search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி மந்திரிசபை ரெடி - மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பதவி
    X

    குமாரசாமி மந்திரிசபை ரெடி - மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பதவி

    குமாரசாமி மந்திரிசபையில் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும், சில முக்கிய இலாகாக்கள் ஒதுக்கவும் முடிவாகியுள்ளது. #Karnataka #KumaraSamyMinistry

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பா ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆதரவை பெற்று வெற்றி பெறுவாரா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது திடீர் ராஜினாமா திருப்பத்தை ஏற்படுத்தியது.

    3 நாளில் அவர் பதவி இழந்தது பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதேசமயம் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எடியூரப்பா ராஜினாமா செய்ததால் கவர்னர் வாஜுபாய் வாலா, ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக் கொண்டார்.

    குமாரசாமி ஏற்கனவே கவர்னரை சந்தித்து தன்னை ஆதரிக்கும் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கொடுத்து இருந்தார். இதனால் நேற்று புதிதாக கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. குமாரசாமிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கால அவகாசம் அளித்தார்.

    கவர்னரை சந்தித்த பின்பு குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்றார். கவர்னர் 15 நாள் அவகாசம் அளித்துள்ளார். அதற்கு முன்னதாகவே மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்றும் கூறினார்.

    பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை காங்கிரஸ்- ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களை பெங்களூரிலேயே தங்கி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, ஜே.டி.எஸ் தலைவர் தேவேகவுடா, முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ், முன்னாள் முதல்-மந்திரிகள் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    பதவி ஏற்பு விழாவை முதலில் நாளை (திங்கட்கிழமை) வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தார். நாளை ராஜீவ்காந்தி நினைவுநாள் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் அவர்களுக்கு வசதியாக 23-ந்தேதி பதவி ஏற்பு விழா வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.


    புதிய மந்திரிசபை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கலந்து கொண்டார்.

    இதில் மந்திரி பதவிகளை இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பு குழு அமைத்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து ஆட்சி அதிகாரத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும், சில முக்கிய இலாகாக்கள் ஒதுக்கவும் முடிவாகியுள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரி ஆகிறார். முதல்- மந்திரியாக பதவி ஏற்கும் குமாரசாமி நிதித்துறையையும் கூடுதலாக வைத்துக் கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தலுக்கு முன்பு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஜே.டி.எஸ். கட்சியுடன் கூட்டணி வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று மகேஷ் என்பவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் மந்திரி சபையில் இடம் அளிக்கப்படுகிறது.

    மேலும் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவும் மந்திரி சபையில் முக்கிய பங்கு வகிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதவிர காங்கிரஸ், ஜே.டி.எஸ். சார்பில் யார்- யார்? மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல் வருமாறு:-

    விஸ்வநாத் (ஜே.டி.எஸ்.)- கல்வித்துறை.

    புட்டராஜூ (ஜே.டி.எஸ்.)- விவசாயத் துறை.

    ரேவண்ணா (ஜே.டி.எஸ்.) - பொதுப்பணித்துறை

    ஜார்ஜ் (காங்கிரஸ்)- பெங்களூரு நகர வளர்ச்சி துறை

    கிருஷ்ணப்பா (காங்கிரஸ்) - விளையாட்டுத் துறை

    கிருஷ்ண பைரே கவுடா (காங்கிரஸ்)- தகவல் மற்றும் விளம்பரத்துறை

    மகேஷ் (பகுஜன் சமாஜ்)- சமூக நலத்துறை

    ஜி.டி.தேவகவுடா (ஜே.டி. எஸ்.) - கூட்டுறவு துறை

    பண்டேப்பா கசேம்பூர் (ஜே.டி.எஸ்.) - ஜவுளி மற்றும் அறநிலைய துறை

    தம்மன்னா (ஜே.டி.எஸ்.)- தொழிலாளர் நலத்துறை

    தினேஷ் குண்டுராவ் (காங்கிரஸ்)-கலால் வரி

    சுதாகர் (காங்கிரஸ்)- சுகாதாரத்துறை

    தன்வீர் சையது (காங்கிரஸ்) - உயர் கல்வித்துறை

    ரோசன் பெய்க் (காங்கிரஸ்) -வனத்துறை

    எம்.டிபாட்டீல் (காங்கிரஸ்)- உணவு மற்றும் நுகர் பொருள் வினியோகத் துறை

    ஆர்.வி.தேஷ்பாண்டே (காங்கிரஸ்)-சட்டம் மற்றும் சட்டசபை விவகாரங்கள் துறை

    சதீஷ் ஜர்கிகோலி (காங்கிரஸ்) -சிறுதொழில் மற்றும் சர்க்கரை ஆலைகள்.

    அஜய் (காங்கிரஸ்) -அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

    சிவசங்கரப்பா (காங்கிரஸ்)- வருவாய் துறை

    ராமலிங்கரெட்டி (காங்கிரஸ்)- போக்குவரத் துறை

    ராமசாமி (ஜே.டி.எஸ்.)- தொழில் துறை

    நரேந்திரா (காங்கிரஸ்)- கால்நடை துறை.

    காதர் (காங்கிரஸ்) -சுகாதாரம்.

    Next Story
    ×