search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garbage warehouse"

    வேதாரண்யத்தில் குப்பை மறு சுழற்சி கிடங்கை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 21 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை கடற்கரைக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பிற்கு அருகில் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது.

    நாள்தோறும் குப்பைகளை கொளுத்திவிடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. இந்த குப்பை கிடங்கை மாற்றி கடற்கரை அருகே ரூ.2 கோடி செலவில் குப்பைகள் மறு சுழற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே இதை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். மேலும் இந்த குப்பை மறு சுழற்சி கிடங்கை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பழைய இடத்தில் உள்ள குப்பைகளை மறு சுழற்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் தற்போது உள்ள குப்பை கிடங்கு அருகே 4 சுடுகாடுகள் உள்ளன. அதனையும் புதிதாக கட்ட வேண்டும். அதேபோல் தற்போது அதே பகுதியில் கட்டப்பட்டு வரும் பொது தகன மேடையும் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. அதனையும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ராமையன்பட்டியில் உள்ளது. இங்கு சுமார் 30 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதியில் குவியல் குவியலாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். பல குப்பை மேடுகள் சுகாதார சீர்கேடுகளை உருவாக்காமல் இருக்க மூடாக்கு பூங்கா உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் அருகில் இயற்கை உரம் தயாரிக்கும் உரக்கிடங்குகளும் உள்ளன.

    இங்குள்ள குப்பை மேட்டில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால், தீ மளமளவென்று பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்தது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்துக்கு உடனடியாக பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமார் தலைமையில் சென்று தீயை அணைத்தனர். ஆனால் புகை மூட்டம் காரணமாக அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. மாநகராட்சி ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை.

    கடும் புகை மூட்டத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்.

    இன்று 2-வது நாளாக தொடர்ந்து அந்த பகுதியில் தீ எரிந்து வருகிறது. தொடர்ந்து புகை மூட்டமும் வெளியேறுவதால் வானில் மேக குவியலாக நீண்ட தூரம் புகை பரவி உள்ளது. வீடுகளில் குடியிருப்பவர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். இன்று நெல்லை மாவட்ட தீயணைப்பு துணை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டு வருகிறது. பேட்டை, பாளை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து இடை விடாமல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

    தீ ஓரளவு கட்டுக்குள் வந்தால் தான், மூடாக்கு பூங்கா, இயற்கை உரம் தயாரிக்கும் பகுதிகள் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். இன்று பிற்பகலிலும் தொடர்ந்து தீ அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #Tamilnews
    தர்மபுரி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் புகை மூட்டத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான கிடங்கு தடங்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கிற்கு தர்மபுரி நகராட்சியின் பல்வேறு பகுதியில் சேரும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். குப்பைகளில் பற்றி தீயால் உருவான கரும்புகை மூட்டம் தீ அணைக்கப்பட்ட பின்னரும் குப்பைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளில் அடிக்கடி தீப்பிடித்து கரும்புகை வெளியேறுவதால் இந்த பகுதியில் காற்று மாசு அடைகிறது. இத்தகைய சமயங்களில் சுவாச பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 
    ×