search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boy rescue"

    • சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அரக்கோணம்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாக ஆலப்புழா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயிலில் எஸ்-1 கோச் அருகில் உள்ள ஏ.சி . பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் பரிசோதனை செய்தார். அந்த பெட்டியில் சுமார் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் பயந்து மூலையில் பதுங்கி நின்றான். டிக்கெட் பரிசோதகரை கண்டதும் அழுதான்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் தன்மையாக பேசி சமாதானப்படுத்தினார். அதற்குள் ரெயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அந்த சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால் இந்த ரெயில் 5 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

    அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த சிறுவன் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கிரண்பாபு என்பவரது மகன் அகில் (வயது 11) என்பது தெரியவந்தது. சிறுவன் அகில் போலீசாரிடம் கூறுகையில்:-

    நான் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். நேற்று மாலை டியூசன் முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஒரு ரெயிலில் சென்ட்ரல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் இந்த ரெயிலில் ஏ.சி. பெட்டியில் என்னை ஏற்றிவிட்டு சென்றுவிட்டனர். ரெயில் வேகமாக சென்றதால் என்னால் இறங்க முடியவில்லை என கூறினார்.

    சிறுவனை வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். உண்மையில் அகிலை கடத்த மர்ம நபர்கள் முயற்சித்தார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசார் ரெயில் நிலையங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து செய்து வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

    • தந்தை திட்டியதால் மாணவன் வீட்டை விட்டு வெளியேறி எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி வந்தது தெரியவந்தது.
    • மாணவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    போரூர்:

    சென்னை, ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த 12 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட மாணவன் தனது நண்பர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் வீடு திரும்பினான். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த மாணவன் வீட்டை விட்டு வெளியேறினான். பின்னர் அவன் திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து குமரன் நகர் போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவனிடம் ரோந்து பணியில் இருந்த சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவன், தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாயமான 2 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீசாருக்கு மாணவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

    மத்திய பிரதேசத்தில் 70 அடி ஆழ்குழாய் கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் 12 மணி நேரம் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டான்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள கேர்கர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதித்யா பிரதாப். இவரது மகன் தேஜ்பிரதாப்.

    2 வயதான அவன் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அன்று இரவு 10.30 மணி அளவில் அவன் மீண்டும் வயல் ஓரத்தில் சென்று தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்.

    அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டிய இடம் மூடப்படாமல் இருந்தது. அதை கவனிக்காமல் ஓடிய தேஜ்பிரதாப் கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து விட்டான். அவனது தந்தை ஆதித்ய பிரதாப் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர் சிங் ராங்கி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து உதவி கோரினார். போலீசார் அந்த வயல் பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறு அருகே குழி தோண்டப்பட்டது. இதற்கிடையே குழாய் மூலம் அந்த சிறுவனுக்கு ஆக்சிசன் செலுத்தப்பட்டது. மேலும் தொலைத் தொடர்பு கருவி மூலம் அந்த சிறுவனுக்கு தைரியம் அளிக்கும் வகையில் உறவினர்கள் பேசிக் கொண்டே இருந்தனர்.

    நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் அந்த சிறுவன் ஆழ்குழாய் கிணற்றுக்குள் சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 70 அடி ஆழத்துக்கு அருகில் பள்ளம் தோண்டப்பட்டு அந்த குழாய் துண்டிக்கப்பட்டது. 12 மணி நேரம் இந்த மீட்பு பணி நடந்தது.

    நேற்று பகல் 11 மணிக்கு அந்த சிறுவன் சிக்கியிருந்த குழாய் ஓட்டை போடப்பட்டு அதிலிருந்து தேஜ்பிரதாப்பை மீட்டனர். அவன் மயங்கிய நிலையில் இருந்தான்.

    உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் கழித்து அவன் சகஜ நிலைக்கு திரும்பினார். 70 அடி ஆழம் வரை சென்று உயிர் தப்பிய அந்த சிறுவனை மாவட்ட அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    காவேரிப்பட்டணம் அருகே ஆடு மேய்ச்சலுக்காக ரூ.5 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட சிறுவனை மீட்ட அதிகாரிகள் அவனை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 38). விவசாயியான இவர் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த ஆடுகளை 7 வயது சிறுவன் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றான்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜேஷ் என்பவர் தேசிய தொழிலாளர் திட்ட இயக்குனர் பிரியாவுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து இயக்குனர் பிரியா, தொழிலாளர் உதவி ஆணையாளர் ஞானவேல், துணை ஆய்வாளர் முத்து, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி மற்றும் வின்சென்ட் உள்ளிட்டோர் சிறுவனை மீட்டு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அந்த சிறுவனிடம் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தினார்.

    அந்த சிறுவனை விவசாயி வடிவேலிடம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்றுச் சென்ற அவனது தந்தையை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சிறுவனை வேலைக்கு அமர்த்திய விவசாயி வடிவேலுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சிறுவன் தருமபுரியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான். இன்று அவனை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை செய்து அவனுக்கு வயது சான்றிதழ் பெற்று அதன்பிறகு அவனை பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் சிறுவனை விலைக்கு வாங்கி ஆடு மேய்க்க பயன்படுத்திய விவசாயி வடிவேல், சிறுவனின் தந்தை ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    ×