என் மலர்
மற்றவை
- யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள் தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள்.
- அவர்கள் தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவார்கள் என்றார் வேதாத்திரி மகிரிஷி.
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்...
அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா.. மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது என்று கேட்டார்.
அதற்கு மகிரிஷி பதிலளிக்கையில், "யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள் தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.
உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்.
-உழவன் மகன்
- சிவன் மேல் தீராத பற்றுகொண்ட ராஜராஜன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும் திட்டமிட்டான்.
- ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.
எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்.
கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது.
அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன்.
ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும்.
அந்த ராஜராஜன் இதில்தான் உருவானான். அக்காலம் பாண்டியர், சிங்களர் இன்னும் சாளுக்கிய மன்னர்கள் என பல அச்சுறுத்தல் இருந்த நேரம் ராஜராஜன் முடிசூடினான்.
அவனிடம் அன்றே எல்லா படையும் இருந்தது, கப்பல் படை இருந்தது, நாவாய் படை என்று அதற்கு பெயர், இன்று உலகம் கொண்டாடும் நேவி எனும் வார்த்தை அதிலிருந்தே வந்தது.
சோழநாட்டை காக்கவும், சைவ சமயத்தை பரப்பவும் பெரும் போர்களை அவன் தொடுத்தான். பாண்டிய நாடு முதல் சேரநாடு வரை அவன் கட்டுபாட்டில் இருந்தது.
சேரநாட்டில் காந்தளூர்சாலை என்றொரு இடம் இருந்திருக்கின்றது. அங்கு பகைவரின் கப்பல்கள் எல்லாம் வந்திருக்கின்றன, அங்கு சென்று அந்த கடற்கலன்களை எல்லாம் அழித்திருக்கின்றான், இது அவனது மெய்கீர்த்தியில் இருக்கின்றது.
பாண்டியரும் சிங்களரும் சேர்ந்து தொடுக்கும் போர் அபாயத்தில் இருந்து தப்பிக்க பெரும் கடற்படையுடன் சிங்கள நாட்டைதாக்கி இருக்கின்றான், அநுராதாபுரம் எனும் சிங்கள நகரம் அவனால் நொறுக்கபட்டிருக்கின்றது.
வடக்கே கலிங்கம் வரை அவன் கைபற்றியிருக்கின்றான்.
ராஜராஜன் காலம் புத்த மதத்தை வீழ்த்தி சைவ மதம் செழித்த காலம், தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் சைவ மதம் வளர்த்திருக்கின்றான்.
இன்றைய இந்தோனேஷியா, மலேசியா, கம்போடியா நாடுகள் அடங்கிய அன்றைய ஸிரி விஜயா நாட்டின் மீதும் தன் மகன் தலைமையில் பெரும் போர் புரிந்துவென்று வெற்றிகொடி நாட்டி, சைவ மதம் வளர்த்திருக்கின்றான்.
அவனது கடற்கலன்களும், அவனின் போர்முறையும் அவனுக்கு அப்படி பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கின்றன.
உலகில் தோல்விபெறாத அரசர்கள் வரிசையில் ராஜராஜனின் பெயரும் உண்டு, ஆனால் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர், சீசர் என வேறு வரிசை வைத்திருப்பார்கள், வைக்கட்டும்.
சிவன் மேல் தீராத பற்றுகொண்ட ராஜராஜன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும் திட்டமிட்டான்.
ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.
பல நாடுகளில் திரட்டபட்ட செல்வமும், பல மன்னர்கள் கொடுத்த வரியும், அவன் அடிமைகளாக பிடித்த எதிரி நாட்டு வீரர்களும் அதற்கு பயன்பட்டன.
காலத்தை வென்று நிற்கும் கற்காவியமான பெரிய கோவில் அவனால்தான் கட்டபட்டது, முழுக்க முழுக்க கல்லான் ஆன கோவில் அது.
கற்தூண்கள் உச்சியில் பாரம் இல்லையென்றால் விலகிவிடும் என்பதற்காக பெரும் கல்லை உச்சியில் நிறுத்தி , ஆலயத்தை நிலைபெற்றிருக்க செய்வதில் நிற்கினது அவனின் கட்டட கலை அறிவு.
ஆலய பாதுகாப்பும் அதுதான், எவனாவது அழிக்க முயன்றால் ஒரு தூணை தொட்டாலும் முடிந்தது விஷயம்.
அதாவது அந்நிய நாட்டு படைகள் முதலில் தாக்குவது அந்த ஆலயத்தைத்தான், காரணம் அளவுக்கு அதிகமான செல்வம் அங்குதான் சேர்ந்திருக்கும்.
அதனை எண்ணித்தான், தன் காலத்திற்கு பின்பு என்றாவது எவனாவது அதனை அபகரிக்கும் எண்ணத்தில் வந்தால் அவன் அழிந்து போகவேண்டும் என்று சில வரங்களை அவன் ஆலயத்தில் நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது.
அப்படி தன் மூச்சே அந்த ஆலயம் என வாழ்ந்திருக்கின்றான் ராஜ ராஜன்.
ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், தமிழர்களின் தனிபெரும் அரசன் ராஜராஜன், தமிழர்களின் தனிபெரும் அடையாளம் அந்த கோவில்.
வரலாற்றில் பெரும் அடையாளம் மிக்கவனும், உலகின் மிக வலுவான கப்பல் படையினை முதலில் நிறுவியவனும், தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் ஆன அந்த வீர தமிழனுக்கு பிறந்தநாள் மரியாதைகளை செலுத்துவதில் ஒவ்வொரு தமிழனும் பெருமையடைகின்றான்.
-சுந்தர் நத்தமன்
- மூத்த குடிமக்கள் அதிகம் பேச வேண்டும், ஏனெனில் நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழி இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.
- மூத்த குடிமக்களிடம் அதிகம் பேசினால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.
வயதானவர்கள் பொதுவாக தொண தொண என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அது நமக்கு சற்றே அசௌகரியம் உண்டாக்கும். ஆனால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா.?
அந்த தொண தொண பேச்சு, அவர்களைக் காப்பாற்ற, அவர்களை அறியாமலேயே இயற்கை கையாளும் ஒரு வழி. ஆம்.. வயதாகும்போது அதிகம் பேசுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மூத்த குடிமக்கள் அதிகம் பேச வேண்டும், ஏனெனில் நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழி இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.
மூத்த குடிமக்களிடம் அதிகம் பேசினால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன. முதலாவதாக பேசுவது மூளையை செயல்படுத்துகிறது மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைக்கிறது, ஏனெனில் மொழியும் சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன, பேசாத மூத்த குடிமக்களுக்கு நினைவாற்றல் குறையும் வாய்ப்புகள் அதிகம்.
அடுத்து, பேசுவது மன அழுத்தத்தை நீக்குகிறது, மன நோய்களைத் தவிர்க்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அடிக்கடி ஒன்றும் சொல்லாமல் நெஞ்சில் புதைத்து நம்மையே திணறடித்துக் கொள்கிறோம். உண்மைதான்! அதனால் மூத்தவர்கள் அதிகம் பேச வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
மூன்றாவதாக, பேசுவது முகத் தசைகளுக்குப் பயிற்சியளிக்கும். தொண்டை மற்றும் நுரையீரலின் திறனை அதிகரிக்கும். அதே நேரத்தில், இது கண்கள் மற்றும் காதுகள் சிதைவடையும் அபாயத்தைக் குறைக்கிறது. மற்றும் தலைச்சுற்றலை குறைக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், ஓய்வுபெற்றவர்கள், அதாவது மூத்த குடிமக்கள் மறதி நோயைத் தடுக்க ஒரே வழி, முடிந்தவரை மக்களுடன் சுறுசுறுப்பாகப் பேசுவதும்தான். இதற்கு வேறு எந்த சிகிச்சையும் இல்லை.
-தஞ்சை வராகி
- தமது வறுமையைப் போக்க, புலவர்கள் பொதுவாக மன்னர்களிடம் சென்று பாடி பொருள் பெறுவது அக்கால வழக்கம்.
- அவ்வாறு பரிசு பெறுகையில் பரிசளித்த தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவர்.
அறுபடை வீடு என்றால் என்ன?
வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது..
யோசித்ததுண்டா?
விடை தேடனும்னா, முதல்ல நக்கீரரை தான் தேட வேண்டும்.
ஏன்னா.. அவர்தான் முதன்முதலாக கடவுளைப்போற்றி நூல் எழுதியவர்.
அதற்கு முன்.. இந்த உலகில் நிறைவான வாழ்க்கை வாழ மனிதனுக்கு ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், பாதுகாப்பு, ஆளுமை, அறிவு ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும்.
இவைகளை பூர்த்தி செய்துதரும் பாஸிட்டிவ் வைப்ரேஷன் உள்ள இடங்களை கண்டுணர்ந்து அங்கு வீடுகள் எழுப்பப்பட்டன.
அதாவது, 'ஆரோக்கியத்திற்கு திருவேரகம்,
உறவுக்கு திருப்பரங்குன்று,
பொருளாதார வசதிக்கு சோலைமலை,
பாதுகாப்புக்கு சீரலைவாய்,
ஆளுமை திறனுக்கு குன்றுதோறாடல்,
ஞானம் பெற திருவாவினன்குடி'
இவைதான் அந்த தலங்கள்.
தமது வறுமையைப் போக்க, புலவர்கள் பொதுவாக மன்னர்களிடம் சென்று பாடி பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெறுகையில் பரிசளித்த தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவர்.
மேலும் பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள்.
இவ்வாறு வழிப்படுத்துவதற்கு அல்லது நெறிப்படுத்துவதற்கு 'ஆற்றுப்படுத்துதல்' என்று பெயர்.
ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்பதால் பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்கள் 'ஆற்றுப்படை நூல்கள்' எனப்பட்டன.
பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த முருகனை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.
தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் இதுவே. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.
ஆற்றுப்படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் நக்கீரரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்..
முத்தமிழ் கடவுள் முருகனின் அருமை பெருமைகளை பாராட்டி அவனிடம் 'இன்ன இன்ன' இடங்களுக்கு சென்றால் 'இதை இதை' பெறலாம் என்று பட்டியலிட்டு எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை.
அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.
-சமரன் நாகன்
- ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படிக்காமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.
- பள்ளித்துணை ஆய்வாளர் அப்பள்ளிக்கு வந்தார். எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள்.
பெருமானே! தாங்கள் கூறியவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது கடவுள் அறிவு வடிவானவர் என்பது ஆகும். கடவுள் அறிவுப்பொருளாக இருக்க, கோயில்களில் செம்பாலும் சிலையாலும் உருவங்கள் வைத்து வழிபடுகிறார்களே? கல்லும் செம்பும் கடவுளாகுமா? இது அறிவுக்குப் பொருந்துமா?
அப்பனே! இத்தகைய வினாக்கள் எழுவது இயல்புதான். இவைகளுக்கு தக்க விடைகள் பகிர்கின்றேன். ஒருமைப்பட்ட மனத்துடன் கேள்.
பசுவின் உடம்பு முழுவதும் பால் பரவியிருந்தாலும், அந்தப் பசுவின் கொம்பைப் பிடித்து வருடினால் பாலைப் பெறமுடியுமா? வாலைப் பிடித்து வருடினால் என்ன கிடைக்கும்? பால் கிடைக்காது. பல் கிடைக்கும். பாலைப் பசுவின் மடி மூலம் பெறுவது போல், எங்கும் பரந்து விரிந்திருக்கும் இறைவனுடைய திருவருளைக் கோவிலில் விளங்கும் திருவுருவத்தின் மூலமாகப் பெறுதல் வேண்டும்.
ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படிக்காமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.
பள்ளித்துணை ஆய்வாளர் அப்பள்ளிக்கு வந்தார். எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள். ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப் பெற்று, மோர்க்குழம்பு போல் மொழு மொழுவென்று இருந்த இந்தப் படியாதவனை பார்த்து.
தம்பி! நீ என்ன படிக்கின்றாய்? என்று கேட்டார்.
அவன் "புத்தகம் படிக்கின்றேன் " என்றான்.
புத்தகம் எங்கே ? என்று கேட்டார்.
வீட்டில் இருக்கிறது என்றான்.
புத்தகம் இல்லாமல் ஏன் வந்தாய் ?
மோட்டார், லாரிகளில் அகப்பட்டுக்கொள்வேன் என்று என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இது என்ன ஆடு, மாடு அடைக்கின்ற பவுண்டா? என்று கேட்ட பள்ளித்துணை ஆய்வாளர் கரும்பலகையில், "அறம் செய்ய விரும்பு " என்று எழுதி, "தம்பி இது என்ன படி" என்றார்.
அவன் அதைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
என்னப்பா! ஆறு மாதங்களாக பள்ளிக்கு வருகின்ற உனக்கு 'அறம் செய்ய விரும்பு' என்பதை படிக்கக் கூடத் தெரியவில்லையே ? " என்று கூறி வெகுண்டார்.
பின்னர் குழந்தைகள் சுலபமாக படிக்கக் கூடிய விதத்தில் அக்கரும்பலகையில் " படம் " என்று எழுதினார்.
அம்மாணவனைப் பார்த்து " இதனைப் படி" என்றார். அவன் ஆந்தைபோல் விழித்துக் கொண்டு நின்றான்.
பள்ளித் துணை ஆய்வாளர் 'படம்' என்ற பதத்தில் பகரத்தையும் மகர மெய்யையும் அழித்தார். நடுவில் உள்ள எழுத்தைக் காட்டி, தம்பி! இது உனக்குத் தெரிகிறதா? என்றார்.
தெரிகிறது என்றான். ஆசிரியரும், ஆய்வாளரும் சற்று மகிழ்ந்தார்கள். ஓர் எழுத்தாவது தெரிகின்றது என்றானே என்று உள்ளம் உவந்தார்கள்.
தம்பி இது என்ன எழுத்து?
கோடு என்று கூறினான் அம்மாணவன்.
ஆசிரியரும் ஆய்வாளரும் சிரித்தார்கள்.
மற்றொரு மாணவனை அழைத்து "இது என்ன?" என்று கேட்டார்.
அவன் ' ட' என்று கூறினான்.
கோடும் அதுதான், ' ட' வும் அதுதான். கற்றவன் ' ட' என்று கண்டான். கல்லாதவன் " கோடு " என்று கண்டான்.
கோட்டுக்குள்ளே அறிவுள்ளவன் ' ட' என்ற ஒலியைக் காண்கின்றான்.
இது போல, கல்லாலும் செம்பாலும் செய்த சிலைகளுக்குள்ளே சச்சிதானந்தப் பரம்பொருளை ஞானிகள் காண்கின்றார்கள்.
அவைகளைச் செம்பு என்றும் கல் என்றும் கூறுவது ' ட' என்ற எழுத்தைக்கோடு என்று கூறுவதை ஒக்கும்.
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இயற்றிய " வாழும் வழி " என்ற புத்தகத்திலிருந்து...
-ஆர். எஸ். மனோகரன்
- நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும் , கண்ணுக்கும் நல்லது.
- பிற மாமிச கொழுப்புகளை விட, செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
நெய் என்பது கொழுப்பு மற்றும் எண்ணெய் வகையில் வருவதால், உடலுக்கு ஆற்றல் தந்து, கூடுதலாக இருப்பின் திசுக்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
20 கிராம் கொழுப்பு ஒரு நாளைக்கு உண்ணவேண்டும் என்ற நிலையில் அது, நெய், வெண்ணெய், இறைச்சி, மீன், எண்ணெய் வித்துக்கள் என்று எதிலிருந்து வேண்டுமானாலும் பெறப்படலாம்.
நிர்ணயித்த அளவில் எடுத்துக் கொள்ளப்படும்போது, உடல் எடை சரியாகவே இருக்கும். அதிக அளவில் எடுத்துக் கொண்டு, உடல் உழைப்பும் இல்லாத நிலையில் சேமிக்கப்பட்டு, எடை கூடும். இதில் உடலில் உள்ள நோய்களின் தன்மையும் கவனிக்கத்தகுந்தது.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ, ஈ, டி, கே போன்றவை கரைவதற்கு, கொழுப்புத் தேவை என்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு கூட குறைந்த பட்சம் 15 கிராமாவது பரிந்துரைக்கப்படுகிறது. அது தாவர கொழுப்பாக/எண்ணெயாக இருப்பதும் நல்லது.
நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும் , கண்ணுக்கும் நல்லது. பிற மாமிச கொழுப்புகளை விட, செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது சுத்தமான பசு நெய்க்கு மட்டுமே பொருந்தும்.
பசும்பாலில் இருந்து எடுக்கும் வெண்ணெயில் தயாரித்த நெய்யை தினமும் ஒரு தேக்கரண்டியளவு பருப்புடனோ, தோசையுடனோ, குழம்புட னோ எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அதனுடன் கூடுதலான அசைவம் அல்லது தாவர எண்ணெய்/ வித்துக்கள் உடலுக்குப் போகிறதா, உடலுழைப்பே இல்லாமல் இருக்கிறீர்களா என்பதிலேயே, உடலில் கொழுப்பு சேர்வதை கணக்கிட முடியும்.
ஆக, நெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் குறையும் என்பதை குறிப்பிட்டுக் கூற முடியாது. சரியான அளவில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் ஆற்றலுடன் சத்துகளை மட்டுமே உடலுக்கு கொடுக்கிறது. சுத்தமான பசுநெய் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதே.
-முனைவர். ப. வண்டார் குழலி
- கடற்கரை பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை கோவில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும்.
- வரலாறு வாழும் மக்களிடமும் உள்ளது. கல்வெட்டிலும் உள்ளது.
வெட்டி வேலை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்காலத்தில் "வெட்டி" என்ற பெயரில் நிலவிய ஊதியமில்லா கட்டாய வேலை முறை "ஊழியம்" என்ற பெயரில் தென் திருவிதாங்கூர் மன்னர் (தற்போதைய கேரள மாநிலம்) ஆட்சி பகுதியில் நிலவியது. பல்வேறு வகையான ஊழியங்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் ஒன்று "உப்பு ஊழியம்" ஆகும்.
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோவில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது. அதே வேளையில் இப்பணியைச் செய்யாவிட்டால் தண்டனை மட்டும் உண்டு.
இதிலிருந்து தான் பயனற்ற வேலையை வெட்டி வேலை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. இன்று வரை அந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது. வரலாறு வாழும் மக்களிடமும் உள்ளது. கல்வெட்டிலும் உள்ளது.
- அண்ணாமலை சுகுமாரன்
- கேரளா, மகாபலி சக்ரவர்த்தியைக் கொண்டாடுவதால், தீபாவளி அவ்வளவு ஜோர் கிடையாது.
- ஆந்திராவிலும் பெரிசாக இல்லை.
ஸ்ரீரங்கம், சென்னை, டெல்லி, பெங்களூர், அமெரிக்கா என்று பல இடங்களில் தீபாவளி கொண்டாடின அனுபவம் எனக்கு உண்டு.
சின்ன வயசில் தீபாவளியைவிட, அதன் எதிர்பார்ப்புகள்தான் சுவாரஸ்யமாக இருக்கும். புதுத் துணி வாங்குவது, பட்டாசு வாங்கி நன்றாக வெயிலில் காயப் போடுவது, அண்ணனுடன் பங்கு பிரித்துக்கொள்வது, டெய்லரிடம் சட்டை, டிராயருக்கு அளவு கொடுப்பது, அவர் ராத்திரி பன்னிரண்டு மணி வரை இழுத்தடிப்பது, தீபாவளி மலருக்கு அட்வான்ஸ் கொடுப்பது, தீபாவளி ரிலீஸ் படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்துப் பரவசப்படுவது... எல்லா எதிர்பார்ப்புகளும் பொழுது விடிந்து, எண்ணெய் தேய்த்துக்கொண்டு லேகியமும், தேங்காய் பர்பியும், தேன்குழலும் சாப்பிட்டபின் ஆவியாகிவிடும்!
பட்டாசு சீக்கிரமே தீர்ந்துவிடும். பாதி வெடிக்காது. ஆட்டம்பாம் ரெண்டு பொறி உதிர்த்துவிட்டு, கம்மென்று இருக்கும். பாம் ஸ்குவாடு போல, கிட்டே போய் அதை உதைக்க வேண்டும். அடிவயிற்றைக் கலக்கும். அடையவளஞ்சான் குட்டிப் பையன்கள் வந்தால், தைரியமாக அதைக் கையில் எடுத்து ஊதி, மாற்றுத் திரி போட்டு, 'டமால்' என்று வெடிக்க வைப்பார்கள்.
தீபாவளி ரிலீஸ் படங்கள் அத்தனை சிறப்பாக இருக்காது. தைத்த சட்டையில் காஜா அடிக்காமல், பட்டன் உதிரும். சட்டை நெஞ்சைப் பிடிக்கும். டிராயர் இடுப்பில் நிற்காது. இதையெல்லாம் சின்ன வயசில் பொருட்படுத்தாமல் ராத்திரியை, கார்த்திகையை, அடுத்த தீபாவளியை எதிர்பார்த்திருப்போம். பட்டாசு சுடுவதன் மகிழ்ச்சி இன்றும் பாக்கியிருக்கிறது. மற்றதெல்லாம் வேஷம் மாறிவிட்டது! தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்ப்பது சிலருக்குக் கட்டாயப் பாடம்.
வாழ்க்கையின் வருஷங்கள் கழியும்போது, தீபாவளியின் முக்கியத்துவமும், ஆரவாரமும் பரபரப்பும் மெள்ள மெள்ளத் திருத்தப்பட்டுத் தணிந்து, இப்போதெல்லாம் சாவகாசமாக எழுந்து, ஒரே ஒரு கை எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டு, கை வைத்த ஒரு புது பனியனும் வேஷ்டியும் அணிந்துகொண்டு, ஒரு சிலரோடு 'ஹேப்பி தீபாவளி' போன் பேசுவதோடு சரி!
பெங்களூரில் தீபாவளி, தமிழர்கள் மட்டும் அதிகம் கொண்டாடும் பண்டிகை. கன்னடக்காரர்களுக்குப் புதுசு உடுத்தும் வழக்கம் கிடையாது. வேடிக்கைக்குப் பட்டாசு வெடிப்பார்கள்!
கேரளா, மகாபலி சக்ரவர்த்தியைக் கொண்டாடுவதால், தீபாவளி அவ்வளவு ஜோர் கிடையாது. ஆந்திராவிலும் பெரிசாக இல்லை. தீபாவளியை அகில இந்திய விழாவாகச் சொல்லமுடியுமா... தெரியவில்லை.
ஆனால், தீபாவளி தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கியமான அம்சமாகிவிட்டது. நரகாசுரன் சாகவில்லையேல், சிவகாசியும் பட்டுச் சேலையும் பிழைக்காது!
- எழுத்தாளர் சுஜாதா
- மனிதனுக்கான மிகப்பெரிய சாபம் என்பது அவன் அடிமையாக நீடித்திருப்பதே என்பதை மறந்து விடாதீர்கள்.
- அநீதியுடனும் தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதே மிகப்பெரிய குற்றம் என்பதை மறந்து விடாதீர்கள்.
காந்திஜியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்து காங்கிரஸ் தலைவரான பிறகு நேதாஜியால் கட்சிக்குள் அதிக நாள் நீடிக்க முடியவில்லை. தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறார், கட்சியை விட்டு விலக்கப்படுகிறார். 1939 இல் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராகிறார்.
ஆங்கிலேய கவர்னரும் வங்காள மாகாண அரசும் சேர்ந்து அடுத்தடுத்து அவர் மீது வழக்குகளை பதிவு செய்கின்றன. "ஏன் இரண்டு இடத்தில் பேசியதற்காக மட்டும் வழக்கு போடுகிறீர்கள் நான் எல்லா ஊர்களில் பேசும்போதும் உங்களை தூக்கி எறிய வேண்டும் என்று தானே பேசுகிறேன்" என்று நேதாஜியே கேட்கிறார். அவர் நடத்திய பார்வர்ட் பிளாக் பத்திரிகை தடை செய்யப்படுகிறது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் அவர் மாகாண சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார். சட்டசபை நடக்கும் நாட்களில் தனக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி கோரினார். மறுக்கப்பட்டது.
அவருடைய எந்த கோரிக்கைகளும் ஏற்கப்படாத நிலையில் வங்காள அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் தேசிய ஆவணத்தில் இருக்கிறது. நம் பார்வைக்கு கிடைக்கிறது. வாசித்துப் பார்த்தேன். ஐந்து பக்க கடிதத்தில் முக்கியமான பகுதியை மட்டும் சொல்கிறேன்.
"நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனது இரண்டு வேண்டுகோள்களை மட்டும் நிறைவேற்றித் தர வேண்டுகிறேன். முதல் வேண்டுகோள் என்னவென்றால் என்னுடைய நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த கடிதத்தை மட்டும் பத்திரமாக வைத்திருங்கள். இதை அரசின் ஆவணக் காப்பகத்தில் சேர்த்து விடுங்கள். நீங்கள் தோற்கடிக்கப்பட்டு என் மக்கள் ஆட்சியை கைப்பற்றும் போது அவர்கள் கையில் இந்த கடிதம் கிடைக்கட்டும். இக்கடிதம் என் நாட்டு மக்களுக்கான என்னுடைய செய்தியும் என் அரசியல் நிலைப்பாடின் சாசனமும் ஆகும்.
இப்படி துவங்கும் கடிதத்தில் தேசிய சர்வதேசிய அரசியல் உதாரணங்களை ஒப்பிட்டு தான் கைது செய்யப்பட்ட சூழலையும் தன் கோரிக்கைகளின் நியாயத்தையும் பற்றி கூறுகிறார்.
"மனிதனுக்கான. மிகப்பெரிய சாபம் என்பது அவன் அடிமையாக நீடித்திருப்பதே என்பதை மறந்து விடாதீர்கள்.
அநீதியுடனும் தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதே மிகப்பெரிய குற்றம் என்பதை மறந்து விடாதீர்கள்.
என்றும் மாறாத விதி எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கான வாழ்வைப் பெற வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.
ஒப்பற்ற நற்குணம் என்பது, எது வந்தாலும் சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதே!'
மக்களுக்கான இந்தச் செய்தியைச் சொன்ன பிறகு தனது இரண்டாவது வேண்டுகோளை சொல்லுகிறார்.
எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் சிறை கைதிக்கு உள்ள ஒரே ஆயுதம் உண்ணாவிரதம் தான்.
1940 நவம்பர் 29 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப் போகிறேன். தடுக்கவோ எனக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டவோ கூடாது. அதனை நான் எப்பாடுபட்டேனும் தடுப்பேன்.
பின் குறிப்பு : எப்பொழுதும் போலவே நான் உப்பு கலந்த நீரை மட்டுமே எடுத்துக் கொள்வேன். அதையும் நிறுத்திக் கொள்ள எனக்குத் தோன்றும்பொழுது நான் நிறுத்தி விடுவேன்.
இந்த கடிதம் வங்காள அரசுக்குக் கிடைத்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் உளவுத்துறை பிரிட்டிஷ் உள்துறை அரசியல் பிரிவுக்கு இக்கடிதத்தின் நகலை அனுப்பி வைக்கிறது. அதன் பலனாக இந்த கடிதம் ஆவணக்காப்பகத்தில் சேர்ந்து விடுகிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த கடிதத்தை வாசித்த உள்துறை அதிகாரி சர் ரிச்சர்ட் டோட்டன்ஹம் உச்சபட்ச திமிருடன் ஒரு குறிப்பு எழுதி இருக்கிறான் பாருங்கள்.
"இது போய் சேர்ந்திருக்க வேண்டிய சிறந்த இடம் குப்பைத் தொட்டி தான் என்று சொல்வேன்"
நேதாஜிக்கு என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா.. உண்ணாவிரதம் தொடங்கினார். வீட்டுக் காவலுக்கு மாற்றப்படுகிறார். அங்கிருந்து தப்பித்து நான்கே மாதங்களில் ஜெர்மனியில் இருக்கிறார்.
-முத்துக்குமார் சங்கரன்
- செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை.
- இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.
நாம் உபயோகிக்கும் தூள் உப்பு ஏறக்குறைய 97 முதல் 99 சதவீதம் சோடியம் குளோரைடு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பக்குவப்படுத்தும்போது வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காவும் சோடியம் அலுமினோசிலிகேட் அல்லது மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா? இந்த வேதிப்பொருட்கள் உப்பிற்கு நல்லதே தவிர உடலுக்கு நல்லதல்ல.
"இந்துப்பு" எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது. அதன்பிறகு இந்துப்புவும் 99.99% சோடியம் குளோரைடு தான்.
சிக்கல் என்னவென்றால் வணிகமயமாக்குதலால் சரிவர பக்குவப்படுத்தப்படாத இந்துப்புவில் சற்றே அதிகமாக கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர் இருப்பதால், உணவிலுள்ள வைட்டமின் 'சி' யை அழித்துவிடுதல், உணவு விரைவில் நீர்த்துப்போதல் போன்ற வேலைகள் நடப்பதை யாரும் கூறுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. அதில் செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.
உடலுக்கு நல்லது.. உடலுக்கு நல்லது என்று வியாபார ரீதியில் எந்த பொருளை விற்றாலும் வாங்கிக்கொண்டு இருக்கும் மக்கள் இருக்கும்வரை... உடலுக்கும், உணவுக்கும்... உலகுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கும்.
"அப்போ எந்த உப்பைத்தான் நாங்கள் உபயோகிப்பது" என்று என்னை திட்டுவது நன்றாகவே கேட்கிறது.
கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பும், அந்த கல்லுப்பை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொண்டு தூளுப்பு என்று கூறிக்கொண்டும் உபயோகப்படுத்துங்கள். அதையும் அளவோடு பயன்படுத்துங்கள்.
- வண்டார்குழலி ராஜசேகர்
- நமது அறிவு வளரவளரத் தேவையற்ற நரம்பு இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன.
- மூளை வளர்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் ஏராளமான செல் மரணம்தான் அங்கே நிகழ்கிறது.
கல்லிலிருந்து வேண்டாத பகுதிகளை உளியால் வெட்டி நீக்கினால் அதில் கற்சிலை தோன்றுவதுபோல, மூளையிலிருந்து தேவையற்ற நரம்புச்செல்களைக் கவாத்துச் செய்வதன் மூலமே அறிந்தவை பதிவாகின்றன.
தினமும் புதிதுபுதிதாகப் பெயர்களை, காட்சிகளை, அனுபவங்களை நாம் பெறுந்தோறும் அவை மூளையில் புதிய நரம்புச் செல்சந்திப்புகளாக ஆக்கப்பட்டு நினைவுகளாகப் பதிகின்றன. அப்போது தேவையற்ற நரம்புச் செல்சந்திப்புகள் அகற்றவும் படுகின்றன. ஏனெனில் அறியாமை நீங்குவதுதானே அறிவு!
நமக்கு வாழ்நாள் முழுவதும் எவ்வளவு தேவையோ அதைவிடப் பலமடங்குக்கு அதிகமான நரம்புச்செல் இணைப்புகளுடன் நாம் பிறக்கிறோம். நமது அறிவு வளரவளரத் தேவையற்ற நரம்பு இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. மூளைவளர்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் ஏராளமான செல் மரணம்தான் அங்கே நிகழ்கிறது.
-பேரா.க.மணி
- அஞ்சறைப் பெட்டியில் தீராத அரியநோய் எதுவும் ஆஸ்பத்திரியில் போய் தீர்ந்ததாய் வரலாறு இல்லை...!
- வாழைப் பழத்தைபோல் வைத்தியனைப் பார்த்தது யார்...?
வைத்தியனுக்கு
கொடுப்பதை
வணிகனுக்கு கொடுத்துப்பார்
வாழ்க்கை வளமாகும்...!
அஞ்சறைப் பெட்டியில் தீராத
அரியநோய் எதுவும்
ஆஸ்பத்திரியில் போய்
தீர்ந்ததாய் வரலாறு இல்லை...!
முந்திரியும் திராட்சையும்
முற்றிய பாதாம் பருப்பும்
நித்தம் ஒருமுறை
நிதானமாய் கொஞ்சம்
மென்று சாப்பிட்டுப்பார்
மேனி வளமாகும்
மின்னுகிற உடலாகும்...!
தேனைத் தினந்தோறும்
தேக்கரண்டி சுவைத்துப்பார்
தேகம் குளிர்ந்து போகும்
தெளிந்த ஞானம் உதயமாகும்...!
ஆரஞ்சும் எலுமிச்சையும்
இன்னபிற கனிச்சரக்கும்
உன் சாப்பாட்டு மேஜையின்மேல்
ஓரமாய் வைத்துப்பார்
ஓடிப்போகும் நோயெல்லாம்...!
வாழைப் பழத்தைபோல்
வைத்தியனைப் பார்த்தது யார்...?
கீரைக்காரியோடு
கலகலப்பாய் பேசிப்பார்
கேட்டவரம் கொடுப்பாள்
கீழ்வாதமும் குணமாகும்...!
காய்கறிகளுக்கு
நீ செய்யும் செலவுகளால்
உன் கடைசிக்காரியம்
பலவருடங்கள் தள்ளிப்போகும்
வைத்தியனுக்கு கொடுத்து
வதைபட்டு சாவதை விட
வணிகனுக்குக் கொடுத்து
வாய்நிறையத் திண்றுபார்
வாழ்ந்திடுவாய் நூறாண்டு...!
-கோடாங்கி






