என் மலர்
கதம்பம்

ஓடிக்கொண்டே இருக்கும் மனம்!
- இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்
- என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உன்னுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன்.
முல்லாவுக்கு ஒரு அழகிய வீடு இருந்தது. ஆனால் அதில் வாழ்ந்து அவருக்கு அலுப்புத் தட்டிவிட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும், அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டிவிட்டது.
அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டிவிட்டது.
அவர் ஒரு வீட்டுத் தரகரைக் கூப்பிட்டு, "வீட்டை விற்று விட விரும்புகிறேன். இதில் வாழ்ந்து சலித்துவிட்டது. இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்' என்று சொன்னார்.
அடுத்த நாள் செய்தித்தாள்களில் அந்த வீட்டுத் தரகர் அவ்வீட்டைப் பற்றி மிக அழகான வீடு விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்து இருந்தார்.
முல்லா செய்தித்தாள்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் படித்தார். பிறகு அவர் வீட்டுத்தாகருக்கு தொலைபேசியில் சொன்னார் "என் வீட்டை விற்க வேண்டாம். விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இம்மாதிரி வீட்டுக்குத்தான் நான் நெடு நாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன்.
என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உன்னுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன்.
நான் ஏங்கிக் கொண்டிருந்த அதே வீட்டில்தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை உங்கள் விளம்பரம் என்னை திருப்திப்படுத்தி விட்டது" என்றார்.
இருப்பதில் திருப்தி அடையாதவர்கள் எதிலுமே திருப்தி அடைய முடியாது.
மனம் எப்பொழுதும் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவிக்கொண்டே இருக்கிறது.
கார்,வீடு, நண்பன், காதலி என ஓடிக்கொண்டே இருக்கிறது. அது கிடைத்தவுடன் அடுத்ததில் தாவி விடுகிறது.
கிடைத்ததில் திருப்தி அடைவதில்லை.
மனம் என்றாலே ஓட்டம் தான். அது ஓடும் திசையில் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்.
இதனால் மிஞ்சப் போவது எதுவும் இல்லை. களைப்பை தவிர.
-ஓஷோ.






