search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore cheating"

    போலி பேஸ்புக் மூலம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    கோவை:

    உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகேந்திர வர்மன் (30). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    இதனால் விரக்தியில் இருந்த அவர் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணினார். இதற்காக பிரபல இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி முகநூல் தொடங்கினார்.

    அவரது இசை ஆல்பங்கள் மற்றும் அவரது அழகான புகைப்படங்களை போலி முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

    இதற்கு நிறைய இளம் பெண்களிடம் இருந்து லைக் கிடைத்தது. அவர்களிடம் முகநூல் நண்பராக பழக வருமாறு மகேந்திர வர்மன் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பார்த்த இளம்பெண்கள் அர்மான் மாலிக் தான் அழைப்பு விடுக்கிறார் என கருதி முகநூல் நண்பர்களானார்கள்.

    பின்னர் அந்த இளம்பெண்களின் செல்போன் எண்ணை பெற்று மகேந்திர வர்மன் வாட்ஸ்அப் மூலம் பழக தொடங்கினார். அப்போது இந்தி படத்தில் பாட வாய்ப்பு வாங்கி தருவதாகவும், படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறினார்.

    மேலும் தங்களது படத்தை அனுப்புமாறும் கூறினார். சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிய இளம்பெண்கள் தங்களது அழகிய புகைப்படங்களை அனுப்பி வைத்தனர்.

    அதனை ஆபாசமாக மார்பிங் செய்து இளம்பெண்களை மகேந்திர வர்மன் மிரட்ட தொடங்கினார். குறிப்பிட்ட ஒரு தொகையை கேட்டு அதனை தராவிட்டால் ஆபாசமாக சித்தரித்த படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் பலர் மகேந்திர வர்மன் கேட்ட தொகையை அவர் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினர்.

    இது போன்று 15-க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் மகேந்திர வர்மன் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்தது தெரிய வந்தது.

    இந்த நிலையில் கோவை சூலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் மகேந்திர வர்மன் பணம் கேட்டுள்ளார். பணத்தை தராவிட்டால் மார்பிங் செய்த படத்தை முகநூலில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து மகேந்திர வர்மனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். அந்த இளம்பெண்ணை மகேந்திர வர்மனிடம் நைசாக பேசி பணம் தருவதாக கூறி கோவைக்கு வருமாறு அழைப்பு விடுமாறு போலீசார் கூறினார்கள்.

    அதன் படி அந்த இளம்பெண்ணும் பேசி மகேந்திர வர்மனை கோவை லட்சுமி மில் சிக்னல் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இளம்பெண் அழைப்பு ஏற்று கோவை வந்த மகேந்திர வர்மனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா தேவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    கைதான மகேந்திர வர்மனிடம் கையடக்க கணினி ( டேப் )இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்த போது அவருடன் தொடர்பு வைத்து இருந்த இளம்பெண்களின் விவரங்கள் இருந்தது.

    மேலும் அழகான பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் செய்து வைக்கப்பட்டு இருந்த புகைப்படமும் இருந்தது. அதில் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் படம் இடம் பெற்றிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மகேந்திர வர்மன் பெண்களிடம் பேசி பணத்தை பறித்தது தெரிய வந்தது.

    கையடக்க கணினியை தடய அறிவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகேந்திர வர்மன் போலீசாரிடம் கூறியதாவது-

    ஆசிரியர் பயிற்சி படித்து முடித்து வேலை கிடைக்காததால் வருமானம் இன்றி தவித்து வந்தேன். அப்போது தான் இணைய தளம் வழியாக இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் குறித்து தெரிந்து கொண்டேன்.

    அவரது பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கலாம் என திட்டம் தீட்டி அதன் படி முகநூல் பதிவு தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரும்.

    இந்த முகநூலில் இணைந்த பெண்களிடம் நான் சரளமாக ஆங்கிலத்தில் பேசி அவர்களை எனது வலையில் விழ வைத்தேன்.

    அழகான பெண்கள் புகைப்படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து அதனை மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் பறித்தேன். 15 -க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ. 50 லட்சம் வரை பறித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட மகேந்திர வர்மன் மீது தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, கொலை மிரட்டல், பெண்களை களங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கோவை மாவட்டம் அன்னூரில் வங்கியில் கடன் பெற்றுதருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    அன்னூர்:

    அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி ராஜம்மாள் (வயது 52).

    இவர் தனது பேரனின் மருத்துவ படிப்புக்காக மகன் மற்றும் மருமகன் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற முயற்சி செய்து வந்தார்.

    அப்போது கோவையை சேர்ந்த தன்ராஜ், ஜெசிந்தா மேரி ஆகிய 2 பேர் ராஜம்மாளை தொடர்பு கொண்டனர். தன்ராஜ் வங்கியில் வேலை செய்வதாக கூறிய அவர்கள் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதை நம்பிய ராஜம்மாள் கோவை வங்கிக்கு சென்று அசல் பத்திரம் மற்றும் கடன் பெற தேவையான ஆவணங்களை கொடுத்து கையெழுத்து போட்டுள்ளார்.

    அப்போது சில வாரங்களில் ரூ.50 லட்சம் ராஜம்மாள் கணக்கில் வந்துவிடும் என தெரிவித்து உள்ளனர். பல மாதங்கள் ஓடி விட்டன. பணம் வங்கி கணக்கில் வரவில்லை.

    ஆனால் வங்கியில் இருந்து ரூ.50 லட்சத்துக்கு வட்டி செலுத்த வேண்டும் என ராஜம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தன்ராஜ் மற்றும் ஜெசிந்தா மேரி மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
    ×