search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ் மொழியின் பெருமையை ஐ.நா. வரை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி- அண்ணாமலை
    X

    தமிழ் மொழியின் பெருமையை ஐ.நா. வரை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி- அண்ணாமலை

    • வடக்கு தெற்கு என்று பிரித்து பேசும் அரசியல் மக்களிடம் எடுபடாது.
    • தி.மு.க. தற்போது எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

    திருச்சி:

    இந்திய ஜனநாயக கட்சியின் 'தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்' என்ற பெயரில் மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெயசீலன் வரவேற்று பேசினார்.

    கூட்டணி கட்சிகள் சார்பில் புதிய நீதிகட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழக நிறுவனர் தேவநாதன், த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மே மாதம் 3-வது வாரம் மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்பார். இந்தியாவில் உள்ள 543 எம்.பி.க்களையும் ஒரே மேடையில் உட்கார வைத்து அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை புத்தகமாக போட்டுக் காட்டக் கூறினால், அதில் அதிக பணிகளை செய்தவர்கள் பட்டியலில் பாரிவேந்தர் தான் முதலிடத்தில் இருப்பார்.

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தவிர அவர் சம்பாதித்த பணம் ரூ.126 கோடியை தனது தொகுதியில் கல்விக்காகவும், ஆன்மீகத்திற்காகவும் பொது மக்களுக்காகவும் செலவு செய்துள்ளார்.

    ராஜராஜ சோழன் காலத்தில் அவருக்கு எவ்வளவு பெருமை இருந்ததோ அதை மீட்டு எடுக்க வேண்டும். பிரதமர் மோடி செங்கோலை அறத்தின் சாட்சியாக புதிய பாராளுமன்றத்தில் வைத்து ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.

    தொன்மையான தமிழ் மொழியை பிரதமர் ஐநா சபை வரை கொண்டு சென்று பெருமை சேர்த்து உள்ளார். அடுத்த 5ஆண்டு காலத்தில் திராவிட கட்சி இல்லாத ஆட்சி தமிழகத்தில் அமையும். தமிழகத்தில் வளர்ச்சி அரசியலை பேசாமல் பிரிவினை அரசியலை பேசுகிறார்கள்.

    வடக்கு தெற்கு என்று பிரித்து பேசும் அரசியல் மக்களிடம் எடுபடாது. என்று அப்போதே அண்ணா விட்டுவிட்டார். அதை தி.மு.க. தற்போது எடுத்து பிரசாரம் செய்து வருகிறது. 2024 தேர்தல் முடிவில் தி.மு.க. என்ற கட்சி இல்லாத நிலை ஏற்படும். பின்தங்கிய இந்த பெரம்பலூர் தொகுதியில் ரெயில் வசதி வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கனவை பாரிவேந்தர் மோடியிடம் மத்திய மந்திரிகளிடமும் பேசி வந்துள்ளார்.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று பாரிவேந்தர் மீண்டும் எம்.பி. ஆகும்போது, அடுத்த பட்ஜெட்டில் பெரம்பலூர் ரெயில் வழி தடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதை அவரே திறந்து வைப்பார். இந்தியா முழுவதும் 100 சைனிக் பள்ளிகளை கொண்டு வருகிறோம். அதில் முதல் பள்ளி பெரம்பலூருக்கு வேண்டுமென்று முதலில் கடிதம் எழுதியவர் பாரிவேந்தர். அத்துடன் அதற்கு இடமும்கொடுத்து கட்டிடமும் கட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார். அவருடைய வெற்றி இந்த தொகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. பேசுகையில்,

    2014-ம் ஆண்டு மோடி குஜராத்தில் ஊழலற்ற ஆட்சி நடத்தி வந்தார். அதன்பின்னர் மோடியுடன் பல மேடைகளில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றேன். அப்போது அவரிடம், விரைவில் பிரதமராக ஆவீர்கள் என்று கூறினேன். அதன்படி அவரும் பிரதமர் ஆனார். தமிழன், தன்னை தமிழன் என்று வெளியே கூற தயங்கும் நேரத்தில், தமிழை உலகம் எல்லாம் அவர் பரப்பி வருகிறார்.

    பிரதமர் மோடி ஒரு ஞானி, அவர் எங்கு சென்றாலும் இந்தியா உயர்ந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் 3-வது முறையாகவும் பிரதமர் ஆவார் என்பது எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது. 3-வது முறையல்ல, 4-வது முறையும் நரேந்திரமோடி தான் பிரதமர் ஆவார். இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்து பா.ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.

    Next Story
    ×