search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP Sailendrababu"

    • 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், போலீஸ்காரர் சுந்தரம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
    • டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதல் முறையாக கடந்த 1989-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் ஏ.எஸ்.பி.ஆக பொறுப்பேற்று பணியாற்றினார்.

    ஈரோடு:

    ஈரோடு, கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை ரெயில் மூலம் ஈரோடு வந்தார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் வரவேற்றனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கினார். பெருந்துறை பகுதியில் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், போலீஸ்காரர் சுந்தரம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

    இதேபோல் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ.1 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 4 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், மெய்யழகன், செந்தில்குமார் ஆகியோரையும், கருங்கல்பாளையம் பகுதியில் 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அதில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த ஈரோடு அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

    பின்னர் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக "பெண்கள் பாதுகாப்பு திட்டம்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்து செல்லும்.

    அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல் துறைக்கு வந்துள்ளது.

    குறைவான தூரமாக இருக்கும் பட்சத்தில் காவல்துறை ரோந்து வாகனத்தில் அழைத்து சென்று விடப்படும். தூரம் அதிகமாக இருந்தால் ஆட்டோ அல்லது டாக்ஸிகளில் அனுப்பி வைக்கப்படும் என்பதோடு, பாதுகாப்புக்காக போலீசார் ஒருவர் உடன் செல்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதல் முறையாக கடந்த 1989-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் ஏ.எஸ்.பி.ஆக பொறுப்பேற்று பணியாற்றினார். தற்போது டி.ஜி.பி.யாக பணி உயர்வு பெற்று செயல்பட்டு வருகிறார். அவர் இன்று கோபிசெட்டி பாளையத்துக்கு வந்தார். பின்னர் தான் பணியாற்றிய அலுவல கத்துக்கு சென்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். இதைத்தொடர்ந்து கோபி போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து போலீசாரிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    • தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார்.
    • புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    மேட்டூர்:

    தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    மேலும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், பயிற்சி காவலர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) விஜயகு மார், போலீஸ் கண்கா ணிப்பாளர்கள் சிவகுமார் (சேலம்), ஜவகர் (ஈரோடு), காவலர் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளர் சந்திர மௌலி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நாகராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ராஜேஷ் ஆகியோர் செய்தனர்.

    • விபத்துகள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் மூலம் தடுக்கப்படலாம்.
    • போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மிதிவண்டி தொடர் ஓட்ட பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தது மட்டுமில்லாமல் அவரும் அதில் பங்கெடுத்து கொண்டார்.

    சென்னை:

    உலக வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம், ஆசிய வாய்முக அறுவை சிகிச்சை மருத்து வச்சங்கத்தோடு இணைந்து மாபெரும் மிதிவண்டி பிரசார பயணம் நடைபெற்றது.

    மக்களிடம் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மிதிவண்டி ஓட்ட பயணம் ஒன்பது நகரங்களில் சென்னை, வேலூர்,கோவை, சேலம், திருச்சி, மதுரை, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட 9 நகரங்களில் நடைபெற்றது.

    இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவ சங்கத்தின் மாவட்ட செயலாளர் டாக்டர் க. அருண்குமார் கூறியதாவது:-

    வாய் மற்றும் முக தாடை எலும்பு முறிவுகள் ஏற்பட 61.4 சதவீதம் காரணம் சாலை விபத்துகளே ஆகும். முக தாடை எலும்பு முறிவுகளை சீர் செய்வது வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர்களே ஆகும். இந்த விபத்துகள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் மூலம் தடுக்கப்படலாம். அதனால் தான் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பிரசாரம் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் மக்களை பயிற்றுவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு இந்த மிதிவண்டி தொடர் ஓட்ட பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தது மட்டுமில்லாமல் அவரும் அதில் பங்கெடுத்து கொண்டார் என்றார்.

    இனிகோ இருதயராஜ் எம். எல். ஏ., சாலை பாதுகாப்பு பற்றிய பிரச்சார துண்டு பிரசுரங்களை மிதிவண்டி பிரசார பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கினார். மேலும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். ஆசிய வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் குணசீலன் ராஜன், மரு.ப.சுப்ரமணியன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் ஜெ.பாலாஜி, மண்டல ஒருங்கிணைப் பாளர் டாக்டர் மணி கண்டன், இந்திய வாய் முக அறுவை சிகிச்சை மருத்துவர் சங்க துணை தலைவர் டாக்டர் ச.ஜிம்சன், ஆசிய வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர் சங்க இந்திய பிரதிநிதி மற்றும் தமிழ்நாட்டின் பல் மருத்துவ கல்லூரிகளின் வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவ பிரிவு துறை தலைவர்கள், பல்வேறு மருத்துவர்கள், பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மிதிவண்டி தொடர் ஓட்ட பயணத்தில் பங்கு கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அப்பல்லோ மருத்துவமனை, டெகத்லான் பெருங்குடி, அடையார் ஆனந்த பவன், தாகூர் பல் மருத்துவ கல்லூரி மற்றும் சிடார்ஸ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    ×