என் மலர்
பிரான்ஸ்
- சீன பயணிகளுக்கு பிரான்ஸ் விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக தகவல்.
- சீன பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என ஸ்பெயின் அரசு அறிவிப்பு
உருமாறிய புதிய வகை கொரோனாவான பி.எப்.-7 சீனாவில் மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதையடுத்து இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் விமானங்களில் பயணிப்போர் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் காண சீன பயணிகளுக்கு விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஸ்பெயின் அரசும் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயமாக்கி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஸ்பெயின் அழுத்தம் கொடுக்கும் என்றார்.
- துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் 69 வயது நிரம்பிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- இனவெறி காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் குர்திஷ் கலாச்சார மையத்தை குறிவைத்து இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் 69 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே குற்ற வழக்கில் சிக்கி உள்ளார். கூடாரங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே இனவெறி காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என தகவல்
- தீக்காயம் அடைந்த 14 பேரில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடம்.
பிரான்ஸ் நாட்டின் லியோன் நகர புறநகர் பகுதியில் உள்ள வோல்க்ஸ்-என்-வெலின் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 170 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் அதில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கள் எடுக்கப்பட்டன. இந்த தீ விபத்தில் ஐந்து குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் 14 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
- கட்டிடத்தில் வசித்த 20 முதல் 30 பேரை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.
- குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இங்கிலாந்து, பிரான்ஸ் இடையே உள்ளது ஜெர்சி தீவு உள்ளது. இந்த தீவின் தலைநகர் செயின்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த கட்டிடத்தில் வசித்த 20 முதல் 30 பேரை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். மேலும் 12 பேரை காணவில்லை. அவர்களை மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வழியாக நடந்து சென்ற 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
- இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.
பாரிஸ்:
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.
இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். ஜி20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றியது! எனது நண்பர் நரேந்திர மோடி, உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- 1999-ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்தினை பிரான்ஸ் அரசு வழங்கியது.
- ஒரே நாளில் 6 பேட்டிகளை அளித்து புகழ் பெற்றார்.
பாரீஸ் :
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி (வயது 77).
இவர் தனது தாயைத்தேடி ஐரோப்பாவுக்கு பறந்தார். அங்கே பெல்ஜியம், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி என பல நாடுகளுக்கும் சென்றார். ஆனால் முறையான குடியேற்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த நாடுகளில் இருந்தெல்லாம் அவர் வெளியேற்றப்பட்டார்.
கடைசியில், 1988-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீசில் உள்ள விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். அந்த விமான நிலையத்தின் '2எப்' முனையத்தில் ஒரு பகுதியை தனது வீடாக்கினார். அவர் தனது உடைகள் உள்ளிட்ட உடைமைகளை தள்ளுவண்டி ஒன்றில் வைத்திருந்தார். அவர் தனது வாழ்க்கையை நோட்டுப்புத்தகத்தில் எழுதுவதிலும், புத்தகங்கள், நாளேடுகளை வாசிப்பதிலும் கழித்தார்.
அவரது வாழ்க்கைக் கதை, உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் சினிமா இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை கவர்ந்தது. அவர் நாசேரியின் வாழ்க்கையை ஹாங்ஸ், கேதரின் ஜீட்டா ஜோன்ஸ் நடிப்பில் 'தி டெர்மினல்' என்ற பெயரில் சினிமாவாக எடுத்தார்.
அந்த படம் வெளியானதும் அவரைப் பேட்டி காண பத்திரிகையாளர்கள் குவிந்தனர். தன்னை சர் ஆல்பிரட் என்று அழைத்துக்கொண்ட அவர் ஒரே நாளில் 6 பேட்டிகளை அளித்து புகழ் பெற்றார்.
1999-ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்தினை பிரான்ஸ் அரசு வழங்கியது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் 2006-ம் ஆண்டு வரை வாழ்ந்தார்.
அதன் பின்னர் உடல்நல குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குணம் அடைந்ததையடுத்து 'தி டெர்மினல்' படத்தின் சன்மானமாக கிடைத்த பணத்தைக் கொண்டு அங்குள்ள விடுதியில் தங்கி வாழத்தொடங்கினார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பாக அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, தான் வாழ்ந்த விமான நிலையத்துக்கே திரும்பினார். அங்கு அவர் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இது பாரீஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாத்விக், சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-19 என்ற நேர்செட்டில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
- 750 புள்ளிகள் கொண்ட பேட்மிண்டன் போட்டி ஒன்றில் இரட்டையர் பிரிவில் வாகை சூடிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.fr
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீசில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, 25-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் லூ சிங் யாவ்-யாங் போ ஹான் இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடந்த இந்த மோதலில் சாத்விக்-சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-19 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. இதன் மூலம் 750 தரவரிசை புள்ளிகள் கொண்ட பேட்மிண்டன் போட்டி ஒன்றில் இரட்டையர் பிரிவில் வாகை சூடிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.
சாதனை படைத்த சாத்விக் சாய்ராஜ் -சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஸ்பெயினில் நடந்த உலக ஜூனியர் பேட்மிண்டனில் (19 வயதுக்கு உட்பட்டோர்) வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சங்கர் முத்துசாமி ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
- இந்திய ஜோடி காலிறுதியில் உலகின் நம்பர் 1 ஜோடியை வீழ்த்தியது.
- அரையிறுதியில் இந்திய ஜோடி கொரிய ஜோடியுடன் மோதியது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கொரியா வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதன்மூலம் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன.
- பெட்ரோல்-டீசலுக்காக பல மணிநேரம் மக்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.
பாரிஸ்:
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு ஆகிய எரி பொருள்களின் விலை உயர்ந்தது.
இந்த நிலையில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பிரான்சில் சுமார் 2 ஆயிரம் எரிபொருள் விநியோக நிலையங்களில் கையிருப்பு தீர்ந்துள்ளது.
பிரான்சின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விற்பனை நிலையங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பெட்ரோல்-டீசலுக்காக பல மணிநேரம் மக்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.
சிலர் தங்களது கார்களில் எரிபொருள் தீர்ந்ததால் வாகனங்களை தள்ளிக் கொண்டு எரிபொருள் நிலையங்களுக்கு சென்றனர். பிரான்சில் எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதையடுத்து நாட்டின் எண்ணை கையிருப்பை விடுவிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டென்னிஸ் போட்டி வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மகளிர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பாரீஸ்:
டென்னிஸ் போட்டியில் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சான் டீகோ ஓபன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா நாட்டின் டோன்னா வெகிச் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இகா ஸ்வியாடெக் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இது, நடப்பு ஆண்டில் அவர் பெறும் 64-வது சாதனை வெற்றியாகும்.
இந்த தரவரிசை பட்டியலில் ஆன்ஸ் ஜேபியர் 2-வது இடத்திலும், ஆனெட் கொன்டாவிட் 3-வது இடத்திலும், ஆரைனா சபலென்கா 4-வது இடத்திலும், ஜெஸ்சிகா பெகுலா 5-வது இடத்திலும் உள்ளனர்.
- இவர் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
- 60 நிமிடத்தில் கட்டிடத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையை படைத்தார்.
பாரீஸ் :
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆலியன் ராபர்ட் என்பவர் உயரமான கட்டிடங்களில் எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இன்றி ஏறுவதில் புகழ் பெற்றவர். இதன் காரணமாக இவர் 'பிரெஞ்சு ஸ்பைடர் மேன்' என்கிற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில் ஆலியன் ராபர்ட் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 48 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஆலியன் ராபர்ட் பல முறை இந்த கட்டிடத்தில் ஏறியிருந்தாலும் இந்த முறை வெறும் 60 நிமிடத்தில் கட்டிடத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையை படைத்தார்.
"60 வயது என்பது ஒன்றும் இல்லை. நீங்கள் இன்னும் விளையாட்டில் ஈடுபடலாம், சுறுசுறுப்பாக இருக்கலாம், அற்புதமான விஷயங்களைச் செய்யலாம் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லவே இந்த முறை 48 மாடி கட்டிடத்தில் ஏறினேன்" என ஆலியன் ராபர்ட் கூறினார்.
ஏற்கனவே ஆலியன் ராபர்ட் உலகம் முழுவதும் உள்ள பல உயரமான கட்டிடங்களில் ஏறியுள்ளார். உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீபாவின் உச்சியை அடைந்ததும் அவரது துணிச்சலான சாதனைகளில் ஒன்றாகும்.
அவர் வழக்கமாக தனது ஸ்டண்ட்களை முன் அறிவிப்பு இன்றியும் அனுமதி இல்லாமலும் செய்வது வழக்கம். இதனால் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். அதே போல் இந்த முறையும் அவர் கட்டிடத்தின் உச்சியை அடைந்ததும் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஈபிள் கோபுரம் ஒவ்வொரு நாளும் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
- 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் மின் விளக்குகளால் கோபுரம் மின்னுகிறது.
பாரீஸ் :
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் ஒவ்வொரு நாளும் இரவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் மின் விளக்குகளால் கோபுரம் மின்னுகிறது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணி வரை ஈபிள் கோபுரத்தில் மின்விளக்குள் ஒளிரும். அதன்பிறகு மின் விளக்குகள் அணைக்கப்படும்.
இந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக ரஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வினியோகத்தை நிறுத்தி வைத்துள்ளதால் பிரான்ஸ் உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சேமிக்கும் விதமாக ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகளை முன்கூட்டியே அணைக்க பாரீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 23-ந்தேதி முதல் உள்ளூர் நேரப்படி இரவு 11:45 மணிக்கே ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்படும் என அந்த நகரின் மேயர் அன்னே ஹிடால்கோ கூறியுள்ளார்.
அதுமட்டும் இன்றி பாரீசில் உள்ள பொதுகட்டிடங்களில் இரவு 10 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.






