என் மலர்
கதம்பம்

குடும்பத்தில் உலக அதிசயங்கள்...
- ஏழாவது அதிசயம் என்று கொள்வது ஒருவனது பேரன் பேத்தி தான்.
- திரும்பவும் உன் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதமான பேரன், பேத்திகள்தானே.
தாத்தா, "எங்க டீச்சர் இன்னிக்கும் உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா? என்று கேட்டார். எனக்கு தெரியலை. உனக்கு தெரியுமா? சொல்லு" என தாத்தாவை கேட்டான் பேரன்.
அடே பயலே, எனக்கு தெரிந்த ஏழு அதிசயங்கள் வேறே. புத்தகங்களில் இல்லாதது. தனியாக அதற்கு படமும் கிடையாது என்றார். அது என்ன தாத்தா அப்படிப்பட்ட 7 அதிசயங்கள்..?
உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்துதானே ஆக வேண்டும். அதை சொல்கிறேன் கேள்..
1. அம்மா இருக்கிறாளே அவள்தான் இந்த உலகில், அதாவது வாழ்க்கையில் முதல் அதிசயம். அவள் தான் உன்னை இந்த உலகத்திலேயே வரவேற்ற முதல் மனுசி.
2. அப்பா இருக்கிறாரே அவர் தான் இரண்டாவது அதிசயம். நீ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்ன பாடெல்லாம் பட்டு இருக்கிறார் என்று உனக்கு தெரியுமா?
3. எது உனக்கு வேண்டுமோ அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வைத்து, பாசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள உதவிய உன்னுடன் கூடப் பிறந்தவனோ, பிறந்தவளோதான் மூன்றாவது அதிசயம்.
4. நண்பனோ, நண்பியோதான் வாழ்வில் நான்காவது அதிசயம். விசால புத்தி, மனோபாவம், மற்றவரை புரிந்து கொள்ளும் தாராள மனம், நட்பு என்று ஒருவரை ஒருவர் நேசிக்கும் சுபாவம் வர காரணமானவர்கள்.
5. அடுத்தது குறைகளை நோக்காமல் நிறைகளை மட்டுமே பார்க்கும் தன்மை யாரால் முதலில் வந்தது என்றால் உன் மனதை முதலில் கொள்ளை கொண்ட பெண்ணோ, ஆணோதான். உலகையே, அவனுக்காகவோ, அவளுக்காகவோ எதிர்க்கும் தைரியம் வந்தது அந்த அதிசயப் பிறவியால்தான். எனவே அந்த ஜீவனே வாழ்வில் கண்ட ஐந்தாவது அதிசயம்.
6. ஆறாவது அதிசயம் என்ன தெரியுமா?. உன் குழந்தை தான். உன்னை சுயநலமற்றவனாக மாற்றிய முதல் ஜீவன். பிள்ளைக்கோ பெண்ணுக்கோ விட்டுக் கொடுக்காத, தியாகம் செய்யாத அப்பனோ, அம்மாவோ உலகிலேயே இல்லையே.
7. ஏழாவது அதிசயம் என்று கொள்வது ஒருவனது பேரன் பேத்தி தான். திரும்பவும் உன் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதமான பேரன், பேத்திகள்தானே. அவர்களுக்காக நீ டான்ஸ் ஆடலையா, பாடலையா, குதித்து தூக்கிக் கொண்டு ஓடி விளையாடவில்லையா! சிலர் குட்டிக்கரணம் கூட போட்டதில்லையா?அப்படியென்றால் இது நிச்சயம் அதிசயம் இல்லையா?'
நம் குடும்பமே ஒரு அதிசயம்தான்.
-எம்.எஸ். சீதாராமன்






