நோய்கள் கண்டறியப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும்-அமைச்சர்

நோய்கள் கண்டறியப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அருகில் கலெக்டர் ஆஷா அஜித் உள்ளார்.  
திருப்பத்தூர் அருகே இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அருகில் கலெக்டர் ஆஷா அஜித் உள்ளார்.  
Published on

சிவகங்கை

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கடந்த வாரம் முதல் அரசின் திட்டங்களின் ஒன்றான "கலைஞரின் வரும்முன் காப்போம்" திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு, வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் நடப்பாண்டிற்கு 36 மருத்துவ முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

அதனைத்தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டு, 3 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, நமது மாவட்டத்தில் காரைக்குடி, செஞ்சை பகுதியில் உள்ள ஆலங்குடியார் உயர்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள லிம்ரா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யவும், முதல் -அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் இது போன்று நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இம்முகாமில் 27 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் சஞ்சீவி பெட்டகங்களையும், 4 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் விஜய்சந்திரன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com