search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi samathi"

    திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தனது ஆதரவாளர்களுடன் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் பஜனை பாடி அஞ்சலி செலுத்தினார். #DMK #Karunanidhi #AVVelu
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    கருணாநிதியின் சமாதியை மலர்களால் விதவிதமாக அலங்கரித்தும் வைத்துள்ளனர்.

    கருணாநிதியின் மீது அளவற்ற பாசம் கொண்ட கட்சிக்காரர்கள் பலர், தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது பஜனை மெட்டில் கருணாநிதியை புகழ்ந்து பாடல்கள் பாடினார். எங்கள் தலைவா தங்கத் தலைவா... அன்பு தலைவா என்று பாடிய பாடல்களுக்கு ஏற்ப இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன.

    இதற்காக ஆர்மோனிய பெட்டி, மிருதங்கம் கஞ்சரா, தாளம், கட்டை போன்ற 50-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளுடன் நிர்வாகிகளை அங்கு அழைத்து வந்திருந்தார்.

    நினைவிடத்தை சுற்றி அமர்ந்து கொண்டு இசை இசைக்க எ.வ.வேலு அழகாக கருணாநிதியை புகழ்ந்து பஜனை பாடினார்.

    சுமார் 1 மணி நேரம் பாடிய இவரது பாடல்கள் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

    இதுபற்றி எ.வ.வேலுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தலைவர் கலைஞருக்கு இசை மீது அதிக நாட்டம் உண்டு. இசையை மிகவும் ரசிப்பார். எனவே இவரது புகழை இசை மூலம் வெளிப்படுத்தி பாடினோம். தலைவரை புகழ்ந்தும் பஜனை பாடினோம்.

    வைஷ்ணவ கோவில்களில் நிறைய ஆராதனை, பஜனை பாடல்கள் பாடுவதை பார்த்திருக்கிறேன். அதே போல் தலைவருக்கும் பஜனை பாடல்கள் பாடி எங்கள் அன்பை வெளிப்படுத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுமார் 1 மணி நேரம் 10-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் பிச்சாண்டி கிரி, அம்பேத்கர் மற்றும் ஸ்ரீதர் உள்பட ஏராளமானோர் இடம் பெற்றிருந்தனர். #DMK #Karunanidhi #AVVelu

    கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் தரக்கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையை காட்டவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார். #Kanimozhi #EdappadiPalanisamy
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் தரக்கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையை காட்டவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மே 22-ந்தேதி 13 பேர் கொல்லப்பட்ட பிறகு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.


    வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில் முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால் இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30-க்கு தொடங்க இருந்த நிலையில் அரைமணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால் சி.எஸ். வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.

    கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால் இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #Kanimozhi #EdappadiPalanisamy
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவை வெள்ளியங்கிரி மலையை சேர்ந்த உதயகிரி சுவாமிகள் இன்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi
    சென்னை:

    கருணாநிதி நினைவிடத்தில் கோவை வெள்ளியங்கிரி மலையை சேர்ந்த உதயகிரி சுவாமிகள் இன்று அஞ்சலி செலுத்தினார். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் கோரக்கு சித்தர் தவம் செய்த பகுதியில் வசித்து வருவதாக கூறும் இவர் பொதுமக்களோடு பொது மக்களாக நின்று அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்தார்.

    அப்போது அவர் சமாதி அருகே சென்று பார்க்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார். இதையடுத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை உள்ளே அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்.

    கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தியது பற்றி அவர் கூறியதாவது:-

    கலைஞர் கடவுள் மறுப்பு கொள்கை உடையவராக இருந்தாலும் அன்பு, அரவணைப்பு, சாந்தம் ஆகியவற்றைத்தான் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பல நன்மைகளை அவர் செய்துள்ளார். சொல்லப் போனால் அவரும் சித்தர் தான்.

    அபூர்வமான மனிதர்களில் அவரும் ஒருவர். 7 வயதில் இருந்தே வெள்ளியங்கிரி மலையில் நான் சேவை செய்து வருகிறேன். 17 வயதுக்கு பின்னர் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து மனைவி, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு மீண்டும் கடவுளுக்கு பணி செய்ய சென்றுவிட்டேன். எனது குருநாதர் நாராயண குரு. ஜம்முவில் உள்ள அவரிடம் தான் நான் தீட்சை பெற்றேன். என்னை கடவுள் தான் இங்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunanidhi
    மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு 3-வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Karunanidhi #RIPKarunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்றும் சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று 3-வது நாளாக கருணாநிதி நினைவிடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தளச் செங்கல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மட்டும் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பொது மக்களும், கட்சித் தொண்டர்களும் அதன் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

    அண்ணா சமாதி வழியாக உள்ளே நுழைந்து இடது புறமாக சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வலது புறமாக வெளியில் வரும் வகையில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். இந்த வழியாக மட்டுமே பொதுமக்களும், கட்சியினரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வெள்ளை நிறத்தில் சிறிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.


    கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே பொதுமக்கள் திரண்டனர். 7 மணி அளவில் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தி.மு.க.வினரும், பொது மக்களும் சாரை சாரையாக திரண்டு வந்து சமாதியில் விழுந்து வணங்கினர். பூக்கள் மற்றும் பழங்களால் கருணாநிதி நினைவிடம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பூ அலங்காரத்தில் செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

    கருணாநிதி சிரித்தபடி இருக்கும் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான முரசொலி நாளிதழும் சமாதியில் வைக்கப்பட்டிருந்தது.

    இன்று தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வந்து அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான பெண்கள் கருப்பு சேலை அணிந்து வந்திருந்தனர். ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பெண்கள் பலர் கதறி அழுதனர்.


    பச்சையம்மாள் என்ற பெண் சமாதியை விட்டு செல்லும் வரையில் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். எங்களை விட்டு போய் விட்டீர்களே அப்பா. தாங்க முடியவில்லையே அப்பா. அப்படியே படுத்திருந்தால் கூட தலைவர் இருக்கிறார் என்று இருந்திருப்போமே அப்பா என்று அவர் கண்ணீர் விட்டு கதறினார். உடன் வந்திருந்த தி.மு.க.வினர் அவரை ஆறுதல் படுத்தினார்கள்.

    கருணாநிதி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த தொண்டர்கள் சிலர் சமாதியின் அருகில் மண்டியிட்டு வணங்கி பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். பொது மக்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து குடும்பத்தோடு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

    பொது மக்கள் அதிக அளவில் கூடுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலையில் உதவி கமி‌ஷனர்கள் முத்து வேல்பாண்டி, ஆரோக்கிய பிரகாசம், அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஷிப்டு முறையில் கருணாநிதி நினைவிடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு ஷிப்டிலும் 2 உதவி கமி‌ஷனர்கள், 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 80 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

    நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை தினம் என்பதால் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அதிக அளவில் கருணாநிதி நினைவிடத்தில் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு 2 நாட்களும் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #DMKLeader #Karunanidhi #RIPKarunanidhi
    ×