search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high treatment"

    • நோய்கள் கண்டறியப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கடந்த வாரம் முதல் அரசின் திட்டங்களின் ஒன்றான "கலைஞரின் வரும்முன் காப்போம்" திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு, வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் நடப்பாண்டிற்கு 36 மருத்துவ முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

    அதனைத்தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டு, 3 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, நமது மாவட்டத்தில் காரைக்குடி, செஞ்சை பகுதியில் உள்ள ஆலங்குடியார் உயர்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள லிம்ரா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்கள் அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யவும், முதல் -அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த முகாம்களில் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் இது போன்று நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இம்முகாமில் 27 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் சஞ்சீவி பெட்டகங்களையும், 4 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் விஜய்சந்திரன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தனியார் மருத்துவமனைகள் ஏழை-எளியவர்களுக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
    சென்னை:

    அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்தை துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது.

    தாய்சேய் நலம் மற்றும் குடும்ப நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், நோய்களைத் தடுப்பதற்காகவும் பல முன்னோடித் திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது.

    உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துதல், மருத்துவ மனித வளத்தை பெருக்குதல் போன்றவைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    இதன் காரணமாக இந்தியாவில் உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள இடமாக தமிழ்நாடு கருதப்படுகிறது.

    வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள சுகாதார குறியீடுகளை, 2023-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற இலக்கு அம்மாவால் வெளியிடப்பட்ட “தொலைநோக்கு திட்டம் 2023”ல் சேர்க்கப்பட்டுள்ளது.

    தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் ஐக்கிய நாடுகளின் மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை ஏற்கனவே அடைந்த நிலையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே தேசிய இலக்குகளையும் தமிழ்நாடு அடைந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் காப்பீட்டுத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 27.73 லட்சம் பயனாளிகள் 5,426.74 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நமது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    சமீபத்தில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு சாதனையாகும்.



    புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசு, அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தி வருகிறது. புற்றுநோய் உட்பட தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

    மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 60 கோடி ரூபாய் செலவில் 4 மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஏழை மக்களுக்கு தரமான, உயரிய சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகின்றது.

    இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலிருந்தும் நோயாளிகள் தமிழ்நாட்டிற்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இதனால், தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாவின் தலைமையிடமாக விளங்குவது மட்டுமன்றி, நமது நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித்தருகிறது.

    ஏழை எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சைகள் தேவைப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை இத்தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    அப்பல்லோ மருத்துவமனையின் பணி தொடர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami

    ×