என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்பீச்மெண்ட்"

    • நீதிபதிகள் அரசியலமைப்பிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், "கட்சிசார்ந்த அரசியல் அழுத்தங்கள் அல்லது கருத்தியல் மிரட்டல்களுக்கு" அல்ல
    • எம்.பி.க்கள் மேற்கோள் காட்டிய காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை போதுமானவை அல்ல

    உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு, 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட முன்னாள் நீதிபதிகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தீர்ப்பின் பேரில் அவரை பதவி நீக்கம் செய்யும் முயற்சி "நமது ஜனநாயகத்தின் வேரையும், நீதித்துறையின் சுதந்திரத்தையும் வெட்டிவிடும்" என்று தெரிவித்துள்ளனர். 

    மேலும், எம்.பி.க்கள் மேற்கோள் காட்டிய காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை போதுமானவை அல்ல எனவும், இது "கொள்கை ரீதியான, நியாயமான விமர்சனம் அல்ல" என்றும் தெரிவித்துள்ளனர். இம்பீச்மெண்ட் நடைமுறையின் நோக்கம் நீதித்துறை நேர்மையை நிலைநிறுத்துவதாகும். அதை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தக்கூடாது. இன்று, ஒரு நீதிபதியாக இருக்கலாம்; நாளை, அது ஒட்டுமொத்த நிறுவனமாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். 

    கட்சியின் நிலைப்பாட்டை கடந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை மற்றும் குடிமக்கள் அனைவரும் "இந்த நடவடிக்கையை அதன் தொடக்கத்திலேயே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் அரசியலமைப்பிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், "கட்சிசார்ந்த அரசியல் அழுத்தங்கள் அல்லது கருத்தியல் மிரட்டல்களுக்கு" அல்ல எனவும் தெரிவித்துள்ளனர். 




    • நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 150 மக்களவை எம்பிக்கள் கையொப்பம்
    • அப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இம்பீச்மெண்ட் முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயரை ஜி.ஆர். சுவாமிநாதன் பெறுவார்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும் பல அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்தன.

    இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சொன்னவாறே இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று, ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கூறி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர்.

    நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 மக்களவை எம்பிக்கள் கையொப்பமிட்ட தீர்மான கடிதத்தை டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், எம்.பி. கனிமொழி, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக எம்.பி. துரை வைகோ உள்ளிட்டோர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தனர். 

    சுவாமிநாதன் பதவிநீக்கம் செய்யப்படுவாரா?

    ஒருவேளை இந்த தீர்மானம் ஏற்கப்பட்டால், மூன்று பேர் கொண்ட குழு நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று விசாரணைக் குழு உறுதி செய்யும்பட்சத்தில் நாடாளுமன்ற அவையில் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படும்.

    அதன்பின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறும். இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிப்பார். அப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இம்பீச்மெண்ட் முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயரை ஜி.ஆர். சுவாமிநாதன் பெறுவார். 




    • வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள்.
    • சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்

    உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் ஒற்றை உத்தரவால் நேற்று திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு, கலரவம் உண்டாகும் சூழல் நிலவியதாக பல்வேறு தரப்பினரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள்  'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.

    இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார்.

    இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும். இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார். 

    • 2023 செப்டம்பர் மாதம் மொகமது முய்சு தேர்தலில் வென்று அதிபரானார்
    • கைகலப்பில் தாக்கப்பட்ட ஒரு எம்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

    மேற்காசியாவில், இந்திய கடல் பகுதியில் உள்ளது, பல தீவுகளை உள்ளடக்கிய நாடான, மாலத்தீவு.

    மாலத்தீவிற்கு முக்கிய வருவாய், இயற்கை அழகு நிறைந்த அதன் தீவுகளை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கிடைத்து வந்தது. சினிமா, கிரிக்கெட், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுலாவிற்கு மாலத்தீவிற்கு செல்வது வழக்கம்.

    மாலத்தீவில் 2023 செப்டம்பர் மாதம் 88 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அந்நாட்டின் தலைநகர் மாலே நகர மேயர் மொகமது முய்சு தேர்தலில் வென்று அதிபரானார்.

    அதிபர் முய்சு சீன-ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்த முய்சுவின் சீன ஆதரவு நிலையினால், இந்திய பிரபலங்கள் அங்கு சுற்றுலா செல்வதற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.

    நேற்று, முய்சு அமைச்சரவையில் மேலும் 4 உறுப்பினர்களை சேர்க்க ஒப்புதல் பெற அந்நாட்டின் பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் மோதல்கள் வெடித்து கைகலப்பும் ஏற்பட்டது.

    இந்த மோதலில் ஒரு உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அங்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

    இதை தொடர்ந்து, முய்சுவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்கட்சிகள் "இம்பீச்மென்ட்" கொண்டு வந்து, பதவி நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான கையொப்பங்களை உறுப்பினர்களிடம் பிரதான எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சேகரித்து விட்டது.

    இந்நிலையில் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலைமையை முய்சு சமாளிப்பாரா அல்லது தானாக பதவி விலகுவாரா என்பது வரும் தினங்களில் தெரிந்து விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×