என் மலர்tooltip icon

    மற்றவை

    • இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்
    • என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உன்னுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன்.

    முல்லாவுக்கு ஒரு அழகிய வீடு இருந்தது. ஆனால் அதில் வாழ்ந்து அவருக்கு அலுப்புத் தட்டிவிட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும், அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டிவிட்டது.

    அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டிவிட்டது.

    அவர் ஒரு வீட்டுத் தரகரைக் கூப்பிட்டு, "வீட்டை விற்று விட விரும்புகிறேன். இதில் வாழ்ந்து சலித்துவிட்டது. இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்' என்று சொன்னார்.

    அடுத்த நாள் செய்தித்தாள்களில் அந்த வீட்டுத் தரகர் அவ்வீட்டைப் பற்றி மிக அழகான வீடு விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்து இருந்தார்.

    முல்லா செய்தித்தாள்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் படித்தார். பிறகு அவர் வீட்டுத்தாகருக்கு தொலைபேசியில் சொன்னார் "என் வீட்டை விற்க வேண்டாம். விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இம்மாதிரி வீட்டுக்குத்தான் நான் நெடு நாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன்.

    என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உன்னுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன்.

    நான் ஏங்கிக் கொண்டிருந்த அதே வீட்டில்தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை உங்கள் விளம்பரம் என்னை திருப்திப்படுத்தி விட்டது" என்றார்.

    இருப்பதில் திருப்தி அடையாதவர்கள் எதிலுமே திருப்தி அடைய முடியாது.

    மனம் எப்பொழுதும் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவிக்கொண்டே இருக்கிறது.

    கார்,வீடு, நண்பன், காதலி என ஓடிக்கொண்டே இருக்கிறது. அது கிடைத்தவுடன் அடுத்ததில் தாவி விடுகிறது.

    கிடைத்ததில் திருப்தி அடைவதில்லை.

    மனம் என்றாலே ஓட்டம் தான். அது ஓடும் திசையில் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்.

    இதனால் மிஞ்சப் போவது எதுவும் இல்லை. களைப்பை தவிர.

    -ஓஷோ.

    • சுடு சோற்றில் பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • சோற்றை மட்டுமே ஒருவேளை உணவாக சாப்பிட்டால் நோயின் தீவிரம் குறையும்!

    அடுப்பில் வடசட்டியை வைத்து இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊத்தி அதில் நாலு பல்லு பூண்டு, பத்து சின்ன வெங்காயம், வரமிளகாய் ஓன்னோ இரண்டோ, ஒரு சிறு தக்காளி, சிறு தேங்காய் துண்டுகள், சிறு புளி எல்லாத்தையும் மிதமான தீயில் நன்றாக வதக்க வேண்டும்.

    பிறகு சுடு நீரில் கழுவிய இரண்டு கைபிடி தூதுவளை இலை (இலையில் முள் இருக்கும் பார்த்து பிடிங்க) போட்டு இலை சுருள வதக்கி ஆறிய பிறகு மிக்சியில் அரைத்தால் சுவை குறைவு அம்மியில் அரைத்தால் சுவை அருமையாக இருக்கும்!

    சுடு சோற்றில் பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். புற்று நோயாளிகள் மற்றும் தீராத நோய் உள்ளவர்கள் இந்த சோற்றை மட்டுமே ஒருவேளை உணவாக சாப்பிட்டால் நோயின் தீவிரம் குறையும்!

    -ரியாஸ்

    • அடுத்து இராமாயண காலத்தில் இந்த உலகத்தில் எங்கோ ஓர் ஓரத்தில் இருந்தவர்கள் இடையே போர்.
    • மற்ற யுகங்களில் நடந்த போரில் யாரோ யாரையோ கொன்றனர்.

    கலியுகம் என்ற உடனே அழிவு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடிய ஒன்றாக சித்தரிக்க படுகிறது !

    அப்போ இதற்கு முன்னே இருந்த யுகங்கள் எப்படி ? அதில் அழிவில்லையா ?

    அதற்கும் இப்போது நடக்கும் கலியுகத்திற்கும் என்ன வித்தியாசம் ?

    பொதுவாக நல்லவை தீயவை குறித்த போராட்டங்களே யுகங்களாக சித்தரிக்க பட்டன. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமான போராட்டங்களே போர்களாக சித்தரிக்க பட்டன.

    அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர். நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையே போர் என சித்தரிக்கப்பட்டது. முதலில் ஏதோ ஓர் உலகத்தில் நல்லவர்கள்- தீயவர்கள் தேவர்கள் அசுரர்கள் இடையே போர்..

    அடுத்து இராமாயண காலத்தில் இந்த உலகத்தில் எங்கோ ஓர் ஓரத்தில் இருந்தவர்கள் இடையே போர். அடுத்து மஹாபாரத காலத்தில் ஒரே வீட்டில் பிறந்தவர்கள் ( நல்லவர்கள் / கெட்டவர்கள் ) இடையே போர்.

    இப்போது இந்த கலியுகத்தில் இந்த நல்லவர்களும் தீயவர்களும் (தேவர்கள் / அசுரர்கள்) வெளியே இல்லை. நம்முள்ளே தான் இருக்கிறார்கள். அந்த போரே மனப்போராட்டமாக நம்முள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    மற்ற யுகங்களில் நடந்த போரில் யாரோ யாரையோ கொன்றனர். இப்போது நடக்கும் கலியுகத்தில் நாம் நமக்குள்ளேயே போரிட்டு மரணிக்கிறோம்.

    -வான்கடந்தான்

    • திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர்.
    • கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் பட்டு அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

    திருமணத்தின் போது பட்டு சேலை அணிவதன் ரகசியம் என்ன தெரியுமா?

    தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.

    பட்டுக்கு இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும், தீய கதிர் வீச்சுகளை தடுத்து உடலிற்கு வலிமை அளிக்கும்.

    திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும், மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும், தொற்று நோய் பரவக்கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.

    கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் பட்டு அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

    -உழவன் மகன்

    • உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!
    • சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை அறிந்து கொண்டால், நமக்கு அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், கிடைக்கும்.

    பழங்களைச் சாப்பிடுவதென்றால், உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல! பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!

    பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!

    சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

    பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட 'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

    இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

    பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப்போக ஆரம்பிக்கிறது. அதனால் பழங்களை வெறும் வயிற்றில்அல்லது உணவுக்கு முன் சாப்பிடுங்கள்.!

    உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!

    நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால், நடக்காமல் தடுக்கப்படும்.

    ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால், எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.

    சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை அறிந்து கொண்டால், நமக்கு அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், கிடைக்கும்.

    -புவனா வசந்த்

    • வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.
    • சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா.

    ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

    அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

    கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

    சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

    புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

    பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

    சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

    சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை."

    இப்போது ஞானி சொன்னார்,

    "இது தான் திருமணம்!".

    • மரத்தை ஒட்டித்தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித்தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி.
    • குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் பெற்றோர்கள் மன நலத்திலே உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    "மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு தீர்ப்பது மாத்திரம் அல்ல. நோயே வராமலும் காக்கலாம்.

    நோய் என்றால் என்ன? இயற்கையாக நம்முடைய உடலிலே, உடல் நலத்திற்கு ஏற்ற எல்லாம் அமைந்து இருக்கிறது.

    அவ்வப்போது ஏற்படுகின்ற குறையைக் கூட சரிக்கட்டிக் கொள்ளக் கூடிய அளவுக்கு இயற்கையினுடைய ஆற்றல் அமைப்பு நம் உடலிலே இருக்கிறது.

    ஒவ்வொரு செல்லும் ஒரு இரசாயனச் சாலையாக வேலை செய்து கொண்டு இருக்கிறது. நாம் அதைத் தெரிந்து கொண்டு ஒத்துழைத்தால் போதும்.

    மேலும் கருவமைப்பு குறித்தும் அதிகமாக நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் எந்த முறையிலே மனம், உடல் அமைப்பிலே இருக்கின்றார்களோ அதை ஒட்டித்தான் ஒரு குழந்தை உருவாக முடியும்.

    மரத்தை ஒட்டித்தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித்தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி.

    குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் பெற்றோர்கள் மன நலத்திலே உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    பெற்றோர்கள் இடத்திலே ஒருவருக்கு ஒருவர் பிணக்கு மனத்தாங்கல் இருக்குமேயானால் நமது உடலிலே முக்கியமான சக்தியாகிய சீவகாந்த ஆற்றல் பிணக்குற்று அது விஷத் தன்மையாக மாறக் கூடியதாகவே அமையும். அது குழந்தைகளையும் பாதிக்கும். ஆகவே மனநலமும் உடல்நலமும் காத்து இனிமை காப்போம்.

    -வேதாத்திரி மகரிஷி

    • நான் பார்க்க முடிந்தவரையில் இங்கே கூடியுள்ளவர்களில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிகிதம் அதிமூடர்கள்!
    • கிணற்றின் மேல் மோகம் கொண்டு கடலை இழக்கிறார்கள், மதத்தின் மேல் மோகம் கொண்டு கடவுளையே இழக்கிறார்கள்.

    பெர்னார்ட்ஷா அமெரிக்காவுக்குச் சென்றார்.

    அவர் எப்போதும் அமெரிக்கா, முட்டாள்களின் நாடு மூடர்களுக்கிடையில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் என்று கூறிக்கொண்டிருப்பார்.

    இங்கே அவ்வளவு மட்டமாகப் பேசிக் கொண்டிருந்தார். மறுபுறம் அமெரிக்காவின் கவர்ச்சி அவருக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது.

    யார் திட்டிக்கொண்டிருக்கிறாரோ, அவரை நோக்கி ஆர்வம் அதிகமாவது இயற்கையே!

    ஏராளமான அழைப்புகள் குவிந்தன அவருக்கு! அதனால் அவர் அமெரிக்கா சென்றார்.

    அவர் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் எக்கச்சக்கமான கூட்டம் கூடிவிட்டது. அதனால், கலவரத்தைத் தடுப்பதற்காக அவரைத் திருட்டுத்தனமாக வேறு இடத்தில் இறக்கி அழைத்துச் சென்றனர்.

    அவர் பேசிய முதல் சபையிலேயே கலவரம் ஆரம்பமாகி விட்டது!

    முதல் சபையில் பேச ஆரம்பிக்கும் போதே அவர் கூறினார், "நான் பார்க்க முடிந்தவரையில் இங்கே கூடியுள்ளவர்களில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிகிதம் அதிமூடர்கள்!"என்றார்.

    சபைத் தலைவர் பயந்து விட்டார்!

    அவையோர், "அவமானம்! வெட்கம்! நீ சொன்னதை வாபஸ் வாங்கு!' என்று கூக்குரலிட்டனர்.

    சபைத் தலைவர், "ஆரம்பத்திலேயே கலாட்டாவுக்கு இடம் கொடுத்துப் பேசிவிட்டீர்களே! எப்படியாவது ஜனங்களைச் சமாதானப்படுத்துங்கள்!" என்று கேட்டுக்கொண்டார்.

    அப்போது பெர்னார்ட்ஷா, "இருங்கள்! பொறுங்கள்! நானே சரி செய்கிறேன் என்றார்.

    மேலும் அவர் பேசினார் 'என் புத்திக்கெட்டியவரை இங்கே கூடியுள்ளவர்களில் ஐம்பது சதவிகிதம் அதிபுத்திசாலிகளாகத் தோன்றுகிறது!' என்றார்.

    உடனே ஜனங்கள் தலையாட்டிக் கை தட்டினார்கள்; அவர் கூறுவது சரிதான், என்று!

    பெர்னார்ட்ஷா குனிந்து தலைவரிடம், சொன்னார். "நிச்சயம் ஆகி விட்டது. இங்குள்ளவர்களில் ஐம்பது சதவிகிதம் அதிமுட்டாள்கள் என்று அவர்களே ஒத்துக்கொண்டர்கள்" என்றார்.

    இந்த இரண்டு கூற்றுகளிலும் பெரிய வித்தியாசம் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் விஷயம் ஒன்றேதான்.

    இதே போல்தான் எல்லா மதத்தினரும், தம்முடைய மதத்தில் மட்டுமே விஷயம், விசேஷம் உள்ளது என்று நம்புகிறார்கள்.

    இவர்கள் கிணற்றின் மேல் மோகம் கொண்டு கடலை இழக்கிறார்கள், மதத்தின் மேல் மோகம் கொண்டு கடவுளையே இழக்கிறார்கள்.

    -ஓஷோ

    • தமிழ்நாட்டில் 99.98% பிறப்புகள் மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன.
    • இயற்கை பெர்பெக்ட் என நம்புவது எல்லா விசயத்துக்கும் பொருந்துவதில்லை.

    மனிதனை தவிர 84 லட்சம் வகை உயிரினங்களுக்கும் இயற்கை பிரசவம் தான். மனிதனுக்கு மட்டும் ஏன் சிசேரியன்? என கேட்பவர்கள் உள்ளனர். ஆனால் அந்த 84 லட்சம் (!) உயிரினங்களில் எத்தனை தாய் உயிர்கள், பிரசவ சமயம் பலியாகிறது என சொல்வதில்லை.

    உதாரணமாக கழுதைப்புலியின் பிரசவம் வலி மிகுந்தது. பல சமயம் பிறப்புறுப்பே கிழிந்து பேறுகாலத்தில் சுமார் 18% கழுதைப்புலி தாய்கள் உயிரிழக்கும். பிற மிருகங்களின் கர்ப்பகால மரணவிகிதம் செம்மறி ஆடு 1.6%, மாடு 3%, ஆடு 2.6%.

    தமிழ்நாட்டில் கர்ப்பகால மரணவிகிதம் 0.06% மட்டுமே.

    தமிழ்நாட்டில் 99.98% பிறப்புகள் மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிக விகிதம் இது. இங்கே கர்ப்பகால மரணவிகிதம் லட்சத்துக்கு 62 தாய்மார்கள் மாத்திரமே

    இயற்கை பெர்பெக்ட் என நம்புவது எல்லா விசயத்துக்கும் பொருந்துவதில்லை. பல விசயங்களுக்கு இயற்கை வைத்துள்ள தீர்வு வலியும், மரணமுமே. இவை இரண்டும் இயற்கையே. அதற்கு தீர்வு காண மனிதன் முயன்றே மானுட சமுதாயம் இந்த அளவு உயர்ந்துள்ளது.

    - நியாண்டர் செல்வன்

    • உடல் ஜடப்பொருள் வயப்பட்ட உலகத்தை சார்ந்தது. செத்துப் போனது எப்படி சாக முடியும்?
    • நித்திய உலகிற்கு உரியது ஆத்மா. எனவே அது சாக முடியாதது. இறைவனின் உலகை சார்ந்தது.

    மரணம் என்பது மன மயக்கங்களில் மிகப்பெரிய மயக்கம்.

    அந்த மயக்கத்தை தோற்றுவிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது தான்..

    ஆத்மாவும் உடலும் தொடர்பறுந்து போகின்றன. இதுதான் மரணத்தில் நிகழ்கிறது.

    ஆனால் இந்த உடலோ, ஆத்மாவோ இல்லாமல் போய்விடுவதில்லை.

    ஏற்கனவே மரணித்துப் போனது என்பதால் இந்த உடலுக்கு மரணம் இல்லை.

    உடல் ஜடப்பொருள் வயப்பட்ட உலகத்தை சார்ந்தது. செத்துப் போனது எப்படி சாக முடியும்?

    நித்திய உலகிற்கு உரியது ஆத்மா. எனவே அது சாக முடியாதது. இறைவனின் உலகை சார்ந்தது.

    அதுவே ஜீவிதம், அதுவே உயிர். பிறகு உயிர் எப்படி சாக முடியும்?

    இரண்டும் நம்மில் இணைந்து இருக்கின்றன.. .

    இந்த இணைப்பு துண்டித்து போகிறது..

    ஆத்மா உடலில் இருந்து பிடுங்கி எடுக்கப்படுகிறது..

    மரணம் என்பது அவ்வளவுதான்.

    உடல் திரும்ப ஜடத்துக்கு போய் சேர்ந்து விடுகிறது..

    மண்ணுக்குப் போய் சேர்ந்து விடுகிறது.

    ஆத்துமாவோ இன்னமும் ஆசைகளும் ஏக்கங்களும் கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு கருப்பையை நாடுகிறது. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள இன்னும் ஒரு சந்தர்ப்பம் தேடுகிறது.

    ஆசைகள் எல்லாம் கழிந்து விட்டன என்றால்..

    ஏக்கங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன என்றால்..

    உடல் எடுத்து வரும் சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது.

    அப்போது ஆத்மா நித்திய பிரஞ்ஞைக்குள் நுழைந்து விடுகிறது.

    -ஓஷோ

    • உள ரீதியாகத் துவங்கி உடலில் வந்து வெளிக்காட்டும் நோய்களை விஞ்ஞானபூர்வமாகக் குணப்படுத்தவே முடியாது.
    • உடலைத் தாக்கும் நோயை மட்டுமே நாம் அப்புறப்படுத்துகிறோம்.

    என்னைப் பொறுத்தவரையில், அலோபதி என்பது ஒரு விஞ்ஞான பூர்வமான மருந்து. ஆனால் மனிதனுக்குள் விஞ்ஞானமற்றதாக ஏதோ இருக்கிறது. அதற்கு விஞ்ஞானபூர்வமான மருந்து பயன்படாது. அதனால் நூறு சதவிகித முடிவுகளைக் கொடுக்க முடியாது.

    அதாவது விஞ்ஞானமற்ற முறையில் நோய்வாய்ப்படுவது என்றும் உண்டு. உள ரீதியாகத் துவங்கி உடலில் வந்து வெளிக்காட்டும் நோய்களை விஞ்ஞானபூர்வமாகக் குணப்படுத்தவே முடியாது.

    உடலைத் தாக்கும் நோயை மட்டுமே நாம் அப்புறப்படுத்துகிறோம். ஆனால் அதே சமயம் மனதிலிருந்து கிளம்பும் நோய் அதிகரித்துவிட்டது. இன்று, விஞ்ஞான ரீதியாகச் சிந்திப்பவர்கள் கூட ஐம்பது சதவிகித நோய் மனதிலிருந்துதான் கிளம்புகிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

    மனரீதியான நோய்கள் முதலில் உள்ளே ஆரம்பித்து, வெளியே பரவும். அவை வெளியேறும் வியாதிகள். ஆனால் உடல் ரீதியான நோய்கள் உள்ளே போகக்கூடியவை. மனநோய்க்கு உடல் ரீதியான சிகிச்சை அளித்தால் அது வேறு வழியாக வெளியேறத் துடிக்கும்.

    -ஓஷோ

    • வாவு என்பது உவா அல்லது உவவு என்னும் சொல்லின் திரிபு.
    • வாவு என்னும் பழைய சொல் மறைந்து போய் லீவு, விடுமுறைநாள் என்னும் சொற்களை இக்காலத்தில் வழங்கி வருகின்றனர்!

    பாடசாலைச் சிறுவர்களுக்கு விடுமுறை என்றால் மகிழ்ச்சி. "டேய்! நாளைக்குப் பள்ளிக்கூடம் லீவுடா" என்று மகிழ்ச்சி பொங்க நண்பனிடம் கூறுகிறான் இக்காலத்துப் பள்ளிச் சிறுவன்.

    லீவ் என்பது ஆங்கிலச் சொல். இந்தச் சொல் ஆங்கிலேயரின் சார்பினாலே தமிழ் மொழியில் புதிதாகப் புகுந்தது. லீவ் என்னும் சொல்லுக்குத் தமிழில் விடுமுறை நாள் என்று ஒரு சொல்லை வழங்குகிறார்கள்.

    ஆங்கிலேயரின் தொடர்பு இல்லாத பண்டைக் காலத்திலே, தமிழ் சிறுவன் பள்ளிக்கூட விடுமுறை நாளை வாவு என்று சொன்னான்.

    "அடே! நாளைக்கு வாவுடா. பள்ளிக்கூடம் இல்லை" என்று அக்காலத்துச் சிறுவன் கூறினான்.

    வாவு என்பது உவா அல்லது உவவு என்னும் சொல்லின் திரிபு. வாவு என்னும் பழைய சொல் மறைந்து போய் லீவு, விடுமுறைநாள் என்னும் சொற்களை இக்காலத்தில் வழங்கி வருகின்றனர்!

    உவா என்னும் சொல்லுக்கு நேரான பொருள் விடுமுறைநாள் என்பது அன்று; பௌர்ணமி, அமாவாசை என்பவை தான் அதற்கு நேரான பொருள்.

    அதாவது முழுநிலா நாளுக்கும், நிலா முழுதும் மறைந்த நாளுக்கும் உவா என்பது பொதுவான பெயர். பண்டைக் காலத்தில் பௌர்ணமி, அமாவாசை என்னும் சொற்கள் வழக்கத்தில் இல்லை.

    முழு நிலா நாளை வெள்ளுவா அல்லது வெளுத்த உவா என்றும், நிலா முழுவதும் மறைந்த நாளைக் காருவா அல்லது கறுத்த உவா என்றும் அக்காலத்தில் பெயர் வழங்கினார்கள்.

    பண்டைக் காலத்தில், ஆங்கில ஆட்சிக்கு முன்னே, உவா நாட்களில் அதாவது கறுத்த உவாவாகிய அமாவாசை, வெளுத்த உவாவாகிய பௌர்ணமி நாட்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. ஆகவே, அக்காலத்துப் பள்ளிச் சிறுவர் விடுமுறை நாட்களை உவா நாள் என்று கூறினார்கள். பேச்சு வழக்கில் உவா என்னும் சொல் வாவு என்று திரிந்து வழங்கப்பட்டது.

    -அறம் இளம்பரிதி

    ×