search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diana Edulji"

    • இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை.
    • அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.

    வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் செயல் கிரிக்கெட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்-ஆல் அடித்து அம்பயர்களை கடுமையாக சாடினார்.

    இதனை சமூக வலைதளங்களில் சரி என்று ஒருதருப்பும், தவறு என்று மறு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை பரிமாறி வருகிறது.

    இந்நிலையில் உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் டியானா எடுல்ஜி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

     

    இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை. அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நீங்கள் தான் கேப்டன். நீங்கள் தான் அணியை வழிநடத்தி சென்று, அடுத்து வர இருக்கும் ஜூனியர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களின் நடத்தையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் இதே போன்ற செயல்பட வாய்ப்புகள் உண்டு.

    உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஐ.சி.சி. விதிகளின் கீழ் விளையாடி வருகின்றீர்கள். அதிர்ஷ்டவசமாக அது சீரிசின் கடைசி போட்டியாக அமைந்தது. பி.சி.சி.ஐ. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலில் 90 முதல் 100 சதவீதம் வரை போட்டிக்கு பங்களிப்பை கொடுங்கள். போட்டிகளில் வெற்றி பெற்றாலே, அளவுக்கு அதிகமாகவே நட்சத்திர அந்தஸ்து தானாக கிடைத்து விடும்.

    எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அம்பயரிங் போட்டியின் ஒருபங்கு மட்டும் தான். சில சமயங்களில் அது சாதகமாக இருக்கும், சில சமயங்களில் அது இருக்காது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கும்பிளேவுக்கு பதிலாக ரவிசாஸ்திரியை நியமித்ததில் விதிமீறல் நடந்ததாக முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி கூறியுள்ளார். #AnilKumble #RaviShastri #DianaEdulji
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்திய 20 ஓவர் போட்டி பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு இ-மெயில் அனுப்பினர். அதே சமயம் 20 ஓவர் உலக கோப்பை தொடரின் அரைஇறுதியில் தன்னை வேண்டுமென்றே ரமேஷ் பவார் ஓரங்கட்டியதாகவும், பலமுறை அவர் தன்னை அவமதித்ததாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.



    ரமேஷ் பவார் சர்ச்சையில் சிக்கியதால் அதிருப்திக்குள்ளான இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. இதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையை கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. கிப்ஸ், மனோஜ் பிரபாகர், ஓவைஸ்ஷா உள்ளிட்டோர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ரமேஷ் பவாரும் மறுபடியும் விண்ணப்பம் அனுப்பியுள்ளார். இவர்களிடம் கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி வருகிற 20-ந்தேதி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்.

    இதற்கிடையே இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு நியாயம், பெண்கள் அணியின் கேப்டனுக்கு ஒரு நியாயமா? என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆண்கள் அணிக்கான முந்தைய பயிற்சியாளர் கும்பிளேவுக்கும், விராட் கோலிக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்ட போது நடந்த விஷயங்களை இப்போது கசியவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக டயானா எடுல்ஜி கூறியதாவது:-

    கும்பிளேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு அவரை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக கோலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தார். கும்பிளேவின் ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு அவரையே தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க செய்ய தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி விரும்பியது. ஆனால், கோலியிடம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ரவிசாஸ்திரி பயிற்சியாளராக வர வேண்டும் என்பதே கோலியின் ஆசை. காலக்கெடுவுக்குள் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. அவருக்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இது முற்றிலும் விதிமீறல் என்று அப்போது எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். கும்பிளே ஒரு ஜாம்பவான். இந்த விவகாரத்தில் அவர் அவமதிக்கப்பட்டார். வில்லன் போல் அவரை சித்தரித்தனர். ஆனாலும் பெருந்தன்மையுடன் எதை பற்றியும் பேசாமல் அவர் ராஜினாமா செய்தார். எது எப்படி என்றாலும் ரவிசாஸ்திரி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டன என்பதே உண்மை.

    கும்பிளே வேண்டாம் என்று கோலி கூறிய போது செவி சாய்த்தீர்கள். இதே போல் பெண்கள் அணியின் கேப்டனும், துணை கேப்டனும் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது. அணியின் முக்கிய வீராங்கனைகளான அவர்களின் கருத்தை நாம் புறக்கணிக்க கூடாது. பயிற்சியாளர் குறித்து அவர்கள் இ-மெயில் அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. அணியின் நலனுக்காக வெளிப்படை தன்மையுடன் உண்மையாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கோலி அப்படி அல்ல. கும்பிளேவை நீக்கும்படி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு தொடர்ச்சியாக தகவல்கள் அனுப்பி மறைமுக நெருக்கடி கொடுத்தார்.

    இவ்வாறு கூறியுள்ள எடுல்ஜி, ரமேஷ் பவாருக்கு ஆதரவாக கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு இ-மெயிலும் அனுப்பியுள்ளார். பயிற்சியாளரை வீராங்கனைகளின் ஆதரவின் அடிப்படையில் தேர்வு செய்ய முடியாது என்று ஏற்கனவே கைவிரித்து விட்ட வினோத் ராய், கும்பிளேவுக்கும், கோலிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. அதன் தொடர்ச்சியாகவே அவர் விலகினார் என்றும் குறிப்பிட்டார். #AnilKumble #RaviShastri #DianaEdulji
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவரால் பலமுறை அவமதிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை மிதாலிராஜ் கூறியுள்ளார். #MithaliRaj #Coach #RameshPower #WorldT20
    புதுடெல்லி:

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியுடன் வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 112 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

    லீக் சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ், முக்கியமான இந்த ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்த போதிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. அணியின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார். ‘ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது குறித்து அணி நிர்வாகம் (கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்) எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது. விளையாட்டில் இது போன்று நடப்பது சகஜம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி கூறியிருந்தார்.



    இந்த நிலையில் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய 35 வயதான மிதாலிராஜ், தனது தரப்பு விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் பொது மேலாளர் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) சபாகரிம் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதில் மிதாலிராஜ் கூறியிருப்பதாவது:-

    எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு மனவேதனையையும், அவமதிப்புகளையும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை. தேசத்திற்காக நான் ஆற்றும் சேவையையும், எனது புகழ் மற்றும் நம்பிக்கையையும் அதிகாரத்தில் உள்ள சிலர் சீர்குலைக்க முயற்சிக்கிறார்களோ? என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி மற்றும் அவர் வகிக்கும் பொறுப்பு மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அவர் எனக்கு எதிராக தனது பதவியை பயன்படுத்துவார் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. அரைஇறுதி போட்டியில் என்னை வெளியே உட்கார வைத்த முடிவுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது வேதனை அளிக்கிறது. இத்தனைக்கும் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் நான் முன்பே பேசி இருக்கிறேன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற எல்லா உண்மையும் அவருக்கு தெரியும்.

    நான் இந்த மாதிரி ‘இ-மெயில்’ அனுப்புவதால் நான் மேலும் பாதிப்புக்குள்ளாகலாம் என்பதை அறிவேன். ஏனெனில் அவர் அதிகாரம் கொண்ட கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் உறுப்பினர். நானோ சாதாரண ஒரு வீராங்கனை.

    நான் எப்போதும் கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைகளை சரியாக கடைபிடிப்பவள். அதனால் தான் வெஸ்ட் இண்டீசில் இருந்த போது இந்த விஷயம் பற்றி ஊடகத்தினரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனது விவகாரத்தை கிரிக்கெட் வாரியம் நியாயமாக கையாளும் என்று நம்பினேன். ஆனால் அணியில் இருந்து ஓரங்கட்டிய முடிவுக்கு கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஆதரவு தெரிவித்ததன் மூலம் அவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதும், எனக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது.

    அரைஇறுதி ஆட்டத்தில் என்னை நீக்க பயிற்சியாளர் எடுத்த முடிவுக்கு ஆதரவு தந்ததை தவிர்த்து, இந்திய 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் மீது எனக்கு எந்த மனக்கசப்பும் கிடையாது. இந்த உலக கோப்பையை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். அந்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது தான் வேதனையிலும் வேதனை. எங்களுக்குள் எந்த பிரச்சினைகள் எழுந்தாலும் அதை நானும், ஹர்மன்பிரீத் கவுரும் பேசி தீர்த்துக் கொள்ள முடியும். இந்திய 50 ஓவர் அணிக்கு நான் கேப்டனாக இருக்கிறேன். ஒரு நாள் போட்டி அணிக்கு அவர் எவ்வளவு அவசியம் என்பதை அறிவேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் அவரும் ஒருவர்.

    எல்லா சர்ச்சைகளுக்கும் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் காரணம். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே பிரச்சினைகளும் உருவெடுத்து விட்டன. அவரது நடத்தைகள் எனக்கு எதிராகவே அமைந்தன. என் மீது பாகுபாடு காட்ட ஆரம்பித்தார்.

    உலக கோப்பை போட்டிக்கு முந்தைய தொடர்களிலும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்களிலும் நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடினேன். ஆனால் உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்திற்கு முந்தைய நாள், ‘பேட்டிங்கில் நடுவரிசையை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதனால் நீ பின்வரிசையில் இறங்க வேண்டும்’ என்று பயிற்சியாளர் ரமேஷ் பவார் என்னிடம் கூறினார். அணியின் நலன் கருதி நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஜோடி சொதப்பியது. பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே எடுத்தோம். ஆனாலும் தொடக்க ஜோடியை வெகுவாக பாராட்டியதோடு, அடுத்த ஆட்டத்திலும் (பாகிஸ்தானுக்கு எதிராக) அதே ஜோடியே தொடக்க வீராங்கனைகளாக விளையாடுவார்கள் என்று சொன்னார். இதை கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன். பாகிஸ்தானுக்கு எதிராக மிடில்வரிசையை பலப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் அந்த அணிக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது உண்டு. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையும் இருந்தது. அதனால் இது பற்றி தேர்வாளர்களிடம் பேசினேன். அவர்களது தலையீட்டின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகியாக தேர்வானேன். ஆனால் ரமேஷ் பவார் என்னை ஊக்கப்படுத்தி ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை. அதன் பிறகு அவரது நடவடிக்கை எனக்கு எதிராக முற்றிலும் திரும்பியது.

    உதாரணமாக வலை பயிற்சிக்கு அவர் வரும் போது நான் பேச முயற்சித்தால், உடனே அவர் செல்போனை பார்ப்பது போல் அங்கிருந்து சென்று விடுவார். நான் அருகில் உட்கார்ந்து இருந்தாலும் என்னை உதாசீனப்படுத்தும் வகையில், மற்றவர்களின் பயிற்சியை மட்டும் கவனிப்பது போல் செயல்படுவார். இத்தகைய அவமதிப்புகளால் மனம் காயப்பட்டது. ஆனாலும் நிதானத்தை இழக்கவில்லை. இது போன்ற பிரச்சினைகளால் அணியின் முன்னேற்றத்துக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று கருதி அணியின் மேலாளரிடம் எனது வேதனைகளை கொட்டி தீர்த்தேன். மேலாளர், அணி வீராங்கனைகளின் கூட்டத்தின் போது இது பற்றி பேசினார். அப்போது ரமேஷ் பவார் சில விஷயங்களில் தவறு செய்ததை ஒப்புக் கொண்டார். நானும், அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இளம் வீராங்கனைகளை தொடக்க ஜோடியாக அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தால், அப்படியே செய்யுங்கள் என்று கூறினேன். இத்துடன் எங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வந்து விட்டதாக நம்பினேன்.

    ஆனால் அதற்கு பிறகு அவரது நடவடிக்கை மேலும் மோசமானது. என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அவரிடம் ஏதாவது யோசனை கேட்க முயற்சித்தால் உடனே வேறு பக்கம் திரும்பி தொடர்ந்து என்னை வெறுப்பேற்றும்படி நடந்து கொண்டார். இந்த சூழலில் அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடினமான ஆடுகளத்தில் களம் கண்டு அரைசதம் விளாசி மறுபடியும் ஆட்டநாயகி விருதை பெற்றேன். துரதிர்ஷ்டவசமாக பீல்டிங்கின் போது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. காய்ச்சலும் வந்து விட்டது. உடல்நிலை சரியாக சில நாட்கள் ஓய்வு தேவை என்று அணியின் உடல்தகுதி நிபுணர் அறிவுறுத்தினார்.

    இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஆட முடியாமல் போனது. போட்டியை பார்க்க மைதானத்திற்கு வரக்கூடாது என்று ரமேஷ் பவார் திடீரென கட்டளையிட்டார். மிகப்பெரிய ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா விளையாடும் போது அணி வீராங்கனைகளுடன் நான் இருக்கக்கூடாது என்று சொன்னதும் திகைப்புக்குள்ளானேன். உடனடியாக அணி மேலாளரிடம் பேசினேன். ‘காயம் பயப்படும்படி இல்லை, உடல்நிலை தான் கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். இதையடுத்து மேலாளர், நான் மைதானத்திற்கு செல்ல ஒப்புக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் ரமேஷ் பவாரிடம் இருந்து செல்போனில் ஒரு தகவல் வந்தது. வீராங்கனைகளுக்குரிய அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரது நடவடிக்கை எல்லாமே வினோதமாகவே இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற பின்னர், மைதானத்தில் வீராங்கனைகள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு வரும்படி அழைப்பு வந்தது. நானும் வீராங்கனைகளுடன் இணைந்து வெற்றியை கொண்டாடினேன். இருப்பினும் போட்டி நடந்து கொண்டிருந்த போது அறையிலேயே முடங்கி கிடந்தது, ஏதோ சிறைபிடிக்கப்பட்டு போல தவித்தேன்.

    அரைஇறுதி சுற்றை எட்டிய பிறகு 3 நாட்கள் இடைவெளி இருந்தது. முதல் நாளில் யாரும் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை. பீல்டிங் பயிற்சி மட்டுமே நடந்தது. ஆனால் ரமேஷ் பவார் 5 வீராங்கனைகளுக்கு மட்டும் கூடுதல் பயிற்சி அளித்தார். இதை கேள்விப்பட்டு நான், ‘இரண்டு நாட்களாக பேட்டிங் பயிற்சி எதுவும் செய்யவில்லை. அதனால் நானும் கூடுதல் பயிற்சியில் இணைகிறேன்’ என்று பவாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. மறுநாள் அவர் பின்வரிசையில் உள்ள வீராங்கனைகளுடன் சேர்த்து என்னை பேட்டிங் பயிற்சி செய்ய வைத்தார். இதில் இருந்தே அரைஇறுதியில் நான் விளையாடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

    வழக்கமாக போட்டிக்கு முந்தைய நாளோ அல்லது போட்டி நாள் அன்றோ ஆடும் லெவன் அணியை அறிவிப்பார். ஆனால் அரைஇறுதியில் போட்டி நாள் அன்று காலையிலேயோ அல்லது மாலையிலேயோ அணி குறித்து அவர் வாய் திறக்கவில்லை. இரவில் அரைஇறுதியில் ஆடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். ‘டாஸ்’ போடுவதற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மைதானத்திற்குள் நுழைந்த போது, என்னை நோக்கி ஓடி வந்தார். ‘கடைசி லீக்கில் ஆடிய அதே அணியுடன்தான் விளையாடப்போகிறோம்’ என்று கூறினார். அப்போது தான் அணியில் எனக்கு இடம் இல்லை என்பது தெரிந்தது. ஆடும் லெவன் அணியினர் தவிர மற்ற யாரும் வீராங்கனைகளின் பகுதியில் இருக்கக்கூடாது என்று சொன்ன போது மேலும் நொந்து போனேன். எனது அழுகையை அடக்க முடியவில்லை. கண்ணீர் சிந்தினேன். இவ்வளவு ஆண்டுகள் அளித்த பங்களிப்புக்கு என்ன மதிப்பு? என்று நினைக்கத்தோன்றியது.

    ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக இதுவரை எனது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். உங்களிடம் இருந்து நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று சொன்னதால் தான் இ-மெயில் மூலம் நடந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    இவ்வாறு மிதாலி ராஜ் அதில் கூறியுள்ளார். #MithaliRaj #Coach #RameshPower #WorldT20 
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜை நீக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எடுத்த முடிவை கேள்வி கேட்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்தார். #MithaliRaj #DianaEdulji
    புதுடெல்லி:

    ‘20 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவனில் இருந்து மிதாலி ராஜை நீக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் எடுத்த முடிவை கேள்வி கேட்க முடியாது’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்தார்.

    வெஸ்ட்இண்டீசில் நடந்த 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.



    லீக் ஆட்டங்களில் கம்பீரமாக செயல்பட்ட இந்திய அணி அரைஇறுதி ஆட்டத்தில் மோசமாக ஆடியது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் அரைசதம் அடித்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும் முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

    ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அந்த வெற்றி கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜ்க்கு இடம் கிடைக்கவில்லை. எல்லா முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப்படுகிறது. இதில் வருத்தப்பட எதுவுமில்லை’ என்று மிதாலி ராஜ் நீக்கம் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மிதாலி ராஜ் மேலாளர் அனிஷா குப்தா, ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக சாடினார். இதனால் இந்த பிரச்சினை மேலும் வலுத்தது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினரும், இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனுமான டயானா எடுல்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று இந்திய அணி நிர்வாகம் (கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார், துணை கேப்டன் மந்தனா, தேர்வாளர் சுதாஷா) எடுத்த முடிவு பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால் அந்த முடிவு குறித்து யாரும் கேள்வி கேட்டு இருக்கமாட்டார்கள். ஆடும் லெவன் குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவை நாங்கள் கேள்வி கேட்க முடியாது. உதாரணமாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய வீரர் குருணல் பாண்ட்யா விக்கெட் எடுக்காமல் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தார். ஆனால் கடைசி 20 ஓவர் போட்டியில் அவர் வலுவாக மீண்டு வந்து விக்கெட்டுகள் சாய்த்தார். விளையாட்டில் இது போன்ற விஷயங்கள் நடக்க தான் செய்யும்.

    என்னை பொறுத்தமட்டில் அன்று இந்திய அணிக்கு மோசமான நாளாகும். நமது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இங்கிலாந்து அணி நன்றாக செயல்பட்டு இலக்கை சேசிங் செய்தது. பனிப்பொழிவு நமது பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எதிர்பார்ப்புக்கு மாறாக நமது அணி பெரிய வெற்றியை ஈட்டியது. அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்வியை மறந்து அடுத்து வரும் நியூசிலாந்து தொடர் குறித்து வீராங்கனைகள் கவனம் செலுத்த வேண்டும். மிதாலி ராஜ் விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் நடத்தும் திட்டம் எதுவுமில்லை. அணி தேர்வு விஷயத்தில் நிர்வாக கமிட்டி தலையிட வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்ததாக கூறப்படுகிறது. #MithaliRaj #DianaEdulji
    ×