search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "expressway"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத், புறநகர் ரெயில் சேவைகளின் நெரிசலை குறைக்க உதவும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
    • புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை வந்த ரெயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலைக்காகவும், பல்வேறு பணிகள் காரணமாகவும் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் புறநகர் மின்சார ரெயில்களையே நம்பி உள்ளனர். புறநகர் மின்சார ரெயில்களில் ஏறி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் வேலைக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னை மூர்மார்க்கெட் வளாகத்துக்கு வரும் புறநகர் மின்சார விரைவு ரெயில்கள் கடந்த 2020-ம் ஆண்டு கோவிட் தொற்றுக்கு பிறகு மெதுவான பாதையில் இயக்கப்பட்டன.

    குறிப்பாக இந்த ரெயில்கள் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து மெதுவான பாதையில் இயக்கப்பட்டதால் மூர்மார்க்கெட் வளாகத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து வேலைக்கு செய்பவர்கள் தாமதமாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதையடுத்து புறநகர் மின்சார ரெயில்களை விரைவுப் பாதையில் இயக்க வேண்டும் என்று திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கனக்கான பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. புறநகர் மின்சார விரைவு ரெயில்கள் இன்று முதல் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத், புறநகர் ரெயில் சேவைகளின் நெரிசலை குறைக்க உதவும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி இன்று முதல் புறநகர் மின்சார விரைவு ரெயில்கள் விரைவுப் பாதையில் இயக்கப்பட்டன.

    இதனால் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை வந்த ரெயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கண்டெய்னர் வாகனத்தை நிறுத்துமாறு போக்குவரத்து காவலர்கள் சைகை காட்டினர்
    • தனது இதயம் வலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வலைதளத்தில் தெரிவித்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது சத்ரபதி சம்பாஜி நகர் (Chhatrapati Sambhaji Nagar). இந்நகரை உள்ளடக்கிய சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ளது சம்ருத்தி விரைவுச்சாலை (Samruddhi Expressway).

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தின் பதர்டி மற்றும் இந்திராநகர் பகுதியை சேர்ந்த 35 பேர், புல்தானாவில் உள்ள சைலானி பாபா தர்காவிற்கு ஒரு தனியார் மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். சம்ருத்தி விரைவுச்சாலையில் வைஜாபூர் பகுதியில் உள்ள சுங்க சாவடி அருகே இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது, அந்த பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் டிரக் வாகனத்தை சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நிறுத்துமாறு சைகை செய்தனர். இதனையடுத்து, அந்த கண்டெய்னர் ஓட்டுனர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்காக திருப்பினார்.

    அப்போது அதன் பின்னே வந்த அந்த மினி பேருந்து, கண்டெய்னர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த மினி பேருந்து உருக்குலைந்து போனது.

    இதனையடுத்து, அங்கிருந்தவர்களும் போக்குவரத்து அதிகாரிகளும் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தனர். விரைந்து வந்த அவசர உதவி சேவை ஊர்தியில், காயமடைந்த 17 பேர் சம்பாஜி நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் மேலும் 6 பேர் வைஜாபூர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இவ்விபத்தில் அந்த பேருந்தில் பயணித்தவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு 4-மாத குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த விபத்து செய்தி கேட்டு என் இதயம் வலிக்கிறது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் தெரிவித்தார்.

    விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது.
    • டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வீடூர் அணையை பார்வையிட சென்ற குழு வழியில் விக்கிரவாண்டி டோல் கேட்டை கடந்த போது அங்கு குழுவின் தலைவர் வேல்முருகன், டோல்கேட் அதிகாரிகளுடன் நடை முறைகள் குறித்து வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது: 

    விக்கிரவாண்டி டோல்கேட்டில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ், கவர்னர், அரசு அதிகாரிகள், அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் மட்டும் செல்ல தனியாக ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள 54 டோல்கேட்டுகளில் 25-க்கும் மேற்பட்ட டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.

    ஆனால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் நடைமுறை படுத்துவது இல்லை. இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துள்ளனரா என்றும், இது வரை டோல்கேட் மூலம் எத்தனை மரக்கன்று கள் நட்டுள்ளனர் போன்ற விபரங்கள் வெளி யிட வேண்டும். இதனை பின்பற்றாத டோல்கேட்டு கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு இக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், கோட்டாட்சியர், பிரவீனாகுமாரி, குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி காரின் கதவை திறந்து நின்றபடி தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.
    • மைசூரு-குசால்நகர் இடையே 92 கி.மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்படும் 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு-நிதாகட்டா-மைசூரு தேசிய நெடுஞ்சாலை என்.எச். 275-ன் ஒரு பகுதி ஆறு வழிச்சாலையாக 116 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.8 ஆயிரத்து 480 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த சாலை பெங்களூரு-மைசூரு இடையேயான பயண நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடமாக குறைக்கிறது.

    இந்நிலையில் கர்நாடகாவில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி இன்று மதியம் மாண்டியா வந்தார். அவருக்கு வழி நெடுக சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி காரின் கதவை திறந்து நின்றபடி தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். மேலும் காரில் விழுந்த பூக்களை மீண்டும் பா.ஜனதாவினர் மீது வீசி பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதைத் தொடர்ந்து மாண்டியாவில் நடந்த நிகழ்ச்சியில் பெங்களூரு-மைசூரு சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சாலையில் பெங்களூருவில் இருந்து குடகு, ஊட்டி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும் விரைவாக செல்ல முடியும். இந்த சாலை 11 மேம்பாலங்கள், 64 சுரங்கவழி பாதைகள், 5 புறவழிச்சாலைகள், 42 சிறிய பாலங்கள் ஆகிய வற்றை இணைக்கிறது.

    இதைத்தொடர்ந்து மைசூரு-குசால்நகர் இடையே 92 கி.மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்படும் 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    இந்த திட்டம் ரூ.4,130 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. பெங்களூருடனான குஷால் நகரில் இணைக்கும் இத்திட்டத்தால் பயண நேரம் 5 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கும்.

    இந்த விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் தார்வாடாவுக்கு சென்றார். அங்கு நடைபெறும் விழாவில் தார்வாடா ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    மேலும் ஹூப்பளி ஸ்ரீ சித்தரூத சுவாமிஜி ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான ரெயில்வே நடைமேடையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது 1,507 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட நடைமேடை ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.

    இதையடுத்து ஹொசப் பேட்டை-ஹூப்ளிதினை கட் ரெயில்வே வழித்தடத்தில் மின் மயமாக்கப்பட்ட தடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன் மேம்படுத்தப்பட்ட ஹொசப்பேட்டை ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    இது அப்பகுதியில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். ரூ.530 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின் மயமாக்கல் பணி தடையற்ற விரைந்த ரெயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்.

    இதே போல் ஹூப்பளி-தார்வாடாவில் ரூ.520 கோடியில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பல்வேறு நகரத் திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஜெயதேவ மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.250 கோடி மதிப்பில் இது கட்டப்பட உள்ளது.

    அப்பகுதியின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.1,040 கோடியில் செயல்படுத்தப் பட உள்ள கிராமங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டம். ரூ.150 கோடியில் துப்பரி ஹல்லா வெள்ளச் சேதக் கட்டுப்பாட்டு திட்டத்திற்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.

    ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள மாண்டியா மாவட்டத்தில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ கட்சி தொண்டர்கள் இடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2 மாதத்தில் தென் மாநிலத்தில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்வது இது 6-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விரைவுச் சாலை அமையும் பகுதியில் விவசாயி சுக்விந்தர் சிங்கின் புதிய வீடு இருந்தது.
    • சாலையில் இருந்து 500 அடி தூரத்திற்கு வீட்டை நகர்த்தும் பணி நடைபெற்றது.

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகி, தனது சொந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 அடுக்குமாடி வீடு கட்டி இருந்தார். இந்நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை இணைக்கும் வகையில் விரைவுச் சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

    இதில் டெல்லி- பஞ்சாப் மாநிலம் வழியாக அமைக்கப்படும் விரைவுச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் விவசாயி சுக்விந்தர் சிங் கட்டியிருந்த வீடு சிக்கியது. இதையடுத்து அவரது வீட்டை அகற்றுமாறு பஞ்சாப் அரசு உத்தரவிட்டதுடன் இதற்காக இழப்பீடும் வழங்கியது.

    ஆனால் தனது கனவு வீட்டை இடிக்காமல் அதை அங்கிருந்து நகர்த்த முடிவு செய்த விவசாயி சுக்விந்தர் சிங், தனியார் நிறுவனத்தை அணுகினார். இதையடுத்து அவரது வீட்டின் அஸ்திவார பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் இருந்து 500 அடி தூரத்திற்கு நகர்த்திச் செல்லும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

    இது குறித்து சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளதாவது: டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் வழியில் வருவதால் நான் வீட்டை மாற்றுகிறேன். எனக்கு இழப்பீடு வழங்கப்பட்டது, ஆனால் வேறு வீடு கட்ட விரும்பவில்லை. இந்த வீட்டை கட்ட சுமார் 1.5 கோடி ரூபாய் செலவழித்துள்ளேன். தற்போது 250 அடி வரை வீடு நகரத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை-சேலம் இடையே 8 வழிபாதை அமைக்கப்பட உள்ளது. இந்த பசுமை சாலை திட்டத்துக்கு புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #chennaisalemexpressway

    சென்னை:

    சென்னை-சேலம் இடையே 277 கி.மீ தூரத்துக்கு 8 வழி பசுமை சாலைத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ‘‘பாரத்மலா பரியோனா திட்டம்’’ கீழ் அமல்படுத்தப் படுத்தப்பட இருக்கும் இந்த பசுமை வழிச்சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்த சாலைத் திட்டத்துக்கு சுமார் 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இந்த பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் வாழ்வாதார நிலத்தை மத்திய- மாநில அரசுகள் பறிக்க கூடாது என்று போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அதையும் மீறி பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல இடங்களில் நிலம் அளவிடப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டன. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    தற்போது இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், ‘‘8 வழி பசுமை சாலைத்திட்டத்தை மறுவரையறை செய்ய உள்ளோம். அதுவரை இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது’’ என்றார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சில புதிய உத்தரவுகளை பிறப்பித்தனர். ‘‘தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் அறிக்கை வெளியிட்டு நிலம் கையகப்படுத்தக் கூடாது’’ என்று தடை விதித்தனர்.

    இந்த நிலையில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தீவிரமாகி உள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் பசுமை வழி சாலைத்திட்டத் துக்கு நிலம் கையகப்படுத்த புதிய அறிவிக்கை வெளியிட்டு வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தர்மபுரி, கிருஷ்ண கிரி, சேலம் மாவட்டங்களில் நிலத்தை கையகப்படுத்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 1956-ன்படி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மூன்று மாவட்டங்களிலும் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்த வேண்டிய மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டத்தில் பசுமை வழி சாலைத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலம் தொடர்பாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 59.28 கி.மீ தொலைவுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவாக அந்த அறிவிக்கை அமைந்துள்ளது.

    அதன்படி ஸ்ரீபெரும் புதூர், செங்கல்பட்டு, உத்திர மேரூர் தாலுக்காக்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 39 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைய உள்ளதால் இந்த 3 தாலுக்காக்களிலும் மக்கள் பயன்படுத்தும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.

    39 கிராமங்களிலும் 1510 பேரின் நிலம் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசின் புதிய அறிவிக்கை காஞ்சீபுரம் மாவட்ட மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    பசுமை சாலை திட்டம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்டில் உள்ள நிலையில் புதிய அறிவிக்கை மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாகியுள்ளது. இந்த திட்டத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுவதால் தமிழக அரசும் இந்த திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. #chennaisalemexpressway

    ×