என் மலர்
வழிபாடு

சிவராத்திரி விரதமும், பலன்களும்
- சிவராத்திரி அன்று ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
- சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை விலகும். சிவராத்திரி விரதம் யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். 100 அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் (குறியல்) செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்துக்கு ஈடாகாது. சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். இரவு சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ தூங்க வேண்டும். மறுநாள் சிவராத்திரி அன்று அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவ சிந்தனையோடு சிவாலயத்திற்கு போய் ஈசனை வணங்க வேண்டும். மாலையில் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் சிவ அர்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.
கோவிலில் 4 காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நான்கு கால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம். சிவராத்திரியில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
மகா சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் நீராடி அன்னதானம் அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைக்கும். 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.






