search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BiggBoss Tamil 2"

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தோழிகளான ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகா ஆனந்தும் இணைந்த பாடிக் கொண்டே ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #AishwaryaDutta #YaashikaAnand
    யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலம் ஆனவர். ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் படங்களில் நடித்தவர். இருவரும் சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

    அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்கள். போட்டியாளர்களாக கலந்துகொண்ட யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் நெருக்கமான தோழிகள் ஆனார்கள். யாஷிகா போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் ஐஸ்வர்யா மட்டுமே கடைசிவரை களத்தில் இருந்து இரண்டாம் இடம் பெற்றார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இயல்புக்குத் திரும்பியுள்ள இந்நிலையில், யாஷிகா தற்போது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



    அதில் தாங்கள் இந்தப் பாடலை சொந்தமாக உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ள அவர் ஐஸ்வர்யாவுடன் நடனமாடிக் கொண்டே, “நீ இல்லேன்னா நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு” என ஐஸ்வர்யாவுடன் இணைந்து பாடியும் உள்ளார். இந்த நடனம் இணையத்தில் பரவலாக கவனம் பெற்றுவருகிறது. #AishwaryaDutta #YaashikaAnand



    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயலட்சுமியின் குழந்தை நிலன் நடந்து வந்ததை பார்த்து, திருமணம் செய்து கொண்டுகுழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்ததாக மும்தாஜ் கூறினார். #Mumtaj
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ், ஷாரிக்கிடம் ஒரு தாயைப் போல பாசம் காட்டினார். 19 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் மும்தாஜுக்கு தற்போது 38 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    சமீபத்திய பேட்டி ஒன்றில், பிக்பாஸ் போட்டியாளர் விஜயலட்சுமியின் மகனை பார்த்தபோது, தனக்கும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    ‘பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜியின் மகனைப் பார்த்த உடன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று என் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.



    விஜியின் குழந்தை நிலன் வீட்டிற்குள் நடந்து வந்ததை பார்த்த எனக்கு திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசையாக இருந்தது’ எனக் கூறியுள்ளார். ஆனால் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் எனக் கேட்டதற்கு மழுப்பலான பதிலையே சொல்லியிருக்கிறார். #Mumtaj

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றி பெற்ற ரித்விகா, தன்னை ஆதரித்த அனைவருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #BiggBossTamil2 #Riythvika
    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் முடிந்தது.

    இதில், ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து எவிக்சன்களையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர். ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள். 

    பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார். இந்த நிலையில் ஒருவார இடைவேளைக்கு பிறகு ரித்விகா, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

    எல்லாருக்கும் வணக்கம். நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, நிறைய பேர் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிருக்கீங்க. நான் வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது. ரித்விகா பேன்ஸ், ரித்விகா ஆர்மி என நிறைய கணக்குகளை தொடங்கி எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கிறீர்கள். இந்த ஒரு வாரம் நான் நேரம் எடுத்துக் கொண்டேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. அதனால் தான் இந்த வீடியோவை தாமதமாக வெளியிடுகிறேன். 
    விரைவில் சமூக வலைதளங்களில் உங்களை நேரலையில் கலந்துரையாடுகிறேன். அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவளியுங்கள்.

    இவ்வாறு ரித்விகா கூறினார். #BiggBossTamil2 #Riythvika

    கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் அவரது காதலரை பிரிந்துவிட்டதாக சில தகவல்கள் வெளியான நிலையில், சுருதி, அவரது காதலர் என இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். #Vishwaroopam2 #ShrutiHaasan
    கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அரசியலிலும் இன்னொரு பக்கம் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சி, விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீடு, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 படங்கள் என சினிமாவிலும் கால் ஊன்றியபடியே உள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகிறதா' பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று கமலிடம் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு பதில் அளித்து கமல் நான் சினிமாவை விட்டு விலகி போகமாட்டேன். நடித்தால்தான் சினிமாவா? உங்களில் ‘ஒருவனாக’ அமர்ந்து சினிமாவை பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அதை விடவும் ஒரு பெரிய பணியில் ஈடுபட விரும்புகிறேன்.

    எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவது தான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித் தான் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது தியாகம் எல்லாம் இல்லை. “என் சீட்ல உக்காருன்னு” உத்தமவில்லன் படத்துல வர்ற காட்சியை பாலச்சந்தர்தான் எழுதினார். மறுபடியும் மறுபடியும் சினிமாவில் நடிக்கக் கேட்டு என்னை சஞ்சலப்படுத்தி விடாதீர்கள்”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சுருதிஹாசனின் காதலர் மைக்கேலும் கலந்துகொண்டார். சுருதிஹாசனும் லண்டனை சேர்ந்த நடிகரான மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாகவும், அவர்கள் காதலுக்கு கமல்ஹாசன் சரிகா இருவருமே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி வந்தது. இடையில் இருவரும் பிரிந்ததாகவும் தகவல் வந்தது.

    இந்தநிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பாடல் வெளியீட்டில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஸ்ருதிஹாசன் மேடையில் பாடியதை மைக்கேல் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார். #Vishwaroopam2 #BiggBoss2 #ShrutiHaasan

    ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறி ‘பெப்சி’ தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். #BiggBossTamil2 #FEFSI
    திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் ‘பிக்பாஸ்’ டி.வி. நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    ‘பிக்பாஸ் முதல் பாகத்தின் போதே பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பிடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த பாகங்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் பெப்சியில் இருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள்.



    அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால் 2-ம் பாகத்தில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டை விட மோசமாக வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது. கேட்டதற்கு சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். எனவேதான் நாங்களும் இதை வெளியில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதிகப்படியாக பெப்சி பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நமது மாநில தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்சினை?. எங்களது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்காத பட்சத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிற கமல் உள்பட அந்த 41 பேரும் (நடிகர் கமல் சம்மேளன உறுப்பினர்) அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம்.



    கமல் பல்வேறு காலங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவு தந்துள்ளார். அவரிடம் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் பெப்சி ஆட்களையே அதிகம் பயன்படுத்துவதாக தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். நாங்கள் உண்மை நிலையை அவருக்கு தெரிவித்து விட்டோம். கடந்த முறையை போலவே இப்போதும் தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் அல்லது எங்கள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறோம்.

    குஷ்புவின் வேண்டுகோளுக்கு இணங்க அவகாசம் தந்து இருக்கிறோம்.

    தவறு செய்த நிறுவனம் மீது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் செய்து இருக்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் 25-ந்தேதி (நாளை) ஒரு நாள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அன்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #FEFSI 

    ×