search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "green road project"

    சென்னை-சேலம் இடையே 8 வழிபாதை அமைக்கப்பட உள்ளது. இந்த பசுமை சாலை திட்டத்துக்கு புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #chennaisalemexpressway

    சென்னை:

    சென்னை-சேலம் இடையே 277 கி.மீ தூரத்துக்கு 8 வழி பசுமை சாலைத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ‘‘பாரத்மலா பரியோனா திட்டம்’’ கீழ் அமல்படுத்தப் படுத்தப்பட இருக்கும் இந்த பசுமை வழிச்சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்த சாலைத் திட்டத்துக்கு சுமார் 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இந்த பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் வாழ்வாதார நிலத்தை மத்திய- மாநில அரசுகள் பறிக்க கூடாது என்று போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அதையும் மீறி பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல இடங்களில் நிலம் அளவிடப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டன. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    தற்போது இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், ‘‘8 வழி பசுமை சாலைத்திட்டத்தை மறுவரையறை செய்ய உள்ளோம். அதுவரை இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது’’ என்றார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சில புதிய உத்தரவுகளை பிறப்பித்தனர். ‘‘தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் அறிக்கை வெளியிட்டு நிலம் கையகப்படுத்தக் கூடாது’’ என்று தடை விதித்தனர்.

    இந்த நிலையில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தீவிரமாகி உள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் பசுமை வழி சாலைத்திட்டத் துக்கு நிலம் கையகப்படுத்த புதிய அறிவிக்கை வெளியிட்டு வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தர்மபுரி, கிருஷ்ண கிரி, சேலம் மாவட்டங்களில் நிலத்தை கையகப்படுத்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 1956-ன்படி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மூன்று மாவட்டங்களிலும் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்த வேண்டிய மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டத்தில் பசுமை வழி சாலைத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலம் தொடர்பாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 59.28 கி.மீ தொலைவுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவாக அந்த அறிவிக்கை அமைந்துள்ளது.

    அதன்படி ஸ்ரீபெரும் புதூர், செங்கல்பட்டு, உத்திர மேரூர் தாலுக்காக்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 39 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைய உள்ளதால் இந்த 3 தாலுக்காக்களிலும் மக்கள் பயன்படுத்தும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.

    39 கிராமங்களிலும் 1510 பேரின் நிலம் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசின் புதிய அறிவிக்கை காஞ்சீபுரம் மாவட்ட மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    பசுமை சாலை திட்டம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்டில் உள்ள நிலையில் புதிய அறிவிக்கை மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாகியுள்ளது. இந்த திட்டத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுவதால் தமிழக அரசும் இந்த திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. #chennaisalemexpressway

    திருவண்ணமலை மாவட்டத்தில் பசுமை சாலைக்கு எதிராக பெரியளவில் போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளதால் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு எதிராக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.

    போலீஸ் படையுடன் வந்த நில எடுப்பு அதிகாரிகளின் காலில் விழுந்தும், கைகூப்பி கொஞ்சியும் விவசாயிகள் விழுந்து கதறி அழுதனர். விவசாயிகள் கிணற்றில் குதித்தும், தீக்குளிக்கவும் முயற்சித்தனர். விவசாயிகளின் தற்கொலை முயற்சியை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து குறியீடு கற்களை நட்டனர்.

    செங்கம் கட்டமடுவு மற்றும் சி.நம்மியந்தல் கிராமங்களில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் விடுபட்ட விளை நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இன்று தொடர்ந்தனர். இதற்கு விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் விவசாயிகளை மிரட்டி, அவர்களின் சொந்த நிலத்தில் இருந்தே குண்டு கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். அதிகாரிகள் நிலத்தை அளவிட்டு கற்களை நட்டு விட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல், செய்யாறு சிறு கிளாம்பாடி, தென்னகரம் ஆகிய கிராமங்களிலும் விடுபட்ட அளவீடு பணியை அதிகாரிகள் தொடர்ந்தனர். மீண்டும் போராட்டம் செய்த விவசாயிகளை போலீசார் விரட்டியடித்தனர்.

    கலசப்பாக்கம் அருகே உள்ள சாலையனூர் மற்றும் பத்தியவாடி, காம்பட்டு, பால் நகர் ஆகிய கிராமங்களில் நிலத்தை அளவிடும் பணி நடந்தது. விவசாயிகள் கதறி அழுதனர். விவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு அதிகாரிகள் நிலத்தை அளந்து கற்களை நட்டனர்.

    இந்த நிலையில், காட்டை அழித்து மரத்தை வெட்டி ரோடு போடுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் திட்டமாக பசுமை சாலையை பார்ப்பதாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமூக வலை தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் நேற்று (ஜூலை 1-ந் தேதி) திருவண்ணாமலையில் கூடி போராட்டம் நடத்த வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து சிலர் பதவிட்டனர். அதை பலர் பகிர்ந்தனர். இது தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த 3 பேர் உள்பட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பசுமை சாலைக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என போலீசார் மிரட்டினர். கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    இந்த நிலையில், போலீசாரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    அந்தந்த கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இளைஞர்களும் விவசாயிகளை திரட்டி தங்கள் கிராமங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ஜல்லிக்கட்டு மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை போல் பசுமை சாலைக்கு எதிராகவும் போராட்டத்தை கையில் எடுக்க மாணவர்கள், இளைஞர்கள் திட்டமிட்டுள்ளதால் அந்த போராட்டத்தை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அந்தந்த கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் கூடும் இடங்களை தீவிரமாகவும் கண்காணித்து வருகின்றனர். #Greenwayroad
    பசுமை சாலை திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காவல்துறையை கண் மூடித்தனமாக பயன்படுத்தி அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை முதல் சேலம் வரை போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள எட்டு வழி பசுமை சாலைக்காக வேளாண் விளைநிலங்களுக்குள் நடத்தப்படும் நெடுஞ்சாலைத்துறையின் அளவீடுகளை எதிர்த்து ஆங்காங்கே விவசாயிகளும், பொதுமக்களும் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

    சேலத்தில் அப்படி போராடும் விவசாயிகள், தாய்மார்களை எல்லாம் காவல்துறையை வைத்து கைது செய்வதும், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து துன்புறுத்துவதும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் உருவாக்கியிருக்கிறது. இன்று (நேற்று) ஆச்சான்குட்டைப்பட்டி புதூர் பகுதிகளில் இந்த நில அளவீட்டை எதிர்த்த பொதுமக்களையும், விவசாயிகளையும் கைது செய்து காவல்துறை சேலம் மாவட்டத்தில் ஒரு பெரும்பீதியை உருவாக்கி வருகிறது.

    இதுதவிர தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் வரை அமைதியாக ஜனநாயக வழியில் போராடிய பொதுமக்களை வேட்டையாடும் நடவடிக்கையை இன்னும் காவல்துறை அங்கே கைவிடாமல் அரங்கேற்றி வருகிறது. இரவில் வீடு புகுந்து பெண்களை மிரட்டி ஆண்களைக் கைது செய்கிறார்கள். சில கிராமங்களில் ஆண்களே வீடுகளில் தங்கமுடியாமல் அகதிகளைப்போல ஓடி ஒளிந்து கொள்ளும் பரிதாபகரமான நிலையை காவல்துறை உருவாக்கியிருக்கிறது.



    நேற்று (நேற்று முன்தினம்) கூட ஆலையில் இருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டு மக்கள் அங்கும் அச்சத்தில் இருக்கின்ற நிலையில், தனியார் ஆலையை எப்படியும் பாதுகாக்கும் போக்கிலிருந்து இன்னும் அ.தி.மு.க. அரசு மீளாமல், ‘காயங்களை நியாயப்படுத்துவதிலும், நியாயங்களைக் காயப்படுத்துவதிலும்’ தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

    சேலம் பசுமை சாலை திட்டமாக இருந்தாலும், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையாக இருந்தாலும் தனியாரின் நெருப்பு வளையத்திற்குள் சிக்கிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு காவல்துறையை கண் மூடித்தனமாக பயன்படுத்தி கைது அச்ச உணர்வை பரப்புதல் பீதியை ஏற்படுத்துதல் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆகவே சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்தில் மக்கள் கருத்தை அவசரமின்றி பொறுமையாகவும், முழுமையாகவும் கேட்டறியவேண்டும்.

    சேலம் உள்ளிட்ட பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்பட நினைத்துள்ள மாவட்டங்களிலும், தூத்துக்குடியிலும் காவல்துறை மூலம் மக்களையும், விவசாயிகளையும், தாய்மார்களையும் மிரட்டி, ஜனநாயகத்தை பலியிட்டு ஹிட்லர் பாணி பயங்கரத்திற்கு உயிரூட்ட முயற்சித்திடும் நிலை, பல எச்சரிக்கைகளுக்கு பிறகு இனியும் தொடர்ந்தால், தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்ட மக்களையும், விவசாயிகளையும், தாய்மார்களையும் திரட்டி ஒருங்கிணைத்து அமைதியாக அறவழியில் மாபெரும் வெகுமக்கள் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை ரத்து செய்கிறோம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அந்த துணை வேந்தரை நீக்காமல், இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அ.தி.மு.க. அரசு வாய்ப்பளித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்யாமல் தற்போதுள்ள கவர்னர் மவுனம் காப்பது பல்வேறு அய்யப்பாடுகளுக்கு இடமளிப்பதாக பலரும் கருதுகிறார்கள்.

    ஆகவே தற்போதுள்ள கவர்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையை உடனே நீக்கம் செய்து, இனி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிப்பதற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவிடம் மீண்டும் செல்லத்துரை விண்ணப்பம் அளித்தால் அதை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். செல்லத்துரையின் துணை வேந்தர் பதவி காலத்தில் நடைபெற்றுள்ள பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் முறையாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை உயர் கல்வித்துறை செயலாளர் உடனே அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #MKStalin #DMK
    ×