search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chapati"

    • சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் மாறாமல் இருக்கும்.
    • முட்டை கெட்டுப்போகாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

    * சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

    * பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

    * வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும்.

    * சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.

    * முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.

    * கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.

    * ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    * இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.

    * மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் மீது உப்பை கொட்டி, காற்றுபுகாதவாறு கட்டி வைத்தால் போதும்.

    * புளி குழம்பு தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

    * முட்டை கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

    * முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.

    * வாழைப்பூ சுத்தம் செய்யும்போது கையில் சிறிது நல்லெண்ணெய் தடவிக் கொண்டால் கையில் கறை ஒட்டாது.

    * காரக்குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் போதும். காரத்தின் வீரியம் குறைந்துவிடும்.

    * சோறு ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்க, அரிசி ஊற வைக்கும்போது சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.

    * கறிவேப்பிலை வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது.

    * மெதுவடை மொறு மொறு வென்று இருக்க, உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.

    * பருப்பு வேக வைக்கும்போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.

    * வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.

    * துண்களில் எண்ணெய் கறையோ கிரீஸ் கறையோ பட்டுவிட்டால் அதில் சிறிதளவு நீலகிரித்தைலம் விட்டு கழுவினால் அந்த கறை போய்விடும்.

    * ஃப்ரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் அவற்றை மூடி வைக்க கூடாது.

    * வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டு நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.

    * அதிகம் கனமுள்ள கல்லை தோசைக்கும், கனம் அதிகம் இல்லாத கல்லை சப்பாத்திக்கும் பயன்படுத்த வேண்டும்.

    * சாதம் வடிக்கும் போது சிறிது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் குழையாமல் இருக்கும்.

    * கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்.

    * உப்பு ஜடியில் தண்ணீர் வடிவதை தடுக்க அதில் புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீர் தன்மையை புளி எடுத்துவிடும்.

    * அதிகப்படியாக வாங்கி வைத்துள்ள எண்ணெய்யில் பச்சைமிளகாயை போட்டு வைத்தால் எண்ணெய் கசடு தங்காது.

    * சாம்பார் மணக்க, வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் கடைசியில் சேர்த்தால் சாம்பார் மணமாக இருக்கும்.

    * வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் கலந்து சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது.

    * வாழைக்காயை நறுக்கும்போது சிறிதளவு உப்புத்தூளை கைகளில் தேய்த்துக்கொண்டால் கறைபிடிக்காது, பிசுபிசுப்பு நீங்கும்.

    * கறிவேப்பிலை செடி நன்றாக வளர புளித்த மோரை ஊற்றலாம்.

    * பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு காரட் சேர்த்து செய்தால் கசப்பே தெரியாது.

    • சிவப்பரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    • சிவப்பரிசியில் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    சிவப்பரிசி - 1 கப்

    வெங்காயம் - ஒன்று

    பச்சை மிளகாய் - ஒன்று

    சீரகம் - ஒரு டீஸ்பூன்

    கேரட் - ஒன்று

    தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணியால் மூடி வைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பரிசி ரொட்டி ரெடி.

    • இந்த ரொட்டியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • வெயிலுக்கு ஏற்ற உணவு இது.

    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் - 2

    தேங்காய் - 3/4 கப்

    ரவை - 1 கப்

    கொத்தமல்லி இலை -சிறிதளவு

    பச்சை மிளகாய் - 4

    எண்ணெய் - தேவையான அலைவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெள்ளரிக்காய் மற்றும் தேங்காயை துருவி கொள்ள வேண்டும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிறகு ஒரு பாத்திரத்தில் துருவிய வெள்ளரிக்காய், தேங்காய், ரவை, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    பத்தே நிமிடத்தில் சுவையான, சூடான, ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி தயார்.

    • ரூமாலி ரொட்டி மெல்லிய கைகுட்டை போன்று இருக்கும்.
    • இந்த ரொட்டி தந்தூரி வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 2 கப்

    கோதுமை மாவு - 1 1/2 கப்

    பால் பவுடர் - கால் கப்

    உப்பு - சிறிதளவு

    சர்க்கரை பவுடர் - 3 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, பால் பவுடர், உப்பு, சர்க்கரை பவுடர், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவு பூரி மாவுக்கு பிசைவது போல் அதிக கெட்டியாக இல்லாமல், கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ள வேண்டும். அதை நேரம் மாவை நன்றாக அடித்து பிசைய, இடி உரலில் இருக்கும் அந்த குழவியை வைத்து ஐந்து நிமிடம் இந்த மாவின் மீது அழுத்தி அடித்தால் போதும் மாவு மிருதுவாகி விடும். இல்லையென்றால் மாவை பரோட்டா மாவு பிசைவதை போல் அதிக சிரமப்பட்டு பிசைய வேண்டியிருக்கும்.

    பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி இதை சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் வைத்து நல்ல மெலிதான ரொட்டியாக திரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது திரட்டிய பிறகு நாம் கையில் வைத்து பார்த்தால் கை தெரிய வேண்டும். மெல்லிய துணி பதத்திற்கு இந்த மாவை தேய்க்க வேண்டும்.

    இந்த ரொட்டி சுட இரும்பு கடாய் அல்லது இண்டாலி கடாய் இரண்டில் ஏதாவது ஒன்றை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்தாக அடுப்பை பற்ற வைத்து வெறும் கடாயை வைத்து ஒரு முறை நன்றாக சூடுபடுத்திய பிறகு, கடாயை அடுப்பில் திருப்பி போட்டு விடுங்கள். அதாவது கடாயின் அடிப்புறம் மேலே இருப்பது போல் இருக்க வேண்டும். இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சூடான கடாயின் மேல் உப்பு தண்ணீரை தெளித்த பிறகு நீங்கள் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதன் மேல் போட்டு விடுங்கள். ரொட்டியை போட்ட பிறகு டிஷ்யூ பேப்பர் வைத்து லேசாக மேலே ஒட்டி எடுங்கள். அல்லது காட்டன் துணி இருந்தாலும் வைத்து ஒட்டி எடுங்கள். ரொட்டி லேசாக உப்பி வரும்.

    ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு ரொட்டியை எடுத்து மறுபடியும் இன்னொரு முறை திருப்பி போடுங்கள். அதன் பிறகும் இதே போல் துணி வைத்து மேலே லேசாக அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ரூமாலி ரொட்டி நாம் வீட்டிலே செய்து விட்டோம்.

    • காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • இதற்கு தொட்டுக்கொள்ள வேறு எதுவும் தேவையில்லை.

    தேவையான பொருட்கள் : 

    கோதுமை மாவு - 2 கப்,

    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - அரை டீஸ்பூன்,

    காய்கறிக்கலவை (பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவை) - ஒரு கப்,

    வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப்,

    இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,

    புதினா, கொத்தமல்லித்தழை அரைத்தது - 2 டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: 

    காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதுகள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    அதனுடன், மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். இதுதான் பூரணம்.

    கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.

    பிசைந்த மாவிலிருந்து, மெல்லிய சப்பாத்திகள் திரட்டி, இரு சப்பாத்திகளுக்கு நடுவே காய்கறி பூரணத்தை பரத்தி, ஓரங்களை ஒட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் இருபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.

    • நாணை நாம் வீட்டில் செய்திருக்கமாட்டோம்.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - 2 கப்

    ட்ரை ஈஸ்ட் - 1 டீஸ்பூன் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 'டிரை ஈஸ்ட்' என்று கேட்டால் பாக்கெட்டாக கிடைக்கும்)

    வெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 2/3 கப்

    செய்முறை

    * முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைய வைக்க வேண்டும்.

    * மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.

    * பிசைந்த மாவை 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனால் மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று சற்று மொத்தமாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை வைக்க வேண்டும்.

    * நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

    * இப்போது சுவையான பட்டர் நாண் ரெடி!!!

    இதனை கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    குறிப்பு: இதனை தோசைக்கல் அல்லது தவாவில் சாதாரண சப்பாத்தி போன்று வெண்ணெய் மட்டும் அதிகமாக தடவி, சுட்டு எடுக்க வேண்டும்.

    • நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. 
    • ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ், கேழ்வரகு மாவு - தலா ஒரு கப்,

    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    பெரிய வெங்காயம் - ஒன்று

    கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    பொட்டுக் கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    நெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, தயிர் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு கெட்டியாக பிசையவும். 

    கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன் மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி சூடானதும் ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    • குழந்தைகளுக்கு ஏற்ற அருமையான டிபன் இது.
    • இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    முட்டை - 2

    டொமேட்டோ கெட்சப் - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    வெள்ளரிக்காய் - 1

    பச்சை மிளகாய் - 3

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

    சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

    எலுமிச்சைபழச்சாறு - பாதி பழம்

    உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், வெள்ளரிக்காயை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

    மற்றொரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், சாட் மசாலா தூள், எலுமிச்சைபழச்சாறு ஊற்றி கலந்து வைத்துக்கொள்ளவும்.

    முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து பராத்தாவாக தேய்த்து வைக்கவும்.

    தேய்த்த பராத்தாவை சூடான பானில் சேர்த்து இருபுறமும் நெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றவும்.

    பின்பு அதன் மேல் வேகவைத்த பராத்தாவை வைத்து இரண்டு பக்கமும் வேகவிடவும்.

    வேகவைத்த பராத்தாவை தட்டில் வைத்து அதில் நடுவில் வெங்காய கலவையை வைத்து, பிறகு சாட் மசாலாவை தூவி அதன் மேல் டொமேட்டோ கெட்சப்பை ஊற்றவும்.

    பராத்தாவை நன்கு இறுக்கமாக உருட்டி, பட்டர் பேப்பரில் சுருட்டி வைத்து சூடாக பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சப்பாத்தி முட்டை மசாலா ரோல் தயார்!

    • குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் துண்டுகள் - 10,

    கோதுமை மாவு - 150 கிராம்,

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    பால் - 100 மில்லி,

    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,

    நெய் - 4 டீஸ்பூன்.

    செய்முறை:

    பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

    கோது மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும்.

    இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

    இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.

    பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

    • இதற்கு தொட்டுகொள்ள எதுவும் தேவையில்லை.
    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருள்கள்

    சுத்திகரிக்கப்பட்ட மாவு - 3 கப்

    சர்க்கரை - 1 தேக்கரண்டி

    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

    வெண்ணெய் - 5 ஸ்பூன்

    பால் - 1 கப்

    உப்பு

    ஸ்டப்பிங்கிற்கு

    பன்னீர் - 200 கிராம்

    பச்சை மிளகாய் - 4

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி தலை - 2 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

    சாட் மசாலா - 2 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    செய்முறை

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.

    இப்போது ஒரு பால் ஜாடியில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தனியே எடுத்து வைத்துள்ள மாவு கலவையில், இந்த பால் கலவையை ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும். பிறகு, பிசைந்தது வைத்த மாவை மென்மையான மெல்லிய ஈர துணி கொண்டு 40 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்து வைத்த பன்னீர், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், மற்றும் சாட் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பன்னீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.

    ஒரு உருண்டை மாவை எடுத்து சற்று தடியாக தேய்க்க வேண்டும். இப்போது செய்து வைத்துள்ள ஸ்டப்பிங் பொருள்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.

    பிறகு, ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வட்டமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருள்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து செய்து வைத்த குல்ச்சாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுக்கவும்.

    அடுப்பில் இருந்து குல்ச்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிய வெண்ணெய் தடவ வேண்டும்.

    இப்பொழுது சுவையான பன்னீர் குல்ச்சா தயார்.

    • சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 1

    சப்பாத்தி - 6

    பெரிய வெங்காயம் - 3

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும்.

    அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் சிறிது வைத்து சுருட்டவும்.

    இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி.

    குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    மருத்துவ குணம் நிறைந்த முருங்கை இலையை அடிக்கடி உணவில் சேர்த்தோ, சூப்பாகவோ செய்து குடியுங்கள். இன்று முருங்கைக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி மாவு - 1 கப்
    முருங்கை கீரை - 1/4 கப்
    வெங்காயம் - 1
    பூண்டு - 5
    மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், முருங்கைக் கீரை, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவை போட்டு அதோடு உப்பு சேர்த்து கலந்த பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முருங்கை கீரை, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு சுட்டு எடுத்தால் முருங்கைக் கீரை சப்பாத்தி ரெடி.
    ×