என் மலர்tooltip icon

    மற்றவை

    • எல்லாவிதமான அபத்தக் குப்பைகளையும் மூளையில் திணிப்பதற்கான மாபெரும் வாய்ப்பாக அதை அவர்கள் காண்கிறார்கள்.
    • மூளையை உங்களின் சொந்தக் கைகளில் விட்டுவிடாத படிக்கு மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

    மூளை எனப்படுகிற நுட்பமான யந்திரம், உடம்பின் ஒரு பகுதியாக உள்ளது.

    "ஆனால் மூளைக்குள் உடன் பிறந்ததாக எவ்வித நிகழ்ச்சிநிரலும் இல்லை."

    இயற்கை மிகுந்த கருணை உடையதாயிருக்கிறது.எவ்விதமான நிகழ்ச்சிநிரலையும் உடன் இணைக்காமலேயே உங்கள் மூளையை விட்டுவைத்துள்ளது.

    இதன்மூலம் இயற்கை உங்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. உங்கள் மூளையை என்னவாக வெல்லாம் ஆக்கிக்கொள்ள நீங்கள் விரும்பினாலும் அப்படியே நீங்கள் ஆக்கிக்கொள்ள முடியும்.

    ஆனால் இயற்கை கருணையுடன் விட்டுவைத்ததை, உங்கள் மதகுருமார்களும் உங்கள் அரசியல்வாதிகளும் உங்கள் சான்றோர்கள் எனப்படுபவர்களும் சுரண்டி வந்திருக்கிறார்கள்.

    எல்லாவிதமான அபத்தக் குப்பைகளையும் மூளையில் திணிப்பதற்கான மாபெரும் வாய்ப்பாக அதை அவர்கள் காண்கிறார்கள்.

    மூளை ஒரு எழுதப்படாத பலகை-மூளையில் நீங்கள் எழுதும் எதுவும் உங்கள் மதக்கோட்பாடாக உங்கள் அரசியல் சித்தாந்தமாக ஆகிறது.

    ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு சமுதாயமும் உங்கள் மூளையை உங்களின் சொந்தக் கைகளில் விட்டுவிடாத படிக்கு மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

    மூளையானது முற்றிலும் சரியாகவே இருக்கிறது-அது இயற்கை உங்களுக்கு கொடுத்த சுதந்திரம்;நீங்கள் வளர்வதற்கு அளித்த வெளி. ஆனால் அந்த வெளியில் நீங்கள் வளர முடியும் முன்பாகவே சமுதாயம் அதில் எல்லாவிதமான அபத்தைத்தையும் போட்டு அடைத்து விடுகிறது.

    -ஓஷோ

    • எப்போதுமே கோட் சூட் போட்டு வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே ஏன்..?
    • காந்தி அவர்கள் பல்வேறு வகையில் உளவியலாக பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியலாக தாக்குகிறார்.

    பெரிய தொழிலதிபராக இருந்த ஜி.டி.நாயுடு அவர்களுடைய வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. அதை டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக நின்று முடித்துக் கொடுத்தவர் டாக்டர் அம்பேத்கர்.

    அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறையா பணத்தை கொண்டு போய் அம்பேத்கருக்கு கொடுத்திருக்கிறார் ஜி.டி.நாயுடு..

    அம்பேத்கர் சொன்னாராம் "இந்தப் பணம் எனக்கு வேண்டாம்; அதற்கு பதிலாக நான் எப்போதும் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயணச் செலவையும்; அங்கே நான் தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றிருக்கிறார். ஜி.டி.நாயுடு-வும் மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்..

    அம்பேத்கர் டெல்லியிலிருந்து வருவதாக இருந்தால் தமிழகத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரூம் புக் பண்ணுவாராம் ஜி.டி.நாயுடு.

    ஒரு முறை நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தவரை ஒரு பத்திரிக்கை நிருபர் பேட்டி எடுக்க வந்திருக்கிறார். பேட்டி எடுக்கும் முன்னரே கேட்டிருக்கிறார்..

    "டாக்டர் அம்பேத்கர், காந்திஜி அவர்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார், கதர் ஆடை உடுத்துகிறார், மேல் ஆடையே உடுத்துவதில்லை. ஆனால் நீங்களோ ஏன் இவ்ளோ ஆடம்பரமான இடத்தில் தங்கியிருக்கிறீர்கள். அத்தோடு எப்போதுமே கோட் சூட் போட்டு வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே ஏன்..?

    அம்பேத்கர் சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம்..'காந்தி அவர்கள் பல்வேறு வகையில் உளவியலாக பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியலாக தாக்குகிறார்.

    காந்தியே சட்டை இல்லாமல் இருக்கிறார், நாம சட்டை போடாவிட்டால் என்ன என்று ஏற்கனவே சட்டை போடாத எம் மக்கள் அதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். அப்புறம் எப்படி அவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

    நான் கோட் சூட் போடுகிறேன், விலையுயர்ந்த 'டை' மட்டும் 'சூ' போடுகிறேன். மிகவும் ஆடம்பரமான இடத்திலிருந்து கொண்டு எம்மக்களை இங்கே வரச்சொல்லி சந்திக்கிறேன். என்னை இந்த இடத்தில் பார்க்க வருகிறவன், நல்ல உடை உடுத்த முயல்வான், அதற்காக சம்பாதிக்க உளவியலாக அவனின் மனம் தயாராகும்; உழைப்பான்; சட்டையே போடாமல் திரிந்தவன் புத்தாடை உடுத்துவான் வெற்று உடம்பிலிருந்து நல்ல உடைக்கு மாறுவான் என்றிருக்கிறார். இடை கேட்டதும் வாயடைத்துப் போய் நின்றிருக்கிறார் அந்த நிருபர்.

    - அன்பு செல்வன் 

     

    • பத்து தடவை கெட்டது கெட்டது என்று நினைத்தால் உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலைக் கெடுத்துவிடும்.
    • மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம் என்றால் வினைப்பதிவினாலான அவன் தன்மைகள் தான்.

    "நாமெல்லாம் அது கெட்டது இது கெட்டது என்று நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கிறோம். சமுதாய மக்கள் உறவிலே, கணவன் மனைவி உறவிலே, நண்பர்கள் உறவிலே எந்தத் தொடர்பில் ஆகட்டும், கெட்டது ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு பத்து தடவை கெட்டது கெட்டது என்று நினைத்தால் உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலைக் கெடுத்துவிடும்.

    அதை விட்டுவிட்டு, அவருக்கும் எனக்கும் உறவு ஏற்பட்ட பிறகு அவர் எனக்கு எத்தனை நன்மைகளைச் செய்தார் என்று எண்ணி எண்ணி அதையே பல தடவை நினைந்து நினைந்து உள்ளத்தில் நிரப்பிக் கொண்டு வந்தால், ஒரு சிறு தவறு அல்லது எங்கேயோ ஒரு ஏமாற்றம் இருந்தால் கூட தெரியாது.

    கணவன் மனைவி உறவிலே கூட திருமணத்தில் இருந்து இன்றுவரை அந்த அம்மா செய்த நன்மைகள் என்ன? என்று கணவன் எண்ணிப் பார்க்க வேண்டும். அதைப் போல அவர் கணவன் அவளுக்குச் செய்த நன்மைகள் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

    ஜீவகாந்த சக்தி தெய்வீகமானது. அதனை வெறுப்புணர்ச்சியால் களங்கப்படுத்தினால் பழிச் செயல்கள் பலவும் உருவாக அது வழி செய்துவிடும். அதனைத் தூய்மையாக வைத்துக் கொள்வோம். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ என்ன செய்கிறீர்களோ அதே போன்ற தன்மை உடையதாக ஆகின்றது. வினைப்பதிவுகளின் கூட்டு மலர்ச்சியே மனிதன் என்ற தோற்றம். மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம் என்றால் வினைப்பதிவினாலான அவன் தன்மைகள் தான்."

    - வேதாத்திரி மகரிஷி.

    • வேலையில் இருக்கும் காலகட்டத்தில் நியாயமாக நேர்மையாக இருங்கள்.
    • செய்ற தொழிலுக்கும், நம்மளோட வாடிக்கையாளருக்கும் அதிகபட்ச நேர்மையோட என்னைக்குமே இருக்கணும்.

    படிக்கிற வயது காலம் வரை கண்டிப்பா படிச்சிருங்க. எந்த படிப்பும் கெட்ட படிப்பில்லை. எதுமே படிக்காம இருக்கிறதுதான் தப்பு.

    படிச்சு முடிச்சிட்டு படிப்புக்கு தகுந்த மாதிரியோ இல்லை அந்த நேரத்துல உங்களின் நேரத்தை வீணடிக்காம இருக்குறதுக்காக ஒரு வேலையில சேருங்க.; வேலைக்கு முயற்சிக்காம போகாம இருக்கிறது தான் தப்பே தவிர ஏதாவது ஒரு வேலையில இருக்குறது தப்பேயில்லை., எல்லா வேலையும் ஏதோ ஒரு அனுபவத்தையும், சில பல நல்ல நண்பர்களையும் உருவாக்கித்தரும்.,

    கிடைத்த வேலையில் உங்க திறமையை காண்பிக்க முயலுங்கள். நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளம் சலுகைகளுக்காக வேலையை செய்யாமல், இந்த வேலையும், இதில் கிடைக்கும் அனுபவமும் நிச்சயம் ஒரு நாள் நம்ம வாழ்க்கையில ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில்ல அந்த வேலையை செய்யுங்க.

    வேலையில் இருக்கும் காலகட்டத்தில் நியாயமாக நேர்மையாக இருங்கள்,

    இப்படி இருந்தால் நிறைய நண்பர்கள் கான்டெக்ட் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கைக்கான முதலீடா பிற்காலத்தில் எப்பவும் இருக்கும்.

    பருவத்தே பயிர் செய் என்பது மாதிரி நிச்சயம் கல்யாணம், குழந்தை போன்றவற்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். குடும்பத்தோட எப்பவும் அன்பா இருங்க. இது எப்பவுமே உங்களுக்கு ஒரு பாசிட்டிவிட்டியை உருவாக்கி தரும்.

    வேலை செய்து சம்பாரிக்கும் காலங்களில் அனாவசியமான செலவுகளை செய்யாமல் அவசியமான சேமிப்புகளை அவ்வப்போது சேர்த்து வைக்க தவறாதீர்கள்.

    உங்கள் உடல்நலத்தில் அதீத அக்கறை கொள்ளுங்கள். இதுதான் வாழ்க்கைக்கான சிறந்த முதலீடு. இதையெல்லாம் 35 முதல் 40 வயதுக்குள் முடித்து விடுங்க.

    படிப்பில், வேலையில், உங்க அனுபவத்துல, உங்களுக்கு இருக்குற ஆரவத்துல இருக்கிறதை எல்லாம் முதலீடா போட்டு கையில் இருக்குற சிறிய தொகையை வச்சு பெரிதாக எதையும் கடனா வாங்காம ஒரு தொழிலை தொடங்குங்க.

    திரும்பவும் ஒரு சுற்றுக்கு ஓட தயாராகுங்க. இந்த முறை நீங்க முதலாளியா ஓட போரீங்க. ஆனா எப்பவும் முதலாளி என்ற நினைப்புலையே இருந்திட கூடாது. தொழிலாளிகளை அரவணைச்சு போகனும். நெறைய பொறுப்போட இருக்கனும். திடீர்னு ஒருநாள் தொழிலாளி வரலைன்னா அந்த வேலையை நீங்க இறங்கி செஞ்சு தொழிலை காப்பாதிக்க தயாரா இருக்கணும். இந்த நிலைக்கு நீங்க தயாரா இருந்துட்டா உங்க தொழில் ஒரு நாளும் உங்களை விட்டுட்டு போகாது. செய்ற தொழிலுக்கும், நம்மளோட வாடிக்கையாளருக்கும் அதிகபட்ச நேர்மையோட என்னைக்குமே இருக்கணும். விமர்சனங்களை தாங்கிக்கணும். இப்போ இதுக்கெல்லாம் நெறைய இடங்கள்ல நீங்க வேலை பார்த்த அனுபவம் கைகொடுக்கும்.

    தொழிலோட வளர்ச்சியை பொறுத்து இன்வெஸ்ட்மென்ட் அதிகபடுத்துங்க. உங்க தொழிலோட வருங்காலத்தை பற்றி தெரிஞ்சுகிட்டே இருங்க. தொழில்ல வர்ற புது விஷயங்களை அப்டேட் பண்ணிக்கிட்ட இருங்க. அப்போதான் தொழில்ல நீடிச்சு இருக்க முடியும்.

    இறை நம்பிம்கை இருந்தால் அனுதினமும் இறைவனை தொழுது உங்க வேலையை தொடங்குங்க. நல்ல பாசிடிவ் வைப் தரும்., எல்லாம் கூடி வந்து ஒரு பத்து வருஷம் தாக்கு பிடிச்சிட்டா அதோட வளர்ச்சி உங்க தலைமுறையை தாண்டி நிக்கும்.

    இதுகுள்ள பிள்ளைங்க வளர்ந்துட்டா அவங்களையும் இதுல ஈடுபடுத்தி தொழிலை சொல்லி கொடுங்க. பொண்ணு, பையன் பேதம் பார்க்காம சொல்லிகொடுங்க.

    எப்பவும் நம்பிக்கையோட இருங்க. எல்லாம் ஒருநாள் நல்லதாவே கைகூடும்.

    ஓடினால் ஆறு. தேங்கினால் குட்டை.

    நீங்க எப்பவும் ஆறுபோல ஓடி சமுத்திரத்தில் கலந்து பரந்த உலகை உருவாக்கி அதில் எல்லாருக்கும் வாய்ப்பை கொடுங்கள்.

    -பரமகுரு போஸ்.

    • ஒரு கால்பந்து சைஸ் நட்சத்திரம். இரண்டுக்கும் நடுவே வெறும் வெளி .
    • நமக்குள் ஏகப்பட்ட ஈகோ, போட்டி, பொறாமை. நான் பெரியவனா, நீ பெரியவனா என..

    பிரபஞ்சம் முழுக்க நட்சத்திரங்களும், கிரகங்களும் இருப்பதாக நினைத்தால் தவறு.

    பிரபஞ்சம் முழுக்க இருப்பது வெறும் வெளிதான். கற்பனைக்கெட்டாத அளவு வெறும் வெளி பிரபஞ்சமெங்கும் நிரம்பியுள்ளது.

    ஒரு விடியோவில் பார்த்தேன். சூரியனை கால்பந்து சைஸில் சுருக்கி கோவை நேரு ஸ்டேடியத்தில் வைத்தால், பிரபஞ்சத்தை அதே அளவு சுருக்கினால், வாயேஜர் - 1 விண்கலம் 1977ல் கிளம்பி இப்போது 2023ம் ஆண்டில் நேரு விளையாட்டு மைதானத்தின் வெளிப்புற கேட்டை தாண்டியுள்ளது.

    நமக்கு அருகே உள்ள நட்சத்திரமான ஆல்பா சென்டாரி சேலத்தில் உள்ள இன்னொரு கால்பந்து. அதை வாயேஜர் - 1 சென்றடைகையில் 75,000 ஆன்டுகள் ஆகிவிடும்.

    கோவையில் ஒரு கால்பந்து சைஸ் நட்சத்திரம், சேலத்தில் ஒரு கால்பந்து சைஸ் நட்சத்திரம். இரண்டுக்கும் நடுவே வெறும் வெளி .

    இந்த கால்பந்தை நம்பி பட்டாணி சைஸில் ஒரு உலகம்...அதனுள் அணுவளவு சைஸில் மனிதர்கள். நமக்குள் ஏகப்பட்ட ஈகோ, போட்டி, பொறாமை. நான் பெரியவனா, நீ பெரியவனா என..

    -நியாண்டர் செல்வன்

    • தண்ணி குடிக்கிற விஷயத்துல கவனம் செலுத்தணும்.
    • விருந்து மட்டுமில்ல... மருந்தும்கூட மூணு நாளைக்கு மேல சாப்பிடுறது சரியில்லை.

    ஊரெங்கும் இருமல், சளி, காய்ச்சல்னு மக்கள் அவதிப்பட்டுட்டிருக்காங்க. `தனக்கு வந்தாத்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்...' இந்தப் பழமொழி சிலபேருக்குத் தெரிஞ்சிருக்கும். மூக்கடைப்பு, சளித்தொல்லை, மூச்சிரைப்புன்னு பிரச்சினை அணிவகுத்து நிக்குது. இது ரெண்டு நாள் இருந்தா பரவாயில்ல... அது ரெயில் மாதிரி நீண்டுக்கிட்டே போனா என்னாகும்? நாம செய்யக்கூடிய வேலை எதுலயும் ஒரு ஈடுபாடு இல்லாம இருக்கும்.

    மழையும், பனியும் மாத்தி மாத்தி பாடாப்படுத்துது. அதனால இந்த நாட்கள்ல நிலவக்கூடிய குளிர்ச்சியான சூழல்ல சளியோட ஆதிக்கம் அதிகமா இருக்கும். காரணம் நம்மோட வாழ்வியல்முறைதான். எல்லா காலங்கள்லயும் நாம ஒரேமாதிரி சாப்பிடுவோம். ஆனா, தண்ணி குடிக்கிறதுல மட்டும் நம்மளையும் அறியாம பழக்கத்தை மாத்திடுவோம்.

    மழைக்காலத்துலயும் பனிக்காலத்துலயும் குளிர் அதிகமா இருக்கிறதால இயல்பாவே தண்ணி குடிக்கிறது குறைஞ்சிரும். அதனால தண்ணி குடிக்கிற விஷயத்துல கவனம் செலுத்தணும். பலபேர் வெந்நீர் குடிப்பாங்க. வழக்கமா குடிக்கிற பச்சத்தண்ணிய குடிச்சாலே போதும்.

    சிலபேருக்கு எல்லா நேரமும் ஃபேன், ஏ.சி இல்லாம சிலபேருக்கு முடியாது. ஹை மோட்ல வைக்கிறது பலபேரோட வழக்கம். இதனால சளித்தொல்லை மட்டுமில்லாம வேற சில பிரச்சினைகளும் வரிசைகட்டி நிக்கும். முதல்ல ஜலதோஷம் வரத்தொடங்கும்போது சூடா தண்ணி குடிச்சா சரியாயிரும். ஆனா, அதையே தொடர்ந்து குடிக்கக்கூடாது.

    மணத்தக்காளிக்கீரையை சூப் வச்சி குடிச்சா ஜலதோஷம் பிடிக்காது. ஆனா, சூப்பை சூடா குடிக்கணும். அதை ஆற வச்சி குடிச்சாலோ மணத்தக்காளி கீரையை கடைஞ்சி சாப்பிட்டாலோ சளி கட்டிரும்.

    இருமல், ஜலதோஷம் வந்தா தக்காளி சூப் வச்சி குடிக்கலாம். ஒரு தக்காளி, மூணு பல் பூண்டு எடுத்து நசுக்கி தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி உப்பு சேர்த்து சூடா குடிக்கணும். தொண்டை கட்டிட்டு இருந்தா ஒரு கிராம்பை தீயில சுட்டு ஒரு கல் உப்பு சேர்த்து அப்படியே கடிச்சி சாப்பிடணும். இதை ஒருநாளைக்கு ரெண்டு, மூணு தடவை செஞ்சாலே நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    துளசி, கற்பூரவள்ளி, தூதுவளையோட மிளகு, சீரகம் சேர்த்து கொதிக்க வச்சி குடிக்கலாம். மதிய உணவுல தூதுவளை துவையல் செஞ்சி சாப்பிடலாம். சாய்ங்கால நேரங்கள்ல கற்பூரவள்ளி இலையை பஜ்ஜி செஞ்சி சாப்பிடலாம். அதோட சுக்கு, மல்லி, மிளகு சேர்த்து கொதிக்க வச்சி தேநீர் செஞ்சி குடிச்சா இந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாயிரும்.

    சாய்ங்காலம் சுக்கு மல்லியை தட்டிப்போட்டு குடிக்கிறது தப்பில்லை. ஆனா, மேலே சொன்ன மத்த விஷயங்களை தினமும் தொடர்ந்து செய்யக்கூடாது. விருந்து மட்டுமில்ல... மருந்தும்கூட மூணு நாளைக்கு மேல சாப்பிடுறது சரியில்லை.

    நீண்டநாள் பிரச்சினையா இருந்தா மட்டும் அதுக்கு தகுந்தமாதிரி சாப்பிடணும். ஆனா, மழைக்காலங்கள்ல அப்பப்போ இந்த மாதிரி சாப்பிட்டு வந்தா போதும். ஜலதோஷம், சளி பிடிச்சா சிலபேர் நொச்சி இலையை கொதிக்க வச்சி ஆவி பிடிப்பாங்க. இதையும் ரெண்டு மூணு நாள் செஞ்சா போதும். சிலபேர் நாள்கணக்குல செய்வாங்க. அப்படி செய்றது அதுவே எதிரா வேலை செய்ய ஆரம்பிச்சிரும்.

    - எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர்

    • நண்பர்கள் வீட்டில் தான் தங்கி இருந்ததாக தெரிகிறது.
    • பாடம் எடுக்கையில் மேலே மாடியில் இருந்து அவரை திட்டுகிறாள்.

    சாக்ரடிஸ் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தார். போர்வீரர், கல் தொழிலாளி இப்படிப்பட்ட பணிகளில் இருந்து தத்துவஞானியாக மாறியவர். ஜிம்னாசியம் வைத்து இருந்தார். பிளேட்டோ அவரது மாணவர். ஜிம்மில் தத்துவமும், கணிதமும் என பல விசயங்களை பேசுவார்கள்.

    அவருக்கு சொந்த வீடு கூட இல்லை. நண்பர்கள் வீட்டில் தான் தங்கி இருந்ததாக தெரிகிறது. மிக தாமதமாக தன் 40வது வயதில் தான் திருமணம் செய்துகொள்கிறார். மனைவி பெயர் சாந்திபி. அவரை விட 20 வயது இளையவள்.

    சாந்திபி மிகுந்த முன்கோபி. திட்ட ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சாக்ரடிஸிடம் இது சொல்லபட்டபோதும் அவர் சாந்திபியை மாற்றிவிட முடியும் என நம்பினார். "என் அறிவுக்கு விடபட்ட சவால் இது" எனவும் சொன்னார். வருமானம் இல்லாத ஒரு தத்துவஞானிக்கு சாந்திபியை விட்டால் வேறு மணப்பெண் கிடைக்காததாலும் சமாதானத்துக்கு அவர் இதை சொல்லி இருக்கலாம்.

    இருவருக்கும் மூன்று மகன்கள் பிறக்கிறார்கள். சாந்திபி சாக்ரடிஸை மிக மோசமாக நடத்தியதாக தெரிகிறது. அவர் வீட்டுக்கு கீழே இருந்து பாடம் எடுக்கையில் மேலே மாடியில் இருந்து அவரை திட்டுகிறாள். அதன்பின் தலைக்கு மேல் தன்ணீரை ஊற்றுகிறார். சாக்ரடிஸ் "முன்பு இடி இடித்தது, இப்போது மழை பெய்தது" என்கிறார்.

    சாந்திபியின் இந்த கோபத்துக்கு காரணம் சாக்ரடிஸ் மாணவர்களிடம் கட்டணம் வாங்காமல் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்ததுதான்.

    ஒருமுறை மளிகை சாமான் வாங்க அனுப்பி, தப்பு, தப்பாக மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார் சாக்ரடிஸ். அதற்கு சாந்திபி அவரை திட்ட, சாக்ரடிஸ் எதுவும் பேசமுடியாமல் நிலைகுலைந்து தூணில் சாய்ந்து நின்றதாக சீடர்களின் குறிப்புகள் கூறுகின்றன.

    பிளேட்டோவின் குறிப்பில் சாந்திபியுடனான பிரச்சனையை தீர்க்கதான் சாக்ராயிடிக் முறை எனும் நிர்வாகவியல் முறையை சாக்ரடிஸ் உருவாக்கியதாகவும், அதை தன் மகனுக்கு கற்றுக்கொடுத்து அம்மாவுடன் எப்படி சமாதானமாக போவது என கற்றுக்கொடுத்ததாகவும் கூறுகிறார். இந்த முறை இன்னமும் பரவலாக நிர்வாகவியலில் பின்பற்றப்படுகிறது.

    - நியாண்டர் செல்வன்

    • தோல் சுருக்கம் நீங்குவதுடன் நரம்புகள் பலப்படும்.
    • மூளைக்கு நல்ல பலம் தந்து ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

    மூலிகைகள் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களை நீரில் ஊற வைத்தோ, கொதிக்க வைத்தோ பயன்படுத்தினால் அதில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கும். காய்ச்சல், கழுத்து வலி, மூட்டு வலியில் தொடங்கி சர்க்கரை நோய், புற்று நோய் என ஏராளமான நோய்களை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் செய்கின்றன.

    துளசி நீர்:

    சுத்தமான செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கைப்பிடி துளசி இலையைப் போட்டு 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். முடிந்தால் இரவில் ஊற வைத்து காலையில் பயன்படுத்தலாம். நன்றாக ஊறிய அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் அருந்தலாம். இதை 48 நாள் தொடர்ந்து அருந்தினால் 448 விதமான நோய்கள் குணமாகும். குறிப்பாக தோல் சுருக்கம் நீங்குவதுடன் நரம்புகள் பலப்படும். தொடர்ந்து குடித்தால் புற்றுநோய் குணமாக வாய்ப்பு உள்ளது.

    வில்வக் குடிநீர்:

    வில்வக் குடிநீர் என்பது வில்வ இலையை ஒரு கைப்பிடி எடுத்து சுமார் நான்கு அவுன்ஸ் நீரில் 8 மணி நேரம் ஊற வைப்பதே. இலையை நீக்கிவிட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத நோய்களையும் குணப்படுத்தும். இந்தக் குடிநீரை அதிகாலையில் ஒரு அவுன்ஸுக்குக் குறையாமல் குடித்தால் வாத வலிகள், மேக நோய்கள் குணமாகும். மேலும் மூளைக்கு நல்ல பலம் தந்து ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

    -மரிய பெல்சின்

    • தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டனர்.
    • 1911 ஆகத்து மாதத்தில் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 அன்று பாலம் திறக்கப்பட்டது.

    ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்துக்கு வயது 109.. இந்தியாவின் முதல் கடல் பாலம் இது..

    இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமும் இதுதான். (இதன் நீளம் 2.3 கி.மீ.)

    1876 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்தை மேம்படுத்த ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

    தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டனர்.

    அதற்காக ஜெனரல் மன்றோ என்பவர் தலைமையில் ஒரு கள ஆய்வு நடத்தப்பட்டது. பாலம் அமைப்பது சாத்தியம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டு இத்திட்டம் ஆய்வு நிலையில் கைவிடப்பட்டது.

    பின்னர் சென்னை டெபுடி ஜெனரல் ரைட்சன் என்பவரால் 'டுவின் பெட் பெர்க்கிலி ரயில் சர்வீஸ்' என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது.

    அதற்கு 2 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் இது மீண்டும் கைவிடப்பட்டது.

    இறுதியாக கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 ல் 'டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ்' பாலம் கட்டுவதற்கு 1899 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    1911 ஆகத்து மாதத்தில் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 அன்று பாலம் திறக்கப்பட்டது.

    -சுந்தரம்

    • மூன்று மாத ரத்த சராசரி சர்க்கரை அளவையும் பார்த்து விடுங்கள்.
    • உணவு , உடற்பயிற்சி உள்ளடக்கிய வாழ்வியல் மாற்றத்தை உடனே செய்ய வேண்டும்.

    இரவு உறக்கத்தில் வழக்கத்துக்கு மாறாக சிலமுறை சிறுநீர் கழிக்க எழுதல்..

    பசி அதிகம் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே இருத்தல் . அவ்வளவு சாப்பிட்டும் பசி அடங்காமல் இருத்தல்..

    டயட் எதிலும் இல்லாமலும் உடல் பயிற்சி எதுவும் செய்யாமலும் திடீரென்று எடை குறைய ஆரம்பிப்பது..

    சிறுநீர் கழித்த இடத்தில் வாசனை வருவது. எறும்பு மொய்ப்பது...

    நுரை நுரையாக சிறுநீர் வெளியேறுவது ..

    பாதங்கள் இரண்டிலும் எரிச்சல்/ மதமதப்பு தோன்றுதல்..

    பிறப்புறுப்பில் புண் அடிக்கடி தோன்றுவது..

    ஆண்களுக்கு முன்தோல் வெடிப்பும் புண்ணும், பெண்களுக்கு பிறப்புறுப்பைச் சுற்றி அரிப்பும் புண்களும் தோன்றுவது..

    மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றுமாயின் எந்த வயதினராயினும் சரி...உடனே தாமதிக்காமல் காலை வெறும் வயிற்றிலும் உணவு சாப்பிட்ட இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகும் ரத்த க்ளூகோஸ் அளவுகளை பரிசோதனை செய்யவும். கூடவே HbA1c எனும் மூன்று மாத ரத்த சராசரி சர்க்கரை அளவையும் பார்த்து விடுங்கள்.

    காலை வெறும் வயிற்றில் க்ளூகோஸ் 100mg/dlக்கு மேல் 125க்குள்,

    உணவுக்குப்பின் 140mg/dl க்கு மேல் 200க்குள் இருந்தால் Hba1c 5.6 முதல் 6.5 இருந்தால் நீரிழிவானது உடலில் "அனா ஆவன்னா" எழுதத் தொடங்கியிருப்பதை அறிக. இதை Prediabetes என்கிறோம்.

    உணவு , உடற்பயிற்சி உள்ளடக்கிய வாழ்வியல் மாற்றத்தை உடனே செய்ய வேண்டும்.

    உடனடியாக சீனி, சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி,  தேனி இதர லாஹிரி வஸ்துகள், மது, புகை, பேக்கரி உணவுகள் என அனைத்தையும் நிறுத்தி விட்டு தினசரி ஒரு மணிநேரம் நடை சேர்த்தால் நீரிழிவை அண்ட விடாமல் தடுக்கலாம்.

    வெறும் வயிற்றில் 126mg/dlக்கு மேல் இருந்தால் இரண்டு மணி நேர சர்க்கரை 200mg/dlக்கு மேல் HbA1c 6.5க்கு மேல் என்றால் நீரிழிவு நம் உடலில் தனது சுயசரிதையை ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.

    உடனடி வாழ்வியல் மாற்றங்களுடன் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த மாத்திரை மருந்துகளும் தேவைப்படும். கட்டாயம் மருத்துவ நிபுணரிடம் முறையான கண்காணிப்பும் அவசியம் .

    நீரிழிவு நோயர்கள் அனைவரையும் மாவுச்சத்தை குறைத்து உண்ணும் உணவு முறைக்கு அழைக்கிறேன்.

    நிச்சயம் நாவைக் கட்டுப்படுத்தினால் நீரிழிவையும் கட்டுப்படுத்திட முடியும்.

    -டாக்டர்.ஃபரூக் அப்துல்லா

    • துறவியோ, சொகுசு மெத்தையில், அழகுக் கூடாரத்தில், தங்கக் கட்டிலில் இருந்தார்...
    • என்னுடைப் பிச்சைப் பாத்திரத்தை, உங்கள் கூடாரத்திலேயே வைத்துவிட்டேன்... அது இல்லாமல் என்ன செய்வேன்?

    துறவு என்பது 'பொருள்கள்' சம்பந்தப்பட்டது அல்ல...

    'எண்ணங்கள்' சம்பந்தப்பட்டது..

    துறவு 'வெளியே' சம்பந்தப்பட்டதல்ல...

    'உள்ளே' சம்பந்தப்பட்டது.

    துறவு 'உலகம்' சம்பந்தப்பட்டதல்ல...

    'ஒருவன்' சம்பந்தப்பட்டது.

    ஒருநாள் ஒரு பிச்சைக்காரன், ஒரு துறவியின் இருப்பிடத்திற்கு சென்றான்...

    துறவியோ, சொகுசு மெத்தையில், அழகுக் கூடாரத்தில், தங்கக் கட்டிலில் இருந்தார்...

    இதைக் கண்ட பிச்சைக்காரன் அதிர்ச்சியடைந்து, 'இது என்ன அநியாயம்' என்று கூவினான்...

    பின்னர் அவரிடம்... "ஐயா, மதிப்பிற்குரிய துறவியாரே! உங்கள் ஞானம் பற்றியும், துறவு பற்றியும், பெரிதும் கேள்விப்பட்டிருக்கிறேன்...

    ஆனால், உமது இந்தக் கோலம்...

    சொகுசான சுற்றுப்புறம்...

    என்னைக் குழப்புகிறதே" என்றான்...

    துறவி சிரித்துக் கொண்டே சொன்னார்...

    "இவைகளை எல்லாம் இப்படியே விட்டுவிட்டு உன்னுடன் வர நான் தயார்... இப்பொழுதே தயார்..."

    சொல்லியபடியே துறவி உடனே எழுந்தார்...

    விறுவிறுவென பிச்சைக்காரனுடன் நடந்தார்...

    செருப்பைக் கூட அணியவில்லை...

    சிறிது தூரம் சென்றவுடன் பிச்சைக்காரன் பதைபதைத்துக் கூறினான்...

    "என்னுடைப் பிச்சைப் பாத்திரத்தை, உங்கள் கூடாரத்திலேயே வைத்துவிட்டேன்...

    அது இல்லாமல் என்ன செய்வேன்?

    தயவு செய்து கொஞ்சம் இங்கேயே இருங்கள்...

    நான் போய் கொண்டு வந்துவிடுகிறேன்!"

    துறவி பெரிதாகச் சிரித்தார்...

    பின் கூறினார்:

    "என் நண்பனே! என் கூடாரத்தில் உள்ள தங்கக் கட்டில் பூமியின் மேல்தான் நிற்கிறது...என் இதயத்தின் மேல் அல்ல.

    ஆனால், உன் பிச்சைப் பாத்திரம் உன்னை இந்த துரத்து துரத்துவதாக இருக்கிறதே!"

    "உலகத்தில் இருப்பது பற்று இல்லை...

    உன் மனதில் உலகம் இருப்பதுதான் பற்று...

    உன் மனதிலிருந்து உலகம் மறைந்துவிட்டால்...

    அதுதான் துறவு."

    -ஓஷோ

    • தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும்.
    • 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதம் மற்ற தமிழ் மாதங்களைவிட மிக, மிக புனிதமானது. முறைப்படி மனதை ஒரு முகப்படுத்தி வழிபட்டால் அளவிடற்குரிய பலன்களை கார்த்திகை மாதத்தில் பெறலாம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் - தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி - எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    -சிவசங்கர்

    ×