என் மலர்
உலகம்

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா பாராளுமன்ற தலைவர் முகமது ராத் கொலை
- 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
- 2024 நவம்பர் மாதத்தில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு முதல் முறை தாக்கியுள்ளது.
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட அந்நாடு முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்தது.
இந்த தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்ததாகவும் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்புக் கருதி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் முகமது ராத் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் வேறு சில மூத்த அதிகாரிகளும் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
2024 நவம்பர் மாதத்தில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, தற்போதுதான் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது முதல்முறையாக ராக்கெட் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானின் பாதுகாப்பை விட ஈரானுக்கே அதிக முன்னுரிமை அளித்து வருவதாக இஸ்ரேல் ராணுவத்தின் வடக்கு கட்டளை தலைவர் ராபி குற்றம் சாட்டியுள்ளார்.






