search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol statue"

    வேட்டவலம் மனோன்மணி அம்மன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகரம் ஜமீன் வளாகத்தில் இருக்கும் மலைமீது ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவில் உள்ளது.

    அந்த கோவில் சுவற்றை துளையிட்டு, பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 5 அங்குலம் உயரம் உள்ள மரகத லிங்கம் மற்றும் 1 கிலோ எடை உள்ள அம்மனின் வெள்ளி கிரீடம், வெள்ளி பாதம், ஒட்டியாணம், மரகதலிங்கம் வைக்க பயன்படுத்திய வெள்ளி நாகாபரணம், 4 கிராம் தங்கத் தாலி கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைபோனது.

    இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அப்போதைய கூடுதல் எஸ்.பி. ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை விசாரணையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கூடுதல் எஸ்.பி., மாதவன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பையில், கொள்ளை போன மரகத லிங்கம் வீசப்பட்டிருந்தது.

    இதனை தொழிலாளி பச்சையப்பன் என்பவர் பார்த்துள்ளார். அவரது தகவலின் பேரில், ஜமீன் வளாகத்துக்கு சென்று, மரகத லிங்கத்தை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பழைய போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. பின்னர், மனோன்மணி அம்மன் கோவில் குருக்கள் சத்தியமூர்த்தி, சண்முகம் மற்றும் ஜமீன் மகேந்திர பந்தாரியர் ஆகியோரை வரவழைத்து விசாரித்தனர்.

    அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் என்று உறுதியாக கூறினர்.

    இதற்கிடையில், மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.



    மேலும், ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பையில் மரகத லிங்கத்தை வீசி விட்டு சென்றது யார்? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல் துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். #BJP #HRaja #PonManickavel
    கோவை:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராணுவ வீரர்கள் 40 ஆண்டுகளாக போராடி வந்த ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்த்து வைத்தது. நல்ல அரசாங்கம் என்று சொன்னால் நாட்டின் மரியாதை உலகளவில் உயர்ந்து இருக்க வேண்டும். தற்போது இந்தியாவுக்கு உலகளவில் மரியாதை உள்ளது. உலகளவில் இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதமாக வளர்ந்து வருகிறது.

    சிலை கடத்தல் எப்படி நடக்கிறது என்றால், கைவிடப்பட்ட கோவில்களில் சிலை கடத்தல் நடைபெறுவதை ஆதாரங்களுடன் நான் சொல்லிவருகிறேன். செவி வழி செய்தியை சொல்பவன் நான் அல்ல. 50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் இவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது அவமானம்.

    கோவை மாதம்பட்டியில் ஒரு கோவிலை புனரமைக்க 2015-ம் ஆண்டில் இருந்தே அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை கைவிடுவதே சிலைகளை திருடுவதற்குத்தான். அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி ஊரில் உள்ள நடராஜர், சிவகாமி சிலைகள் நியூயார்க்கில் உள்ளது. அங்கு எப்படி சென்றது?

    சிவன் கோவிலில் உள்ள 10 சிலைகள், பெருமாள் கோவிலில் உள்ள 8 சிலைகள் 45 ஆண்டுகளாக பூஜை செய்யாமல் பூட்டப்பட்ட நிலையில் 2007-ல் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை திறந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அதற்கு அடுத்து ஒரு வாரத்தில் கொள்ளை நடந்து 18 சிலைகள் திருடப்பட்டது. அது தான் நியூயார்க் போய் உள்ளது.

    அப்போது தான் ஜெர்மனியில் சுபாஷ் கபூர், இங்கு தீனதயாளன், சஞ்சீவி, அசோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிலைகளை போலியாக செய்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரி கஜேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினால் மற்ற துறையும் ஊழல் நிறைந்தது என்பது தானே அர்த்தம்.

    கவிதா, திருமகள் ஆகியோர் சிலை திருடர்கள். ஆதாரங்களோடு நடவடிக்கை எடுத்ததால் தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொன். மாணிக்கவேல் ஒன்றரை ஆண்டுகளில் 140 சிலைகளை மீட்டவர். மக்களிடம் கருத்து கணிப்பு வைத்தால் பொன். மாணிக்கவேல் வெற்றி பெறுவார்.


    பொன். மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல் துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள். பொன். மாணிக்க வேல் மீது குற்றச்சாட்டு சொல்பவர்கள் அமைச்சர் என்றாலும் அவரின் நேர்மை மக்களிடையே கேள்விக்கு உட்படுத்தப்படும்.

    சிலைகளை மீட்பவருக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். சந்தேகப்பட கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #PonManickavel
    ×