என் மலர்
மற்றவை
- மனித பிறவியில் சுக துக்கங்களை மாற்றி மாற்றி அனுபவிக்கும் நமக்கு, ராஜ அலங்காரம் என்றுமே சிறப்புதான்.
- நல்ல செல்வ வளம், மன அமைதி, சிறப்பான வாழ்வு இவற்றை குறிக்கும் குறியீடு ஆக ராஜ அலங்காரத்தை கருதி கொண்டிருக்கிறோம்.
ஒரு முறை குடும்பத்தார், உறவினர் என்று சுமார் 20 பேர் பழனி சென்று, முருகப் பெருமானை தரிசிக்கும் போது, முருகர் ஆண்டிக் கோலத்தில் இருந்தார்.
அனைவருக்கும் சற்றே வருத்தம்.
ராஜ அலங்காரத்தில் முருகரை தரிசித்திருக்க கொடுத்து வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டிருந்தோம்...
அப்போது மண்டபத்தில் எங்கள் அருகில் அமர்ந்திருந்த பெரியவர் சுமார் 80 வயது இருக்கும். தூய வெள்ளாடையில் நெற்றி நிறைய திருநீறுடன் நல்ல முகப்பொழிவுடன், புன்சிரிப்புடன் நாங்கள் பேசிக்கொண்டு இருப்பதை கவனத்துக் கொண்டு இருந்தார்.
"நான் ஒன்று சொல்லட்டுமா?" என்று கேட்டார்.
"சொல்லுங்கள் ஐயா" என்று ஆவலோடு கேட்டோம்.
"மனித பிறவியில் சுக துக்கங்களை மாற்றி மாற்றி அனுபவிக்கும் நமக்கு, ராஜ அலங்காரம் என்றுமே சிறப்புதான். நல்ல செல்வ வளம், மன அமைதி, சிறப்பான வாழ்வு இவற்றை குறிக்கும் குறியீடு ஆக ராஜ அலங்காரத்தை கருதி கொண்டிருக்கிறோம்.
நம் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ராஜ அலங்காரத்தையே விரும்புவோம். அது மனதின் இயல்பான ஈர்ப்பு.
ஆனால் ஆண்டிக்கோலம் என்பது முக்திக்கு வழிவிடுகின்ற பற்றற்ற முற்றும் துறந்த கோலத்தின் அடையாளம். ஞானக்கோலம்.
புற உலகியல் வாழ்வின் சுக, துக்கங்களிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு, பிறவியின் பயனாகிய இறைவனை அடைய அகம் - உள் நோக்கி பயணிப்பதற்கு நம்மை உணர்த்துகின்ற கோலம் அது.
தொடர்பிறவி அறுத்து, என்னோடு சங்கமமாகி முக்தி பெறுவாய் என்று அன்போடு நம்மை அழைக்கும் கோலம்.
தொடர் பிறவிகளிலேயே உழன்று கொண்டு இருக்கும் நீங்கள், பிறவி அறுத்து முக்தி அடைய ஆசிர்வதிக்கும் கோலமே ஆண்டிக்கோலம்.
எனவே, ஆண்டிக்கோலத்தில் முருகரை தரிசிப்பதே மிகமிக சிறப்பாகும்" என்று கூறி முடித்தார்.
என்ன அருமையான ஞான விளக்கம்.
-வாசன் சுருளி
- எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தலையின் மேற்பாக தோளின்மூலம் முடியின் வேர்கால்கள்வரை எளிதில் ஊடுருவிச் செல்லும் தன்மையால், புறஊதாக்கதிர்களின் தீமையை அகற்றி, தலையின் வெப்பத்தை சமன்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்கிறது.
- உடல் வெப்பத்தையும் சீராக்குவதோடு, மனஅழுத்தம், கண்ணெரிச்சல், நீர் சுருக்கு உள்ளிட்ட சிறுநீர்ப்பாதை தொற்று, வயிற்றுவலி, மலச்சிக்கல் ஆகியவையும் உங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கிறது.
குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் தேய்த்து தலை குளிக்க வையுங்கள்.
அவசர உலகம், நவநாகரீகம், கல்லூரி மாணவர்கள், ஸ்டைல் ..... என்றெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்களைக் கூறாமல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாரம் இருமுறைகள் கட்டாயமாக தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, ஊறவைத்து குளிப்பதற்கு என்னெவெல்லாம் செய்யவேண்டும் அதையெல்லாம் செய்துபாருங்கள். செய்துவிடுங்கள்.
நிறைந்த கால்சியம் சத்தையும், புரதம், மக்னீசியம் போன்ற சத்துக்களையும் தன்னகத்தே வைத்துள்ள நல்லெண்ணெய் என்னும் எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தலையின் மேற்பாக தோளின்மூலம் முடியின் வேர்கால்கள்வரை எளிதில் ஊடுருவிச் செல்லும் தன்மையால், புறஊதாக்கதிர்களின் தீமையை அகற்றி, தலையின் வெப்பத்தை சமன்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்கிறது.
உடல் வெப்பத்தையும் சீராக்குவதோடு, மனஅழுத்தம், கண்ணெரிச்சல், நீர் சுருக்கு உள்ளிட்ட சிறுநீர்ப்பாதை தொற்று, வயிற்றுவலி, மலச்சிக்கல் ஆகியவையும் உங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கிறது.
முடியின் கருமை, அடர்த்தி, உறுதி, நீளம் ஆகியவை தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் எந்தஅளவிற்கு முடியின் வேர்கால்களைத்தொட்டு, உள்ளே செல்கிறதோ, அந்த அளவிற்கு நன்றாக அமையும்.
இதனுடன் சேர்ந்து, புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' 'சி' 'ஈ' மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்த பழங்கள், காய்கள், கொட்டை உணவுகள், கீரைகள், முட்டை ஆகியவையும் மிருதுவான, அடர்த்தியான, நீளமான, கருமையான கூந்தலுக்கு மிக அவசியம்.
-முனைவர் வண்டார் குழலி
- மண்டபத்தில் உட்காருந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள்.
- உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?
ஒரு ஞானி பிரகதீஸ்வரர் திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.
கல்மண்டபத்தின் வடக்கில், அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது.
எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.
வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வந்த ஞானியார் "யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்" என்று தெரிவித்தார்.
யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்பார்த்தார்கள்.
மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.
சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.
தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? என்று ஞானியார் கேட்டார்.
அவர் சொன்னார்:
சுவாமி! விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்து இருக்கின்றன.
"விதியை மதியால் வெல்லலாம் என்றும், மதியை விதி வென்றுவிடும்" என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன. எது முடிவானதோ சாமிக்கு தெரிந்தால் சொல்லுங்கள். "
கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.
மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, "எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்" என்றார்.
மண்டபம் காலியாயிற்று.
இரண்டு நிமிஷங்கள் கழித்து, "எல்லோரும் வாருங்கள்" என்றழைத்தார்.
திபுதிபுவென்று எல்லோரும் ஓடிவந்து அமர்ந்தார்கள்.
ஞானியார் கேட்டார்:
இந்த மண்டபத்தில் உட்காருந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?
எல்லோரும் விழித்தார்கள்.
நாலைந்து பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள். மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள். கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:
பாருங்கள், இந்தச் சின்ன விஷயத்தில்கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்! இவர்கள் மதியை மூடிய மேகம் எது? "
கேள்வியாளர் கேட்டார்:
இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்; இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? "
ஞானியார் சொன்னார்:
அறியாமையே விதியின் கைப்பாவை.
அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால், விதியும் இல்லை, விதித்தவனும் இல்லை.
கேள்வியார் கேட்டார்:
மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்கு தனி நியமங்கள் இல்லையா?
ஞானியார் சொன்னார்:
இருக்கின்றன!
இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.
இப்படித்தான் வாழவேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்த பெண்தான் எனக்குத் தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்: அவளைக் கிடைக்கவிடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி.
-கண்ணதாசன்.
- உன் வடிவம் ஒவ்வொரு கணமும் மாறிவருகிறது.
- இறப்பு என்பது ஒரு மாற்றம். முக்கியமான மாற்றமே தவிர வேறில்லை.
நீ பிறக்கவுமில்லை... இறக்கவுமில்லை...
வாழ்விருப்பு என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாதது. அது எப்போதும் இங்கு இருக்கும். நீயும் எப்போதும் இருப்பாய். வடிவங்கள் வேறாய் இருக்கலாம். இந்த வாழ்விலும் வடிவங்கள் மாறவே செய்கின்றன.
உன் தாயின் கருப்பையில் நீ இருந்த முதல் நாளில், நீ ஒரு கேள்விக்குறியின் தலைப்புள்ளி அளவு கூடயில்லை. அதை ஒரு புகைப்படம் எடுத்து உன்னிடம் காண்பித்தால் அது நீதான் என்று உனக்குப் புரியவே புரியாது. உண்மையில் அதற்கு முன்னால்....?
உன்னால், உன் தகப்பனாரிடம் நீ இருந்ததை நினைத்துப்பார்க்க முடியுமா? ஒரு படம் வேண்டுமானால் காட்டலாம். உன் வெறும் கண்களால் நீ காணும் அளவு அதைப் பெரிதுபடுத்தினாலும் உன்னால் அதை அடையாளம் காட்ட முடியாது. ஆனால் அது, அதே உயிர்தான். உனக்குள் இப்போது இங்கே துடிக்கும் அதே உயிரின் ஆதாரத் துடிப்புதான்.
உன் வடிவம் ஒவ்வொரு கணமும் மாறிவருகிறது. இறப்பு என்பது ஒரு மாற்றம். முக்கியமான மாற்றமே தவிர வேறில்லை. கொஞ்சம் பெரிய மாற்றம்... ஒரு வேகமான மாற்றம்.
குழந்தையிலிருந்து வாலிப வயது... உன் குழந்தைத்தனம் எப்போது மாறி வாலிபம் வந்தது என்றே உனக்குத் தெரியாது. பிறகு வாலிபன் வயோதிகன் ஆவது மெல்ல மிக மெல்ல நகருவதால், எந்த நாளில், எந்த கிழமையில், எந்த வருடத்தில் உன் வாலிபம் உன்னை விட்டுப் போனது என்றே உன்னால் கூறமுடியாது.
அந்த மாற்றம் மெதுவாக சிறிது சிறிதாக நடக்கும். ஆனால் 'மரணம் ஒரு உடலிலிருந்து வேறு உடலுக்கு பெரிதாக தாவிக் குதித்து செல்லும் மாற்றம்.' ஒரு வடிவிலிருந்து மற்றொரு வடிவிற்கு செல்வதாகும்.
ஆனால் அது உன் முடிவு அல்ல. "நீ பிறக்கவுமில்லை: இறக்கவுமில்லை: நீ எப்போதும் இங்கே உள்ளாய்."
-ஓஷோ
- வறுமையின் வெம்மை தாங்காது தங்கள் ஊரான கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தனர்.
- குடும்பத்தின் நிலையறிந்து உதவிகள் செய்து பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார் ஒரு மாமனிதர்.
"பிள்ளைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் அந்த அம்மா.
இரு பெண்கள் ஒரு சிறுவன் என மூவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.
" 'ஏனம்மா ஆற்றுக்கு அழைத்துச் செல்கிறாய் குளிப்பதற்காகவா?" என்று அதில் ஒரு பெண் குழந்தை துணிந்து கேட்டாள்.
அந்தத் தாய்க்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து நீர் திரண்டு வழிந்தது.'
"என் அருமைக் குழந்தைகளே! உங்கள் பசியெடுக்கும் வயிற்றுக்கு உணவு போட இந்தப் பாழாய்ப்போன தாயால் முடியவில்லை. வறுமையின் கொடுமையோ வாட்டி எடுக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. உங்கள் மூவரையும் ஆற்றில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்திலே தள்ளிவிட்டு, நானும் உங்களுடனேயே சாகப் போகிறேன்'' என்று கதறித் துடித்தாள்.
அதைக் கேட்ட அந்த மூவரில் கேள்வி கேட்ட அதே பெண் குழந்தை, தாயைத் தடுத்து, மனம் மாற்றி, "எப்படியாவது சமாளித்து வாழ்ந்து விடலாம். நீ எடுத்திருக்கும் இந்த முடிவு சரியில்லை. வீட்டுக்கு வா போகலாம்" என்று சொல்லி தாயையும், தன் உடன் பிறப்புகளையும் திருப்பி அழைத்து வந்துவிட்டாள்.
வறுமையின் வெம்மை தாங்காது தங்கள் ஊரான கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தனர். அந்தக் குடும்பத்தின் நிலையறிந்து உதவிகள் செய்து பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார் ஒரு மாமனிதர்.
தாயைத் தடுத்து அழைத்து வந்த அந்தச் சிறுமி, ஒரு நாள் கரூர் வீதியில் நின்று கொண்டு ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி இருந்தாள். அப்போது, அந்த வழியாகச் சென்ற உதவி காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி ஐயர் அந்தச் சிறுமியின் துருதுருப்பையும், துள்ளலையும் கண்டு, "நாடகத்தில் சேர்த்து விடுகிறேன். நடிக்கிறாயாம்மா?" என்று கேட்டார்.
அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு தலையை அசைத்தாள். அவளை அப்போது கும்பகோணம் பகுதியில் நாடகம் நடத்திக்கொண்டிருந்த வேல் நாயர் நாடகக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார்.
எட்டு வயது நிரம்பாத அந்தச் சிறுமிக்கு அங்கே கிடைத்த பாத்திரம் என்ன தெரியுமா? நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றில் தள்ளப்படும் குழந்தைகளிலே ஒருத்தி! அவர்தான் பின்னாளில் இலட்ச ரூபாய் பெற்ற கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட நடிகை கே.பி. சுந்தராம்பாள்!
கே.பி. சுந்தராம்பாள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றால் அதில் அப்படியே பொறுந்திவிடும் இயல்பு கொண்டவர். அவரை, ஔவையாக காரைக்கால் அம்மையாக கௌந்தி அடிகளாக பக்த நந்தனாராகத்தான் காணமுடியுமே தவிர ஒரு நடிகையாகத் திரையில் காணவே முடியாது.
திரைக் கலைத்துறையில் நடிப்புத் துறையில் இருந்து தமிழக சட்டப்பேரவை அமைப்புக்குள் நுழைந்த முதல் நபரும் கே.பி.சுந்தராம்பாள் தான்!
-பாண்டியன் சுந்தரம்
- திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
- கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம்.10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும்.
ஒன்பது நவக்கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணைபடி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்.
1. திங்களூர் (சந்திரன்): - காலை 6 மணி
நவக்கிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும் வேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
2. ஆலங்குடி (குரு): - காலை 7.30 மணி
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம். காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்.
3. திருநாகேஸ்வரம் (ராகு): - காலை 9.30 மணி
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம்.10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
4. சூரியனார் கோவில் (சூரியன்): - மதியம் 11.00 மணி
நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவக்கிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
5. கஞ்சனூர் (சுக்கிரன்): - மதியம் 12.15
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15 மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
6. வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்): - மாலை 4 மணி
நவக்கிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
7. திருவெண்காடு (புதன்): - மாலை 5.15 மணி
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00 மணிக்கு கிளம்ப வேண்டும்.
8. கீழ்பெரும்பள்ளம் (கேது): - மாலை 6.15 மணி
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். 45 நிமிஷ நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00 மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்.
9. திருநள்ளாறு (சனி): - இரவு 8.00 மணி
நவக்கிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.
9.30 மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு புறப்படலாம்.
- உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது. அது தற்போது இயலாத காரியமும் கூட.
- உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும், இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.
இந்த "சாமி'' யார்... எந்த ஊர்... என்ன பேர்...? என்று அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது.
பல வருடங்களுக்கு முன்னால், சின்னக்குப்பம் கிராமத்துக்கு வந்தவர், ஊருக்கு வெளியே குடிசை போட்டு தனியாக வசிக்கிறார்.
ஊருக்குள் அவராக வரமாட்டார். விவசாய வேலைகளுக்கு கிராம மக்கள் அவரை வேலைக்கு கூப்பிடுவர்.
ஆனால், செய்த வேலைக்காக பணமோ பொருளோ வாங்கிக் கொள்ளமாட்டார். உணவு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார்.
எனவே, பெயரில்லாத அவரை "சாமி" என்று பெயரிட்டு அழைக்கவும் தொடங்கினர்.
இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவோடு அந்த "சாமியை'ப் பார்க்க வந்தான் முத்து.
அவன் அவருடைய குடிசையில் நுழைந்தபோது, சாமி ஆனந்தமாய் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தார்.
அவருடைய மாற்று உடை ஒன்றைத்தவிர குடிசையில் வேறு எந்தப்பொருளும் இல்லை.
ஆள் நுழையும் சப்தம் கேட்டு,
"வா, முத்து வா'' என்று அழைத்தார்.
"சாமி, நேற்று நான் பட்டினம் போயிருந்தேன்.
அங்கே என் உறவினர் ஒருவர் இறக்கும் தருவாயில் பட்ட கஷ்டங்ளைப் பார்த்தேன்.
அதிலிருந்து என் மனம் கலவரமடைந்திருக்கிறது.
நான் இறக்கும்போது அது போன்ற கஷ்டங்ளை அனுபவிக்க விரும்பவில்லை. ஆனந்தமாக இறக்க வேண்டும்.
அதற்கு வழி ஏதேனும் இருக்கிறதா..? சொல்லுங்க சாமி,'' என்றான்.
"அது மிகவும் எளிமையானது, ஆனால், சுலபமானதல்ல.''
"உன்னிடம் எத்தனை மேலாடைகள் உள்ளன''...?
"இருபதுக்கும் மேல் இருக்கும்.''
அதில் மிகப்பழைய, விலை மிகக்குறைவான ஒன்றை எடுத்து இப்போது நான் செய்வது போல் செய்துவிட்டு நாளை வா என்றவர்,
தன் மேலாடையைக் கழற்றித் தூக்கியெறிந்தார்.
அதனை அவன் கண் எதிரே தீயிட்டுக் கொளுத்தினார். அதைப் பார்த்து சிரித்தார்.
"இது என்ன பெரிய காரியம்'' என்று நினைத்த முத்து, வீட்டுக்கு வந்ததும் தன்னிடம் இருந்த பத்து வருட பழைய சட்டை ஒன்றை எடுத்தான்.
அது பல இடங்களில் நைந்து கூட போயிருந்தது.
அதனை தூக்கி எறியலாம் என்று நினைத்தபோது, அது அவன் பாட்டி அவனது பிறந்த நாளுக்குக் கொடுத்த பரிசு என்பது நினைவுக்கு வந்தது. அதை வைத்து விட்டான்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆடையை எடுக்கும்போதும் ஒவ்வொரு ஞாபகம்...
மறுநாள் சாமியின் கால்களில் விழுந்தான்.
"அய்யா...., ஒரு பழைய ஆடையைக்கூட என்னால் தூக்கி எறிய முடியவில்லை. என்னை எவ்வாறேனும் காத்தருளுங்கள். இதற்காக என் குடும்பத்தைவிட்டு உங்களோடு வந்து விடவும் நான் சித்தமாயிருக்கிறேன்,'' என்றான்.
"ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத உன்னால், இந்த உலக ஆசைகள் எனும் ஆடையை எவ்வாறு சுலபமாக கழற்றிவிட முடியும்''..?
"பசித்திரு,
தனித்திரு,
விழித்திரு''
இதுவே உனக்கான என் உபதேசம்.
பசித்திரு என்றால் உன் ஆன்மிகப்பசியினை வளர்த்துக்கொள் என்று அர்த்தம்.
உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது. அது தற்போது இயலாத காரியமும் கூட. உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும், இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.
அதுவே தனித்திரு என்பதன் பொருள்.
"ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத நிலையில் நான் உள்ளேன். இது போன்று இன்னும் எத்தனை எத்தனை கர்மவினையின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறேனோ' என்ற விழிப்புணர்வுடன் வாழ்.
இதுவே விழித்திரு என்பதன் பொருள்.
இந்த மூன்று உபதேசத்தினை கடைபிடி. மற்றவை தானே நிகழும்,'' என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தார்.
அந்த சாமி தான் வள்ளலார் பெருமகனார்.
- நெல்லை கேசவன்
- ஏராள காரணங்கள் என்னைப் பேசவிடாமல் வைத்திருக்க...
- நேற்றிரவு நண்பன் அழைத்தான் அலைபேசியில்..
பெண்ணுக்கு செய்த
முறைமாமன் சீரில்
மூன்று கிராம்
குறைந்ததற்கு
மூக்கு சிந்தி அழுது போன
மூத்தவள்
இன்று வரை -
பேசவில்லை
சீமந்தக்காப்பு
சின்னதாய் இருந்தது கண்டு
கோபித்துக்கொண்ட
சின்னவள்
இன்றுவரை -
பேசவில்லை
சின்னமச்சானுக்கு கொடுத்த
சீர்வரிசைத்தட்டில்
இருந்த
பட்டுவேட்டியின்
விலை பார்த்து
விரக்தி சிரிப்போடு போன
பெரிய மச்சான்
இன்றுவரை -
பேசவில்லை
பிறந்த அன்றே
தன் குழந்தையை
பார்க்க வரவில்லை என்று
கோபித்துக்கொண்ட
பெரிய தம்பியும்
இரண்டு முறை
அழைத்தும்
அலைபேசியை
எடுக்காத காரணஞ்சொல்லி
சின்னதம்பியும்
இன்றுவரை -
பேசுவதில்லை
மருமகளுடனான
சண்டையில்
நான்
மனைவிபக்கமே இருப்பதாக
ஒரு காரணஞ்சொல்லி
பெற்றவளும்
இன்றுவரை -
பேசுவதில்லை
அழைப்பிதழ் கொடுக்க
நேரில் வராமல்
அலைபேசியில் மட்டுமே
தகவல் சொல்லி
அழைத்த
அவமானம் தாங்காமல்
உறவுக்காரர்கள் பலரிடம்
நானும் -
பேசுவதில்லை....
இப்படியாக...
என்னைச் சுற்றியே
ஏராள காரணங்கள்
என்னைப்
பேசவிடாமல் வைத்திருக்க...
நேற்றிரவு
நண்பன் அழைத்தான்
அலைபேசியில்..
முப்பதாண்டுகளுக்கு முன்
பிரிந்துபோன
நண்பர்கள் எல்லாம்
கூடிப்பேச
ஏற்பாடு செய்திருப்பதாக...
இதோ நான்-
கிளம்பிக்கொண்டிருக்கிறேன்...!
-அழ. இரஜினிகாந்தன்
- முதல் படத்திலேயே தமிழகத்தையே தன் வசப்படுத்தியவர் அவர் மட்டும்தான்.
- முதல் மரியாதையில் அவரது இயல்பான நடிப்பு இப்போது பார்த்தாலும் ஆச்சரியத்தைத் தருகிறது.
சிவாஜி மகா கலைஞன். நடிப்பிற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மேடை நாடகமெனும் விருட்சத்திலிருந்து சினிமாவில் விழுந்த கனி. சிவாஜியின் திரை வாழ்வு நான்கு பரிமாணங்கள் கொண்டது. சிவபெருமானுக்கும், அப்பருக்கும் கூட உருவம் தந்து இருபதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த சைவ - தமிழ் எழுச்சி மரபிற்கு அடையாளமாக இருந்தார்.
அதே தருணத்தில் கலைஞரின் வசனங்களைத் தொடர்ந்து பேசி தமிழ் கலாச்சார மீட்டுருவாக்கத்தின் முகமாக இருந்தார். கட்டபொம்மன், வ.உ.சி போன்ற பல ஆளுமைகளை தன் நடிப்பால் உணர வைத்து இந்திய தேசியத்தின் தமிழ் முகமாகவும் இருந்தார். இப்படி வெவ்வேறு பரிமாணங்களில் இங்கு உருவாகி வந்த பல்வேறு கலாச்சார மீட்டுருவாக்க அலைகளின் வெகுஜன முகமாக அவர்தான் இருந்தார்.

பீம்சிங், கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் உருவாக்கிய தமிழ் நிலத்தின் கூட்டுக் குடுப்பக் கலாச்சாரப் பிரதிநிதியாகவும் , பல்வேறு இயக்குநர்கள் உருவாக்கிய பெண்களைக் கவர்கிற அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காதலனாகவும் திகழ்ந்தார். ராஜபார்ட் ரங்கதுரை, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களின் வழியாக கலைஞர்களின் உடல் மொழிகளை அச்சு அசல் அப்படியே பிரதியெடுத்து அந்த அனுபவத்தைத் திரையில் கடத்தினார்.
ஈகோவும், பாசமும் ஒருங்கே நிரம்பிய மேல்தட்டு மனிதர்களின் விசித்திரமான குணச்சித்திரத்தை திரையில் (கௌரவம், பார் மகளே பார் ) அற்புதமாகப் பிரதிபலித்தார் அவருடைய சோதனைக்காலம் எழுபதுகளின் பின்பகுதியில் தொடங்கி தொண்ணூறுகள் வரை தொடர்ந்தது.
ராதா, அம்பிகாவையெல்லாம் தொந்தியோடு அணைத்தபடி அவர் ஆடிய ஆட்டம் உண்மையில் நமக்கான சோதனைக் காலம்.. ஆனால் அவருடைய மிக முக்கியமான இரு படங்களும் இந்தக் காலகட்டத்தில்தான் வந்தன. மிகை நடிப்பு என்று அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் மட்டுமே காரணமில்லை.அவரால் எந்த விதமான பாவத்திலும் நடிக்க முடியும். ஆனால் அவர் காலகட்டத்தில் திரையுலகின் சூழல் அதுதான்.
முதல் மரியாதையில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு இப்போது பார்த்தாலும் ஆச்சர்யத்தைத் தருகிறது. கத்தி மேல் நடக்கிற மாதிரியான பாத்திரப் படைப்பு அவருடையது. 'ப்பூ' வென்று ஊதித் தள்ளியிருப்பார். தேவர் மகனில் இடைவேளை வரை மிகச் சிறந்த நடிகரான கமலை கவனிக்கவே விடாமல் அவரே என் கண்களை ஆக்ரமித்திருந்தார். அந்த அளவுக்கு பெரிய தேவராகவே வாழ்ந்திருப்பார்.

கமலுக்கு வாய்த்த இயக்குநர்களும், சூழலும் , காலகட்டமும் அவருக்கு வாய்க்கவில்லை. ஒருவேளை வாய்த்திருந்தால் தமிழில் உருவான சர்வதேசக் கலைஞனாக அவர் மலர்ந்திருக்க முடியும். தான் நடித்த பல படங்களின் காட்சிகளை நண்பர்களிடம் வேறொரு பாணியில் வெகு இயல்பாக நடித்துக் காட்டியிருக்கிறார். கமல் சொன்னதுதான் உண்மை 'ஒரு சிங்கத்துக்கு சைவச் சாப்பாடு போட்டுக் கொன்று விட்டோம். தமிழில் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிற எந்த நடிகரும் முதல் படத்திலேயே மக்களின் மனங்களை வென்றவர்களில்லை.
எம்.ஜி.ஆர், ஜெமினி, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்று அத்தனை பேருமே மெல்ல மெல்ல வளர்ந்து மக்கள் அபிமானத்தைப் பெற்றவர்கள்தாம். ஆனால் ஒரே விதிவிலக்கு சிவாஜி மட்டும்தான். முதல் படத்திலேயே தமிழகத்தையே தன் வசப்படுத்தியவர் அவர் மட்டும்தான். அவரை பிரான்ஸ்காரன் மிகச்சரியாக அடையாளம் கண்டிருக்கிறான். தேசிய விருது வழங்கும் கமிட்டிக்கு அடையாளம் தெரியவில்லை என்பது மிகப்பெரிய சோகம்.
அவர் தோற்ற ஒரே இடம் அரசியல்தான். குடும்ப வாழ்க்கை உட்பட மற்ற அனைத்திலும் அவர் வெற்றிகரமான மனிதர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை இழந்த பிறகும் கூட திரையுலகிலும், சமூகத்திலும் அவர் மிகப் பெரிய சக்கர்வர்த்திக்கான தோரணையோடுதான் வலம் வந்தார். அந்த கம்பீரம் குறையவே இல்லை.அதுமாதிரியான மரியாதை இனி ஒருவருக்கு வாய்க்காது.
என் அம்மா, சித்திகள், என்று எல்லோரும் அவருடைய ரசிகைகள். என் வயதில் இருக்கிற எல்லோருடைய அம்மாக்களின் நினைவிலிருந்து சிவாஜியைப் பிரிப்பது சுலபமில்லை. சிவாஜி வெறுமனே படங்களின் கதாநாயகன் இல்லை. தமிழர்களின் பெருமிதம். ஒரு தலைமுறையின் கலைஞன். அவருடைய புகழ் நிலைத்து நிற்கட்டும்.
-மானசீகன்
- பயம், மகிழ்ச்சி, கோபம், நெகிழ்ச்சி, இரக்கம் என எல்லா உணர்வுகளும் பிறப்பது மூளையில்தான். சிந்தனைகளும் பிறப்பது மூளையில்தான்.
- அறிவுப்பூர்வமான செயல்பாடுகளை மட்டும் நாம் மூளையின் செயலாகச் சொல்கிறோம். உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளுக்கு இதயத்தைக் குறியீடாக்குகிறோம்.
மனம் என்பதற்கு இன்னொரு சொல்லாகவே இதயம் என்ற சொல் பயன்பட்டு வருகிறது. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தைத் தொலைத்துவிட்டேன் என்றுதான் கவிஞர்கள் எழுதுகிறார்கள். அங்கு தொலைந்தது மனம்தான். இரக்கப்படுவது மனதுதான். ஆனால் இரக்கமில்லாதவனிடம் 'இதயமே இல்லையா உனக்கு?' என்று கேட்கிறோம்.
அதே போல் உலகெங்கிலும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எமோஜி ஹார்டீன் அதாவது இதயம் ஆகும். சமூக ஊடகங்களில் இப்போதெல்லாம் வெறும் நீலநிற லைக்கைவிட சிகப்பு நிற இதயக் குறியீடே பெரிதும் விரும்பப்படுகிறது. அதாவது உணர்வுகளை வெளிப்படுத்துவது இதயம்தான் என்னும் பொருளில் இதயத்தின் அடையாளமாக ஹார்டீன் எமோஜி பயன்படுத்தப்படுகிறது.
நமது இதயம் அந்த ஹார்டீன் படம் போல் அழகாக இருக்காது என்பது வேறு விஷயம். உண்மையிலேயே உணர்வுகளைத் தோற்றுவிப்பது இதயம் அல்ல. நமது மனதின் இருப்பிடமான மூளைதான் அது.
பயம், மகிழ்ச்சி, கோபம், நெகிழ்ச்சி, இரக்கம் என எல்லா உணர்வுகளும் பிறப்பது மூளையில்தான். சிந்தனைகளும் பிறப்பது மூளையில்தான். ஆனாலும் அறிவுப்பூர்வமான செயல்பாடுகளை மட்டும் நாம் மூளையின் செயலாகச் சொல்கிறோம். உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளுக்கு இதயத்தைக் குறியீடாக்குகிறோம்.
உண்மையில் இரண்டும் மூளையில்தான் நடக்கிறது. ஆனாலும் மனதில் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் முக்கிய உறுப்பாகவும் அவ்வுணர்வுகளால் பாதிக்கப்படும் பிரதான உறுப்பாகவும் இருதயமே இருக்கிறது.
பயப்படுவது மூளையாக இருந்தாலும் அந்த பயத்தால் அதிகமாகத் துடிப்பது இதயமாகத்தான் இருக்கிறது. அதே போல் பதட்டம் அதிகமாகும் போது இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது . இதுவும் இருதயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆக மனதில் ஏற்படும் மாறுதல்கள் இதயத்தில் வெளிப்படுகிறது.
இது எதனால் நடைபெறுகிறது? நம்முடைய உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளையும் நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. அதே போல் இதயத்தையும் நரம்புகள் கட்டுப்படுத்துகின்றன. தன்னிச்சையாக இல்லாமல் அனிச்சையாக கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம் இதனைச் செய்கிறது. பதற்றம் அடையும் போது மூளையிலிருந்து இருதயத்துக்குத் தகவல்கள் செல்கின்றன.
ஏன் பதட்டப்படும் போது இருதயம் அதிகமாகத் துடிக்க வேண்டும்? பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு மனிதனுக்கு இருந்த இரண்டே பிரச்சனைகள்தான். ஒன்று உணவு தேடுதல், இன்னொன்று உணவாகிவிடாமல் தப்பித்தல். இந்த இரண்டுக்கும் அவன் ஓட வேண்டும். அதற்கு அவனது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக இருதயம் வேகமாகத் துடிக்கிறது. அதற்கு அட்ரீனலின் என்ற வேதியல் சுரப்பு சுரக்கும்.
அந்தக் காலத்தில் ஈ.எம்.ஐ பிரச்சனை, போட்டித் தேர்வுகள் , மாதாந்திர டார்கெட் என வேறு எந்த டென்ஷனும் கிடையாது. ஒரே பிரச்சனையான மிருகங்களின் தாக்குதலுக்கு ஓட வேண்டும். அவ்வளவுதான்.
ஆனால் தற்காலத்தின் நெருக்கடிகள் உடல் சார்ந்தவை அல்ல. பெரிதும் மனம் சார்ந்தவை. ஆனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போதும் நம் உடல் ஆதி மனிதனின் உடல் போன்றே எதிர்வினை ஆற்றுகிறது. ஆகவேதான் மன அழுத்தத்தினால் இருதயமும் பாதிக்கப்படுகிறது.
அதிகமாகக் கவலை பதட்டப்படுவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம். அதே போல எல்லாமே மிகக் கச்சிதமாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஆளுமை கொண்டவர்களுக்கும் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதீதக் கவலை மற்றும் பதற்றத்தினால் மாரடைப்பு மட்டுமின்றி இருதயத் துடிப்பு தாறுமாறாகப் போகும் arrhythmia பிரச்சனைகளும் ஏற்படலாம்.
நேரடியாக மட்டுமின்றி மன அழுத்தத்தினால் தூக்கமின்மை ஏற்படும், உணவுக்கட்டுப்பாடின்றி உண்பார்கள் சிலர், காஃபீ டீ அதிகம் குடிப்பது, சிகரெட் மது போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு எனப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்துமே நேரடியாகவோ மறைமுகமாகவோ இருதயத்தைப் பாதிக்கக் கூடியவை.
மனஅழுத்தத்தினால் இருதயம் பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் சில பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. உடற்பயிற்சி மிக முக்கியம். மனதுக்கும் நல்லது இருதயத்துக்கும் நல்லது.
2. தூக்கமும் மிக முக முக்கியம். நீண்ட நேரம் கண்விழித்திருப்பது இதயத்திற்குக் கெடுதி தருவது.
3. ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரம் உங்களுக்கே உங்களுக்காக.
4. சின்ன விஷயங்களுக்காக பெரிதாகக் கவலைப்படாதீர்கள்.
5. சிகரெட், மது போன்ற போதைப்பொருட்களை அளவுக்கு அதிகமாக உபயோகிக்காதீர்கள்.
6. மன அழுத்தம் இருந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்காதீர்கள்.
-டாக்டர் ஜி. ராமானுஜம்
- இன்றைக்கு என்ன வேண்டும் என்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்ற இயற்கையின் நியதியை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்துவிட வேண்டும்.
நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்து சிலவற்றைச் செய்யலாம் சிலவற்றைச் செய்யக் கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும் தடை விதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்கு பொறுத்தமாக இருந்திருக்கும்.
நாம் இன்னும் அதிகமாக ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில் இதைச் செய், அதைச் செய்யாதே என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது 'சொர்க்கம், நரகம்' என்ற இரண்டு கற்பனைகளே.
நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்லதை கொடுப்பான், தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள்.
விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுவரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?
இன்றைக்கு என்ன வேண்டும் என்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்ற இயற்கையின் நியதியை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்துவிட வேண்டும்.
இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு தான் தயாரா? என்ற உண்மையை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம்.
செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும் உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால், ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இயங்கும் போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான், தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம்.
-வேதாத்திரி மகரிஷி.
- ஆண்களுக்கு வெள்ளை வேட்டி சட்டை என்று ஒரு மரபு இருந்தது.
- ஆண்கள் அந்தகாலத்தில் வெள்ளைநிற ஆடைகளைத் தவிர வேறு நிற ஆடைகள் உடுத்துகிற பழக்கமில்லை.
எல்லார் வீடுகளிலும் நவராத்திரி பெருவிழா, நல்ல மகிழ்ச்சியோடும் கலகலப்பாகவும், குறைந்தபட்சம் சுண்டலோடும் கொண்டாடப்படும்.
"வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி"
என்பது பாரதியின் கனவு.
வீடு தோறும் கலையின் விளக்கம் என்றால், ஒரு சங்கீத கச்சேரிக்கு போய்தான் சங்கீத கச்சேரி கேக்கணும்.. ஒரு டான்ஸ் கச்சேரிக்கு போய் தான் டான்ஸ் பார்க்கணும்.. அப்படி என்கிறதையெல்லாம் தாண்டி ஒவ்வொருத்தருடைய வீட்டிலும் ஆடல் பாடல் இதெல்லாம் நிகழுனும் என்பதைத்தான் கலையின் விளக்கம் என்று பாரதி கண்டார்.
டான்ஸ் என்கிறது யாரோ மேடையில் ஆடி, போக்கஸ் லைட்டு வச்சு பார்க்கிறது என்பதாக இருக்கக்கூடாது.
நம்ம ஆடணும்.. அவங்க அவங்க வீட்டுல எல்லாரும் மகிழ்சியா ஆடணும், பாடணும்.. அது தான் நவராத்திரி.
எல்லாரும் ஆடிப்பாடி மங்களகரமாக இருக்கிற கலர்புல் விழா தான் நவராத்திரி.
பெண்கள் எங்கு சம்பந்தப்பட்டாலுமே அங்கே வண்ணம் வந்திரும்.. கலர் வந்துடும்..
ஆண்களுக்கு வெள்ளை வேட்டி சட்டை என்று ஒரு மரபு இருந்தது. ஆண்கள் அந்தகாலத்தில் வெள்ளைநிற ஆடைகளைத் தவிர வேறு நிற ஆடைகள் உடுத்துகிற பழக்கமில்லை.
அந்த காலத்துல பெண்களுக்கு வெள்ளைநிற உடை கொடுக்க மாட்டார்கள். அதை வேறு மாதிரி நினைப்பாங்க.
ஏன் வெள்ளை என்பதை ஒற்றை நிறமாகவும் மற்றதையெல்லாம் வண்ணமாக கருதுறாங்க?
பெண்களுக்கு வண்ணங்கள், ஆண்களுக்கு வெள்ளையுமாக வச்சிருக்காங்களே ஏன்?
வெண்மை என்பது ஒற்றை நிறமில்எலை. அது எல்லா நிறங்களும் ஒடுங்கிய நிலை. அதை பிரித்தால் ஏழு வண்ணங்களாக விரிவடையும்.
சிவன் என்பது ஒடுக்கம்.
அம்பிகை என்பது விரிவு.
ஒடுக்கம் என்பது சிவனாகவும், விரிவு என்பது அம்பிகையாவும் கொண்டாடப்படுகிறது.
இந்த பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறது?
எல்லாம் ஒன்றில் ஒடுங்குது, பின்பு விரியுது. திரும்பி எல்லாம் ஒன்னுல ஒடுங்குது, மீண்டும் அதிலிருந்து விரியுது. இப்படித்தான் பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
"ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து
இவ்வுலகு எங்குமாய் நின்றாள்"
என அம்பிகையைப் பாடுகிறார் அமிராமி பட்டர்.
அப்ப கடவுள் என்பது கூட ஒடுங்கி ஒற்றை நிலையில் நின்றால் அது சிவம். அது பலவாய் விருத்தி அடைந்தால் அம்பிகை.
எப்படி ஒரு வேடிக்கையான கணக்கை வைத்துள்ளார்கள் பாருங்கள்..
ஒன்பது நாள் நவராத்திரி
ஒரேஒரு நாள் சிவராத்திரி
இதுல என்ன கணக்கு இருக்கு? கொஞ்சம் அறிவியல் பூர்வமாக யோசிப்போம்..
ஒன்று என்பது எண்ணிக்கையின் தொடக்கம்.
ஒன்பது என்பது எண்ணிக்கையின் முடிவு. சரியாகச் சொன்னால் முடிவில்லாதது எனலாம்.
ஒன்று ஒன்பது ஆதல் என்பது சிவராத்திரி நவராத்திரியாக ஆதல்.
ஒரு அவரை விதையை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதற்குள் எத்தனை விதைகள் இருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியுமா?
நீங்கள் ஒரு அவரை விதையை ஆடி மாதத்தில் நட்டு வைத்தால், அது முளைத்து துளிர்விட்டு கொடியாகி பூத்து ஆயிரக்கணக்கான காய்களை காய்க்கும். அந்த காய்களில் லட்சக்கணக்கான விதைகள் இருக்கும்.
ஒரு விதையை பூமியில் போட்டால் ஒரு லட்சம் விதை வரும்.. ஒரு கோடி விதை கூட வரும். இப்படி பெருகிகொண்டு போய்கிட்டே இருக்கும்.
வித்து என்பது சிவம். அது முளைத்து எண்ணிலடங்கா காய்களைத் தருவது என்பது அம்பிகை.
ஒன்றாக இருத்தல் சிவராத்திரி,
ஒன்பதாக ஆகுதல் நவராத்திரி.
ஒன்றாக இருக்கிற விதையை ஒன்பதாக ஆக்குவது, சிவனை சீவனாக ஆக்குவது தான் நவராத்திரி.
சிவன் மூலப்பொருள். அதை சீவனாக ஆக்குகிறாள் அம்பிகை. அது ஒரு மாயை.
ஒரு விதையை பூமியில் போட்டால் அது ஒன்பது லட்சம் விதையாக மாறும். இதைவிட பெரிய மாயை என்ன வேணும்?
இந்த மாயைக்கு பெயர் மகா மாயா. இதைத்தான் மகமாயி என்று அழைக்கிறார்கள். அவள்தான் அம்பிகை.
அவள் மாயையினால் ஒன்றை பலமாக ஆக்குகிறாள்.
ஒரு சிவனை பல கோடி சீவன்களாக மாற்றுகிறாள் மகா மாயா.
இதற்காக கொண்டாடப்படும் விழாதான் நவராத்திரி.
அபிவிருத்தியாதல்.. ஒன்றாக இருந்தது பலவாக மாறி இந்த உலகத்தை வண்ணமயப்படுத்துதல்.. அழகுப்படுத்துதல்.. இது தான் நவராத்திரியின் தத்துவம்.
அது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என.. கல்வி, செல்வம், வீரம் என.. இவற்றோடு வெற்றி விழாவான விஜயதசமியும் சேர்த்து கொண்டாடுகிற பெரிய திருவிழாவாக மாறி உள்ளது.
புராணக்கதைகள் நிறைய சொல்லுவோம். குழந்தை மனம் கொண்டவர்களுக்கு தான் இந்த புராணக்கதைகள் எல்லாம்.
எருமை வடிவத்தில் ஒரு அரக்கன் வந்தான் என்பார்கள். எருமை வடிவத்தில் ஒருவன் இருக்க முடியுமா..? எருமை மாதிரி இருக்க முடியும்.
மகிஷாசுரன் அப்படின்னு அவனுக்கு பேரு. ஏன் அப்படி சொன்னார்கள்?
எருமை மாடு சோம்பல் மிகுந்தது. நமக்குள் இருக்கிற சோம்பலைத்தான் எருமைத்தனத்துடன் ஒப்பிட்டு அப்படி கூறினார்கள்.
சோம்பலுக்கு தமோ குணம் என்று பெயர். அதை சகித்துக்கொண்டு வாழ முடியுமா?
முடியாது.
சோம்பலை வீழ்த்தினால் தான் நாம் வாழ்வில் முன்னேற முடியும்.
அப்போ அதனை வீழ்த்தணும். அதை எது வீழ்த்தும் என்றால் மனோ பலம் தான் வீழ்த்தும்.
துர்க்கை என்பது மன உறுதி.
துர்க்கம் என்றால் அரண் என்று பொருள்.
துர்க்கா என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
கோட்டை மதில் சுவருக்கு துர்க்கம் என்று பெயர். அதில் ஒரு தேவதையை வைப்பார்கள். பாதுகாப்புக்கு காவல் தேவதையாக வைப்பார்கள். அதுக்குதான் துர்க்கா என்று பெயர். துர்க்கத்தில் வைக்கப்படுகிற தேவதை துர்க்கா.
இந்த தேவதை மன உறுதி உடையவள்.
மன உறுதிக்கு அடையாளம் துர்க்கை.
அது எதை வெல்லும்?
நமக்குள் இருக்கிற சோம்பல் என்கிற மகிஷாசுர அரக்கனைக் கொல்லும்.
மன உறுதி சோம்பலை வெல்லும் என்கிற உருவகத்தைதான் இந்த புராணக்கதை காட்டுகிறது.
சுகி சிவம் சொற்பொழிவிலிருந்து தொகுத்தவர் கோ.வசந்தராஜ்






