என் மலர்
பிரிட்டன்
- காமன்வெல்த் போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை பெற்றுள்ளது.
- குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
இந்நிலையில், 70 கிலோ குத்துச்சண்டை எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நியூசிலாந்தின் ஏரியன் நிக்கல்சனை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வரும் புதன்கிழமை காலிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அரையிறுதிக்கு முன்னேறுவதன்மூலம் லவ்லினா போர்கோஹெய்னுக்கு காமன்வெல்த் போட்டியில் பதக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இன்று 3 பதக்கங்களை வென்றுள்ளது.
- பளு தூக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
புதுடெல்லி:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.
பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது பதக்கமாகும்.
இந்நிலையில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல், விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
- காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.
இந்நிலையில், பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது (2014 - வெள்ளி, 2018 - தங்கம், 2022 - தங்கம்) பதக்கமாகும்.
இதன்மூலம் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.
- 55 கிலோ எடைப்பிரிபு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்
- கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர்.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் 248 கிலோ (113கி +135கி ) எடை தூக்கி 2ம் இடம்பிடித்தார்.
மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர். இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமருக்கான தேர்தல் களத்தில், ரிஷி சுனக், லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி
- நேரடி விவாதத்திற்கு பிறகு லிஸ் டிரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்.
லண்டன்:
இங்கிலாந்தில் புதிய பிரதமர் தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராக முடியும். இதற்கான தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பிரதமராகும் வாய்ப்பு லிஸ் டிரசுக்கு 90 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷி சுனக்கிற்கான வாய்ப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது. இவர்கள் இருவரை தவிர பிறருக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என கணக்கிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நேரடி விவாதத்தின்போது பேசிய லிஸ் டிரஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுவதை விரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கான ஆதரவு சதவீதம் ரிஷி சுனக்கை விட அதிகரித்து விட்டதாக கருதப்படுகிறது.
- குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, கானா அணிகள் மோதின.
- இதில் இந்தியா 5- 0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.
லண்டன்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குருப் ஏ பிரிவில் இந்தியா, கானா அணிகள் இடம்பிடித்துள்ளன.
முதல் நாளில் நடந்த மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, கானா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் குர்ஜித் கெளர் (3,39), நேகா (28), சங்கீதா குமாரி (36), சலிமா டேடே (56) ஆகியோர் கோல்களை அடித்தனர்.
- ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டு உள்ளது.
- டிரஸ்சை விட ரிஷி சுனக் சற்றே முன்னிலை பெற்றிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
லண்டன் :
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித்தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது.
இதில் முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டு உள்ளது.
இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் முதல் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரித்த வாக்காளர்களிடம் ரிஷி சுனக் ஆதரவு பெற்று உள்ளார்.
மொத்தம் 4,946 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ரிஷி சுனக் ஒட்டுமொத்த நிகர சாதகமான மைனஸ் 30 மதிப்பெண்ணை கொண்டுள்ளார். அதேநேரம் ட்ரஸ்ஸின் நிகர சாதகத்தன்மை மைனஸ் 32 ஆகும்.
இதன் மூலம் டிரஸ்சை விட ரிஷி சுனக் சற்றே முன்னிலை பெற்றிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
- பிரதமர் நாற்காலியைப் பிடிக்க ரிஷி சுனக்கிற்கும், லிஸ் டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- ரிஷி சுனக் தனது பிரசார அறிக்கையை வெளியிட்டுப்பேசி உள்ளார்.
லண்டன் :
இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ள நிலையில், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பிரதமர் நாற்காலியைப் பிடிக்க இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லிஸ் டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் ரிஷி சுனக் தனது பிரசார அறிக்கையை வெளியிட்டுப்பேசி உள்ளார். அதில் அவர் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் முற்றிலும் வீழ்த்தப்படுகிற வரையில் அவை தேசிய அவசர நிலையாகக்கருதப்படும். 2 பெண் குழந்தைகளின் தந்தையாக அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் மாலையில் நடைப்பயிற்சியும், இரவில் கடைகளுக்கும் சென்ற வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
* நான் இன்னும் அடுத்த நிலைக்கு செல்கிறேன். பெண்களின் அனுமதியின்றி அவர்களை அந்தரங்க படங்கள் எடுத்து துன்புறுத்தினால், அதைக் கிரிமினல் குற்றம் ஆக்கி, அந்த கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பெண்களை வேட்டையாடுகிற ஆபத்தான குற்றவாளிகளைப் பிடிப்பதில் இருந்து நம்மைத் தடுக்க முடியாது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையைக் பாதுகாப்பாகவும், பத்திரமாகமும் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குகிறவரையில் நான் ஓய மாட்டேன்.
* நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சிறுமிகளின் தொலைபேசி எண்களை சந்தேக நபர்கள் வைத்திருந்தால், எதற்காக அவர்கள் அந்த எண்கள், தொடர்பு விவரங்களை வைத்துள்ளனர் என்பதை விளக்கும்படி கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆபத்தான குற்றவாளிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நீதித்துறை மந்திரிக்கு வழங்கப்படும்.
* மனித உரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு குற்றவாளிகள் தங்கள் மீதான நாடு கடத்தும் உத்தரவை ஏமாற்றுவதைத் தடுக்க உரிமைகள் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றுவேன்.
இவ்வாறு ரிஷி சுனக் கூறி உள்ளார்.
இது அவருக்கு பெண்கள் மத்தியில் புதிய ஆதரவு அலைகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 207 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 149 ரன்களை எடுத்து தோற்றது.
கார்டிப்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. அந்த அணியின் ரிலே ருசோவ் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 5 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களை குவித்தார். ஹென்ரிக்ஸ் 53 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி விரைவில் அவுட்டானார். அவர் 14 பந்தில் 29 ரன் எடுத்தார்.
மொயீன் அலி 28 ரன்னும், ஜேசன் ராய் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இங்கிலாந்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் பெலுகுவாயோ, ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் அணி 1-1 என சமனிலை வகிக்கிறது.
- இந்த ஆண்டு டி20 பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
- இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
பர்மிங்காம்:
உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டுத் திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்கியது.
இந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இங்கிலாந்து, வங்காளதேம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணியினர் வழக்கம் போல் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் அதிக பதக்கம் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர்தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
- உக்ரைனுக்கு ராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகிறது.
- சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருது இங்கிலாந்தின் உயரிய விருதாகும்.
லண்டன் :
உக்ரைன் மீதான ரஷியா போரில் இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகிறது. போருக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து, இங்கிலாந்து எப்போதும் உக்ரைனுக்கு துணை நிற்கும் என உறுதியளித்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் உயரிய விருதான சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கி போரிஸ் ஜான்சன் கவுரவித்துள்ளார்.
இது குறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " இன்று வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை எனது நண்பர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கியது பெருமையாக உள்ளது. ஜெலன்ஸ்கியின் தைரியம், எதிர்ப்பாற்றல் மற்றும் கண்ணியம் என அவரின் அனைத்து குணங்களும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை அசைத்து, உலகளாவிய ஒற்றுமை அலைகளை கிளறிவிட்டன" என குறிப்பிட்டுள்ளார்.
- லிஸ் டிரஸ்சின் வரி குறைப்பு திட்டம் கோடிக்கணக்கான மக்களைத் துன்பத்தில் தள்ளும்.
- ரிஷி சுனக்கிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை.
லண்டன் :
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வௌியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர்களுக்கு இடையிலான முதல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் கலந்து கொண்டு நேருக்கு நேர் விவாதித்தனர். அப்போது இருவரும் தங்களது பொருளாதார கொள்கைகள் மற்றும் வரித் திட்டங்கள் குறித்து கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதனால் விவாதத்தில் அனல் பறந்தது.
லிஸ் டிரஸ், தான் பிரதமரானால் நாட்டில் வரியை குறைப்பேன் என கூறிவருவதை குறிப்பிட்டு பேசிய ரிஷி சுனக், "லிஸ் டிரஸ்சின் வரி குறைப்பு திட்டம் கோடிக்கணக்கான மக்களைத் துன்பத்தில் தள்ளும். மேலும் அது அடுத்த பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தார்.
அப்போது குறுக்கிட்ட லிஸ் டிரஸ், " இங்கிலாந்தை போல் வேறு எந்த நாடும் வரிகளை விதிக்கவில்லை. ரிஷி சுனக்கிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், "நிதி மந்திரியாக இருந்தபோது ரிஷி சுனக் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரிகளை உயர்த்தினார். அதனால்தான் நாம் இப்போது மந்தநிலையை எதிர்நோக்குகிறோம்" எனவும் கூறினார். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறி காரசாரமாக விவாதித்தனர்.






