search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2G"

    2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் புகார்களை விசாரித்து வரும் அமலாக்கத்துறை துறை அதிகாரி ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #AircelMaxis #RajeshwarSingh
    புதுடெல்லி:

    அமலாக்கத்துறையில் இணை இயக்குநராக உள்ள ராஜேஸ்வர் சிங் 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் விவகாரங்களை விசாரித்து வந்தவர். இந்நிலையில், ராஜேஸ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவரை பணியிலிருந்து விடுவித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ராஜ்னேஷ் கபூர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இதற்கு கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்திருந்த ராஜேஸ்வர் சிங். அதில், தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்படுகிறது. 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த தன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்த போது, தன்னை குற்றமற்றவர் என சிபிஐ மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பகம் சான்றிதழ் அளித்தது என குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எஸ்.கே கவுல் அமர்வு முன்னிலையில் இன்று மேற்கண்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘மிக முக்கியமான வழக்குகளை விசாரித்த உங்களுக்கு (ராஜேஸ்வர் சிங்), எதிரான இந்த குற்றச்சாட்டை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த விசாரணைக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என கூறிய நீதிபதிகள் பிற்பகல் 2 மணிக்கு உத்தரவுகளை வழங்குவதாக தெரிவித்தனர்.

    பின்னர், பிற்பகலில் மீண்டும் நீதிமன்றம் கூடியதும். “ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும். 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் குழுவில் இருந்து ராஜேஸ்வரை விடுவிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×