலாம் என்று கூறினார். இதை கேட்டு அந்த மாணவி மட்டுமில்லாது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போது மாணவியின் கையை பிடித்து கடத்தி செல்ல முயன்றார். அதிர்ச்சியடைந்த மாணவி காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரிடம் இருந்து மாணவியை பத்திரமாக மீட்டனர். அப்போதும் அவர் குடிபோதையில் உளறியப்படி இருந்தார்.

    இதனால் அந்த வாலிபர் குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் அடைந்து பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இது பற்றி தஞ்சை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரிடம் விசாரித்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர் அளவுக்கதிகமான குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் பழைய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலிகிராமத்தில் நேற்று இரவு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டரை கடத்த முயன்ற 3 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் சிக்கினார். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    போரூர்:

    வளசரவாக்கம் சேனாதிபதி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். குழந்தைகள் நல மருத்துவர். சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 2-வது தெருவில் மருத்துவ மனையை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10 மணி அளவில் கார்த்திகேயன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கத்தி முனையில் டாக்டர் கார்த்திகேயனை கடத்த முயன்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 3 பேர் கும்பலை பிடிக்க முயன்றனர்.

    இதில் ஒருவன் மட்டும் சிக்கினான். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை விருகம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்த்தைச் சேர்ந்த லோக பிராமன் (21) என்பது தெரியவந்தது.

    விசாரணையில் டாக்டர் கார்த்திகேயனிடம் கடந்த சில மாதங்களாக பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்ததும், ஆனால் அப்பெண்ணின் குழந்தை இறந்து விட்டதும் அதன் காரணமாக டாக்டரை கடத்தி செல்ல வந்ததாகவும் கூறினார். அவனிடமிருந்து இரண்டு கத்தி மற்றும் கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    லோக பிராமனின் கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த சத்யா மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டாக்டரை கடத்த வந்த மூவரும் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் பணம் பிரச்சனை காரணமாக டாக்டரை கடத்த வந்தார்களா என்கிற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×