என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai road"

    • ஆபத்தான வேகத் தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • குழிகள் விபத்தை உருவாக்கும் குழிகளாக மாறியுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகர சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆபத்தான சாக்கடை மூடிகள், வேகத் தடைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

    அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2 மாதங்களாக தன்னார்வலர்கள் 100 பேர் சாலைகளில் மேற் கொண்ட ஆய்வில் 201 இடங்களில் ஆபத்தான வேகத் தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    205 இடங்களில் சாக்கடை குழி மூடிகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. வேகத் தடைகள் 10 செ.மீ. உயரம், 12 அடி அகலத்தில் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

    ஆனால் 201 இடங்களில் இந்த விதிகளை மீறி வேகத் தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 40 மீட்டருக்கு முன்பாக வைக்கப்பட வேண்டிய அறிவிப்பு பல கைகளும் சாலையில் நிறுவப்படாமலே இருக்கிறது.

    இதுபோன்ற காரணங்களாலேயே இந்த வேகத் தடைகள் உயிருக்கு ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இதே போல் சாக்கடை குழி மூடிகள் மற்றும் சாலையில் உள்ள மழை நீர் வடிகால் குழிகளும் பல இடங்களில் சாலை அளவை விட கீழே உள்ளது. இந்த குழிகள் விபத்தை உருவாக்கும் குழிகளாக மாறியுள்ளன.

    சாலை உயரத்தை அதிகரிப்பதும் இந்த மூடிகளை சாலை அளவில் வைக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் இந்த மூடிகள் சாலை உயரத்தைவிட அதிகமாகி விபத்துக்கு காரணமாகி உள்ளது.

    இதே போன்று 61 இடங்களில் உள்ள சாக்கடை கால்வாய்களும் ஆபத்தானவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி அறப்போர் இயக்கம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள அந்த மனுவில் விபத்துக்கு காரணமாக இருக்கும் வேகத்தடைகள், சாக்கடை மூடிகள், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • பசுமை சென்னை திட்டத்தின் கீழ் மரங்கள் நடுதல், தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
    • சர்வீஸ் சாலையில் மரங்கள் அமைத்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. பசுமை சென்னை, தூய்மை சென்னை, எழில்மிகு சென்னை ஆகியவற்றின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், பசுமை சென்னை திட்டத்தின் கீழ் மரங்கள் நடுதல், தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பசுமை சென்னையின் கீழ் தீவிர தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, மெரினா கடற்கரையை அழகுபடுத்தி, பசுமை பரப்பை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தளமான மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலையில் ஒருசில இடங்களில் மட்டுமே மரங்கள் உள்ளது. மற்ற இடங்களில் மரங்கள் இல்லாமல் வெறுமையாக காட்சி அளிக்கிறது. சர்வீஸ் சாலையை ஒட்டிய பூங்காக்கள் அமைந்துள்ள பகுதியில் மட்டுமே மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.


    சர்வீஸ் சாலையில் மரங்கள் அமைத்து பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே, பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் சர்வீஸ் சாலையை ஒட்டிய பகுதிகளில் புன்னை மரங்களை நடுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, மெரினா நீச்சல் குளம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் ஆயிரம் புன்னை மரங்கள் நடப்பட உள்ளது.

    இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரங்கள் நடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரை பகுதியை பசுமையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு சர்வீஸ் சாலையின் 2 பக்கங்களிலும் ஆயிரம் புன்னை மரங்கள் நடப்பட உள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கும்.

    ஒவ்வொரு இடத்திலும் 6 அடி முதல் 7 அடி வரையில் வளர்ந்த புன்னை மரங்கள் நடப்படும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளினால் சேதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பான தடுப்புகள் அமைக்கப்படும். புன்னை மரம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரம். கடற்கரை பகுதிகளில் இது பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. அதனாலேயே புன்னை மரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியே இதை பராமரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் நீண்டநாட்களாக சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் கார் - வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகர சாலைகளில் நீண்டநாட்களாக பலர் தங்களது பழுதான கார் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அந்த பகுதியில் சுகாதார கேடும் ஏற்படுகிறது.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டுள்ள கார்களை உடனடியாக அப்புறப்படுத்த சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் இன்று சென்னை மாநகர் முழுவதும் சிறப்பு சோதனை என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சாலையோரமாக குப்பைகள் போல தேங்கிக் கிடந்த ஏராளமான கார்-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வண்ணாரப்பேட்டை பகுதியில் வேன் மற்றும் கார் ஆகியவற்றை போக்குவரத்து போலீசார் அங்கிருந்து கிரேன் மூலம் அகற்றி எடுத்துச்சென்றனர்.

    இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காரின் சொந்தக்காரர்கள் தங்களது காருக்கான உரிய அவணங்களை காட்டி பறிமுதல் செய்யப்பட்ட கார்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    எனவே நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது வாகனங்களை பொதுமக்களே அப்புறப்படுத்தி அபராத நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×