என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க., அ.தி.மு.க.வை விட வேட்பாளர் தேர்வில் அசத்திய பா.ஜ.க.
- முன்னணி கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துவிட்டது.
- கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து போராடுவதைவிட பிரபலங்களை களம் இறக்கி மோதிப்பார்ப்பது என்ற முடிவுடன் வேட்பாளர்களை தேர்வு செய்து அசத்தி இருக்கிறது.
சென்னை:
தேர்தல் வந்தால் கூட்டணி அமைப்பது, தொகுதிகளை ஒதுக்குவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது பல காட்சிகள் ஒவ்வொரு கட்சியிலும் திரைமறைவில் நடப்பது வழக்கமானதுதான்.
முன்னணி கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துவிட்டது. இதில் பலர் எதிர்பார்க்கப்பட்டவர்கள். சிலர் புதுமுகங்கள் ஆவார்கள்.
ஆனால் பா.ஜனதா ஓசையின்றி தொகுதிகளையும் அதில் பிரபலங்களையும் தேர்வு செய்து வந்துள்ளது.
தெலுங்கானா கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வந்து தென்சென்னையில் களம் இறக்கி உள்ளது.
அதே போல் மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட போதும் நீலகிரியில் தி.மு.க.வின் ஆ.ராசாவை எதிர்த்து களம் இறக்கி உள்ளது.
அண்ணாமலை போட்டியிடுவாரா? என்று எதிர்பார்த்த நிலையில் அவரை கோவை தொகுதியில் களம் இறக்கி இருக்கிறது. எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரனை நெல்லை தொகுதியில் போட்டியிட வைத்துள்ளது.
கன்னியாகுமரியில் நன்கு அறிமுகமான முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை மீண்டும் களம் இறக்கி உள்ளது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை வேலூரிலும் பாரிவேந்தரை பெரம்பலூரிலும் களத்தில் இறக்கி உள்ளது.
அதே போல் கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.பி.யான நரசிம்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து போராடுவதைவிட பிரபலங்களை களம் இறக்கி மோதிப்பார்ப்பது என்ற முடிவுடன் வேட்பாளர்களை தேர்வு செய்து அசத்தி இருக்கிறது.






