search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drivers dies"

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று அதிகாலை லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 டிரைவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    சென்னையில் இருந்து மது பாட்டில்களை ஏற்றி கொண்டு திருச்சியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று இரவு ஒரு லாரி புறப்பட்டு வந்தது.

    இந்த லாரியை திண்டிவனத்தை சேர்ந்த ராமதாஸ் (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த லாரி கடலூர் மாவட்டம் வேப்பூர்-கழுதூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே மணல் ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரி வந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வமணி (23) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி திடீரென்று நிலைதடுமாறி சாலையில் இருந்த தடுப்புக்கட்டையை தாண்டி எதிரே மதுப்பாட்டில்களை ஏற்றி வந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் மதுப்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிய தொடங்கின. உள்ளே இருந்த மதுப்பாட்டில்கள் டமார்... டமார்... என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிறிது நேரத்தில் மணல் ஏற்றி வந்த லாரியின் முன்பகுதியிலும் தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் மதுப்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

    2 லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இது குறித்த தகவல் வேப்பூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    உடனே வேப்பூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால், லாரியில் இருந்த மது பாட்டில்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து நாலாபுறமும் சிதறியதால் தீயை அணைக்க முடியாமல் அவர்கள் தவித்தனர். 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

    வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு உடல் கருகி கிடந்த லாரி டிரைவர்கள் ராமதாஸ், செல்வமணி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தீ விபத்தில் மதுப்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் 20 ஆயிரம் மதுப்பாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

    லாரிகள் மோதி தீ பிடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுராந்தகம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் பைபாஸ், ஏரிக்கரை வழியாக சென்னை நோக்கி நேற்று நள்ளிரவு கண்டெய்னர் லாரி சென்றது. லாரியை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அரவிந்தர்சிங் (வயது42) ஓட்டினார். கிளீனராக அமீர்சிங் இருந்தார்.

    அப்போது திடீரென லாரி பழுதானது. 2 பேரும் லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பழுது பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியே சென்னை நோக்கி சென்ற மற்றொரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி உதவி கேட்டனர்.

    அதில் இருந்த டிரைவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மித்ராசிங்(35) தனது லாரியை, பழுதான லாரியின் முன் பகுதியில் நிறுத்தினார். பின்னர் 2 பேரும் லாரியில் பழுது பார்த்துக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற லாரி திடீரென பழுதான லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் லாரியை பழுது பார்த்துக்கொண்டு இருந்த டிரைவர்கள் அரவிந்தர் சிங், மித்ராசிங் ஆகியோர் லாரிகளுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் கிளீனர் அமீர்சிங் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×