search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bride groom missing"

    அனுப்பர்பாளையம் அருகே வருகிற 3-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே உள்ள அங்கேரி பாளையத்தை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி. இவரது மகன் முருகவேல் (வயது 30). பனியன் தொழிலாளி.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் முருகவேலுக்கும் திருமண நிச்சயம் நடந்தது. மேலும் வருகிற 3-ந் தேதி திருமணம் செய்வது எனவும் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. 

    கடந்த 14-ந் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முருகவேல் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவரது பெற்றோர் மாயமான தனது மகனை கண்டுபிடித்து தரும்படி அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பனியன் தொழிலாளி முருகவேலை தேடி வருகிறார்கள்.

    தக்கலை அருகே இன்று திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை திடீரென மாயமானதால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மணப்பெண்ணுக்கு வேறு வாலிபருடன் திருமணம் நடைபெற்றது.
    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள மருவூர்கோணத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர் வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 

    இவருக்கும், பறைக்கோட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. அழகியமண்டபம் சந்திப்பில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தமும், இன்று திருமணமும் நடைபெறும் என்று அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. திருமணத்துக்காக சதீஷ்குமார் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்திருந்தார். திட்டமிட்டபடி நேற்று மாலை அழகிய மண்டபம் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக நடந்தது. உறவினர்களும் திரளாக பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிகளும் நடந்தது. 

    இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் நள்ளிரவில் புதுமாப்பிள்ளை சதீஷ்குமார் மாயமானார். அதிகாலையில் அவரது அறைக்கு சென்ற உறவினர்கள் சதீஷ்குமாரை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது அறையில்  உள்ள மேஜை மீது நிச்சயதார்த்தத்தின் போது மணப்பெண் வீட்டார் அணிவித்த 9 பவுன் தங்கச் சங்கிலி மட்டும் இருந்தது. 

    மேலும் மண்டபத்துக்கு வெளியே சதீஷ்குமார் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் மாயமாகி இருந்தது. உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிள் தக்கலை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. சதீஷ்குமார் மாயமானது பற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சதீஷ்குமார் எதற்காக மாயமானார் என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள். 

    சதீஷ்குமார் திருமணம் பிடிக்காமல் மோட்டார் சைக்கிளில் தக்கலைக்கு தப்பி வந்து அங்கிருந்து பஸ்சில் வேறு எங்காவது சென்றாரா? அல்லது அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    சதீஷ்குமார் மாயமானதால் மணப்பெண் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். சதீஷ்குமாருடன் அவருக்கு நடக்க இருந்த திருமணம் நின்று போனது. திருமண விழாவுக்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து மணப்பெண்ணின் பெற்றோர், வைகுண்டபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். வாலிபரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் அதே மண்டபத்தில் மணப்பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது.
    புதுமாப்பிள்ளை மாயமானதால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போனது. இதனால் திருமண வீடு களையிழந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளைக்காட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் வினோத் (வயது 27).தனியார் பள்ளி ஆசிரியரான இவர் வீட்டிலும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார்.

    இந்த நிலையில் வினோத்துக்கும், கரூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்று காலை கரபுரநாதர் கோவிலில் திருமணம் நடத்தவும், மாலையில் கிச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மாப்பிள்ளை வீட்டார் நேற்று காலை கரூருக்கு சென்று மணப்பெண்ணை அழைத்து வர தயாராகினர். அப்போது வெளியில் சென்ற வினோத் திடீரென மாயமானார்.அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வினோத்தை அக்கம் பக்கத்தில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த தகவல் அறிந்த பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று நடைபெற இருந்த திருமணமும் நின்று போனது. திருமண வீடு களையிழந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    வினோத்தின் தாய் இறந்து விட்டதால் அவரது பாட்டி செல்வி தான் வினோத்தை கவனித்து வந்தார். வினோத் மாயமானது குறித்து கிச்சிப்பாளையம் போலீசில் செல்வி புகார் கொடுத்தார். வினோத்தின் தந்தை ராஜமாணிக்கத்திடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என்று கூறிவிட்டார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்தும், ஒரு பெண்ணும் காதலித்தாக கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெற இருந்த திருமணம் பிடிக்காமல் அந்த காதலியுடன் அவர் மாயமாகி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து விசாரித்து வரும் போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ×