search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya issue"

    அயோத்தியில் விசுவ இந்து பரிஷத் கூட்டிய மாநாட்டில் 2 லட்சம் பேர் திரண்டனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. #Ayodhyarally #Ayodhyadispute #Ramtemple
    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.

    இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    இந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அங்கு 2 நாள் மாநாடு நடந்தது.

    நிறைவு நாளான நேற்று இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான இந்து மத ஆன்மிக தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், துறவிகள், ராம பக்தர்கள் என 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

    இதனால் நகரில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தரம் காந்தா உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அதிரடிப்படையினர், கமாண்டோ படையினர் உள்பட 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் அயோத்தியில் பதற்றம் நிலவியது.

    மேலும் அயோத்திக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து நகரில் போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

    அதேநேரம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என பக்தி கோஷம் எழுப்பிக்கொண்டும், பஜனை பாடல்களை பாடியவாறும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அயோத்தியில் குவிந்தனர். அவர்கள் மாநாடு நடைபெறும் பதே பக்த்மால் கி பாகி பகுதியை நோக்கி அணிவகுத்து சென்றனர்.

    மேலும், யோகி ஆதித்ய நாத் அரசு ராமருக்கு 151 மீட்டர் உயர சிலை நிறுவ இருக்கும் இடமான சரயு நதிக்கரையில் ராம பக்தர்கள் பூக்களை தூவியும் வழிபட்டனர்.


    நேற்று நடைபெற்ற நிறைவு நாள் மாநாட்டில் பேசிய நிர்மோஹி அஹாரா அமைப்பைச் சேர்ந்த சாமியார் ராம்ஜி தாஸ், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை பிரயாக் ராஜ் (அலகாபாத்) நகரில் ஜனவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் 4-ந் தேதி வரை நடைபெறும் கும்பமேளாவில் அறிவிப்போம்” என்றார்.

    இந்து மத தலைவர்களில் ஒருவரான சுவாமி ராம்பத்ராச்சாரியா பேசுகையில், “ராமர் கோவில் விவகாரம் குறித்து மத்திய மந்திரி ஒருவரிடம் கடந்த 23-ந் தேதி பேசினேன். அப்போது அவர் டிசம்பர் 11-ந் தேதிக்கு பிறகு (5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு) பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பாக பேசுகிறேன் என்று தெரிவித்தார். எனவே ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த மசோதா நிறைவேறுவதற்கான 3-ல் 2 மடங்கு பெரும்பான்மை கிடைத்து விடும்” என்று குறிப்பிட்டார்.

    ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் நிருத்ய கோபால் தாஸ் கூறும்போது, “ராமர் கோவில் கட்டுவதற்கு தேவையான உதவிகளை மாநில பா.ஜனதா அரசு செய்து தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    மாநாட்டின் நிறைவில் அயோத்தியில் விரைவாக ராமர் கோவில் கட்டும் வகையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரவேண்டும் அல்லது அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதுபற்றி, மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச துணைத்தலைவர் சாம்பட் ராய் கூறுகையில், “இனிமேல் ராமர் கோவில் கட்டுவதற்காக ஆலோசனை கூட்டம், மாநாடு ஊர்வலம் என எதுவும் இருக்காது. ராமர் கோவில் கட்டும் பணியைத்தான் தொடங்குவோம். அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தை 3 பங்காக பிரிக்கும்படி உத்தரவிட்ட அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை ஏற்க மாட்டோம். இந்த நிலம் முழுவதும் எங்களுக்கு தேவை. ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தால் கோவில் கட்டுவதற்கு வசதியாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவோம்” என்றார்.

    அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்த் குமார் நிருபர்களிடம் கூறுகையில், “ராம பக்தர்கள் மாநாடு அமைதியாக நடந்து முடிந்தது. கண்காணிப்பு கேமராக்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட்டது. அயோத்திக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு. அது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி” என்றார். #Ayodhyarally #Ayodhyadispute #Ramtemple
    ராமர் கோவில் கட்டுவது ஒன்றும் அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். #DevendraFadnavis
    மும்பை:

    அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி உத்தவ் தாக்கரே நேற்று அயோத்திக்கு சென்றார். அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

    இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரி ஒய்.பி.சவானின் நினைவு தினத்தையொட்டி நேற்று சத்தாரா மாவட்டம் காரட் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தினார். மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வேவும் உடன் இருந்தார்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் குறித்து கேள்விக்கு பதில் அளித்து கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது ஒன்றும் அரசியல் சார்ந்த பிரச்சனை இல்லை. ராமர் இந்தியா முழுமைக்குமான கடவுளாவார். உத்தவ் தாக்கரேவும் அவரின் ஆசிர்வாதத்தை பெற்றிருப்பார்” என்றார்.

    அவசர சட்டம் இயற்றும் கோரிக்கை குறித்து பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே கூறியதாவது:-

    ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது, எனவே அதிகாரத்தில் இருந்தாலும்கூட, அரசாங்கத்தால் இதில் என்ன செய்ய முடியும்?.

    அயோத்திக்கு சென்று எங்களுக்கு எதிராக கோஷம் எழுப்புவதால், இருகட்சிகளும் கடுமையான கருத்துவேறுபாடு கொண்டிருப்பதாக அர்த்தமில்லை.

    ஓட்டுகள் சிதறுவதை தடுக்க வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DevendraFadnavis
    அயோத்தி நகரில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என வலியுறுத்தி இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடிய தர்மசபா ஆலோசனை கூட்டம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. #Ayodhyadispute #VHPDharamSabhasponsored #AyodhyaDharamSabha #Ramtemple
    லக்னோ:

    ராமர் பிறந்த இடமான அயோத்தி நகரம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது. இங்கு ராமருக்கு கோவில் கட்டப்பட்டு இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதாக கூறி இந்து அமைப்புகள் கரசேவை நிகழ்ச்சியை நடத்தின.  

    இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி பாபர் மசூதியை இடித்ததுடன் அந்த இடத்தில் சிறிய வடிவிலான ராமர் கோவிலையும் கட்டினார்கள். அங்கு பெரிய அளவில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று இந்து அமைப்பினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    ராமர் கோவில் கட்டுவது சம்பந்தமாக உடனே கோர்ட்டு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று இந்து அமைப்புகள் வற்புறுத்தி வந்தன. ஆனால், உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது என கூறி ஜனவரி மாதத்துக்கு வழக்கை  சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்தது.

    இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தி விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பினர் அயோத்தியில் இன்று தர்மசபா என்ற நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்தனர். இதற்காக நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த தொண்டர்களும், ராம பக்தர்களும் அயோத்தியில் குவிந்தனர்.

    புகழ்பெற்ற சாமியார்களான ஜெகத் குரு ராமானந்தசாரியா, சுவாமி ஹன்ஸ்தேவ சாரியா, ராம்பத்ரசாரியா, ராமேஸ் வர்தாஸ், வைஷ்ணவ், மகாந்த் நிரித்திய கோபால் தாஸ் மற்றும் ஏராளமான சாமியார்கள் பங்கேற்றனர். இவர்களின் பேச்சை கேட்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களும் திரண்டனர்.

    இது தவிர, விசுவ இந்து பரி‌ஷத் தலைவர்கள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    ராமஜென்ம பூமிக்காக கட்டுமான பொருட்களை தயார் செய்யும் இடமான நயாஸ் ஒர்க்‌ஷாப் அருகில் உள்ள படேபக்த்மால் கிபாகியா என்ற  இடத்தில் இந்த தர்மசபா நிகழ்ச்சி நடந்தது.



    பகல் 12.30 மணியளவில் தர்மசபா நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தலைவர்களும், சீயர்களும் உரையாற்றினர்.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தலைவர் கிருஷ்ண கோபால், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் இந்த தர்மசபை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் (ஆர்.எஸ்.எஸ்.) கட்டுப்படுவோம். இங்கு கோவில்  கட்டும்வரை நாங்கள் ஓய்ந்திருக்க மாட்டோம் என்றார்.

    அடுத்து பேசிய சுவாமி ராம்பத்ராச்சாரியா, ராமர் கோவிலை இங்கு கட்டுவது தொடர்பாக கடந்த 23-ம் தேதி நான் மூத்த மத்திய மந்திரி ஒருவருடன் பேசி இருக்கிறேன். டிசம்பர் 11-ம் தேதி பிரதமர் மோடியுடன் இவ்விவகாரம் தொடர்பாக பேசுவதாக அவர் உறுதியளித்திருக்கிறார். கோவில் கட்டுவதற்காக ஒரு சட்டம் வரும் என நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் என்னிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் சுவாமி ராம்பத்ராச்சாரியா கூறினார்.

    நிறைவுறைவாற்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய தலைவர் சம்பத் ராய், அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மொத்த நிலமும் ராமர் கோவில் கட்டுவதற்காக எங்களுக்கு தேவை. இதற்கு ஒத்துழைக்கும் வகையில் முஸ்லிம்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் போடப்பட்டுள்ள வழக்கை அவர்கள் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

    தற்போது இங்கு கூடியுள்ள மாபெரும் பக்தர்கள் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 45 மாவட்டங்களில் இருந்துமட்டும் வந்துள்ள கூட்டம். அடுத்த தர்மசபா கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பின்னர், இன்றைய ஆலோசனை கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. ராமர் கோவிலை கட்டுவதற்கு சட்டம் இயற்ற வேண்டும். அல்லது, அவசர சட்டம் கொண்டுவந்து கோவிலை கட்டிமுடிக்க வேண்டும் என்பதுபோன்ற எழுத்து வடிவிலான தீர்மானம் ஏதும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை. #Ayodhyadispute #VHPDharamSabhasponsored #AyodhyaDharamSabha #Ramtemple
    மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் தற்போது ராமர் கோவில் விவகாரத்தை பாஜனதா கையில் எடுத்து உள்ளனர் என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். #Mayawati #Ayodhyaissue #bjp
    புதுடெல்லி:

    ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் அயோத்தியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விசுவ இந்து பரிஷத் சார்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாநாடும் நடக்கிறது.

    இதுபற்றி பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இப்பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் சில அமைப்புகள் அயோத்தியில் கோவில் கட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது தவறான அணுகுமுறை. கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை அவர்கள் பொறுத்திருக்க வேண்டும்.

    மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா பல்வேறு விஷயங்களிலும் தோல்வி கண்டு விட்டது. அதை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் தற்போது ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் இவர்கள் கையில் எடுத்து உள்ளனர். இதில், நிச்சயமாக அரசியல் தந்திரம் தவிர வேறு எதுவும் கிடையாது. இந்த சதிவேலைக்கு சிவசேனாவும், விசுவ இந்து பரிஷத் அமைப்பும் உடந்தையாக உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Mayawati #Ayodhyaissue #bjp 
    ×