search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KarnatakaElection2018"

    குமாரசாமி மந்திரிசபையில் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும், சில முக்கிய இலாகாக்கள் ஒதுக்கவும் முடிவாகியுள்ளது. #Karnataka #KumaraSamyMinistry

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பா ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆதரவை பெற்று வெற்றி பெறுவாரா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது திடீர் ராஜினாமா திருப்பத்தை ஏற்படுத்தியது.

    3 நாளில் அவர் பதவி இழந்தது பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதேசமயம் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எடியூரப்பா ராஜினாமா செய்ததால் கவர்னர் வாஜுபாய் வாலா, ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக் கொண்டார்.

    குமாரசாமி ஏற்கனவே கவர்னரை சந்தித்து தன்னை ஆதரிக்கும் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கொடுத்து இருந்தார். இதனால் நேற்று புதிதாக கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. குமாரசாமிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கால அவகாசம் அளித்தார்.

    கவர்னரை சந்தித்த பின்பு குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்றார். கவர்னர் 15 நாள் அவகாசம் அளித்துள்ளார். அதற்கு முன்னதாகவே மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்றும் கூறினார்.

    பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை காங்கிரஸ்- ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களை பெங்களூரிலேயே தங்கி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, ஜே.டி.எஸ் தலைவர் தேவேகவுடா, முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ், முன்னாள் முதல்-மந்திரிகள் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    பதவி ஏற்பு விழாவை முதலில் நாளை (திங்கட்கிழமை) வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தார். நாளை ராஜீவ்காந்தி நினைவுநாள் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் அவர்களுக்கு வசதியாக 23-ந்தேதி பதவி ஏற்பு விழா வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.


    புதிய மந்திரிசபை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கலந்து கொண்டார்.

    இதில் மந்திரி பதவிகளை இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பு குழு அமைத்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து ஆட்சி அதிகாரத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும், சில முக்கிய இலாகாக்கள் ஒதுக்கவும் முடிவாகியுள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரி ஆகிறார். முதல்- மந்திரியாக பதவி ஏற்கும் குமாரசாமி நிதித்துறையையும் கூடுதலாக வைத்துக் கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தலுக்கு முன்பு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஜே.டி.எஸ். கட்சியுடன் கூட்டணி வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று மகேஷ் என்பவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் மந்திரி சபையில் இடம் அளிக்கப்படுகிறது.

    மேலும் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவும் மந்திரி சபையில் முக்கிய பங்கு வகிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதவிர காங்கிரஸ், ஜே.டி.எஸ். சார்பில் யார்- யார்? மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல் வருமாறு:-

    விஸ்வநாத் (ஜே.டி.எஸ்.)- கல்வித்துறை.

    புட்டராஜூ (ஜே.டி.எஸ்.)- விவசாயத் துறை.

    ரேவண்ணா (ஜே.டி.எஸ்.) - பொதுப்பணித்துறை

    ஜார்ஜ் (காங்கிரஸ்)- பெங்களூரு நகர வளர்ச்சி துறை

    கிருஷ்ணப்பா (காங்கிரஸ்) - விளையாட்டுத் துறை

    கிருஷ்ண பைரே கவுடா (காங்கிரஸ்)- தகவல் மற்றும் விளம்பரத்துறை

    மகேஷ் (பகுஜன் சமாஜ்)- சமூக நலத்துறை

    ஜி.டி.தேவகவுடா (ஜே.டி. எஸ்.) - கூட்டுறவு துறை

    பண்டேப்பா கசேம்பூர் (ஜே.டி.எஸ்.) - ஜவுளி மற்றும் அறநிலைய துறை

    தம்மன்னா (ஜே.டி.எஸ்.)- தொழிலாளர் நலத்துறை

    தினேஷ் குண்டுராவ் (காங்கிரஸ்)-கலால் வரி

    சுதாகர் (காங்கிரஸ்)- சுகாதாரத்துறை

    தன்வீர் சையது (காங்கிரஸ்) - உயர் கல்வித்துறை

    ரோசன் பெய்க் (காங்கிரஸ்) -வனத்துறை

    எம்.டிபாட்டீல் (காங்கிரஸ்)- உணவு மற்றும் நுகர் பொருள் வினியோகத் துறை

    ஆர்.வி.தேஷ்பாண்டே (காங்கிரஸ்)-சட்டம் மற்றும் சட்டசபை விவகாரங்கள் துறை

    சதீஷ் ஜர்கிகோலி (காங்கிரஸ்) -சிறுதொழில் மற்றும் சர்க்கரை ஆலைகள்.

    அஜய் (காங்கிரஸ்) -அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

    சிவசங்கரப்பா (காங்கிரஸ்)- வருவாய் துறை

    ராமலிங்கரெட்டி (காங்கிரஸ்)- போக்குவரத் துறை

    ராமசாமி (ஜே.டி.எஸ்.)- தொழில் துறை

    நரேந்திரா (காங்கிரஸ்)- கால்நடை துறை.

    காதர் (காங்கிரஸ்) -சுகாதாரம்.

    எங்களது அடுத்த இலக்கு 2019 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவித்துள்ளார். #Parliamentelection #KarnatakaElection #DeveGowd

    பெங்களூர்:

    காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி வருகிற 23-ந்தேதி பதவி ஏற்கிறார்.

    இந்த நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனது மகன் குமாரசாமி முதல்-மந்திரியாவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மதச்சார்பற்ற தன்மையுள்ள ஒரு ஆட்சியை உருவாக்க முடிந்தது எனக்கு நிம்மதியை தருகிறது. வகுப்பு வாத கட்சியை தடுத்து நிறுத்தக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்று இருந்தது திருப்தி அளிக்கிறது. இதற்கு மாநில கட்சி உதவியாக இருந்தது.

    எங்கள் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று நாங்கள் எதிர்பார்த்ததுதான் எதிர்க்கட்சி வரிசையில் இருக்க தயாராக இருந்ததுதான். உண்மை. ஆனாலும் சூழல் வித்தியாசமாக அமைந்தது. மதச்சார்பற்ற அணிகள் ஒன்று இணையும் நிலை உருவானது. காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை எங்களுக்கு அளித்தது மகிழ்ச்சி அளித்தது.

    2006-ம் ஆண்டு எனது மகன் பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதனால் அவர் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டார் என்பதை அறிந்து இருந்தார். தற்போது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தார். ஏற்கனவே செய்த தவறை மீண்டும் இந்த முறை செய்யமாட்டேன் என்று தெரிவித்தார். இதன் மூலம் தன் மீது இருந்த கறையை நீக்கி தற்போது சுத்தப்படுத்திக் கொண்டார்.

    காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே இதற்கு முன்பு முழுமையான ஆட்சி அமையவில்லை. ஆனால் தற்போது அது மாதிரியான சூழ்நிலை இல்லை. தற்போது அமைய இருக்கும் புதிய அரசு 5 ஆண்டு காலம் பதவியில் இருக்கும் என்று நம்புகிறேன்.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் 14-ந் தேதியே பெங்களூர் வந்துவிட்டார். 15-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையான போதே அவர் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். மதச்சார்பற்ற கட்சியான அவர்கள் முன்னேற்றம் காணும் வகையில் விவாதித்தனர். இதன் மூலம் பா.ஜனதாவின் திட்டத்தை முறியடிக்க முடிந்தது.

    பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்ததால் பா.ஜனதா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் குதிரை பேரத்தை நம்பி ஆட்சி அமைத்து இருக்கக் கூடாது. நம்பர் இல்லாமல் பா.ஜனதாவின் கணக்கீட்டு முறை தவறானது.

    எங்களது அடுத்த இலக்கு 2019 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். அதற்கான நேரம் இதுதான்.

    பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும்.

    இவ்வாறு தேவேகவுடா கூறியுள்ளார்.

    காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி, சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நாளை குமாரசாமி டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறார். மேலும் கூட்டணி மந்திரி சபையில் காங்கிரசுக்கு எத்தனை மந்திரி பதவி அளிப்பது, யார்-யாரை நியமிப்பது பற்றியும், சோனியா, ராகுலுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த சந்திப்பின் போது பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருமாறு சோனியா, ராகுலுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கிறார்.

    பின்னர் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை முறியடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும், சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். அவர்களையும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

    குமாரசாமி மந்திரிசபை பதவி ஏற்பு விழா பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. எடியூரப்பாவும் பதவி ஏற்க இந்த ஸ்டேடியத்தைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தார். பின்னர் கவர்னர் மாளிகையிலேயே தனி ஆளாக பதவி ஏற்றார்.

    அவர் தேர்வு செய்த ஸ்டேடியத்தில் குமாரசாமி பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி கர்நாடக கவர்னரை இன்று மாலை சந்தித்தார். #Kumarasamy #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் ஐந்தரை மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 91 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 70 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிள்ளனர்.

    பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பினார்.

    இதற்கிடையில், பா.ஜ.க. மாநில தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாலை சுமார் 5 மணியளவில் கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்தித்தார்.

    சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 7 நாள் அவகாசம் தாருங்கள் என கவர்னரை எடியூரப்பா கேட்டுகொண்டதாக தெரிகிறது.

    இந்த சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி கர்நாடக கவர்னரை குமாரசாமி இன்று மாலை சந்தித்தார்.

    குமாரசாமியுடன் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் எம்.எம்.எல்.ஏக்கள் உடன் சென்றிருந்தனர்.

    ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை கவர்னரிடம் குமாரசாமி அளித்தார். #Kumarasamy #KarnatakaElection2018

    ×