என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்காக நடந்த சசிகலா முயற்சிகள் தோல்வி- எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பு

- தி.மு.க.வுக்கு எதிராக எந்த போராட்டத்தையும் ஓ.பன்னீர்செல்வத்தால் நடத்த முடியவில்லை.
- அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்களை களையெடுக்கவும் அடுத்த கட்டமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
பிளவுபட்டிருந்த அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை தற்போது ஓங்கிவிட்டதால் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த ஆதரவாளர்களின் கட்சி செயல்பாடுகள் நாளுக்கு நாள் குறைந்துவிட்டது.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் மற்றும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளதால் கட்சி ரீதியான செயல்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துவிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் வலுவாகி விட்டது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க.தான் அதன் முதல் எதிரி. தி.மு.க. செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதுடன் அதை விமர்சனம் செய்வது, போராட்டம் நடத்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னரை சந்தித்து முறையிடுவது ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவற்றிலும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.தான் முன்னின்று நடத்தி உள்ளது.
இந்த விஷயத்தில் தி.மு.க.வுக்கு எதிராக எந்த போராட்டத்தையும் ஓ.பன்னீர்செல்வத்தால் நடத்த முடியவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் சோர்வடைய தொடங்கி விட்டனர். இனி எதிர்காலம் என்ன ஆகுமோ? என விரக்தியில் உள்ளனர்.
இதற்கிடையே அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்களை களையெடுக்கவும் அடுத்த கட்டமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கட்சியில் செயல்படாத சில மாவட்டச் செயலாளர்களை மாற்றி விட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும் எடப்பாடி பழனிசாமி பட்டியல் தயாரித்து வருகிறார்.
அ.தி.மு.க.வில் தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கை பணி வேகமாக நடந்து வருவதால் அந்த பணிகள் முடிந்ததும் கட்சி பொறுப்புகளுக்கு புதிய நபர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை பார்த்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களும் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும். ஒரே அணியாக செயல்பட வைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா, நட்டா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் எவ்வளவோ பேசி பார்த்தும் அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை.
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் சேர்த்தால் குழப்பம்தான் வரும். எனவே அவர்களை சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனது பலத்தை காட்டும் என்றும் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறி வந்த சசிகலாவால் அதில் வெற்றி பெற முடியாமல் சோர்வடைந்துவிட்டார்.
சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி வந்த சசிகலா முதலில் கட்சி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வந்தார். அதன் பிறகு அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட போவதாக கூறினார்.
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினரை கண்டிப்பாக ஒன்று சேர்ப்பதாகவும் கூறி வந்தார். தி.மு.க. எனும் தீயசக்தியை ஒழிக்க அ.தி.மு.க. ஒன்றிணைவது அவசியம் என்றும் செய்தியாளர்களிடம் கூறி வந்தார்.
ஆனால் அவரது பேச்சுக்கு அ.தி.மு.க.வில் யாரும் செவி சாய்க்கவில்லை. ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் சசிகலாவை சந்திக்க இயலாமல் உள்ளார்.
சமீபத்தில் ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் இல்ல திருமணம் தஞ்சாவூரில் நடந்தது. அதற்கு சசிகலாவை அழைத்து தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரையும் ஒருங்கிணைக்க திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அந்த திருமண விழாவுக்கு சசிகலா செல்வதை தவிர்த்து விட்டார்.
அண்மையில் டி.டி.விதினகரனை சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் இன்னும் அவரால் சசிகலாவை சந்திக்க முடியவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்திக்கும் முயற்சிக்கு சசிகலா பிடி கொடுக்காமல் இருக்கிறார். அரசியலில் சசிகலாவின் மறுபிரவேசம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியை நோக்கிதான் செல்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளர் கூறுகையில், அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலாவை சேர்த்தால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்படும். மீண்டும் கோஷ்டி உருவாகும். அதனால் தான் சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தவிர மற்ற யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
அதற்கேற்ப டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க.வில் இருந்து பெரும்பான்மையான ஆட்கள் அ.தி.மு.க.வுக்கு வந்துவிட்டனர். ஒரு சிலர்தான் டி.டி.வி.பக்கம் உள்ளனர். அவர்களும் தேர்தல் நெருங்க நெருங்க எங்கள் பக்கம் வந்து விடுவார்கள். இதேபோல் தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் உள்ளவர்களும் எங்கள் பக்கம் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
