search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamalavalli nachiyar temple"

    • தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.
    • தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும்.

    திருச்சி திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் விசேஷமானதாக கருதப்படும் நவராத்திரி உற்சவம் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து நவராத்திரி கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி, நவராத்திரி உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று மாலை 3.30 மணி அளவில் கமலவல்லி நாச்சியார் (தாயார்) மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க உள் வீதிகளில் அரையர் சேவையினை கேட்டபடி வலம் வந்தார். அப்போது கமலவல்லி நாச்சியார் சந்திர சூரியன் சவுரி கொண்டை, நெத்தி பட்டை, கலிங்க தொரா, காசு மாலை, முத்து மாலை, பவள மாலை, தங்க நெல்லிக்காய் மாலை, வைரத்தாலான பெருமாள் பதக்கம், வலது ஹஸ்தத்தில் கிளி, இடது ஹஸ்தத்தில் திருவாபரணங்கள், வைர திருமாங்கல்யம், பாத சலங்கை,தோடா (சிலம்பு) அணிந்திருந்தார்.

    பின்னர் நவராத்திரி மண்டபத்தில் பொற்பாதங்கள் (திருவடி) தெரிய மாலை 4 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து பொதுஜனசேவை மாலை 6 மணி வரை நடைபெற்றது. பின்னர் 6.15 மணிக்கு தாயாருக்கு அமுது செய்விக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கொலுவில் தாயார் வீற்றிருந்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணி முதல் இரவு 8.45 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் இருந்து தாயார் மூலஸ்தானத்துக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால் உறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தாயார் திருவடி சேவையை கண்டு தரிசித்து சென்றனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் விளங்குகிறது. வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் இரண்டாவது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் வருகிற 26-ந் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்குகிறது.

    தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி வரை விழா நடக்கிறது. 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (பகல் பத்து நாட்கள்) மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு பொதுஜன சேவை நடக்கிறது. 30-ந் தேதி இரவு 8.30 மணிக்கு முத்துக்குறி, வியாக்யானம், அபிநயம், அரையர் தீர்த்தம் மற்றும் சடகோபம் சாதித்தல் நடக்கிறது. இந்த 5 நாட்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி முடிய மூலஸ்தான சேவை கிடையாது.

    31-ந் தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதி முடிய திருவாய்மொழி என்னும் ராப்பத்து திருநாள் நடக்கிறது. அன்றைய நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளி, மாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடக்கிறது.

    4-ந் தேதியன்று தீர்த்தவாரி, திருமஞ்சனம் மற்றும் திருவாய் மொழித் திருநாள் சாற்றுமறை நடைபெறுகிறது.

    மேற்கண்ட தகவலை ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் இணை ஆணையர் ஜெய ராமன் தெரிவித்துள்ளார்.
    ×