என் மலர்
மற்றவை
- இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
- எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள்.
ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்க விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக ஷிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.
அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இதுதான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இதுதான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்றுவிட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.
அவ்வளவுதான். அதன்பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.
-ஓஷோ
- அசுத்தங்களின் காரணமாக நோய்க்கிருமிகள் முதலில் உடலினுள் செல்லாமல் உடலைச் சுற்றியுள்ள ஆராப் பகுதியில்தான் தங்கி இருக்கும்.
- இந்து மதத்தின் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் இப்படி ஒரு விஞ்ஞானப்பூர்வமான பொருள் பொதிந்து இருக்கின்றது.
ஆரத்தி என்பது விஞ்ஞானப்பூர்வமானது. ஒவ்வொரு மனிதனின் உடலைச் சுற்றிலும் ஆரா என்ற ஒரு வட்டப் பகுதி இருக்கின்றது.
தொலைதூரப் பயணங்கள் சென்று வருபவர்கள், பிரசவித்து வீடு திரும்புபவர்கள், போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மீது கூட்டம் மற்றும் அசுத்தங்களின் காரணமாக நோய்க்கிருமிகள் முதலில் அவர்களின் உடலினுள் செல்லாமல் உடலைச் சுற்றியுள்ள ஆராப் பகுதியில்தான் தங்கி இருக்கும்.
இவ்வாறு உடலின் ஆராப் பகுதியில் நோய்க்கிருமிகளை சுமந்துவரும் தொலைதூரப் பயணங்கள் சென்று வருபவர்கள், பிரசவித்தவர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் வீட்டிற்குள் நுழையும்முன் கிருமி நாசினிகளான மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த காவிக் கரைசல், வெற்றிலை, கற்பூர தீபம் ஆகியவை அடங்கிய தாம்பாளத்தால் அவர்களை மூன்றுமுறை சுற்றி கிருமி நீக்கம் செய்து தூய்மைப்படுத்துவதே ஆரத்தி ஆகும்.
இந்து மதத்தின் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் இப்படி ஒரு விஞ்ஞானப்பூர்வமான பொருள் பொதிந்து இருக்கின்றது.
-அருண் நாகலிங்கம்
- மனுஷன் பொறக்கறத்துக்கு முன்னாலேயே பொறந்து...
- மனுஷன் இருக்கற எண்ணிக்கைக்கு அதிகமாவே ... கொசு இருக்குதுங்க!
உங்க வூட்டிலே நாலு பேரு இருக்கீங்க. ஆனா ஒங்களை மட்டும் கொசு, உடாம தொரத்தித் தொரத்திக் கடிச்சுது'னா .... பிரச்சனைக் கொசுகிட்டே இல்லேங்க! உங்க கிட்டேதான் !
நல்ல ரத்தம் ஓடுறவங்களை கொசு அதிகம் கடிக்காது.
என்னமோ நான் புளுகற மாதிரி அப்படி ன்'னு பாக்கறீங்க ?
உண்மைத்தானுங்க.
ரத்தத்தை சுத்தமாக வச்சிக்க தேவையான காய்கறிகள் பழங்கள் சாப்பிடணும்.
அதிகமான, சுத்தமில்லாத ரத்தத்தை சுத்திகரிக்கறத்துக்கு ... நம் உடல் அதிக ஆக்ஸிஜனை எடுத்துக்கும்.
அதனால, வெளியே அனுப்பும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவும் அதிகமாக போய்த் தொலைக்கும்.
அதுமட்டுமல்ல, இரத்தத்தை சுத்திகரிக்கறதுக்கோசரம் உடல் கூடுதல் வேலை செய்ய வேண்டி இருப்பதால், உடல் வெப்பமும் அதிகமா ஆயிடும்.
இது எல்லாத்துக்கும் மூலக்காரணம் எது?
அதிக அளவு அசுத்தமான ரத்தம் நம்ம உடலில் இருப்பதுதான்.
ரத்தத்தை சுத்தம் பண்ணுற உறுப்பு சிறுநீரகம்.
அதுல பிரச்சினை இருக்கவங்களை கொசு அதிகம் கடிக்கும்.
"கெட்ட ரத்தம், கார்பன்-டை-ஆக்ஸைடு, அதிக வெப்பம் ... இப்பிடி நமக்கு பிடிச்சமான பதார்த்தங்களை ... தேடித் தேடி சேர்த்து வச்சிருக்கானே? இவேன் ரொம்ப நல்லவன்'டா" அப்பிடி நெனைச்சிக்கிட்ட கொசுவுக்கு நீங்கள் ஒரு favourite flavour ஆகி ... அதன் மனதுக்கு இனியவன் ஆகி விடுவீர்கள்.
பிறகென்ன ...
கொசுக்களுக்கெல்லாம் ...
sweet எடு, கொண்டாடு.
நாலு பேரு இருக்குற வீட்டுல உங்களை கொசு அதிகம் கடிச்சா உங்க சிறுநீரகத்தில் ஏதோ பிரச்சினை இருக்கு'னு தெரிஞ்சிக்கங்க.
"கொசுக்களால் நோய் உருவாகிறது. டெங்கு'வும் அதனாலேயே உருவாகிறது. எனவே கொசுக்களை ஒழியுங்கள். டெங்கு அவதியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். "
கொசு என்னா முந்தா நேத்திக்கி மொதோ நாள் ஊரில் இருந்து வந்திச்சா?
மனுஷன் பொறக்கறத்துக்கு முன்னாலேயே பொறந்து... மனுஷன் இருக்கற எண்ணிக்கைக்கு அதிகமாவே ... கொசு இருக்குதுங்க!
பருப்பு டப்பாவை மறந்து போயி பரண்'ல வச்சிட்டாக்க வண்டு வந்து மொச்சிடுது.
செடியில இருக்கற வெண்டைக்காய் ... கொஞ்சம் ஏமாந்துச்சினா ... பூச்சி புடிச்சி போயிடுது.
ஊறுகாயைக் கொஞ்சம் லேசு, பாசா ... கவனிக்காம உட்டோமுன்னா ... பூசனம் புடிச்சி போயிடுது.
இதெல்லாம் இயற்கையின் நியதி.
புடிச்ச உணவு, பக்குவமான எடத்துல, சுமூகமான சூழல்ல, தன்னை பாதிக்காத வகையில் இருந்தாக்க ... வாழும் உயிர் அந்த பொருளைத் தேடிப் போயி தின்று, தன் உயிரை வளர்த்துக் கொள்ளும் - என்பது நியதி.
நம்ம உடம்புல கழிவு உருவாகுவது நியதி.
அது பல நுண் உயிரிகளுக்கு உணவாக மாறுவது நியதி.
புடிச்ச உணவு, பக்குவமான எடத்துல, சுமூகமான சூழல்ல, தன்னை பாதிக்காத வகையில் இருந்தாக்க ... வாழும் உயிர் அந்த பொருளைத் தேடிப் போயி தின்று, தன் உயிரை வளர்த்துக் கொள்ளும் - என்பது நியதி. இது மொதல்லேயே பார்த்தோமில்ல?
நம்ம உடம்புல தேங்கற அழுக்கு ... கொசுவுல இருக்கற சிக்கன் குனியா வைரஸ்க்கு புடிச்சிது'னா ... கொஞ்சம் வைரஸ்ஸை ... உடம்புல உட்டுட்டு போயி அந்த உயிரியை வாழ வைக்குது; டெங்கு உயிரிக்கு புடிச்ச பக்குவத்துல அந்த கழிவு நம்ம உடம்புல இருந்தாக்க ... டெங்கு உயிரி பல்கி பெருகும்.
ஈ'க்களுக்கு புடிச்ச வகையில் நம்ம கழிவுகள் இருந்திச்சி'னா ... அந்த கழிவு அல்வா'வை ஈக்களில் உள்ள ஃபுளூ உயிரிகள் வந்து ஒக்காந்து தின்னுட்டு அந்த ஜூரத்தைக் குடுத்துட்டு போயிடும்.
ஆக, கொசுவோ, ஈயோ, எலியோ ... மெனக்கட்டு நோயைக் குடுத்துட்டு போறதில்லை. அதுங்களுக்கு சாதகமான சூழலை ... நம்ம உடம்புல உருவாக்கி குடுத்துட்டு ... என் வூட்டுல வந்து தங்கிக்கோ, தங்கிக்கோ'னு வருந்தி வருந்தி அழைத்து விட்டு... பின்னர் வாடுகிறோம்.
காட்டில் வாழும் கோடூர மிருகங்கள் யாவை'னு ஒரு முயல் கிட்டே கேட்டாக்க அது சொல்லும்.
சிங்கம், புலி, கரடி'னு.
"அடப்போங்க நீங்க ஒன்னு ... இந்த சிங்கம், புலி, கரடி மூனும் ரொம்ப சாது ... அதுங்க பாட்டுக்கும் வரும், போகும் ... நம்மளை ஒன்னுமே பண்ணாது. ஆனா ரொம்ப கொடூரமான மூனு கேட்டீங்கன்னா ... இது கொக்கு, காக்கா, வாத்து!"
இப்புடி சொல்றது யாருங்க?
அதே காட்டில் வாழற புழுக்கள்தான் !
ஆக நோய், உணவு, ஆபத்து ... போன்ற எதுவுமே எல்லோருக்கும் நிரந்தரமல்ல ... கால தேச வர்த்தமானங்களைப் பொருத்து, உயிரிகளைப் பொருத்து மாறுபடும்.
-மானெக்ஷா
- கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது.
- குன்றின் கீழ் இருந்து 250 மீட்டர் தொலைவு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது.
இந்த பிரபஞ்சமே ஒரு கோணத்தில் பார்க்கும்போது அனைத்துமே அதிர்வலைகளாக தான் உள்ளது. அதற்கு ஒரு எடுத்துகாட்டு பின்வரும் சம்பவம்..
1939 ஆம் ஆண்டு சுவிடன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஜர்ல் என்பவர் திபெத்தில் உள்ள துறவிகள் மடலாயத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற அவர் சில நாள்கள் அங்கேயே தங்கி இருந்தார். ஒருநாள் துறவிகள் புது மடத்தின் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு அவரையும் அழைத்து சென்றனர்.
உடன் வந்த துறவிகளோ கையில் பறை, நீள்குழல் போன்ற இசைகருவிகளை எடுத்து வந்தனர். டாக்டர் ஜர்ல்லோ, கட்டுமான பணிகளுக்கும் இசை கருவிகளுக்கும் என்ன சம்மந்தம் என குழம்பியிருந்தார்.
துறவிகளோ கொண்டுவந்த இசைகருவிகளை தாங்கள் தூக்க வேண்டிய பாறைகளில் இருந்தது 63 மீட்டர் தொலைவிலும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலும் வரிசைபடுத்தினர். அதில் மொத்தம் 19 கருவிகள். அதில் 13 பறைகள் மற்றும் மற்ற பிறஇசைகருவிகளும் அடக்கம். பிறகு வாத்தியங்களை இசைக்க தொடங்கினர். அதில் இருந்து 6 விதமான எக்காளம் (ஒலி) எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து துறவிகள் ஒருவித ஒலி அமைப்புடன் கூடிய வழிபாடுகளையும் நடத்தினர்.
அப்போது கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது. குன்றின் கீழ் இருந்து 250 மீட்டர் தொலைவு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது. இது போன்று ஒருமணிநேரத்தில் 5-6 பாறைகளை அவர்கள் இடம்பெயர்த்தி கட்டுமான பணிகளை செய்தனர்.
இதை பார்த்த டாக்டர் ஜர்ல் அதிசயத்து போனார். அவரது கண்களை அவராலே நம்பமுடியவில்லை, பிறகு அவர் இதனை படமாக்கி கொண்டு கிளம்பினார்.
அப்படியென்றல் யோசித்து பாருங்கள்.. உலகில் இன்றும் காணப்படும் மிகப்பெரிய அளவிலான பழங்கால கட்டிடங்கள் எப்படி கட்டப்பட்டது என புரியும்.
அறிவியலில் இப்போது சத்தத்தை கொண்டு சிறிய அளவிலான கற்களை மிதக்கவைக்க முடியும் என நிருபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிர்வலைகளை உருவாக்குவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கமுடியும்.
-பாலா
- நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரியில் சோமசுந்தரம் படித்துக்கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் இந்துக்கல்லூரி மாணவனாக இருந்தார்.
- சோமசுந்தரமும், சுப்பிரமணியனும், தாங்கள் உருவாக்கிய பாடல்களை புலவரிடம் அளித்திருந்தனர்.
எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னசாமி ஐயரின் புதல்வன் சுப்பிரமணியனுக்கும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரத்திற்கும் நெஞ்சார்ந்த தோழமை உருவாகியிருந்தது. ஒருவருக்கொருவர் 'சோமு' என்றும் 'சுப்பையா' என்றும் அழைத்துக்கொள்வர்.
அரண்மனைக்கு வருகை தருகின்ற தமிழ்ப் புலவர்களின் பாட்டுக்களையும், உரையாடல்களையும் கேட்பதில், பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த இருவரும், தமிழ் மொழியின்பால் இளமையிலேயே தணியாத தாகம் கொண்டிருந்தனர். தனியாக அமர்ந்து, தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பேரார்வமும், பெரு விருப்பும் பெற்றிருந்தனர்.
நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரியில் சோமசுந்தரம் படித்துக்கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் இந்துக்கல்லூரி மாணவனாக இருந்தார். ஒரு சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து பெரும் புலவர் ஒருவர் நெல்லைக்கு வருகை புரிந்திருந்தார். ஒரு கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக்கொடுத்து, பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு யாழ்ப்பாணத்துப் புலவர் வேண்டினார். கூடியிருந்தோர் தாமியற்றிய பாடல்களைப் புலவரிடம் வழங்கினர்.
கூட்டத்திற்குச் சென்றிருந்த சோமசுந்தரமும், சுப்பிரமணியனும், தாங்கள் உருவாக்கிய பாடல்களை புலவரிடம் அளித்திருந்தனர். எல்லாப் பாடல்களிலும் இந்த இளைஞர் இருவரின் பாடல்களே மிகச் சிறப்புப் பெற்றவையாகக் கருதப் பெற்று, இருவருக்கும் 'பாரதி' என்று பட்டமளித்து மகிழ்ந்தார் யாழ்ப்பாணத்துப் புலவர்.
சுப்பிரமணியன் 'சுப்பிரமணிய பாரதி' என்றும், சோமசுந்தரம் 'சோமசுந்தர பாரதி' என்றும் அந்த நாள் முதல் அழைக்கப் பெற்றனர்.
-குன்றக்குடி பெரியபெருமாள்
- பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியான மக்களவை இயற்றும் சட்டங்களை அவர்கள் தம் விருப்பப்படி எதிர்த்து வாக்களிக்க இயலும்.
- இப்ப அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு சட்ட மசோதாக்களை இரண்டு ஆண்டுகள் வரை தாமதிக்க மட்டுமே இயலும் என கூறப்பட்டுள்ளது.
"ஜனநாயகம் என்பது இரு ஓநாய்களும், ஒரு ஆடும் டின்னருக்கு என்ன சாப்பிடலாம் என ஓட்டு போட்டு முடிவெடுப்பது" என எழுதினார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
அதனால் அமெரிக்கா ஜனநாயக நாடாக இல்லாமல் குடியரசு நாடாக இருக்கும்படி அரசியல் சட்டம் எழுதப்பட்டது.
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பது ஜனநாயகம் (Democracy). ஆனால் அமெரிக்க அரசியல் சட்டம் தனிமனிதனின் அடிப்படை உரிமைகளை பெரும்பான்மை மக்களிடம் இருந்தும், அவர்களின் பிரதிநிதியான அரசிடம் இருந்தும் காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனால் அது குடியரசு (Republic)
பிரிட்டன் ஜனநாயக நாடும் அல்ல, குடியரசும் அல்ல. அது முடியாட்சி நாடு. மக்களின் பிரதிநிதியாக பிரதமர் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை (House of commons) உள்ளது. ஆனால் பிரபுக்கள் சபை (House of Lords) என மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இன்னொரு சபையும் உள்ளது.
பிரபுக்கள் சபை கிபி 1215ம் ஆண்டில் உருவானது. அதன் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. அதில் 26 உறுப்பினர்கள் சர்ச் ஆஃப் இங்கிலாந்தால் நியமிக்கப்படுவார்கள். 1215ல் இருந்து தலைமுறை தலைமுறையாக பிரபுக்களும், அவர்களின் வாரிசுகளும் தான் பதவிக்கு வருவார்கள். அவர்கள் எந்த கட்சிக்கும், பிரதமருக்கும் கட்டுபட்டவர்கள் கிடையாது. மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பவர்களும் கிடையாது.
அதனால் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியான மக்களவை இயற்றும் சட்டங்களை அவர்கள் தம் விருப்பப்படி எதிர்த்து வாக்களிக்க இயலும். இப்ப அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு சட்ட மசோதாக்களை இரண்டு ஆண்டுகள் வரை தாமதிக்க மட்டுமே இயலும் என கூறபட்டுள்ளது.
முழுக்க பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்த சபை என்பதால் பெண்கள் அதில் உறுப்பினர் ஆக 1958 வரை அனுமதி இல்லை. மிக, மிக தன்மையாக நடக்கும் சபை. மக்களவை மாதிரி கூச்சல், குழப்பம், கலாட்டா எதுவும் இருக்காது. யாராவது பிரபு இறந்தால் அவருக்கு பதிலாக இன்னொரு பிரபுவை நியமிக்க தேர்தல் எதுவும் நடக்காது. "நான் ஏன் பிரபுக்கள் சபையில் சேர தகுதியானவன்?" என பிரபுக்கள் கவிதை, கட்டுரை என எழுதுவார்கள். அதை வைத்து ஒரு பிரபு தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆக ஜனநாயகம் என்பது மக்களின் சர்வாதிகாரமாக மாறாமல் தடுக்கும் மெக்கானிசம் உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது வியப்பான விசயம் தான்.
- நியாண்டர் செல்வன்
- திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன். பிரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.
- இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.
மருந்து கசக்கத்தான் செய்யும். கசப்பான மருந்தை உட்கொள்ள அதற்கு மேல் கொஞ்சம் இனிப்பை தடவி இருப்பார்கள். நாக்கில் பட்டவுடன் இனிப்பாக இருக்கும். அந்த இனிப்பு மருந்தை உட்கொள்ள கொடுத்த ஒரு உத்தி. மருந்தை உட்கொள்ள வேண்டுமே அல்லாது மாத்திரையின் மேல் உள்ள இனிப்பை மட்டும் நக்கி விட்டு, மாத்திரையை தூர எறிந்தால் அது எவ்வளவு அறிவுடைய செயலாகும்?
புராணங்களில் சில கதைகள் வரும். கதைகள் இனிப்பு போல. அதற்கு உள்ளே உள்ள அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். கதையோடு நின்று விடக்கூடாது.
சிவ பெருமானின் அடி முடி தேடி திருமாலும், பிரம்மாவும் சென்றார்கள் என்றும், அவர்களால் காண முடியாமல் திரும்பி வந்தார்கள் என்றும் ஒரு கதை உண்டு.
இந்த கதையை வைத்துக் கொண்டு, சிவன்தான் பெரியவர், மற்றவர்கள் சிறியவர்கள் என்று சிலர் பேசித் திரிகிறார்கள். கதை சொல்ல வந்த கருத்து என்ன?
திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன். பிரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.
இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.
உண்டியலில் நிறைய பணம் போட்டால், கோவிலுக்கு நிலம் வழங்கினால், நிறைய புத்தகங்கள் படித்துத் தெரிந்தால் இறைவனை அடைய முடியாது என்று சொல்ல வந்த கதை அது.
யார் பெரியவர், யார் சிறியவர் என்று சொல்ல வந்த கதை அல்ல.
வங்கி பெட்டகத்தில் சில பல கோடிகள் இருந்தால் இறைவனை அடைந்து விடலாம் என்று நினைக்கக் கூடாது.
பல பட்டங்கள் பெற்றால் இறைவனை அறிந்து விடலாம் என்றும் நினைக்கக் கூடாது.
அன்பாலும் அறத்தாலும் மட்டுமே இறைவனை அடையமுடியும்.
-மோகன்ராஜ்
- திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும்.
- அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது.
வெட்டி வேலை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்காலத்தில் "வெட்டி" என்ற பெயரில் நிலவிய ஊதியமில்லா கட்டாய வேலை முறை "ஊழியம்" என்ற பெயரில் தென் திருவிதாங்கூர் மன்னர் (தற்போதைய கேரள மாநிலம்) ஆட்சிப்பகுதியில் நிலவியது. பல்வேறு வகையான ஊழியங்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் ஒன்று "உப்பு ஊழியம்" ஆகும்.
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப்பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது. அதே வேளையில் இப்பணியைச் செய்யாவிட்டால் தண்டனை மட்டும் உண்டு. இதிலிருந்து தான் பயனற்ற வேலையை வெட்டிவேலை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. இன்றுவரை அந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது. வரலாறு வாழும் மக்களிடமும் உள்ளது. கல்வெட்டிலும் உள்ளது.
-அண்ணாமலை சுகுமாரன்
- சும்மா என்பது சும்மா இல்ல! நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் “சும்மா” என்ற தலைப்பில் பேசினார்.
- சும்மா சொல்லுவோம் தமிழின் சிறப்பை... அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான்.
சும்மா என்பது சும்மா இல்ல! நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் பேசினார்.
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன! தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை! அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா". அதுசரி "சும்மா" என்றால் என்ன?
பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".
"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்... வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.
1. கொஞ்சம் "சும்மா" இருடா? (அமைதியாக )
2. கொஞ்சநேரம் "சும்மா" இருந்துவிட்டுப் போகலாமே? (களைப்பாறிக்கொண்டு)
3. அவரைப் பற்றி "சும்மா" சொல்லக்கூடாது! (அருமை)
4. இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று நினைத்தாயா? (இலவசமாக)
5. "சும்மா" கதை விடாதே? (பொய் )
6. "சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக்கொள். (உபயோகமற்று )
7. "சும்மா, சும்மா கிண்டல் பண்ணுகிறான்". (அடிக்கடி)
8. இவன் இப்படித்தான், சும்மாசொல்லிக்கிட்டே இருப்பான். (எப்போதும்)
9. ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்- (தற்செயலாக)
10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது. (காலி )
11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே. (மறுபடியும் )
12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக்கூடாது (வெறுங்கையோடு)
13."சும்மா" தான் இருக்கின்றோம். (வேலையில்லாமல்)
14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான். (வெட்டியாக)
15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன். (விளையாட்டிற்கு)
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் பலவிதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை.
-ராஜகோபால்
- அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது.
- மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க.
"கையிலே என்ன பொட்டலம்?"
"மல்லிகைப் பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்....!"
"அவ்வளவு பிரியமா உங்களுக்கு?"
"ஆமா சார்.... என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதானே காரணம்!"
"உங்க வெற்றிக்கு மட்டுமா... அமெரிக்க ஜனாதிபதியா இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அவருக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்து... அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியா ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே!"
"அப்படியா?"
"மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!"
"அய்யோ பாவம்!"
"அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க... மனது சோர்ந்து போயிடாதீங்க...நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க... அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு... அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டு பிடிச்சார்!"
"பார்த்தீங்களா? ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்ன்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!"
"சரி... இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன?"
"அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்!"
"இதுக்கு உங்க மனைவி ரொம்ப ஒத்தாசையா இருந்தாங்களா ?"
"ஆமாங்க!"
"எப்படி?"
"அதை நான் எழுதி முடிக்கிற வரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்கு போயிருந்தா சார் !"
- தென்கச்சி கோ.சுவாமிநாதன்
- உப்பு வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காகவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காகவும் சோடியம் அலுமினோசிலிகேட் (அ) மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா?
- இந்துப்பு எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது.
நாம் உபயோகிக்கும் தூள் உப்பு ஏறக்குறைய 97 முதல் 99 சதவீதம் சோடியம் குளோரைடு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பக்குவப்படுத்தும்போது வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காகவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காகவும் சோடியம் அலுமினோசிலிகேட் அல்லது மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா? இந்த வேதிப்பொருட்கள் உப்பிற்கு நல்லதே தவிர உடலுக்கு நல்லதல்ல.
"இந்துப்பு" எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது. அதன்பிறகு இந்துப்புவும் 99.99% சோடியம் குளோரைடு தான்.
சிக்கல் என்னவென்றால் வணிகமயமாக்குதலால் சரிவர பக்குவப்படுத்தப்படாத இந்துப்புவில் சற்றே அதிகமாக கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர் இருப்பதால், உணவிலுள்ள வைட்டமின் 'சி' யை அழித்துவிடுதல், உணவு விரைவில் நீர்த்துப்போதல் போன்ற வேலைகள் நடப்பதை யாரும் கூறுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. அதில் செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.
உடலுக்கு நல்லது... உடலுக்கு நல்லது என்று வியாபார ரீதியில் எந்த பொருளை விற்றாலும் வாங்கிக்கொண்டு இருக்கும் மக்கள் இருக்கும் வரை... உடலுக்கும், உணவுக்கும்... உலகுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கும்.
"அப்போ எந்த உப்பைத்தான் நாங்கள் உபயோகிப்பது" என்று என்னை திட்டுவது நன்றாகவே கேட்கிறது.
கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பும், அந்த கல்லுப்பை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொண்டு தூளுப்பு என்று கூறிக்கொண்டும் உபயோகப்படுத்துங்கள். அதையும் அளவோடு பயன்படுத்துங்கள்.
- வண்டார்குழலி
- ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய 5 தினங்கள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
- உண்ணா நோன்பு கடைபிடித்து வந்தால் உங்கள் உடலுக்குள் ஏற்படும் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும்.
உண்ணா நோன்பு என்பது நம் உடலுக்குள் வாழும் நுண்கிருமிகளை கட்டுப்படுத்துவதாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். எப்படி என்றால் அமாவாசை பவுர்ணமி எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறதோ அதுவரை சாப்பிடக்கூடாது. அடுத்து வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி தினங்களில் அந்த திதி எப்போது தொடங்கி எப்போது முடிகிறதோ அதுவரை உண்ணாவிரதம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கடுத்து உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்றும் அது தொடங்கி முடியும் காலம் வரை நோன்பு இருக்க வேண்டும்.
இப்படியாக ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பவுர்ணமி,வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய 5 தினங்கள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும். இவ்வாறு கடைபிடித்து வந்தால் உங்கள் உடலுக்குள் ஏற்படும் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும். உண்ணா நோன்பு சமயத்தில் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.
ஏன் இந்த 5 நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்றால், உடலில் நன்மை பயக்கக் கூடிய நுண்கிருமிகளும் தீமை பயக்கக் கூடிய நுண் கிருமிகளும் இருக்கின்றன. தீமை பயக்கக்கூடிய நுண்கிருமிகள் சாப்பிட்டுவிட்டு ஏற்படுத்தக்கூடிய கழிவுகள் தான் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த கிருமிகள் மேற்கண்ட 5 தினங்களில் மிகவும் செயலூக்கத்துடன் இருக்கும்.
அதனால் அந்த நாட்களில் நிறைய உணவை சாப்பிடும். எனவே அவற்றை தடுக்கும் வகையில் அன்றைய தினம் உண்ணாவிரதம் இருக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
இந்த நாட்களில் நாம் உண்ணாவிரதம் இருந்து வந்தால் தீமை செய்யும் நுண்ணுயிர்களால் உண்டாகும் விஷக்கழிவுகள் இருக்காது. உடல் தூய்மையாக இருக்கும். இதற்கு தான் அந்த உண்ணா நோன்பு, கடவுளைச் சென்று அடைவதற்காக அல்ல.
நம்முள் இருக்கும் உயிர்தான் கடவுளின் அங்கம். அந்த உயிரை காத்து நிற்கும் நம் உடல் ஒரு கோயில். அந்த கோயிலை தூய்மையாக வைத்திருக்க ஏற்படுத்தப்பட்டது தான் உண்ணா நோன்பு.
-டாக்டர் சி கே. நந்தகோபாலன்.






