என் மலர்
மற்றவை
- வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் சிலருக்கு தாக உணர்வு சரியாக ஏற்படுவதில்லை.
- தாக உணர்வை ஏற்படுத்தும் நுட்பம் முறையாக வேலை செய்வதில்லை.
உணவு, காற்று போல மனிதன் உயிர்வாழ அத்தியாவசியத் தேவையாக இருப்பது "நீர்"
நீரை தினமும் எவ்வளவு அருந்த வேண்டும்?
அவரவர் தேவைக்கு ஏற்பத் தான்.
வயது, வாழும் இடத்தின் தட்பவெப்ப சூழ்நிலை, அவரவர் செய்யும் வேலை, உடல் கொண்ட நோய்கள் , அவரவரின் உடல் எடை போன்றவற்றை வைத்து தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும் என்ற பொதுவான விதி இருப்பதெல்லாம் பிறகு எதற்காக? தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத் தான் அந்த பொதுவான விதி.
சரி நமது உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை எப்படி அறிவது?
தண்ணீர் தேவை என்று அனிச்சையாக எழும் "தாக உணர்வை" வைத்துத் தான்.
நமது மூளையில் இதற்கென பிரத்யேக மையம் செயல்படுகிறது. இதன் வேலையே நமது உடலில் உள்ள நீருக்கும் உப்புக்கும் இடையே சமநிலையை தக்கவைப்பதாகும்.
உடலில் நீர் குறையும் போது உப்பின் அளவு கூடும். அப்போது தாக மையம் உந்தப்பட்டு நீர் அருந்தத் தூண்டப்படுவோம்.
உடலில் நீர் கூடும் போது சிறுநீரகங்களுக்கு கட்டளை பறந்து சென்று தேவைக்கு மிகுதியாக உள்ள நீர் வெளியேற்றப்படும். எனவே தாகத்துக்கு ஏற்றவாறு நீர் அருந்துவது சிறப்பானது சரியானதும் கூட.
வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் சிலருக்கு தாக உணர்வு சரியாக ஏற்படுவதில்லை. தாக உணர்வை ஏற்படுத்தும் இந்த நுட்பம் முறையாக வேலை செய்வதில்லை.
அவர்களுக்கு தாங்கள் சரியாக நீர் அருந்துகிறோமா என்பதை தோராயமாக அறிவதற்கு இருக்கும் வழிமுறைகள்..
மூன்று முதல் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பகலில் விழித்திருக்கும் போது (காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை ) ஐந்து முதல் ஆறு தடவை சிறுநீர் கழிப்பது நல்லது.
இரவில் ஒரு முறை சிறுநீர் கழிக்க எழுவதும் நார்மல் தான்.
ஆறு மணிநேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் செல்வது நல்லதல்ல.
இதற்கடுத்த படியாக சிறுநீரின் நிறத்தை வைத்து நம்மால் நீர் சத்து உட்கொள்ளலின் அளவை அறிந்து கொள்ள முடியும் .
சிறுநீர் - சுத்த வெள்ளை நிறமாக அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நாம் நீர் குடிக்கும் அளவுகள் சரி என்று தோராயமாகக் கொள்ளலாம்.
சிறுநீர் - அடர் மஞ்சள் / பழுப்பு நிறம்/ சிவப்பு நிறத்தில் சென்றால் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். சில நேரங்களில் உட்கொள்ளப்படும் மாத்திரைகளின் நிறம் சிறுநீரில் வெளிப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து அதீத நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் போது சிறுநீர் வெளியேறும் போது சிறுநீர் பாதையில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டு நீர்க்கடுப்பு உண்டாகும். இதுவே சிறுநீர் பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்.
வயது வந்த ஒரு மனிதன் - தினசரி 2 லிட்டர் அளவு சிறுநீராக வெளியேற்றுவது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுக்க உதவும் என்று அறியப்படுகிறது.
காலை எழுந்ததும் ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் அருந்துவதால் பலன் பாதகம் என்ன?
இரவு பல மணிநேரங்கள் நீர் அருந்தாமல் இருப்பதால் காலை எழுந்ததும் கழிக்கும் சிறுநீர் - அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். அது நார்மல் தான். கவலைப்பட வேண்டாம்.
நல்ல நிலையில் சிறுநீரகங்கள் இயங்கும் ஒருவர் - தாராளமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் காலை நேரத்தில் குடிக்கலாம். இதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை.
தேவைக்கு அதிகமாக நீர் சேர்ந்தால் சிறுநீரகம் தானாக வெளியேற்றி விடும் என்பதால் ஒரு லிட்டர் வரை பிரச்சனை இல்லை. அதிகாலை நீர் அருந்துவதால் உடலில் உள்ள கெட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் வெளியேற்றப்படுமாமே?
பல்வேறு வளர்சிதை மாற்ற விளைவுகளால் ரத்தத்தில் அதிகமாக வெளியேற்றப்பட வேண்டிய பொருட்கள் உண்டாகினால் சிறுநீரகங்கள் தானாக சிறுநீர் உற்பத்திய அதிகரித்து அவற்றை வெளியேற்றி விடும்.
உதாரணம் ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் மிதமிஞ்சி ஏறும் போது சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதற்கும் நீர் அருந்துவதற்கும் சம்பந்தமில்லை. நாம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும். எவ்வளவு சிறுநீர் வெளியேற வேண்டும் என்பதை நமது உடல் நிர்வகிக்கும்.
நாம் பருகும் நேரடியான நீர் அன்றி ஒருநாளில் பருகும் காபி / டீ ஊற்றிக்கொள்ளும் குழம்பு , குடிக்கும் பழச்சாறுகள், வெள்ளரிக்காய் , நீர்ப்பழம் போன்ற பழங்களில் உள்ள அனைத்தும் நீர் சத்தில் தான் சேரும்.
இதய செயலிழப்பு,சிறுநீரக நோய், கல்லீரல் நோய் இருப்பவர்கள் அவரவர் மருத்துவர் பரிந்துரைத்த நீர் அளவுகளை உட்கொள்ள வேண்டும்.
-டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
- மீன்கள் அடைபட்டிருந்த நீர் தேக்கத்தில் ஒரு குட்டி சுறாவையும் இட்டு வைத்தான்.
- அப்புறம் என்ன? சுறா மீனிடமிருந்து உயிர்பிழைக்க மற்ற மீன்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தன.
இறைவன் எழுதிய அழகான மென்பொருள் தான் பிரச்சனை...
பிரச்சனை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை.
ஒரு ஜப்பானிய கதை...
இது குளிர்சாதன பெட்டி இல்லாத காலத்து கதை. கடலில் மிக நீண்ட தூரம் சென்று மீன் பிடித்து வந்தால் அங்கே பிடித்தமான மீன் வகைகள் நிறைய இருக்கும் என்று அவர்கள் அறிந்து கொண்டனர்.
பல மணி நேரம் படகில் பயணித்து நடுக்கடல் சென்று மிக அதிக அளவு மீன்களை மீனவர்கள் பிடித்தனர்.
பல நாட்கள் தங்கியிருந்து அதிகமான மீன்களை பிடித்து கொண்டு கரைக்கு வந்தால் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தது.
பல மீன்கள் இறந்து இருந்தன .
உலர்ந்திருந்தன.
நாற்றம் பிடித்தன.
எனவே படகில் செயற்கை நீர் தேக்கம் உண்டாக்கி பிடிபட்ட மீன்களை அதில் இட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த முறையில் சிறிய வெற்றி கிடைத்திருந்தது.
மீன்கள் சாகவில்லை.
எனினும் முழு வெற்றி இல்லை....
கரைக்கு கொண்டு வரப்படும் மீன்கள் சோர்ந்திருந்தன.
எனவே வழக்கமான சுவை இல்லை.
இதனால் விற்பனையிலும் தேக்க நிலை...
எல்லையற்ற கடல் நீரில் நீந்தி களித்திருந்த மீன்களுக்கு, நான்கு பக்கமும் எல்லை உள்ள சிறிய நீர்த்தொட்டியில் உயிர் வாழ்வது மிகப்பெரிய அலுப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த நிலையில், அவர்களில் ஒரு புத்திசாலி மீனவன் ஒரு வழியை கண்டுபிடித்தான்.
மீன்கள் அடைபட்டிருந்த நீர் தேக்கத்தில் ஒரு குட்டி சுறாவையும் இட்டு வைத்தான்.
அப்புறம் என்ன? சுறா மீனிடமிருந்து உயிர்பிழைக்க மற்ற மீன்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தன.
பிழைப்பு என்பது அதன் வாழ்வின் அர்த்தம் ஆனது.
எப்போதும் அலெர்ட்டாக இருந்ததால் கரைக்கு கொண்டு வரும் வரை அதன் சுவையும் குறையவில்லை.
நம் வாழ்வும் அப்படித்தான்...
நமக்கு விருப்பமானது எல்லாம் நம் படுக்கைக்கு அருகில் வந்தால் நாம் சீக்கிரமே இறந்து விடுவோம். நம் ரத்த ஓட்டம் நின்று விடும். நம் உடலில் பல உறுப்புகள் இயங்காமல் செயல் இழந்துவிடும்.
பிரச்சனை தான் வலிமை. பிரச்சனை தான் உயிர்.
- ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சங்கீதத்தில் மூழ்கிய சோமு, ஒரு கச்சேரியில் சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை பாடியதைக் கேட்டு மயங்கி அவரிடம் மாணவனாகச் சேர்ந்தார்.
- பதினான்கு வருடங்கள் குருகுலவாசம் செய்து நாயனாப் பிள்ளை இசைப் பாரம்பரியத்தின் முக்கிய வாரிசாக தன்னை உருவாக்கிக்கொண்டார்.
திருச்செந்தூரின் கடலோரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை கிருபானந்த வாரியாரின் சொல்லமுது கட்டிவைத்திருந்தது. அப்போது ஒரு வித்வான் அரங்குக்குள் நுழைவதைப் பார்த்து வாரியார் சொன்னார், "இவ்வளவு நேரம் நான் என் அப்பன் முருகனைப் பத்திச் சொன்னேன். என் தம்பி இதோ வந்துட்டான், அவன் முருகனைக் கையைப்பிடிச்சுக் கொண்டுவந்து உங்க கண் முன்னால நிறுத்துவான்."
வாரியார் குறிப்பிட்ட கலைஞர் ரஞ்சித கானமணி மதுரை எஸ்.சோமசுந்தரம். சுவாமிமலையில் பிறந்த சோமுவின் இயற்பெயர் பரமசிவம். அரசுப்பணியில் இருந்த சோமுவின் தந்தையார் பணி நிமித்தமாக குடும்பத்துடன் மதுரைக்கு இடம்பெயர்ந்தார்.
சிறு வயதில் குஸ்தி, சிலம்பம் போன்றவற்றில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வந்தார் சோமு. அங்கு பயிற்சியாளராக இருந்த நாராயண கோனார் காளீஸ்வரன் கோவிலில் பக்திப்பாடல்கள் பாடுவார். அவருக்குத் துணையாய் ஸ்ருதிப்பெட்டியை இசைப்பார் சோமு. ஒருநாள் நாராயணக் கோனாருக்காக கோவிலில் காத்திருந்த சோமு களைப்பில் தூங்கிப் போனார். அப்போது அவர் கனவில் காளி வந்து, "நீ இசைக் கற்றுக்கொள்", என்று பணித்ததாக ஒரு நேர்காணலில் சோமுவே குறிப்பிட்டுள்ளார்.
ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சங்கீதத்தில் மூழ்கிய சோமு, ஒரு கச்சேரியில் சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை பாடியதைக் கேட்டு மயங்கி அவரிடம் மாணவனாகச் சேர்ந்தார். பதினான்கு வருடங்கள் குருகுலவாசம் செய்து நாயனாப் பிள்ளை இசைப் பாரம்பரியத்தின் முக்கிய வாரிசாக தன்னை உருவாக்கிக்கொண்டார்.
1950-களில் உச்சிக்கு வந்த சோமு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இசையரசராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவர் கச்சேரி நடக்காத கிராமமே தமிழகத்தில் இல்லையெனலாம். "ஒருமுறை வீட்டை விட்டு கச்சேரிக்கு கிளம்பிவிட்டால் திரும்ப வீட்டுக்கு வர குறைந்தபட்சம் 35 நாட்கள் ஆகும். ஊர் ஊராய் கச்சேரிக்காக பயணித்துக்கொண்டே இருப்போம்" என்கிறார் சோமுவின் சீடர் மழையூர் சதாசிவம்.
-லலிதாராம்
- அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது.
- ர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.
சர்க்கரை நோய் டாக்டர் ஒருவர் கூறும் போது, "நவீன ஆலைகளில் தீட்டப்பட்டு அழகான சாக்கு பைகளில் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யப்பட்டு வரும் அரிசிகளில் பெருமளவில் காணப்படுவது மாவுச்சத்து மட்டுமே. இந்த அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது. இதனை 'குளுக்கோஸ் ரைசிங் எபெக்ட்' என்போம். இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.
நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து வெள்ளை அரிசியை உண்ணும்போது அவர்களின் உடல் நிலை மேலும் மோசமாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக சிவப்பு அரிசி என்று சொல்லப்படும் பாரம்பரிய தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியை உண்ணும்போது அதில் இருக்கும் அதிகமான வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவை உடலில் சர்க்கரை உயர்வதை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு வருவதை தடுப்பதுடன், நீரிழிவு இருந்தாலும் கட்டுக்குள் வைக்கிறது" என்றார்.
- இலுப்பை சம்பா கால் மற்றும் உடல் வலி நீங்க உதவுகிறது.
- தூயமல்லி அரிசி தோலின் சுருக்கம் போக்கும். உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது.
பெண்களுக்கு ஏற்படும் உடல்நலக்கோளாறுகளை சரிசெய்ய நமது பாரம்பரிய அரிசி ரகங்கள் கைகொடுக்கின்றன. இது தொடர்பாக சித்த மருத்துவ குறிப்புகளிலும் கூறப்பட்டுள்ளன. அதுபற்றிய தகவல்களை சித்தா டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
கருப்பு கவுனி: ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்பு இருக்கும் பெண்கள் இந்த அரிசி சாதத்தை சாப்பிட்டு வந்தால், நாளடைவில் நிவாரணம் கிடைக்கக்கூடும்.
பூங்கார் அரிசி: பெண்களுக்கு கருப்பை கட்டி உருவாகாமல் தடுக்க பெண் குழந்தைகள் பூப்பெய்திய காலத்தில் இருந்தே இந்த அரிசியை கொடுத்து வரலாம். மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்யும் ஆற்றலும் இதற்கு இருப்பதாக கூறுகிறார்கள். பிரசவத்துக்கு பின்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
பிசினி அரிசி: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் உடல் அலுப்பை குறைக்கவும், சுகப்பிரசவம் நடைபெறவும் இந்த அரிசி உதவும். மாதவிடாய் கோளாறுகளையும், இடுப்பு வலியையும் குணமாக்கும் பண்பு இந்தரக அரிசிக்கு உள்ளதாக கூறுகிறார்கள்.
குழியடிச்சான் அரிசி: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்.
சூரக்குறுவை: பெண்களுக்கு ஹார்மோன் மாறுபாடு காரணமாக ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க இந்த அரிசி உதவுகிறது.
குடை வாழை அரிசி: குடல் சுத்தமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என கூறுகிறார்கள்.
காட்டுயானம்: குழந்தைகள் செழுமையாக வளர உதவும்.
காலா நமக்: நரம்பு, ரத்தம் சார்ந்த நோய்கள் வரவிடாமல் தடுக்கும்.
அறுபதாம் குறுவை: எலும்புகள் பலமாக உதவும்
இலுப்பை சம்பா: கால் மற்றும் உடல் வலி நீங்க உதவுகிறது.
தங்க சம்பா: பல், இதயம் வலுவாகும்
நீலம் சம்பா: ரத்த சோகையை நீக்கும் பண்பு இதற்கு உள்ளது.
கருடன் சம்பா: உள்ளுறுப்புகளை பலப்படுத்தும்.
மாப்பிள்ளை சம்பா: நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை அதிகரிக்கும்.
கிச்சிலி சம்பா: இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து உள்ளதால் உடல் வலிமை பெறும். சருமம் பொலிவாகவும் உதவும்.
சீரக சம்பா: உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் நீங்கும். பாரம்பரிய அரிசிகளில் சுவையான ரகம் இது.
வாலன் சம்பா: பெண்களுக்கு உடல் வலிமை அளிக்கும். சுகப்பிரசவத்துக்கான வலிமையையும் கொடுக்கிறதாம்.
வாடன் சம்பா: ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.
கருங்குறுவை: நோயினால் இழந்த வலுவை மீட்டெடுக்க இந்த அரிசி சாதம் உதவும்.
கார் அரிசி: தோல் நோய்களை குணப்படுத்தும் பண்பு இதற்கு உள்ளதாக கூறுகிறார்கள்.
தூயமல்லி அரிசி: தோலின் சுருக்கம் போக்கும். உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது.
சேலம் சன்னா: தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
மூங்கில் அரிசி: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
- உலகில் வாழும் 90% மக்கள் பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.
- அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது.
பெண்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சும் காலம் கனிந்து வருவது ஆரோக்கியமான விசயம். +2 தேர்வு முடிவுகளைப் பார்த்தால் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஐ.டி கம்பெனிகளை எட்டிப் பார்த்தால் இளம்பெண்களே அதிகம் தென்படுகிறார்கள். கார்ப்ரேட் ஆஸ்பிடல்களில் பெண் டாக்டர்களே அதிகம்.
இந்நிலையில், இப்போது யார் பாலின பாகுபாடு பார்க்கிறார்கள்? என்கிறார்கள். சமீபத்தில் ஐநா ஒரு ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. உலகில் வாழும் 90% மக்கள் (இதில் பெண்களும் சேர்த்து) பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என அந்த ஆய்வு சொல்கிறது. இதில் அதிக அளவில் பாலின பேதத்தை கடைபிடிக்கும் நாடாக ஜிம்பாவேவையும், பாகுபாடு குறைந்த அளவில் கடைபிடிக்கும் நாடாக ஐரோப்பிய நாடான ஆண்ட்ரோராவையும் அடையாளம் கண்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு, கடமையுணர்வு, தொழில்துறை அறிவு போன்றவை ஆண்களுக்கு உரித்தானது என 70% இந்திய ஆண்கள் இவ்வாய்வில் கூறியிருப்பதாக தெரிய வருகிறது.
உலகில் 231 நாடுகள் உள்ளன. இதில் 193 நாடுகளில் 10 பெண் ஆளுமைகளே அரசியலில் பிரகாசிக்கின்றனர். நாகரிகத்தில் முன்னேறியவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள், பெண்களை அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்று கருதுகின்றனர்.
அதேவேளை கடந்த கோவிட் தொற்று காலம், இத்தகைய நிலையை சிறிது கலைத்தது.பெண் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்ட நியூசிலாந்து, ஜெர்மனி, தைவான், நார்வே போன்ற நாடுகளில் கோவிட்-உயிரிழப்புகள் குறைவாக இருந்தன.
பெண் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, கோவிட்டுக்கு எதிராக போராடிய முன்களப் பணியாளர்கள் எனப் பாராட்டப்பட்டதில் 70% பேர் பெண் மருத்துவர்கள். 90% செவிலியர்கள் பெண்கள். 80% தூய்மைப் பணியாளர்கள் பெண்கள்.
இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் தங்களை நிரூபித்து வந்திருக்கிறார்கள். அதேவேளை பெண்களுக்கெதிரான குற்றங்களும் இன்னும் குறைந்தபாடில்லை! என்பதையும் நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டியுள்ளது.
உலக அளவில் பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலை, தாம்ஸன் ராய்டர்ஸ் எனும் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.
இந்தியாவில், 4 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். பெண்கள் பாலியலில் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது, எய்ட்ஸ் நோய், பெண் சிசுக்கொலை, புறக்கணிக்கப்படுவது, பணி இடங்களில் அவமதிப்பு, என பல இன்னல்களை இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
அதுபோல் அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் எனும் அடிப்படையில் 193 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இந்தியா 149வது இடத்தில்தான் இருக்கிறது.
இதனால் பெண்களை பாதிக்கும் சட்டங்கள் இயற்றப்படும்போது, வலிமையாக எதிர்த்து குரலெழுப்ப முடியாத நிலை உருவாகிறது. உதாரணமாக நாப்கினுக்கு ஜிஎஸ்டி போட்டபோது பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை.
இந்தியாவில் பெண்களின் நிலை முன்னேறி உள்ளது எனக் கூறுவோரும் இருக்கின்றனர். ஆனால் யதார்த்த நிலவரம் வேறு. கடந்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் (கேரளா விதிவிலக்கு) 10.16% பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை வளர்ப்பது, கல்வி அளிப்பது, திருமணம் செய்து கொடுப்பது சுமையென ஆணாதிக்க சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது.
கிராமப்புறங்களில் நிலவும் வறுமை உள்ளிட்ட காரணங்களால் பெண் குழந்தைகளின் கற்றல் இடைநிறுத்தப்படுகிறது.பெரும்பாலான பணியிடங்களில் குறைந்த கூலிக்கே பெண்கள் அமர்த்தப்படுகிறார்கள்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. காந்தி கனவு கண்டமாதிரி, இரவு நேரங்களில் பெண்கள் சுதந்திரமாக வீதியில் நடப்பது இருக்கட்டும், இணையத்தில் உலவமுடிகிறதா?
எனவே, சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதென்பது, மானுடத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் சுதந்திரத்தை, பாதுகாப்பை, மாண்பை, சுயமரியாதையை உறுதி செய்தவதாகும்.
-கரிகாலன்
- சிறு சிறு சருமப் பிரச்சினைகள் உள்ளிட்ட பலவற்றை ஓரளவிற்குத் தவிர்க்கலாம்.
- தண்ணீர் குடிப்பதற்கு அறிவுறுத்தி கொண்டே இருக்க வேண்டும்.
வெய்யில் அதிகமாகிறது... கவனமாக இருங்கள்...
உங்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள், உங்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி அளவான தண்ணீர் அருந்த வேண்டும்.
ஒருவேளை, தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை என்றால், உங்கள் உடலுக்குத் தேவையான நுண் சத்துகள் கிடைக்காமல் இருக்கலாம்.
இதற்கு தர்பூசணி, இளநீர், மோர், கூழ், பழச்சாறு, வெள்ளரி, நுங்கு, பதநீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கலாம்.
இது எதையும் செய்யவில்லை என்றால், மலச்சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று பிரச்சினைகள், உடலில் துர்நாற்றம், உடல் சோர்வு, மயக்க நிலை, வாயில் துர்நாற்றம், தலையில் பொடுகு ஏற்படுதல், தலைவலி, கால்வலி என்று எதுவேண்டுமானாலும் ஏற்படலாம்.
ஒருவேளை குளிர்ச்சியான பொருட்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நீர் அதிகம் சேர்க்கும்படி செய்யும் கஞ்சி, வெதுவெதுப்பான பழச்சாறு, சூப், பாயாசம், ரசம் போன்ற உணவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம்.
இதனால் சிறு சிறு சருமப் பிரச்சினைகள் உள்ளிட்ட பலவற்றை ஓரளவிற்குத் தவிர்க்கலாம். ஆனாலும், தண்ணீர் குடிப்பதற்கு அறிவுறுத்தி கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வகையில், அதிக வியர்வை வெளியேற்றம், அதிக வெய்யிலில் வேலை செய்பவர்கள், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டே இருப்பவர்கள் (இருக்கிறார்கள் காலையில் எடுத்துச்செல்லும் தண்ணீர் பாட்டில் மாலை அப்படியே திரும்பி வரும்)... அவர்களது இல்லத்தரசியிடம் அல்லது அம்மாவிடம் இதுபோன்ற மோரை செய்து கொடுக்கச் சொல்லி, ஒரு பாட்டிலில் ஊற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விடுங்கள்.
ஒரு கைப்பிடி புதினா, சிறிது இஞ்சி, ஒரு பச்சை மிளகாய்.... இவற்றுடன் சிறிது தயிர் அல்லது மோர் சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி, துப்பியை நீக்கி விடவும். இதனுடன் மேலும் தேவையான மோரைக் கலக்கி, உப்பு (தேவையெனில்) சேர்க்கவும். ஒருநாள் கொத்துமல்லி தழை மாற்றிக் கொள்ளலாம். குடித்துக் கொண்டே இருக்கத் தோன்றும் சுவையில் நிச்சயம் இருக்கும்..
தேவையான நீரும், தாதுக்களும் ஒரு சேரக் கிடைப்பதுடன், வயிற்றுப் பிரச்சினைகளும் சரியாகி, பசியும் நன்றாக எடுக்கும்.
-வண்டார் குழலி
- ஏழாவது அதிசயம் என்று கொள்வது ஒருவனது பேரன் பேத்தி தான்.
- திரும்பவும் உன் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதமான பேரன், பேத்திகள்தானே.
தாத்தா, "எங்க டீச்சர் இன்னிக்கும் உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா? என்று கேட்டார். எனக்கு தெரியலை. உனக்கு தெரியுமா? சொல்லு" என தாத்தாவை கேட்டான் பேரன்.
அடே பயலே, எனக்கு தெரிந்த ஏழு அதிசயங்கள் வேறே. புத்தகங்களில் இல்லாதது. தனியாக அதற்கு படமும் கிடையாது என்றார். அது என்ன தாத்தா அப்படிப்பட்ட 7 அதிசயங்கள்..?
உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்துதானே ஆக வேண்டும். அதை சொல்கிறேன் கேள்..
1. அம்மா இருக்கிறாளே அவள்தான் இந்த உலகில், அதாவது வாழ்க்கையில் முதல் அதிசயம். அவள் தான் உன்னை இந்த உலகத்திலேயே வரவேற்ற முதல் மனுசி.
2. அப்பா இருக்கிறாரே அவர் தான் இரண்டாவது அதிசயம். நீ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்ன பாடெல்லாம் பட்டு இருக்கிறார் என்று உனக்கு தெரியுமா?
3. எது உனக்கு வேண்டுமோ அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வைத்து, பாசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள உதவிய உன்னுடன் கூடப் பிறந்தவனோ, பிறந்தவளோதான் மூன்றாவது அதிசயம்.
4. நண்பனோ, நண்பியோதான் வாழ்வில் நான்காவது அதிசயம். விசால புத்தி, மனோபாவம், மற்றவரை புரிந்து கொள்ளும் தாராள மனம், நட்பு என்று ஒருவரை ஒருவர் நேசிக்கும் சுபாவம் வர காரணமானவர்கள்.
5. அடுத்தது குறைகளை நோக்காமல் நிறைகளை மட்டுமே பார்க்கும் தன்மை யாரால் முதலில் வந்தது என்றால் உன் மனதை முதலில் கொள்ளை கொண்ட பெண்ணோ, ஆணோதான். உலகையே, அவனுக்காகவோ, அவளுக்காகவோ எதிர்க்கும் தைரியம் வந்தது அந்த அதிசயப் பிறவியால்தான். எனவே அந்த ஜீவனே வாழ்வில் கண்ட ஐந்தாவது அதிசயம்.
6. ஆறாவது அதிசயம் என்ன தெரியுமா?. உன் குழந்தை தான். உன்னை சுயநலமற்றவனாக மாற்றிய முதல் ஜீவன். பிள்ளைக்கோ பெண்ணுக்கோ விட்டுக் கொடுக்காத, தியாகம் செய்யாத அப்பனோ, அம்மாவோ உலகிலேயே இல்லையே.
7. ஏழாவது அதிசயம் என்று கொள்வது ஒருவனது பேரன் பேத்தி தான். திரும்பவும் உன் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதமான பேரன், பேத்திகள்தானே. அவர்களுக்காக நீ டான்ஸ் ஆடலையா, பாடலையா, குதித்து தூக்கிக் கொண்டு ஓடி விளையாடவில்லையா! சிலர் குட்டிக்கரணம் கூட போட்டதில்லையா?அப்படியென்றால் இது நிச்சயம் அதிசயம் இல்லையா?'
நம் குடும்பமே ஒரு அதிசயம்தான்.
-எம்.எஸ். சீதாராமன்
- தோல் சுருக்கம் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
- தக்காளி அல்லது ஆப்பிள் பழத்தை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
பெண்கள் அழகின் மீதுள்ள அதிக அக்கறையால் பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கின்றனர். இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த க்ரீம்களால் முகத்தில் அலர்ஜியும் ஏற்படுகிறது. அதனால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு என்றும் அழகுடன் எப்படி இருப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர கருவளையங்கள் மறையும்.
கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கருப்பு நிறம் போய்விடும்.
தோல் சுருக்கம் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தக்காளி அல்லது ஆப்பிள் பழத்தை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென மாறும்.
பழுத்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மென்மையாக மாறும்.
உலர்ந்த சருமம் மென்மையாக கேரட்டை நன்றாக அரைத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 20 நிமிடம் உடலில் பூசி, பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.
மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்
-சிரகிரி வேலன்
- நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை.
- ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அந்த நிமிஷத்தில இருந்து நாம அவருக்கு அடிமை.
எழுத்தாளர் சுஜாதா வீடு.
"என்னங்க.
நான் ஒண்ணு கேட்டா...
அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."
தயங்கி தயங்கி தன் கணவரிடம் இப்படி கேட்டவர் திருமதி சுஜாதா.
மனைவியை திரும்பிப் பார்க்காமலே
"என்ன கேக்கப் போறே ?"
"இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாரே, உங்க நண்பர். அவருக்கு நீங்கதானே அட்வைஸர்?"
"அவருக்கு இல்ல. அவர் கம்பெனிக்கு."
திருமதி மௌனம்.
"சரி, என்னமோ கேக்கணும்னு சொன்னியே."
"ஆமா."
"சீக்கிரம் கேளு."
"ஒண்ணும் இல்ல. அவர் புறப்படும்போது ஒண்ணு சொல்லிட்டு போனாரே. அதுதான்..."
"என்ன சொன்னார் ? எனக்கு ஞாபகம் இல்லையே."
சுஜாதா தன்னிடம் போட்டு வாங்குவதை திருமதி புரிந்து கொண்டார்.
"அதுதாங்க, அந்த வீடு விஷயம்..."
"எந்த வீடு ?"
"நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கற அந்த மூணு பெட்ரூம் வீடு."
"ம்..."
"அந்த வீட்டை அவரே விலை கொடுத்து வாங்கி அதை நம்ம பெயருக்கு முடிச்சு தர்றேன்னு..."
"நம்ம வீட்டுக்கு வந்த என்னோட நண்பர் சொல்லிட்டு போனார், அதானே?"
"ஆமா."
"எதுனாலே அப்படி சொல்லிட்டு போறார் ?"
"உங்க மேலே உள்ள அபிமானம்தான்."
"சரி. இப்போ நாம இருக்கறது..?"
"இது நாம சொந்தமா வாங்கின வீடு."
"எத்தனை பெட்ரூம் ?"
"மூணு பெட்ரூம் வீடு."
"இது வசதியா இல்லையா ?"
"இருக்கு... ஆனாலும் அதையும் சேர்த்து வாங்கினா ஆறு பெட்ரூமா இன்னும் வசதியா..."
"ம்..."
"நாம எதுவும் பணம் செலவு பண்ணப் போறதில்லையே. உங்க நண்பர்தானே பணம் கொடுக்க ..."
சட்டென்று மனைவியை நோக்கி திரும்பினார் சுஜாதா.
"இதோ பாரு. நான் அவர் கம்பெனிக்கு அட்வைசர். அதுக்கு மாசாமாசம் சம்பளம் கொடுக்கறார். வாங்கிக்கறேன். புரியுதா ?"
"ம்"
"நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை. ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அந்த நிமிஷத்தில இருந்து நாம அவருக்கு அடிமை."
"ம்."
"இப்போ சொல்லு. நீ இந்த உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா, அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா?"
"நேர்மையாத்தான்..."
"அப்போ இனிமே இதைப் பத்தி பேசாதே !"
-ஜான்துரை ஆசிர் செல்லையா
- அரிய வகைக் குரங்கினமே சுமார் 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனமாக உருவெடுத்து பூமியின் தென்பகுதி முழுவதும் பல்கிப் பெருகிப் பரவியது.
- ஆதி மனிதர்கள், மேற்கே தென் அமெரிக்கா முதல் கிழக்கே நியூசிலாந்து வரை காலம் காலமாகப் பரவிவந்தனர்.
பூமியும் நாமும் எப்போது தோன்றினோம்? விரிந்து பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தில், பால்வளி மண்டலத்தில், ஒரு புள்ளி அளவே இடம் பெற்றுள்ள சூரிய குடும்பத்தில், நமது பூமிக்கான இடம் அணுவினும் குறைவானது. ஆனால் இதற்குள் அனுதினமும் அரங்கேறும் மூட கூத்துகளுக்குத்தான் அளவே இல்லை. இந்த பூமியும் நாமும் தோன்றி வளர்ந்த வரலாற்றை மிகச் சுருக்கமாகவேணும் தெரிந்து கொண்டால் இந்த மூடக் கூத்துகள் கொஞ்சமாவது குறையக்கூடும்.
ஹைப்பர் நோவாவிலிருந்து விண்டு விழுந்த சூரியன், அடுத்த பலகோடி ஆண்டுகளில் தானும் ஒரு சூப்பர் நோவாவாக பருத்து வெடித்து சிதறிய போது, இந்த பூமியும் அதிலிருந்து பிய்ந்து தூர விழுந்து, குளிர்ந்து சுருங்கி, உள்ளே குமுறும் நெருப்புக் கடலும், வெளியே நிலமும் நீருமாய் உருண்டு திரண்டு ஒரு சிறு கோளாய் மாறி, அதே சூரியனை அன்றாடம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.
இப்படி இந்த பூமி தோன்றி இன்றைக்கு சும்மர் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இதில் முதன் முதலில் தோன்றிய நிலப்பரப்பு ஒரே பகுதியாகத்தான் இருந்தது. பிறபகுதி முழுவதும் கடலாய் நின்றது. முதலில் தோன்றியிருந்த நிலப்பரப்பு, தாயின் கருவில் தூங்கும் குழந்தையைப் போன்ற தோற்றத்தில் கூனிக் குவிந்து இருந்தது. இந்த நிலப்பகுதியை, பாஞ்சையா [ பாண்டியா?] எனக் குறிப்பிட்டனர் புவியியலாளர்கள்.
இதிலிருந்து முதன் முதலில் வட அமெரிக்க கண்டம் பிரிந்தது. இந்த பிரிவிற்குப்பின் நிலைத்திருந்த பெரு நிலப்பரப்பு கோண்டுவானா எனப்பட்டது. இதிலிருந்து வடக்கில் உலராசியா பிரிய, எஞ்சிய கோண்டு வானாவின் மையப் பகுதியாய் இருந்தது (லெமூரியா எனப்பட்ட ) குமரிக்கண்டமாகும்.
இப்படி உருவான இந்த பூமியின் நிலம் மற்றும் நீர் பரப்பில் பலவகையான உயிரினங்கள் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வந்தபோது, சுமார் ஒருகோடி ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்ட பகுதியில், மனித இனம் உருவாவதற்கான சூழல் உருவானது.
அப்போது பரிணமித்திருந்த குரங்கு இனத்தில், ஒருவகைக் குரங்கினம் உயரமாக வளர்ந்து நிமிர்ந்து நடக்கும் நிலையை அடைந்தது. இந்த அரிய வகைக் குரங்கினமே சுமார் 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனமாக உருவெடுத்து பூமியின் தென்பகுதி முழுவதும் பல்கிப் பெருகிப் பரவியது.
இந்த ஆதி மனிதர்கள், மேற்கே தென் அமெரிக்கா முதல் கிழக்கே நியூசிலாந்து வரை காலம் காலமாகப் பரவிவந்தனர். இப்படிப் பரவி வந்த மனித இனத்துள், குமரிக் கண்டப்பகுதியில் நிலைத்து வாழ்ந்த மக்கள், வேட்டையாடுவதிலிருந்து வேளாண்மை செய்யவும், குரல் எழுப்புவதிலிருந்து பேசவும், எழுதவும், ஆடை நெய்து அணியவும் கற்றுக்கொண்ட இனமாக உருவெடுத்த உலகின் மூத்த குடிமக்களாவர். இவர்கள் சுமார் ஒருலட்சம் ஆண்டு மொழி வரலாற்றைத் தமக்கெனத் தனியே கொண்டுள்ள நமது தமிழ் மக்கள் ஆவர்.
கடைசியாக உள்ள இந்த ஒரு லட்சம் ஆண்டுகளே ஒட்டுமொத்த மனித வரலாற்றையும் நாகரிக எல்லைக்குள் கொண்டுவந்து சேர்த்த பொற்காலமாகும். இந்த கருதுகோளே உலக வரலாற்றை அளவிட அறிவியளாளர் பயன்படுத்தும் காலக் கண்ணாடியுமாகும் !
-ராமசாமி ஆறுமுகம்
- 11, 12வது படிக்கையிலேயே சம்பளம் வர ஆரம்பிச்சிடும்.
- நம்ம பசங்க,பொண்ணுங்க அப்படி இல்லை. இளங்கலை, முதுகலை எல்லாம் படிச்சு முடிக்கையில் 25 - 26 வயசு ஆகிடும்.
நாம தான் பிளஸ் 2 முடிச்சபின் காலேஜ்னு இருக்கோம். அமெரிக்கன்ஸ் அப்படி எல்லாம் அலட்டிக்கறதில்லை.
மகளின் வகுப்புதோழியை ஒரு வங்கியில் பார்த்தேன். பிளஸ் 2 படிக்கையில் வங்கியில் பார்ட் டைம் வேலை. வங்கி டெல்லர் வேலைதான். பகுதிநேர வேலை. மணிக்கு 14 டாலர் சம்பளம். நம்ம ஊர் மாதிரி நிரந்தர வேலை, வங்கி என்றால் போட்டி தேர்வு கதை எல்லாம் கிடையாது. வால்மார்ட் பணியாளர் வாங்கும் சம்பளமும், இம்மாதிரி வங்கி டெல்லர் வாங்கும் சம்பளமும் ஒன்றுதான்.
பிளஸ் 2 முடிச்சபின் நிரந்தரமா வங்கியிலேயே சேர்ந்துவிட்டாள். அதன்பின் அசோசியேட் டிகிரி படிக்கிறாள். நம்ம ஊர் டிப்ளமா மாதிரி. எப்பவும் போகும் வங்கி என்பதால் அடிக்கடி பார்ப்பேன். அசோசியேட் டிகிரி முடித்தபின் பிசினஸ் அனலிஸ்டா அதே வங்கியில் பணியாற்றவிருப்பதாக சொன்னாள்.
பிளஸ் 2 முடிச்சுட்டு டிப்ளமாவான்னு எல்லாம் கன்பியூஸ் ஆககூடாது. அசோசியேட் டிகிரிங்கறது அப்படிதான். அது முடிச்சுட்டு டிகிரி சேர்வது என்றால் சேரலாம். அசோசியேட் டிகிரியில் படித்ததுக்கு கிரடிட் கொடுப்பார்கள். 2 ஆண்டுகளில் டிகிரி படிக்கலாம். அதன்பின் முதுகலை பட்டம் வாங்குவது என்றாலும் வாங்கலாம்.
ஆனால் இதை எல்லாம் அவர்கள் மெதுவாக தான் செய்வார்கள். இளங்கலை பட்டமே வாங்குவது கூட ஆப்ஷன் தான். அதுக்குள் ஆண்டுக்கு 75,000 டாலர் பக்கம் சம்பளம் வாங்கிக்கொன்டு இருப்பார்கள். பலரும் மேனேஜர் ஆகி, அதைவிட பெரிய பதவிக்கு போகணும்னா எம்பிஏ வேணும்னு ஒரு 40 வயதில் மாலைநேர எம்பிஏ வகுப்பில் வந்து சேர்வார்கள்.
11, 12வது படிக்கையிலேயே சம்பளம் வர ஆரம்பிச்சிடும். நம்ம பசங்க,பொண்ணுங்க அப்படி இல்லை. இளங்கலை, முதுகலை எல்லாம் படிச்சு முடிக்கையில் 25 - 26 வயசு ஆகிடும். அதன்பின் தான் வேலை தேட ஆரம்பிப்பாங்க.
இப்படி அம்மா, அப்பா காசில் முதுகலை வரை படிப்பதை அவங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. அவர்களை பொறுத்தவரை அது எல்லாம் நல்ல வசதியானவங்க செய்யும் விசயம். அப்படி செய்யும் அமெரிக்கர்களும் உண்டு. ஆனால் அவர்கள் அப்பர் மிடில்க்ளாஸ் வகையில் வருவார்கள்.
டிகிரி படிக்காம கூகிளில் கூட வேலைக்கு சேரலாம். பல கம்பெனிகளில் அப்படி பிளஸ் 2 படித்தவர்களை எடுத்து, தானே டிரெய்னிங் கொடுத்து, கம்பெனிக்குள்ளேயே புரமோஷன் கொடுத்துக்கொள்வார்கள். நம்ம ஊர் ஸோஹோவில் கூட இதே மாடலை தான் கொண்டுவந்து இருக்காங்க.
பல சி.ஈ.ஓ.க்கள் வெறும் இளம்கலை பட்டம் படித்தவர்கள் தான். டிஸ்னி சி.ஈ.ஓ மைக்கேல் ஈஸ்னர் ஆங்கிலத்தில் இளம்கலை பட்டம் படித்தவர். அவ்ளோதான். மற்ற உயர்வு எல்லாம் அனுபவத்தால் வந்ததுதான்.
- நியாண்டர் செல்வன்






