search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol scam"

    காஞ்சி ஏகாம்பரநாதர் சிலை முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் கோவில் அதிகாரி வீரசண்முகமணி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
    திருச்சி:

    காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமசுந்தரர் சிலை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவின் போது சாமி வீதியுலா நடைபெற்று வந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு இந்த சிலை சேதம் அடைந்ததால அறநிலையத்துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சிலை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது.

    இதுகுறித்து அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திலும் புகார் செய்தார். இதை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி சிலை முறைகேடு தொடர்பாக அப்போது தமிழக அரசின் தலைமை ஸ்தபதியாக இருந்த முத்தையா, சிலையை செய்த மாசிலாமணி, கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஆகியோர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அதன் பிறகு இந்த வழக்கில் எந்த மேல் நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சிலை தொடர்பான வழக்குகள் தற்போது போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் மூலம் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஏகாம்பரநாதர் கோவில் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போது அறநிலையத்துறை ஆணையராக இருந்த வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

    இந்த ஆண்டு ஏகாம்பநாதர் கோவில் உற்சவ விழா நடைபெற்ற அதே தினத்தில் சிலை முறைகேடு தொடர்பாக முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கைதான வீரசண்முகமணி கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று இரவோடு இரவாக திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். வருகிற 29-ந்தேதி வரை அவரை சிறை காவலில் வைக்க கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி அய்யப்பன் பிள்ளை உத்தரவிட்டுள்ளார்.

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #Idolscam
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து பல சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனி போலீஸ் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள், சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

    இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கவிதா உள்பட பலரை கைது செய்தனர். மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், தங்களையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று தமிழ்நாடு கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள கோவில்களில் லட்சக்கணக்கான சாமி சிலைகள், இந்துசமய அறநிலையத்துறையிடம் பாதுகாப்பாக உள்ளன. கோவில் சிலைகள் காணாமல்போன சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடைபெறவில்லை. அதிகாரிகளான நாங்கள் பதவி ஏற்கும் முன்பே, சம்பந்தப்பட்ட கோவில்களில் சிலைகள் காணாமல்போய் உள்ளது. இதுகுறித்து நாங்களே போலீசில் புகார் செய்துள்ளோம்.

    ஆனால், புகார் செய்த அதிகாரிகளையும் கூட போலீசார் கைது செய்துள்ளனர். ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சிறந்த அதிகாரி என்று நீதிமன்றம் பாராட்டியதால், அவர் மற்ற அதிகாரிகளை நேர்மையற்றவர்களாக கருதுவது சரியல்ல.

    மேலும், மனுதாரர் யானை ராஜேந்திரனும், ஐ.ஜி.யும் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றனர். ஒரு தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள விவரம் மனுதாரருக்கு எப்படி தெரியவந்தது? அவர் எப்படி அதுகுறித்து ஐகோர்ட்டில் மனு செய்தார்? என்பது மிகப்பெரிய கேள்வி.

    ஒரு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒரு வழக்கை குறிப்பிட்ட அதிகாரி மட்டுமே விசாரிக்கவேண்டும் என்பது மற்ற அதிகாரிகளை குறைத்து மதிப்பீடுவதாகிவிடும். எனவே, இந்த வழக்கில் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  #Idolscam
    தங்க சாமி சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கோர்ட் உத்தரவுப்படி இன்று காலை திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
    திருச்சி:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 2015-ம் ஆண்டு சோமாஸ் கந்தர் சிலையும், ஏலவார் குழலி சிலையும் புதிதாக செய்யப்பட்டது.

    அந்த சிலை செய்ததில் 8.75 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2 சிலைகளிலும் சிறிதளவு கூட தங்கம் சேர்க்கப்படாமல் முறைகேடு நடைபெற்றதாக சிலை திருட்டு தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தங்கம் முறைகேட்டில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர். பின்னர் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட கவிதா கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், அதனால் மேல் சிகிச்சை பெற வேண்டி இருப்பதாகவும் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனால் கடந்த 1-ந்தேதி அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கவிதா, தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, கவிதா ஒரு மாதம் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும். வாரம் இரு முறை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

    ஜாமீன் கிடைத்ததையடுத்து நேற்று அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி திருச்சி மகளிர் சிறைக்கு சென்றார். அங்கிருந்து அவர் ஜாமீனில் விடுதலையானார். கோர்ட்டு நிபந்தனைப்படி அவர் திருச்சியில் தங்கியிருந்து வருகிறார்.

    இன்று காலை அவர், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மேலும் வருகிற 16-ந்தேதி, விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று அவருக்கு போலீசார் உத்தரவிட்டனர். 16-ந்தேதி அவர் ஆஜராகும் போது, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் இந்த முறைகேடு குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய 100 கிலோ நகைகளை பங்கு போட்டது யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் ஆகிய 2 சிலைகளை செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அறநிலைய துறை பெண் அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த 2 சிலைகளையும் மீண்டும் செய்வதற்காக பொதுமக்களிடமிருந்து கிலோ கணக்கில் தங்கம் நன் கொடையாக பெறப்பட்டது.

    100 கிலோ வரையில் பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு தங்கத்தை வழங்கினார்கள். இப்படி பெறப்பட்ட தங்கத்தில் சிறிய குண்டுமணி அளவு கூட சாமி சிலைகளை செய்வதற்கு பயன்படுத்தவில்லை. 100 கிலோ தங்கத்தையும் முறைகேடாக சுருட்டி உள்ளனர்.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி முழுமையாக விசாரித்து வருகிறார்கள்.

    முன்னாள் ஆணையாளர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளார். சிலைகளை செய்த வி‌ஷயத்தில் ஆணையாளர் கூறியதைத் தான் நான் செய்தேன் என்று கவிதா கூறி இருக்கிறார்.

    இந்த முறைகேட்டில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. அனைவரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய 100 கிலோ நகைகளை பங்கு போட்டது யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்ற பின்னரே சிலை கடத்தல் தொடர்பான வி‌ஷயங்களும், கோவில்களில் நடந்துள்ள முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    ×