என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. பற்றி பேச செல்வப்பெருந்தகைக்கு அருகதை இல்லை- கடம்பூர் ராஜூ
- டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
- தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தூத்துக்குடி தருவைகுளத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்களை மட்டும் நம்பி தேர்தல் களத்துக்கு வந்த ஒரே தலைவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார். ஜூலை 7-ந் தேதி தொடங்கி இன்று 154-வது தொகுதியாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தொகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.
இது எதை காட்டுகிறது என்றால் மக்கள் மீது உள்ள நம்பிக்கை அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு என்பதை தான் காட்டுகிறது.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட கூட்டணி வரலாம். சேரலாம். இருக்கின்ற கூட்டணிகள் கூட பிரியலாம். ஆனால் மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி மக்களை சந்திப்பதற்கு வந்த இயக்கம் அ.தி.மு.க. அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பகுதியில் நடந்த அ.தி.மு.க. பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டசபை தேர்தலுக்காக முதன் முதலில் தேர்தல் களத்திற்கு வந்த இயக்கம் அ.தி.மு.க. மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி இதுவரை 154 தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.
மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே 2-வதுஇடத்தை பிடித்து யார் எதிர்க்கட்சியாக வருவது என்று தான் போட்டி உள்ளது.
டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
4 ஆண்டு காலம் நல்ல ஆட்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமியை மக்கள் அடுத்த முதலமைச்சராக்க முடிவு செய்துவிட்டனர். நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால் தான் தெரியும் என்பது போல அ.தி.மு.க. ஆட்சியின் நன்மையை மக்கள் புரிய தொடங்கி உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.
காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை தி.மு.க.வின் தவறை சுட்டிக்காட்டவில்லை. நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கவில்லை. கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை. அதையெல்லாம் கேட்காத செல்வப்பெருந்தகைக்கு அ.தி.மு.க. பற்றி பேச அருகதை இல்லை.
காங்கிரஸ் கட்சியை தி.மு.க. விழுங்க பார்க்கிறது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதை நிரூபணம் செய்யும் வகையில் காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவியை தி.மு.க.வில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தால் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






