search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jesus Birth"

    • கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம்.
    • கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் ஸ்டார் தொங்கவிடப்பட்டிருக்கும்.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில், அவர் பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் தொடக்கமாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் பல சின்னங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும், விழாவின் ஆயத்த பணி நாட்களின் போதும் இந்த சின்னங்கள் பிரதானமாக இடம் பெறுகின்றன.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சின்னங்களான கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மணிகள், சாண்டா கிளாஸ், ஏஞ்சல்ஸ், புறா போன்ற பல சின்னங்கள் உள்ளன.

    ஒளிரும் கிறிஸ்துமஸ் மரம்

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம். அதாவது பசுமை மாறாத ஊசியான கூம்பு வடிவில் உள்ள மரங்களை வெட்டி ஆலயத்தின் வெளியே வைத்து, அதில் வண்ண விளக்குகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பர். சிலர் பண்டிகையை கொண்டாடும் விதமாக தங்களது வீட்டின் முன்பும் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து விழாவை கொண்டாடுவார்கள்.

    கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் ஜெர்மனி. புனித போனிடஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனை செய்திருந்த வேளையில் அங்கிருந்த மக்கள் ஓக் மரத்தை தெய்வமாக வழிபட்டனர். அதனை கண்ட அவர் அம்மரத்தை வெட்டி வீழ்த்தினார். அதனடியில் இருந்து கிறிஸ்துமஸ் மரம் முளைத்து வளர்ந்ததாக ஓர் நிகழ்வு கூறப்படுகிறது. இதுவே கிறிஸ்துமஸ் மரத்திற்கு அனைவர் கூறும் கதை.

    1500-ம் ஆண்டு மார்ட்டின் லூதர்கிங் பனிபடர்ந்த மரங்கள் மீது வெளிச்சம் பட்டு ஒளிர்வதை கண்டு பீர்மரத்தை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்துமஸ் விழாவில் பயன்படுத்தினார் என கூறப்படுகிறது.

    18-ம் நூற்றாண்டிற்கு பிறகு கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் நிகழ்வு உலக நாடுகள் முழுவதும் பரவியது. கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தை கொண்டிருப்பதும், அதன் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூயஆவி எனும் முப்பரிமாணங்களை குறிப்பதாகவும் உள்ளது என கிறிஸ்துவ விளக்கங்கள் கூறுகின்றன.

    கிறிஸ்துமஸ் ஸ்டார்

    கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு முன்பாகவே, டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் அழகிய நட்சத்திரம் (கிறிஸ்துமஸ் ஸ்டார்) தொங்கவிடப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் விழாவில் நட்சத்திரத்தின் அலங்கார அணிவகுப்பு நிகழ காரணமாய் யாதெனின், பெத்லேகம் விண்மீன் அல்லது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது இயேசுவின் பிறப்பை ஞானிகளுக்கு சுட்டிக்காட்டிய விண்மீன். பெத்லகேமில் இயேசு பிறந்த இல்லம் வரை ஞானிகளுக்கு வழிகாட்டியது இந்த நட்சத்திரம்.

    அதன் நினைவாய் தங்கள் இயேசு பிறப்பு வழிகாட்டிய விண்மீன் தொங்கட்டும் என கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் "கிறிஸ்துமஸ் ஸ்டார்" என்ற விண்மீன் விளக்கை ஒளிர விடுகிறார்கள்.

    கிறிஸ்துமஸ் குச்சி

    250 வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த கிறிஸ்துமஸ் இனிப்பு குச்சி. 1670-ல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது குழந்தைகள் அமைதியாக அமர்வதற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட' ஜே' வடிவிலான இனிப்பு குச்சி. இருப்பினும் இந்த ஆடுமேய்ப்பர் துரடு வடிவ இனிப்பு குச்சியின் வடிவம் ஜீசஸ்சை குறிப்பதாகவும், இதில் உள்ள சிவப்பு கோடு சிலுவையின் ரத்தத்தையும், வெண்ணை நிறம் தூய்மையை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. பெப்பர்மின்ட் சுவை ஹைசாப் செடியை நினைவு கூறும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் விழாவை நினைவு கூறும் வகையில் இன்னும் நிறைய சின்னங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியை, அதன் புனிதத்தை அறிவிக்கும் நோக்கிலேயே உள்ளன.

    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது உலகம் முழுவதும் அறியலாயிற்று.
    • தூய பரிசுத்த ஆவியால் கன்னி மரியாள் கருவுற்றார்.

    உலக மக்களை ரட்சிக்க வந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் யோசேப்பு-மரியா தம்பதியருக்கு மகனாக அவதரித்தார்.

    இயேசுவின் பிறப்பை அறிவிப்பதற்காக கடவுள், கபிரியேல் எனும் வானதூதரை, கலிலேயாவில் உள்ள நாசரேத் என்னும் ஊரில் உள்ள மரியாளிடம் அனுப்பினார். அப்போது "மரியா... நீர் கடவுளின் அருளை கண்டடைந்துள்ளீர். கருவுற்று ஒரு மகனை பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயிரிடுவீர். அவர், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" என்று மரியாவிடம் கூறினார் கபிரியேல்.

    அந்த காலத்தில், பேரரசர் அகுஸ்து சீசர், தனது பேரரசு முழுவதும் மக்கள் தொகையை கணக்கெடுக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

    சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராக இருந்தபோது முதன் முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்டது. தங்கள் பெயரை பதிவு செய்ய அவரவர்கள் தங்களது ஊருக்கு சென்றனர்.

    தாவீது வழி மரபினரான யோசேப்பும், தான் திருமணம் செய்ய ஒப்பந்தமான மரியாளோடு பெயரை பதிவு செய்ய நாசரேத்தில் இருந்து யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு சென்றார். அப்போது தூய பரிசுத்த ஆவியால் கன்னி மரியாள் கருவுற்றிருந்தார். அங்கு இருந்த போது மரியாளுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தனது தலைமகனான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்தார்.

    அந்த நாளைத் தான் ஒவ்வொரு டிசம்பர் 25-ந் தேதியும் கிறிஸ்துமஸ் ஆக உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    இயேசு கிறிஸ்து பிறந்தபோது, மரியாளுக்கு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. அதனால், குழந்தையை துணிகளில் பொதிந்து மாட்டுத் தொழுவத்தில் இருந்த தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்தனர்.

    அப்போது, அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி, இரவு முழுவதும் தங்கள் கிடையை காவல் காத்துக்கொண்டிருந்தனர். திடீரென்று வானதூதர் அவர்கள் முன் தோன்றினார். அவர்களிடம், "இதோ... எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். இன்று, ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். அந்த குழந்தையை துணிகளில் சுற்றி மாட்டுத் தீவனத் தொட்டியில் கிடத்தி இருக்கிறார்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.

    வானதூதர் சென்றபின், அந்த இடையர்கள் பெத்லகேம் சென்றனர். வானதூதர் அறிவித்தபடியே, அங்கு இருந்த பாலன் இயேசுவை கண்டு வணங்கினர். இதற்கிடையில், கிழக்கில் இருந்து ஜெருசலேம் வந்த சில ஞானிகள், ஏரோது அரசனிடம், "யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? அந்த அறிவிப்புக்கான விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.

    அரசனும் மறைநூல் அறிஞர்களை அழைத்து, மெசியா எங்கே பிறப்பார் என்று விசாரித்தான். அவர்கள் அவனிடம், "யூதேயாவில் உள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்" என்று கூறினார்கள். தொடர்ந்து, யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டு சென்று விண்மீன் தோன்றிய காலத்தை பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான் மன்னன் ஏரோது. அந்த ஞானிகளிடம், "நீங்கள் சென்று குழந்தையை குறித்து திட்டவட்டமாக எனக்கு தெரிவியுங்கள்" என்றும் கூறி, அவர்களை பெத்லகேமிற்கு அனுப்பினான்.

    அவர்கள் பெத்லகேம் சென்றபோது, முன்பு எழுந்த விண்மீன் மீண்டும் தோன்றி அவர்களுக்கு வழிகாட்டியது. அந்த விண்மீனை அவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். ஓரிடத்தில் அந்த விண்மீன் நின்றதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    இறைமகன் இயேசு பாலகனாக அன்னை மரியாள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருந்ததை கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். தாங்கள் கொண்டு வந்த பேழைகளை திறந்து, அதில் இருந்த பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம் ஆகியவற்றை காணிக்கையாக கொடுத்தனர்.

    மன்னன் ஏரோதை சந்திக்க மீண்டும் செல்ல வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் அங்கு செல்லவில்லை. வேறுவழியாக தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது உலகம் முழுவதும் அறியலாயிற்று.

    ×